லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு

தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' என தலைப்பு வைத்ததை அறிந்த சில சினிமா பிரபலங்கள் வலைப்பதிவாளர்களைக் கவர இந்த லிப்ட் மேட்டரைத் தங்கள் படங்களில் நுழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்கஷன் ரூமில் எட்டிப்பார்த்தபோது:

கமல், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் அவரது அசிஸ்டெண்டுகள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தசாவதாரம் கதை விவாதத்தில் இருக்கிறார்கள்.

அசிஸ் 1: சார், இந்த மாசம் தேன்கூடு போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. அதையே நம்ம படத்துல சேத்துட்டோம்னா வலைப்பதிவாளர்களே படத்தை ஓட்டிடுவாங்க.

கமல்: அட நீ வேறய்யா..இப்பவே 'வேட்டையாடு விளையாடை' ஆளாளுக்கு துவைச்சு காயப்போடறாங்க. எந்த பக்கம் போனாலும் விமர்சன பதிவுன்னு ஒன்னு போட்டுடறாங்க..இதுல அவங்களையும் கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்காதய்யா

ரவி: கமல் சார்..இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்

கமல்: அதுவும் சரி தான். அப்போ தசாவதாரத்துல ஒரு அவதாரத்தை லாரி டிரைவர் ஆக்கிடலாம். அவனோட அடிமட்ட வாழ்க்கை நிலையைக் காட்டி படத்தை ஆரம்பிச்சு அவன் நாமக்கல்ல இருந்து கல்கத்தா போற வரைக்கும் வழில ஒவ்வொரு கமலுக்கும் லிப்ட் கொடுக்கறான்.

ரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்.

அசிஸ் : ஒவ்வொரு கமலுக்கும் சைடு டிராக்ல ஒரு லவ் ஸ்டோரி

கமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா. அப்படியே டெவலப் பண்ணி சொல்லு

அசிஸ்டெண்டைப் புகழ்ந்ததும் ஜெர்க்காகும் ரவிக்குமார் இடையில் தன் டிராக்கை எடுத்து விடுகிறார்.

ரவி: அந்த லாரி ஓட்டற கமல் மத்த கமல் எல்லாரையும் கொன்னுட்டே வர்றான். அவன் கல்கத்தால கடைசி கமலை கொல்ல முயற்சி செய்யறான். அந்த கடைசி கமல் ஒரு டிசிபி. அவர் டிரைவர் கமல் ஒரு சைக்கோ, சீரியல் கில்லர்ன்னு கண்டுபுடிச்சு அவனுக்கு தூக்குதண்டனை தராரு.

கமல்: தூக்கு தண்டனை தர்றதுக்கு அவன் என்ன ஹைகோர்ட் நீதிபதியா ?? அவனைப் புடிச்சு ஜெயில்ல போடறதா காட்டினா போதும்.

ரவி: அப்படியே காட்டிடுவோம். லாரி டிரைவர் கமல் மத்த கமல் கொன்னது போக சில பெண்களை ரேப் பண்ணியும் கொன்னிருக்கான்னு காட்டினா இன்னும் த்ரில் கூடும்

கமல் (மெதுவாக): 'ரேப் சீன் காட்டலைன்னா இவனுக்கு படம் எடுத்த திருப்தி இருக்காதே'
அவர் முனுமுனுப்பதைப் பார்க்கும் ரவிகுமார் 'என்ன எதுனா பிரச்சனையா?' எனக் கேட்கிறார்.

கமல்: ஆமா ரவி. இப்போதான் வேட்டையாடு விளையாடுல ஒரு திரில்லர் சீரியஸ் படம் பண்ணினேன். இப்போ நான் கண்டிப்பா காமெடி படம் தான் செய்யனும். அப்போ தான் என் கணக்கு சரியா வரும்

ரவி (மனதுக்குள்) : கிழிஞ்சுது போ..மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா

கமல்: பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.

அசிஸ் : புரியலையே

கமல்: அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி உயரத்தைக் குறைச்சு வயசையும் குறைக்கறோம்

ரவி: சூப்பர்

கமல் : மத்த கமல் எல்லாரும் அதே பில்டிங்க்ல வேலை பாக்கறாங்க. இதை வச்சு ஆள்மாறாட்டம், பழி வாங்கல், வில்லன் எல்லாத்தையும் டெவலப் பண்ணுங்க.

அசிஸ்: ஒவ்வொருத்தர் காதலும் அந்த லிப்ட்லயே டெவலப் ஆகுதுன்னு வச்சுக்கலாம் சார்.

ரவி: கமல் சார், அந்த லிப்ட்ல வச்சே நீங்க ஹீரோயின் அத்தனை பேருக்கும் லிப் டு லிப் தர்றீங்க

கமல்: எங்கயோ போயிட்டய்யா...லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு.

ரவி :இந்த ஷாட்டை வச்சே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுடலாம்.கதை போக போக அதுவா எதுனா வரும்

கமல்: இந்த லிப்ட் ஆங்கில வார்த்தையா இருக்கே...நான் வேணும்னா என் நண்பர்கள்ட்ட போன் போட்டு தமிழ் வார்த்தை என்னன்னு கேட்கவா என்றபடி செல்போனை எடுக்க அதைக் கேட்காதவாறு ரவியும் அசிஸ்டெண்டும் எஸ்ஸாகிறார்கள்.

*************************************************

கமல் லிப்ட் மேட்டரை தசாவதாரத்தில் நுழைப்பதைக் கேள்விப்பட்ட சிவாஜி யூனிட் தானும் களமிறங்குகிறது

ஷங்கர்: ரஜினி சார், ஏற்கனவே எடுத்து முடிச்சதுல பாதியை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பேசாம நாமளும் இந்த லிப்ட் மேட்டரை உள்ளே நுழைச்சாதான் சரிபடும்

ரஜினி: ஷங்கர்ஜி, ஏற்கனவே ரொம்ப நாளா படம் எடுத்துட்டு இருக்கோம். ரசிகர்கள் பாவம்ஜி. அதைவிட சரவணன் சார் ரொம்ப பாவம்ஜி

சத்யநாராயணா:இல்லைங்க, இந்த லிப்ட் மேட்டர் ஒர்க்-அவுட் ஆகும்
அப்போது தான் அவர் அங்கு இருப்பதைக் கவனித்த ரஜினி

ரஜினி:ஹேய் சத்தி, காது குத்துக்கு போகனும்னு சொன்னயே..கிளம்பலையா

சரவணன்(தனக்குள் மெதுவாக 'இப்படி கை கட்டி நின்னுட்டு இருந்தா எனக்கும் காது குத்திடுவாங்க' ): ஷங்கர், இந்த லிப்ட் கண்டிப்பா வேணுமா? இதை அடுத்த படத்துக்கு வெச்சுக்கலாமே..எல்லாத்தையும் இந்த படத்துலயே காட்டனுமா

ஷங்கர்: சார், படத்துக்கு ஒரு பிரமாண்டம் வர வேணாமா...கதையை அப்படியே இந்த லிப்ட் மேட்டரை மையமா வச்சு நகர்த்தறோம்

அவ்வளவு நேரம் வாசலில் இருந்து ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த வைரமுத்து

'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.
'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.

ரஜினி: வாங்க வைரமுத்துஜி..இப்போ தான் சிவாஜில சில சேஞ்சஸ் பண்ணலாம்னு ஷங்கர்ஜி சொல்லிட்டு இருக்கார்

வைரமுத்து: கேட்டுக்கொண்டு தான் வந்தேன். வரும்போதே ரகுமான் தம்பியின் மெட்டுக்கு லிப்டை எப்படி நுழைக்கலாம் என யோசித்துக்கொண்டுதான் வந்தேன்.

ஷங்கர்: ஹை..நீங்களும் லிப்ட் விளையாட்டுக்கு வந்தாச்சா?

இதைக் கேட்ட சரவணன் 'விளையாட்டா' என அரண்டு போய் சோடா ஆர்டர் செய்கிறார்.

ரஜினி: சீக்கிரம் கதை சொல்லுங்கஜி. அடுத்த மாசத்துக்குள்ள ஷூட்டிங் முடிச்சா ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க போவேன்

ஷங்கர்: அடுத்த மாசத்துக்குள்ள முடிக்கறதா..நீங்க வேற..அடுத்த வாரம் நாம ஆஸ்ட்ரேலியா போறோம். அங்க சிட்னி ஓபரா ஹவுஸ்ல இருக்க லிப்ட்ல பாம் வச்சிடறாங்க. அதை நீங்க போய் எடுக்கறீங்க

ரஜினி: இறைவா

ஷங்கர்: என்ன சார் ஆச்சு

ரஜினி: ஆஸ்திரேலியா, பாம்லாம் வேணாம். வேற சொல்லுங்க

ஷங்கர்: சரி சார்..மெட்ராஸ்லயே கதை வச்சுக்கலாம். ஒரு பில்டிங்குக்கு நீங்க போறீங்க. அங்க லிப்ட்பாயா இருக்க வில்லன் நீங்க போக வேண்டிய பத்தாவது ப்ளோருக்கு கூட்டிட்டு போகாம ஒன்பதாவது ப்ளோர்லயே இறக்கி விட்டுடறாரு. இதுனால உங்க பரம்பரை சொத்து உங்க கை நழுவி போகுது

ரஜினி: எப்படி?

ஷங்கர்: அது இனிமேல் தான் யோசிக்கனும். ஃபுல் ப்ளோல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார். உடனே நீங்க அந்த வில்லன் கிட்ட சண்டை போடறீங்க. கோபமடைஞ்ச வில்லன் 'ஒரு நாள்..ஒரே ஒரு நாள் லிப்ட் பாயா இருந்து பாரு. அப்போ தெரியும் கஷ்டம்'ன்னு சவால் விடறான்.

ரஜினி: இந்த கதையை ஏற்கனவே என்கிட்ட வேற மாதிரி சொல்லி நான் வேணாம்னு சொன்ன மாதிரி இருக்கே.

ஷங்கர்: அது வேற சார். முழுசையும் கேளுங்க. சவாலை ஏத்துக்கற நீங்க ஒரு நாள் லிப்ட் ஆப்பரேட்டர் ஆகறீங்க. உங்க வேலையைப் பார்த்து அந்த பில்டிங் அசோசியேஷன்காரங்க எல்லாம் சேர்ந்து உங்களையே பெர்மனெண்ட் லிப்ட் ஆப்பரேட்டர் ஆக்கிடறாங்க. இதுல டென்ஷனான வில்லன் உங்க லவ்வரைக் கடத்திக்கிட்டு கனடா போயிடறான்.

ரஜினி: சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர் எப்படி கனடா போக முடியும்

ஷங்கர்(மெதுவாக): இன்னும் அந்த ஊர்ல தான் நான் ஷூட்டிங் எடுக்கல. அதனால அங்க தான் போகனும். (சத்தத்தை உயர்த்தி) அவன் ஊருக்கு தான் லிப்ட் ஆப்பரேட்டர். ஆனா அவன் ஒரு சர்வதேச கள்ளக்கடத்தல் தாதா. அவனை நீங்க எதிர்க்கறீங்க. இதைப் பார்த்து தமிழ்நாடே உங்க பின்னால நிக்குது.

வைரமுத்து: 'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' என 'வெற்றிக் கொடி கட்டு ட்யூனில் பாட்டெடுக்க 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு லிப்டப்பா' என சத்தி கண்டினியூ செய்கிறார்.

ஷங்கர்: நீங்க கனடா போகறதுக்குள்ள வில்லன் அங்கயிருந்து சுவீடன் வர்றான். அவனை துரத்திகிட்டே நீங்க ரஷ்யா, மலேசியா, ஜப்பான், உருகுவேன்னு உலகம் பூரா சுத்தரீங்க. கடைசில அவன் பஸ் பாஸ் ரினீயூ பண்ண மெட்ராஸ் வரும்போது அவனை கப்புன்னு புடிச்சடறீங்க.அப்படியே மக்களின் ஆதரவோட தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடறீங்க

ரஜினி(மனதுக்குள்): இதை மட்டும் விட மாட்டேங்கறாங்களே

அப்போது 'திஸ் மேன் இஸ் எ மிராக்கிள். ஹி இஸ் எ வொண்டர்புல் ஆக்டர்' என கரகர குரலுடன் பாரதிராஜாவும் தொப்பியைக் கழட்டி கர்ச்சீப்பால் நெற்றியைத் துடைத்தபடி பாக்யராஜும் வர சரவணன் மயங்கிக்கிடப்பதைக் கூட கவனிக்காமல் அனைவரும் ஜன்ன்ல வழியாக ஓடுகின்றனர்.

************************************************

'தசாவதாரத்துக்கும் சிவாஜிக்கும் தர்மபுரி எந்த அளவுலயும் குறைஞ்சது இல்ல' என்றபடி கூலிங் கிளாஸ், பவுடர் பளபளக்க வரும் இயக்குனர் பேரரசைப் பார்த்து ஜெர்க்காகும் விஜயகாந்த் அருகில் இருக்கும் ராமுவசந்தனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.

ராமு: பேரரசு சார், கட்சி மீட்டிங் ஒன்னு கிளம்பிட்டு இருக்கோம். போய் நாளைக்கு வாங்க
என பேரரசுவைக் கழட்டிவிடப் பார்க்கிறார்.

பேரரசு: நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,

விஜயகாந்த்: என்ன பேரரசு..தர்மபுரி செட்யூல் அடுத்த வாரம் தானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள என்னப்பா?

பேரரசு: சார், லிப்ட் பத்தி நீங்க ஒன்னும் கேள்விப்படலையா?

விஜயகாந்த்: என்ன சார் சொல்றீங்க?

பேரரசு: அவனவன் இந்த லிப்டை வச்சு பல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கான் சார். நானும் விர்ருன்னு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்.

எப்படியும் எஸ்கேப் ஆக முடியாது என கேப்டன் பெருமூச்சு விட பேரரசு தொடர்கிறார்.

பேரரசு: படத்துல நீங்க தர்மபுரில பந்தல் கட்டறவரா வர்றீங்க. தர்மபுரில எந்த கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் நீங்க தான் ராகவேந்திரா பந்தல் ஏஜெண்ட்.

இதைக்கேட்டதும் கலக்கமடையும் கேப்டன்: சார், மீதி கதையை நாளைக்கு கேட்டுக்கறேனே..இப்போ கட்சி கொடி ஏத்தற பங்சன் ஒன்னு இருக்கு

பேரரசு: இருங்க சார் முடிச்சுடறேன். நீங்க பந்தல் காண்ட்ராக்டர். அந்த ஊர்ல ரோடு போட்ட காண்ட்ராக்டர் ஊழல் செஞ்சு ரொம்ப மோசமான் ரோடா போட்டதால நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது

விஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது

பேரரசு: நீங்க அந்த காண்ட்ராக்டரை அடிச்சு உதைச்சு அவரோட முகமூடியைக் கிழிக்கறீங்க. தர்மபுரி புல்லா புதுசா காண்டிராக்ட் விட்டு நல்ல ரோடு போட வழி செய்யறீங்க

ராமு: கேப்டன், அந்த காண்டிராக்டை நம்ம கட்சி ஆளுங்களுக்கு தர்ற மாதிரி பண்ணிடுவோம்

விஜயகாந்த்: யோவ் நீ சும்மா இருய்யா. நீங்க மேல சொல்லுங்க.

பேரரசு: இப்போ தான் மெயின் ஸ்டோரி. நான் அதே ஏரியாவில ஒரு கட்டடத்துல லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன். ஒருநாள் லிப்ட்ல குண்டான ஆசாமிங்க அஞ்சு பேர் ஏறினதால லிப்ட் பாதில நின்னுடுது. நீங்க உடனே லிப்ட் ரோப் வழியா உள்ள இறங்கி அந்த அஞ்சு பேரையும் காப்பாத்தறீங்க

விஜயகாந்த்(பெருமூச்சுடன்): ம்ம்..சொல்லுங்க

பேரரசு: இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து குண்டா இருக்கவங்களுக்கு தனியா லிப்ட் வேணும்னு போராட்டம் பண்றோம். அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரவுது. என் போட்டோவும் அதுக்கு கீழ உங்க போட்டோவும் போட்டு தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஓட்டறாங்க. கடைசில அரசு நம்ம கோரிக்கைக்கு அடிபணிஞ்சு தனித் தனி லிப்ட் வைக்கனும்னு ஆணை இடுது

ராமு: தலைவா, முழிச்சுக்கோங்க. இந்தாளு திருப்பதியை மறுபடியும் உங்களுக்கு உல்டா பண்றான். கொஞ்சம் அசந்தா உங்களையும் செக்ண்ட் ஹீரோ ஆக்கிருவான். உசார்.

விஜயகாந்த்: சார், கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இது வேணாம். உங்க கேரக்டர் இல்லாம தனியாவே கதை சொல்லுங்க. ஏற்கனவே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு

கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்ததும் கவலையடைகிற பேரரசு, படத்தில் நடிக்காவிட்டாலும் டைரக்ஷன் வாய்ப்பை விடக்கூடாது என அடுத்த கதையை யோசிக்கிறார்.

பேரரசு: இதே லிப்ட் மேட்டரை வேற மாதிரி வச்சுக்கலாம் சார். நீங்க தர்மபுரில இருந்து மெட்ராசுக்கு பைக்ல வர்றீங்க. அப்போ ஆம்பூர் பக்கத்துல ஒரு கல்யாண கோஷ்டி வந்த லாரி ப்ரேக்டவுன் ஆகி நிக்குது. அதுக்கு காரணம் கலப்படமான பெட்ரோல். அதைப் பார்த்து பொங்கி எழுந்து, அந்த லாரியை உங்க பைக்ல கயிறு போட்டு கட்டி லிப்ட் கொடுக்கறீங்க. அப்படியே அந்த மக்களோட சென்னை நோக்கி வர்றீங்க. திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லின்னு நீங்க வர்ற வ்ழி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுது

ராமு: அப்படியே நம்ம தொண்டர்களையும் கொடியையும் ஒவ்வொரு ஊர்லயும் காட்டிட்டு வரலாம்

பேரரசு: நீங்க மெட்ராஸ் உள்ள வரதுக்கு போலிஸ் தடை விதிக்குது. பூந்தமல்லி பைபாஸ்ல நீங்க வெயிட் பண்ணும்போது அந்த பெட்ரோல் பங்க் முதலாளி உங்களைக் கொல்ல ஆள் அனுப்பறான். அவங்களை அந்த லாரிலயே லெக்பைட் போட்டு அடிச்சுபோட்டுடறீங்க.

லெக் பைட் என்ற வார்த்தையைக் கேட்டதும் கேப்டன் குஷியாகிறார்.

விஜயகாந்த்: இப்போதான் விறுவிறுப்பா இருக்கு. அப்படியே டாப் கியர்ல போங்க

பேரரசு: நீங்க மக்களுடன் சேர்ந்து போராட்டம் பண்றீங்க. ஹைவேல வண்டி ப்ரேக்டவுன் ஆகி நிக்கற்வங்களுக்கு லிப்ட் தர்றவங்க அவங்க வீட்டுக்கே கொண்டு வந்து விடனும்னு சட்டம் கொண்டு வர்றதுக்கு போராடறீங்க. அரசும் தலை பணிஞ்சு அந்த மாதிரி சட்டம் கொண்டுவருது.

விஜயகாந்த்: கதை சூப்பர் பேரரசு. இவ்வளவு நாளா உங்களைத் தப்பா நினைச்சுட்டேனே

என்று பீலாகும்போது "வருவான் சார். வல்லவன் வருவான் சார். என் கேரியருக்கு ஒரு லிப்ட் சார் வல்லவன். நயந்தாராவுக்கு கொடுத்தது லிப்டான்னு கேட்டா சொல்லத் தெரியல. வாழ்க்கை முழுக்க கூட வருவாங்களா..இப்ப சொல்ல முடியாது. சொல்லி அடிக்கறவன் தான் இந்த சிம்பு" என எக்குதப்பாக பேசிக்கொண்டு சிம்பு எண்ட்ரி கொடுக்க "இவன் நமக்கு மேல பெருந்தொல்லையா இருக்கானே" என மனதுக்குள் எண்ணும் பேரரசு "யப்பா சிம்பு, தேனப்பன் கார் பஞ்சர் ஆகி பஞ்சர் ஓட்ட காசு இல்லாம ஜெமினி பக்கத்துல லிப்ட் கேட்டு ரொம்ப நேரமா வெயில்ல நின்னுட்டிருக்காராம். என்னன்னு பாருப்பா" என்று சொல்லிவிட்டு திரும்ப கேப்டனும் ராமுவசந்தனும் ஏற்கனவே எஸ்ஸாகியிருந்தனர்.



சினிமா! சினிமா!! சினிமா!!!

வடபழனி மாநகரப் பேருந்து பணிமனைக்கும் வசந்த பவனுக்கும் இடையில் செல்லும் குமரன் காலனி சாலையில் துணை நடிகர்கள், சின்னத் திரை நடிகர்கள், துணை நடிகர்கள் ஏஜெண்டுகள் என பலவகையான சினிமாத் தொழிலாளர்களின் சங்கங்கள் இருக்கும். அந்த சாலையிலுள்ள டாஸ்மாக் வாசலிலும் டீக்கடைகளிளும் சண்டைப் பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள் துணை நடிகர்கள் என 'எங்கேயோ பார்த்த' முகங்களை அடிக்கடி பார்க்கலாம்.

***********************************************************

அந்த சாலையில் இருக்கும் டீக்கடையில் ஒரு நாள் கல்லூரி நண்பர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அவர் உறவினர் ஒருவரும் உடனிருந்தார். அவர் நடிக்க வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர். இப்போது நடிக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது எனக் கேட்டதற்கு "இப்போ கூட சசசின் படத்துல நடிச்சிருக்கேன்.படம் பார்த்துட்டீங்களா?" என்றார். படம் பார்த்திருந்தாலும் அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில்லை. "படத்துல விஜயோட அப்பா ரகுவரன் வரும்போது பின்னாடி நின்னு 'இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர்கள்ல ஒருத்தர் இவர்'ன்னு சொல்றது நான் தான். ஞாபகம் இருக்கா" எனக் கேட்டார்.

அப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.

***********************************************************

சமயங்களில் டீக்கடைகளில் திரைக் கலைஞர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு முறை அடிக்கடி திரையில் தோன்றும் ஒரு துணை நடிகரும் அவர் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். வாய்ப்புகள் எப்படியிருக்கிறதென நண்பர் கேட்டதற்கு "இப்போ ரொம்ப நல்லாவே வந்துட்டு இருக்குங்க. இப்போ சூர்யா கூட பஸ் கண்டக்டரா ஒரு படம்..நல்ல ஸ்கோப் இருக்கு..அடுத்த வாரம் யூனிட் பொள்ளாச்சி போகுது. இப்போ கைல ஒரு நாலஞ்சு படம் இருக்கு. இன்னும் நல்லா வரும்" என்றார்.

இன்றும சில படங்களில் அவரைக் காணும்போது அன்றைய உரையாடல் நிழலாடுகிறது. இத்தகைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே இவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

***********************************************************

என் தூரத்து உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சென்னையில் இணை எடிட்டராக இருந்தார். அவரை சந்திக்கும் வேளைகளில் இளம் கதாநாயகர்கள் எப்படி தாங்களே பணம் போட்டு நடிக்கிறார்கள் என்பதில் இருந்து பல சுவாரசியமான விடயங்களைச் சொல்லுவார். இணை எடிட்டர் என்றாலும் அவருக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என எல்லாவற்றிலும் வேலை பார்த்தார்.

குடும்பப் பிரச்சனைகள் காரணமாக சென்ற வருடம் அவர் சினிமாவை விட்டுவிட்டு காஞ்சியில் ஒரு பட்டு கோறா கடையைத் திறந்தார். என் உறவினர் ஒருவருடன் கடைவீதியில் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரை சந்திக்க நேர்ந்தது. "இப்ப ஆரம்பிச்ச கடையை பத்து வருஷம் முன்ன ஆரம்பிச்சிருந்தா எங்கயோ போய் இருப்ப. இப்பவாவது புத்தி வந்துச்சே" என்று கடிந்துகொண்ட என் உறவினருக்கு அவரால் ஒரு வறண்ட புன்னகையே பதிலாகத் தர முடிந்தது.

***********************************************************

சினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும்.



உறக்கம் தொலைக்காத காலையில்

உறக்கம் ஒரு வரம். சின்ன வயசுல இருந்தே நான் 'முன் தூங்கி பின் எழும்' பரம்பரை. படுத்த இரண்டாவது நிமிஷம் தூங்கிடுவேன். அதுக்கப்புறம் என்னை அடிச்சு போட்டாக் கூட தெரியாது.

போன பொங்கல் பண்டிகையின் போது முதல் நாள் இரவு முழுக்க ஆபிஸ்ல வேலை. பொங்கல் அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் ஏறினேன். சாதாரண நாள்லயே கூட்டம் குலை நடுங்க வைக்கும். பொங்கல் அன்னைக்கு சொல்லனுமா? சரியான கூட்டம். இன்னைக்கும் ஸ்டாண்டிங் தான் மாப்ளே-ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு பஸ்ல ஏறிட்டேன். நம்ம நல்ல நேரம் நான் நின்னுட்டிருந்ததுக்கு பக்கத்து சீட் காரர் அவரோட வந்தவர் பஸ்ல ஏறலைன்னு இறங்கிட்டார். நல்ல்தாப் போச்சுடான்னு நம்ம கட்டையை சீட்ல சாய்ச்சாச்சு.

அப்ப தான் ஒருத்தர் ஏறினார். கையில வெண்டிலேட்டருக்கு மாட்டுற கண்ணாடி. அவர் பாட்டுக்கு நேரா வந்து அந்த கண்ணாடியை என்கிட்ட கொடுத்துட்டு பக்கத்துல நின்னுட்டார். பொதுவா பஸ்ல போகும்போது தூக்கம் வராது.ஆனா அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காததால பஸ் எடுத்ததும் கண்ணை சொக்க ஆரம்பிச்சுடுச்சு.

பூந்தமல்லி பைபாஸ்ல போகும்போதே தலை சாஞ்சுடுச்சு. திடீர்னு கையில் கண்ணாடி இருக்க ஞாபகம் வர முழிப்பு வந்துடுச்சு. நம்மாளு என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்காரு. நான் அந்த கண்ணாடியைக் கீழே போட்டால் புடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கார்.

தூங்கி அதைக் கீழே போட்டு மானத்தை வாங்க வேணாம்னு செல்போன் எடுத்து ஒவ்வொரு மெசெஜா படிச்சு டெலிட் பண்ணா பொழுது போகும்னு செல்போன் எடுத்தேன். நல்ல வேலையா ஒரு நூறு மெசெஜ் இருந்துச்சு. ஜோக்குன்ற பேருல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கலையேன்னு ஒவ்வொன்னா படிச்சு படிச்சு டெலிட் பண்ணிட்டு வந்தேன்.

திடீர்னு தோள்ல யாரோ தட்டின மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா நம்ம கண்ணாடி பார்ட்டி.அவர் கையில் என் செல்போன்.மெசெஜ் படிச்சுக்கிட்டே செல்போன் கைநழுவி கீழே விழுந்ததும் தெரியாம தூங்கி இருக்கேன். அவரோட கண்ணாடியும் மடியில் விழற நிலைமைல இருக்கு. கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் தொடச்சிக்கிட்டே செல்போனை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் போறதுக்குள்ள மறுபடியும் தூங்கிட்டேன் போல. என்னை எழுப்பி 'நானே வச்சுக்கறேன் கொடுங்க' ன்னு கண்ணாடியை வாங்கிக்கிட்டார். 'அடங்கொக்கமக்கா..மகராசன் அசிங்கப்படுத்திட்டானே' ன்னு பீல் பண்ணிட்டே மறுபடியும் தூங்கிட்டேன். என்னத்த பண்ண அவர் கவலை அவருக்கு..நம்ம தூக்கம் நமக்கு.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்துக்கும் முன்னாடியே தூக்கத்தால தான் செல்போனை தொலைச்சேன். சுமார் ஒரு ஐநூறு ஐநூத்தம்பது நாட்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினம். அன்னைக்கு காலையில திடீர்னு முழிப்பு வர தலைமாட்டுல இருந்த செல்போனை எடுத்து டைம் பார்த்தா விடிகாலை ஆறரை. அதுக்குள்ள எழுந்து என்ன பண்றதுன்னு மறுபடி தூங்கிட்டேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு தலைமாட்டுல தடவின செல்போனைக் காணோம்.

பக்கத்துல பாத்தா நம்ம தடித் தாண்டவராயன்ஸ் எல்லாம் இன்னும் உறக்கத்துல தான் இருக்கானுங்க. ஒருத்தன் மட்டும் எழுந்து கதவைத் தொறந்து போட்டுட்டு சமையல் கட்டுல உக்காந்து தி இந்துல ஃப்ரைடே ரிவ்யூ படிச்சுட்டு இருக்கான். செல்போனை பாத்தியாடான்னு கேட்டதுக்கு அவன் போனை எடுத்து ஆங்காரமா நீட்டறான்.

தூங்கி எழுந்தவன் கதவைத் திறந்து பேப்பரை எடுத்துக்கிட்டு கதவை அப்படியே திறந்து போட்டுட்டு உள்ள போயிட்டான். வீட்டுக்குள்ள வந்த எவனோ கண்ணுக்கழகா ஒரு போனைப் பாத்ததும் உள்ள புகுந்து அடிச்சுட்டான். எப்படி வீடு புகுந்து அடிச்சிருக்கான்னு டாப் ஆங்கிள்ல படத்தைப் பாருங்க.



'தூங்கிட்டு இருக்கும்போது வீடு புகுந்து லவட்டிட்டானுங்கடா மாப்ளே' ன்னு அவன் செல்லை வாங்கி என் நம்பருக்கு அடிச்சா 'not reachable'. ஊர்ல எல்லா திருடனும் விவரமா தான் இருக்கானுங்க. தூங்கிட்டு இருக்க நாலு பேரை தாண்டி வந்து எடுத்திருக்கான். அது தெரியாம நாங்களும் சுகமா தூங்கிட்டு இருந்திருக்கோம்.

காலங்காத்தால மாடி வீட்டுக்கு பேப்பர் போடறவன் தான் வீட்டுக்குள்ள வருவான். பக்கத்து முக்குல இருக்க பேப்பர் கடைக்கு போனால் அங்க கடை ஓனர் தான் இருந்தார். அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் செம டென்ஷன் ஆயிட்டார். "நீங்க எதைத் தொலைச்சாலும் பேப்பர் பசங்க மேல பழி போடுவீங்களே..எங்க பசங்க வீட்டுக்கு உள்ள கூட வராம காம்பெளண்ட் வெளிய இருந்து தான் பேப்பர் போடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எங்க மேல சந்தேகப் படாதீங்க சார். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வருவான். அவன்கிட்டயே விசாரிச்சுக்கோங்க" ன்னு நேர்மையில் மறு உருவமா பேசறார். 'அடடா..காலங்காத்தால ஒரு நல்ல மனசை புண்படுத்திட்டோமே'ன்னு பீல் பண்ணிக்கிட்டே திரும்பி வந்தாச்சு. பக்கத்து ஆட்டோ ஸ்டாண்ட்ல கேட்டா அவங்களும் யாரையும் பாக்கலே-ன்னு சொல்லிட்டாங்க.

அந்த பையனை அடுத்த நாள் புடிச்சு விசாரிச்சா அவனும் நல்லவன் மாதிரியே பேசறான். 'திருடினவன் எங்க இருந்தாலும் ந்ல்லா இருடா' ன்னு வாழ்த்தறதை தவிர வேற என்ன செய்ய?

போன் வாங்கியபோது ஏதோ ஆஃபர்ல திருட்டு இன்ஷூரன்ஸ் (Theft insurance-ங்க) கொடுத்தாங்க. போனது போச்சு பாதி காசையாவது மீட்போம்னு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். முதல்ல வடபழனி ஸ்டேஷன் போனா அட்ரஸ் கேட்டு விருகம்பாக்கம் ஜூரிஸ்டிக்சன்னு தொரத்தி விட்டுட்டாங்க. அங்க போய் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வேலையை பாக்க போயாச்சு.

ஒரு வாரம் கழிச்சு கூட வேலை பாக்கறவன் கிட்ட "செல்போன் தொலைஞ்சுதுன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இன்ஷூரன்ஸ் கம்பெனில இருந்து போன் வரலையே"ன்னு கேட்டா "அட வெண்று, கம்ப்ளெயிண்ட் காப்பி வாங்கி மூனு நாள்ல கம்பெனிக்கு நீ அனுப்பி வைக்கனும்டா"ங்கிறான். என்னதத சொல்ல..நம்ம பொது அறிவு அவ்ளோ தான்.

என்ன தான் செல்போன் தொலைஞ்ச வருத்தம் இருந்தாலும் அதை அடிச்சவனோட தைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியலை. நாலு பேரு தூங்கிட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள நுழைஞ்சு அடிச்சிருக்கான்னா என்னா தில் இருக்கனும். அவனை ஒரு தடவையாவது சந்திச்சு 'அன்னைக்கு சிக்கி இருந்தா என்ன பண்ணியிருப்ப?'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்? அவனை புடிச்சு அடிச்சிருப்போமா, போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இருப்போமா இல்ல அப்படியே மன்னிச்சு விட்டிருப்போமா..தெரியல...கண்டிப்பா அந்த நிமிஷத்துல என்ன செய்து இருப்போமோ அதுவும், இப்ப யோசித்து பார்க்கும்போது மனதில் தோன்றுவதும் ஒன்றாக இருக்காது...அப்படி இருப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.



நட்பின் வழியது

இடமாற்றம்
வேலைப் பளு
புதிய நண்பர்கள்
காதலி
திருமணம்
குடும்பம்
தயக்கம்
தலைக்கனம்
ஞாபக மறதி
நேரமின்மை
சோம்பேறித்தனம்
வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்
மாறிய தொலைபேசி எண்
அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம்
நான் அனுப்பி பதில் இல்லாத,
நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்
தேவையற்றதாகத் தோன்றி
பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை
சரியாகவோ தவறாகவோ
முதிர்ச்சி
வயதிலும் மனதிலும்
நடந்ததும் பொய்யாகிப் போனதுமான
எதிர்பார்ப்புகள்
நீ வராமல் விட்ட
என் தங்கையின் திருமணம்
நான் வர முடியாமல் போன
உன் விவாகம்
அடைக்க மறந்த கடன்
அதைக் கேட்டுத் தொலைத்த நீ
இன்னபிற
இன்னல்களுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

--------------------------------------------------------------------------------

டயலாக்:

"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு"

"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்"



Whisky

இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.

இந்த நிலைமையில வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம கூட வேலை பார்க்ககும் லோக்கல் நண்பன் கிட்ட உருகுவே சினிமா இண்டஸ்ட்ரீ பத்தி அறிவை வளர்த்துக்கலாம்னு கேட்டு தொலைச்சுட்டேன். அவன் சொன்ன படம் தான் 'Whisky'. உருகுவேயில் தயாரிக்கப்பட்ட படம். படம் பேரே கலக்கலா இருக்கேன்னு டிவிடி வாங்கி வந்து பார்த்தாச்சு.

ஜேக்கப் கொஷர் (Jacobo Koller - இங்க ஹேக்கபோ) நலிந்த நிலையில் இருக்கும் ஒரு சிறிய காலுறை தொழிற்சாலையின் முதலாளி. மார்த்தா (Marta) என்ற நடுத்தர வயது பெண்மணி அங்கு மேற்பார்வையாளராக இருக்கிறார். இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள்.

தினமும் காலையில் மார்த்தா சீக்கிரமாக வந்து காத்திருப்பார். ஜேக்கப் வந்து தொழிற்சாலையை திறப்பார். சிறிது நேரத்தில் மார்த்தா ஜேக்கப்பிற்கு லெமன் டீ கொடுப்பார். ஜன்னல் கதவு வேலை செய்யாது. சிறிது நேரத்தில் மற்ற இரு பெண்களும் வருவார்கள். பன்னிரெண்டு மணி நேர வேலைக்குப் பிறகு மார்த்தா அவர்களின் பைகளை சோதனை செயத பின் கிளம்பிச் செல்வார்கள். அதற்கு பிறகு மார்த்தாவும் ஜேக்கப்பும் தனித்தனியே கிளம்பிச் செல்வார்கள்.

இதையே படத்தின் ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை காட்டி ஜேக்கப்,மார்த்தாவின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதில் படம் தொடங்குகிறது.

ஜேக்கப்பின் வயது முதிர்ந்த தாய் இறந்து விட அவரின் இறுதிச் சடங்குகளுக்காக ஜேக்க்ப்பின் தம்பி ஹெர்மன் கொஷர் (Herman Koller) பிரேசிலில் இருந்து வருகிறார். ஹெர்மனும் காலுறை உற்பத்தி செய்பவர் தான் என்றாலும் கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களும் நவீன இயந்திரங்களும் கொண்டு வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்.

தன் தம்பியை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற விதண்டாவாத மனப்பான்மை கொண்ட ஜேக்கப் மார்த்தாவை தன் மனைவியாக நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மூவரும் பிரியாபோலிஸ் (Pireapolis) என்ற சுற்றுலா நகரத்திற்கு செல்கின்றனர். அங்கு மூவருக்குள் நடக்கும் உரையாடல்களையும், ஹெர்மனின் தாக்கத்தால் மார்த்தா தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதையும் ஜேக்கப் தன் பிடிவாத்ததை விடாமல் அதே சுழற்சியில் தொடர்வதையும் மீதி படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

ஹெர்மன் பிரேசிலுக்கு கிளம்புவதற்கு முன் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஜேக்கப்பிற்கு பணம் தர அதை முதலில் வாங்க மறுக்கும் ஜேக்கப் பின்னர் வாங்கிக் கொள்கிறான். தன் தம்பியை வழி அனுப்பியதும் அந்த பணம் மொத்தத்தையும் மார்த்தாவிடம் கொடுத்து விடுகிறான்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு செல்கிறான். ஆனால் மார்த்தா வரவில்லை. அவனே லெமன் டீ போட்டு குடித்துவிட்டு வேலையைத் தொடர்வதாக படம் முடிகிறது.

எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதே வாழ்க்கையைத் தொடர விரும்பும் ஜேக்கப், சுழற்சியான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளி வரத் துடிக்கும் மார்த்தா, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெறும் ஹெர்மன் என மூன்று கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருகிறது.

மிகவும் அமைதியான, மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைப்படம். சனிக்கிழமைகளில் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் பார்த்தது போல் இருந்தது.

மூன்று நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க காட்சிகள் மெல்லிய நகைச்சுவையோடு யதார்த்தமாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஜேக்கப்பை உருகுவேயுடன் ஒப்புமை படுத்தி விமர்சிக்கிறான். எழுபதுகளில் 'தென் அமெரிக்காவின் ஸ்விட்சர்லாந்து' என அழைக்கப்ப்ட்ட உருகுவே இன்று வளர்ச்சியில் தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன். உருகுவேயின் இந்த தேக்க நிலையையும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையையும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் வழியாக இந்த படம் பிரதிபலிப்பதாக கூறுகிறான்.

படத்துக்கு பெயர்க் காரணம் சொல்லலையே....நம்ம ஊர்ல புகைப்படம் எடுக்கும்போது 'Cheese...'ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி இங்க 'Whisky..'



இந்த படங்கள் எப்போ ரிலீஸ்??

"தமிழில் நல்ல படமாகவே இருந்தாலும் இரண்டு டூயட், ஒரு குத்து பாட்டு, சண்டை காட்சி இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட வேண்டியிருக்கும். அதனாலேயே தேவையில்லாமல் பாட்டும் பைட்டும் இடையில் திணிக்கிறார்கள்"

இது யாரோ எங்கேயோ சொல்லி கேட்டது. இது ஓரளவு உண்மை என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இது போல் பாடல் காட்சிகளைத் திணிக்க ஏதுவாக காட்சியமைப்பு இல்லாததால் நன்றாக வந்திருக்க வேண்டிய சில படங்களும் சொதப்பியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம்: கொக்கி.

'வேட்டையாடு விளையாடு' ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. 'வல்லவன்', 'காட் ஃபாதர்' ஆகிய படங்களும் விரைவில் வெளியாகும் என பத்திரிகைகள் சொல்கின்றன.

இவை தவிர நீண்ட நாட்களாக வெளிவராமல் நான் எதிர்பார்த்திருக்கும் இரண்டு படங்கள் :

துள்ளல்:



ரட்சகன், ஜோடி, ஸ்டார் வெற்றிப் படங்களைத்(?!) தொடர்ந்து ப்ரவீன் காந்த் க்தாநாயகனாக நடித்து இயக்கும் படம். இரண்டு கதாநாயகிகள். 'சின்ன கலைவாணர்' விவேக்கும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வட்பழனி 'லஷ்மண் ஸ்ருதி'யில் இந்த படத்தின் போஸ்டரை கடையின் வாசலில் ஒட்டியிருந்தார்கள். இந்த படத்தில் 'தல' நடிப்பதாக இருந்தது என எங்கேயோ படித்த ஞாபகம்.

வீராச்சாமி:



சிம்பு நயன்தாரா உதட்டைக் கடித்து, ஆற்காடு சாலையில் கார் ரேஸ் வைத்து, தி. நகரில் அடி வாங்கி 'வல்லவன்' பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு என ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

இந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க! ;)



கயல்விழி

சுந்தர்.வயது 28.5' 10''. மாநிறம். சிம்ம லக்கினம். சுவாதி நட்சத்திரம்.துலா ராசி.சாப்ட்வேர் இன்ஜினியர்.வேளச்சேரி பணாமுடீஸ்வரர் தெரு குறுக்கு சந்தில் ஏழாவது மாடியில் டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்.24 மணி நேரம் தண்ணீர்.

சுந்தரின் தாய் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட மற்றும் இன்ன பிற விவரங்களுடன் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். வரும் தை மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தீவிரமாக இறங்கிவிட்டார்.

சுந்தர், ஐந்து ரூபாய் கர்ச்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் அணியும் சக சென்னை சிட்டிசன். அம்மா பாண்டிச்சேரியில் சொந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டதால் இங்கே நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.

அவனைப் பற்றி அலுவலகத்தில் விசாரித்தால் அமைதியான பொறுப்பான பண்பான என எல்லாம் ஆனவன் என்பார்கள். பெண்களுடன் அன்னியோன்யமாய் பழகுபவன்தான் என்றாலும் காதல் திருமணம் செய்வதில்லை என தன் தலையில் தானே எழுதிக்கொண்ட அம்மாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை.

அன்று அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் அம்மா போன் செய்தார்.

"தரகர் ஒரு ஜாதக்ம் கொடுத்துட்டு போயிருக்காருடா..பொண்ணு பேரு கயல்விழி. கடலூர். அப்பா கடலூர்லயே ஹெட்மாஸ்டர்"

"ஓ..போட்டோ குடுத்திருக்காங்களா?"

"இல்லடா..அந்த பொண்ணு உன் கம்பெனில தான் வேலை பாக்குதாம். தரகருக்கு எந்த ப்ராஞ்சுன்னு சொல்லத் தெரியல. பொண்ணு பேரு கயல்விழி. அப்பா பேரு மகாதேவன். இரண்டு வருஷமா மெட்ராஸ்ல தான் வேலை பாக்கறாளாம்"

"அப்படியா..சரிம்மா இந்த வாரம் வீட்டுக்கு வரும்போது பாத்துக்கலாம்".

போனை வைத்துவிட்டு பக்கத்தில் பிரபுவிடம் விஷயத்தை சொன்னான்.

"எந்த ப்ராஞ்சுன்னு தெரியலயாடா?"

"தெரியல மச்சி"

"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" - பக்கத்து கேபினில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர் குமார்.

"பார்ப்போம் சார். இப்போ ஜாதகம் மட்டும் தானே குடுத்திருக்காங்க. எல்லாம் முடியட்டும்"

"பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?'" - இந்த பக்கத்திலிருந்து லதா.

"கயல்விழி. கடலூர். நம்ம கம்பெனி தான். ஆனா எப்படி கண்டுபிடிக்கறது?"

"கயல்விழி மகாதேவனா?"

"ஆமா லதா..அப்பா பேரு மகாதேவன்னு தான் சொன்னாங்க"

"அவ ட்ரெயினிங்க்ல என் பேட்ச் தான். இப்போ டைடல்ல இருக்கா. மெயில் ஐடி தேடித் தரேன்"

"லதா, பாக்க எப்படி இருப்பாங்க?" - இது பிரபு. குறிப்பறிந்த நண்பன்.

"நல்லா லட்சனமா தான் இருப்பா...அமைதியான பொண்ணு..கவலைப்படாதீங்க" என சிரித்தபடியே மெயில் ஐடியைத் தேடினாள்.

அதற்குள் சுந்தர் "இல்ல லதா. மெயில் அனுப்பினா நல்லாயிருக்காது. போன் நம்பர் இருக்கா? போன்லயே பேசிடலாம்"

"போன் நம்பர் என்கிட்ட இல்ல. மத்தியானத்துக்குள்ள வாங்கித் தரேன்".

சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் தொலைபேசி எண்ணை வாங்கித் தந்துவிட்டாள். ஏற்கனவே இரண்டு பெண்களின் ஜாதகம் பார்த்திருந்தாலும் அவர்களிடம் சுந்தர் பேசியதில்லை. கயல்விழி அதே நிறுவனத்தில் வேலை செய்வது அவன் ஆர்வத்தைத் தூண்டியது. அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் அழைக்கலாம் என வேலையைத் தொடர்ந்தான்.

"ஹலோ நான் சுந்தர். லாயிட்ஸ் ரோடு ப்ராஞ்சில இருந்து பேசறேன்"

"ம்ம்..சொல்லுங்க"

"உங்க ஜாதகம் தரகர் கொடுத்திருக்காராம். அம்மா சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசலாம்னு"

"இப்பதாங்க அப்பா போன் பண்ணி சொன்னார்"

"ஓ நல்லது. உங்க பேட்ச் மேட் லதா போன் நம்பர் கொடுத்தாங்க. ஆபிஸ்ல இருக்கீங்களா?"

"ஆமாங்க. கொஞ்சம் வேலை..லேட்டாயிடுச்சு.."

"அப்படிங்களா..இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?"

"பாக்கலாம்ங்க..இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் கூப்படறீங்களா? தப்பா நினைச்சுக்காதீங்க"

"நோ நோ..இட்ஸ் ஓகே...நீங்க கிளம்புங்க. குட்நைட்"

"குட்நைட்"

'ச்சே..என்னடா இது உப்புசப்பில்லாம முடிஞ்சுடுச்சே' என ம்னதுக்குள் எண்ணியவாறே காலண்டரைப் பார்த்தான். புதன். 'சனிக்கிழமை போன் பண்ணலாம். ரெண்டு நாள் ஆபிஸ்ல ஓட்டி எடுத்துடுவானுங்க'.

வழக்கம்போல் சனிக்கிழமை பத்து மணிக்கு கண் விழித்தான். எழுந்தவுடனே கயல்விழி நினைவு வந்தது. பல் கூட விளக்காமல் போன் செய்தான்.

"சுந்தர் பேசறேங்க"

"ஹலோ சுந்தர். எப்படி இருக்கீங்க?"

"நலம். எங்க இருக்கீங்க?"

"ஆபிஸ்ல இருக்கேன். ஒரு டெலிகான் இருக்கு. ஈவ்னிங் போன் பண்றீங்களா?"

"கண்டிப்பாங்க..நாலு மணிக்கு பண்ணவா?". அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

'என்ன இவ..பிடி கொடுக்காமலயே பேசறாளே..இத இப்படியே விடக்கூடாது. மறுபடியும் சாயந்திரம் போன் பண்ணிட வேண்டியதுதான்'. எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

மதியம் சாப்பிட்டுவிட்டு திருட்டி சிடியில் படம் பார்த்துக்கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையும் கவனித்தபடி இருந்தான். சரியாக நான்கு மணிக்கு கயல்விழியை மீண்டும் அழைத்தான்.

"ஹலோ..என்ன இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கீங்களா?"

"ஆமாங்க..இன்னும் வேலை முடியல"

"என் ப்ரெண்ட் ஜஸ்டின் கூட உங்க ப்ராஜெக்ட்ல தான் இருக்கான்"

"ம்ம்..ஜஸ்டின் தெரியும்ங்க.. அவர் வேற டீம். நான் டெஸ்டிங்ல இருக்கேன்"

"ஓ குட்.இப்போ நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்...உங்க ஆபிசுக்கு வரலாமா?? உங்களைப் பார்க்க முடியுமா?"

"நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிலாம்னு இருக்கேன்"

"அப்ப நல்லதா போச்சு..உங்களை டைடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.. அப்படியே எங்கயாவது சாப்பிட போலாம்"

"இல்லைங்க..இன்னொரு நாள் பார்க்கலாமே...வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு"

"உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயப்பட்றீங்களா? அதெல்லாம் பார்த்துக்கலாம்ங்க"

"இல்ல சுந்தர். பரவாயில்லை இருக்கட்டும் இன்னொரு நாள் பாக்கலாம்"

"கல்யாணத்தை விடுங்க. ஆஸ் எ கலிக்..ஒரே கம்பெனியில வேலை பார்க்கறோம். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா மீட் பண்ணலாமே..அட்லீஸ்ட் பக்கத்துலயே பெசண்ட் நகர் அஷ்டல்ஷ்மி கோயிலுக்காவது போலாம்ங்க"

"ப்ளீஸ் சுந்தர்..போனா லேட் ஆயிடும். ரூம் மேட் கூட வெளிய போறதா ஏற்கன்வே ஒரு ப்ளான் இருக்கு"

"இதுக்கு மேலயும் வரலைனா நான் என்னங்க சொல்றது"

"சுந்தர்..நான் எதுக்கு வரலைன்றதுக்கு உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டாம். இருந்தாலும் உங்க கிட்ட சொல்றேன். தப்பில்லை. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி. ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டுல மணிகண்டன்னு ஒருத்தரோட ஜாதகம் பார்த்தாங்க. அவரும் நம்ம கம்பெனி தான். ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்துச்சு. நாங்களும் பேசிப் பழகிட்டோம். நிச்சயதார்தத்துக்கு கூட நாள் குறிச்சுட்டாங்க. நானும் மணிகண்டனும் போன்ல பேசிக்கிட்டோம். நேர்லயும் மீட் பண்ணோம். கிட்டத்தட்ட ஒரு மாசம் சேர்ந்து சுத்தினோம். எல்லாம் கூடி வர்ற நேரத்துல நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் முன்னாடி என் தாத்தாவுக்கும் அவரோட பெரியப்பாவுக்கும் சின்ன சண்டை வந்து எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. நான் வீட்டுல சொல்றதை மீறவும் முடியாது. என்னால எதுவும் பண்ண முடியல. நான் சின்ன டவுன்ல வளர்ந்த பொண்ணு. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடிய்ல. நான் இப்பதான் அதை ஓரளவு மறந்திட்டிருக்கேன். நம்ம விஷயத்துலயும் அதே மாதிரி எதுவும் வருத்தம் தர்றா மாதிரி நடக்க வேண்டாம். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாம் நிச்சயமாகட்டும். அதுக்கப்புறம் நானே உங்களுக்கு போன் பண்றேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம். சாரி சுந்தர்."

சுந்தர் எதுவும் கூறும் முன்பே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அதற்கு அடுத்த வாரம் சுந்தர் ஊருக்குச் சென்றபோது கயல்விழியின் ஜாதகத்தில் பத்து பொருத்தத்திற்கு ஆறு தான் பொருந்தி வருவதாயும் தரகரிடம் வேறொரு பெண்ணின் ஜாதகத்தைக் கேட்டிருப்பதாகவும் அவன் அம்மா சொன்னார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.



தோப்பில் ஒரு நாடகம்

'உலகமே ஒரு நாடக மேடை'ன்னு பெரியவங்க சும்மா சொன்னாங்களோ இல்ல காசு வாங்கிட்டு சொன்னாங்களோ தெரியாது. ஆனா காலேஜ்ல படிக்கிற காலத்துல எதுனா ஒரு மேடை கிடைச்சா அதுல ஒரு ஸ்கிட்(Skit) ஏத்தறதுக்கு ஒரு கூட்டமே எப்பவும் காத்துகிட்டு இருக்கும். இதுக்காகவே பசங்க மண்டையை உடைச்சிகிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவானுங்க. அப்ப ரிலீஸ் ஆகி இருக்கற எதுனா ஒரு படத்தை அப்படியே உல்டா பண்ணிட்டா ஒரு ஸ்கிட் ரெடி.

ஆனா அதை விட சுலபமா சினிமாவுல அம்மா செண்டிமெண்டும் தாலி செண்டிமெண்டும் எப்படி காலம் காலமா நிலைச்சு நிக்குதோ அதே மாதிரி ஸ்கிட்டுக்கும் ஒரு எவர்க்ரீன் கதை இருக்கு.

முதல் வேளையா சினிமா ஹீரோக்கள்ல நாலஞ்சு பேரை செலக்ட் பண்ணிக்கனும். இது மாதிரி செலக்ட் பண்ணும்போது தான் கவனமா இருக்கனும். நாம் ஒன்னும் 'அபிநயா' ஆட்கள் இல்ல. அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு "அண்ணன் -தம்பி-பங்காளி"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.

இந்த ஹீரோக்க்ள் செலக்ட் பண்ணும்போது விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் ஆடியன்ஸ் கிட்ட ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க இவங்க இருந்தா நல்லது.

இப்ப உதாரணத்துக்கு நாலு ஹீரோவை செலக்ட் பண்ணிப்போம். இளைய தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார், 'காக்க காக்க' சூர்யா, 'பிதாமகன்' விக்ரம் இது மாதிரி. .நிறைய பசங்க நடிக்க(!!) ஆசைபட்டால் இன்னும் சில ஹீரோக்களை சேத்துக்கலாம். அதுனால நம்ம மெயின் ஸ்கிரிப்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுக்காக ஜெயம் ரவி,விஷால் இப்படியெல்லாம் சேர்த்தா நடிக்கறதுக்கு எந்த பையனும் வரமாட்டான்.

இப்போ சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் மட்டும் ஏன் குறிப்பிட்ட பட ரோல்ன்னு சந்தேகம் வ்ரும். நம்ம இளைய தளபதிக்கும், சிம்புவுக்கும் எந்த படமா இருந்தாலும் ஒரே மானரிசம் பண்ணி ஆடியன்சுக்கு புரிய வச்சிடலாம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கஷ்டம். அதுனால 'காக்க காக்க'-ல 'உயிரின் உயிரே' பாட்டை போட்டுட்டு சூரியாவை ஓட விட்டுடலாம். ஒரு அழுக்கு பனியனும் லுங்கியும் குடுத்து பிதாமகன் கெட்டப் கொண்டுவந்துடலாம்.

இப்ப கதைக்கு வருவோம். எந்த மேடைல இந்த ஸ்கிட்டைப் போடப் போறோங்கிறதைப் பொருத்து ஸ்டேஜ்ப்ளேயில்(படத்துக்கு ஸ்கீரின்ப்ளே-ன்னா இதுக்கு ஸ்டேஜ்ப்ளே தானே) சின்ன சின்ன மாறுதல் வரும். முதல்ல காலேஜ் லெவல் மேடைக்கு கதையைப் பார்ப்போம்.

கதையோட முதல் பாகம் - இந்த நாலு ஹீரோவுக்கும் தனித்தனியா ஒரு இண்ட்ரோ சாங்க் போட்டு வரிசையா மேடையில ஏத்தனும். இவங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே உயிர் நண்பர்கள். ஒரே காலேஜ்ல ஒன்னா ஜாயின் பண்றாங்க. இது நம்ம காலேஜ் இல்ல. அதே ஊரில் இருக்கற வேற காலேஜ். அந்த காலேஜ் பேரை சொல்லி பாலிடிக்ஸ் பண்றதும் சொல்லாம் விடறதும் நம்ம விருப்பம் தான்.

அந்த காலேஜ்ல சேர்ந்தப்புறம் நம்ம பசங்க தண்ணி,தம்மு, பிகரு, ஆட்டம் பாட்டம்னு கெட்டுப்(?!) போயிடறாங்க(அதாவது உருப்பட்டுடறாங்க!). பரிட்சைல வரிசையா கப்பு வாங்கித் தள்றாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய தோல்வி அடைஞ்சு நொந்து போறாங்க. அப்படியே கட் பண்ணிடறோம்.

இப்போ கதையின் அடுத்த பாகம். அதே நாலு ஹீரோ. நம்ம இன்ஜினியரிங் காலேஜுக்கு படிக்க வராங்க. ஒழுக்கசீலர்களா(?!) நல்லா படிச்சு. கோல்ட் மெடல் வாங்கி பெரிய ஆள் ஆயிடறாங்க. இந்த இடத்துல நம்ம தலைவரை லெக்ட்சரரா போட்டு அட்வைஸ் பாட்டு ஒன்னு வேணும்னா போட்டுக்கலாம். நம்ம காலேஜ்ல படிச்சு ஒவ்வொருத்தரும் டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும் வாழ்க்கையில வெற்றிப் படிக்கட்டுல ஏறி போயிட்டே இருக்காங்க. சாரி ஒரு சின்ன கரெக்ஷன்...மேல இன்ஜினியரிங் காலேஜின்னு சொல்லிட்டதால "டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும்" இதைக் கட் பண்ணிடலாம். அவ்ங்க பொறியாளர்களா மட்டும் வெற்றி படிக்கட்டுல ஏறி போறாங்க.

கதை அவ்ளோ தான். இதுல அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கரெக்டா பாட்டைப் போட்டுட்டா ஸ்கிட் ரெடி. கூடவே இரண்டு பசங்களுக்கு சுடிதாரை கடன் வாங்கி மாட்டி விட்டு ஸ்தீரிபார்ட் சேர்த்து ரொமாண்டிக் பாட்டு ரெண்டையும் சேத்துக்கலாம். இவங்க ஸ்டேஜ் ஏறினதும் விசில் பிச்சு உதறிடும். பாட்டு தேர்ந்தெடுத்து போடறதுல தான் நம்ம வெற்றியே இருக்கு.

இதே கதையை டிபார்ட்மெண்ட் விழா எதுக்காவது போட்டால், காலேஜுக்கு பதில் டிபார்ட்மெண்டுக்கு மாத்திடனும் . நம்ம நாயகர்கள் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சு நாசமா போற மாதிரியும் நம்ம டிபார்ட்மெண்டுல படிச்சு உருப்படற மாதிரியும்.

இதே ஹாஸ்டல் டே-ன்னா ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நல்லவனா வல்லவனா ஆகற மாதிரியும் 'டே ஸ்காலர்'னா நாசமா போறதாகவும் மாத்திக்கலாம். இப்படி இடத்துக்கு ஏத்த மாதிடி கஸ்டமைஸ் செய்தால் எந்த மேடைக்கும் பொருந்தும் ஒரு எவர்கிரீன் ஸ்கிர்ப்ட் இது.

இதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) )

ஆனா அது பெருசா ஆப்பு வாங்க வாய்ப்பு இருக்கு. ஆடியன்சுல எவனையும் நாம மேடைல இருக்கும்போது கத்தவோ சேர் மேல ஏறி நின்னு பெல்டால தூக்கு போடவோ விடக் கூடாது(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமில்லையா?நாம கீழே இருந்தப்போ செய்தது தானே நமக்கு திரும்பக் கிடைக்கும்).

அதுக்கு முன்னேற்பாடு நடவடிக்கையா முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும். அவனுங்களை ஒரே இடத்துல உக்கார விடாம அரங்கத்துல அங்கங்கே நாலு பேரா நிக்க வைச்சா இன்னும் நல்லது.

பாட்டு வரப்போ தியேட்டர்ல தம்மடிக்க போற மாதிரி நம்ம ஸ்கிட் வரும்போது நம்ம செட் பசங்க எல்லாரையும் தம்மடிக்க அனுப்பிடனும். இந்தக் கொடுமையைப் பார்த்துட்டு நட்புக்காக எவ்வளவு நேரம் தான் அவங்களால பொறுமையா இருக்க முடியும். நம்மாளுங்களே கத்த ஆரம்பிச்சிட்டா அது நமக்கு பெருத்த அசிங்கம். அதுக்கெல்லாம் நாம் அசர மாட்டோம். அது வேற விஷயம்.

இதுமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் + குத்து வாங்கலைனாலும் நிறைய பின்னூட்டம் வாங்கின பதிவு மாதிரி கரையேறிடலாம்.

அப்போ நடிக்க ஆரம்பிச்சது இப்பவும் தினம் தினம் நடிக்க வேண்டி இருக்கு. பின்ன என்னங்க....எவ்வளவு நேரம் தான் வேலை பார்க்கிறா மாதிரியே நடிக்கறது ;).



ராக்கி - ரக்ஷாபந்தன் எக்ஸ்க்ளூசிவ்





அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி...



இன்றும்

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.

நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது 'ஹார்ட் அட்டாக்'கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க "என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்" என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு 'கார்த்திக்' எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.

தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?



பொன்னான மனமே! பூவான மனமே!!



Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................

This is the way life is ......................



என் புத்தக அலமாரியில்..

நன்றி: Sivabalan


கிரிக்கெட்டாக இருந்தாலும் புத்தகமாக இருந்தாலும் ஓசி காஜி அடிக்கற சுகமே தனி தான். கடந்த ஓரிரு வருடங்களாகத் தான் நானாக புத்தகங்கள் வாங்கி சேகரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கோடை விடுமுறைகளில் சொந்த கிராமத்திற்குச் செல்லும் போது என் ஒன்று விட்ட சித்தப்பா அறிமுகப்படுத்திய ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்கள்தான் என் முதல் வாசிப்பனுபவம். அவர் ஒரு பாலகுமாரன் ரசிகர். அவர் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிப்பதற்குள் விடுமுறை கழிந்துவிடும். ஓஷோவை வாசிக்கத் தந்தவரும் இவரே.

முதன்முதலில் நூல்கம் சென்றது மழைக்கு ஒதுங்குவதற்குத் தான். எதற்காகவோ என் அப்பா என்னைத் திட்ட சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டேன். சற்று நேரத்தில் தூரல் வலுத்து மழை பெய்ய அருகிலிருந்த மாவட்ட கிளை நூலகத்தில் நுழைந்தேன். அதன் பின்னர் தான் நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்ப நாட்களில் நூலகம் எனக்கு அந்நியமாகவே இருந்தது. தினசரிகளையும் வாரப் பத்திரிகைகளையும் படித்துவிட்டு கிளம்பிவிடுவேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்ல தயக்கமாகவே இருந்த்து. அந்த தயக்கம் கலைய சில மாதங்கள் ஆனது.

தேவன், புதுமைப்பித்தன்,தி.ஜா, ஜெயகாந்தன்,பிரபஞ்சன் எனப் பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்தது அந்த நூலகம் தான். அந்த நூலகத்தில் இருந்து படித்த புத்தகங்களின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டுப் புத்தகம் இப்போது வீட்டுப் பரணில் எங்காவது இருக்க வேண்டும்.

கல்லூரி நாட்களில் பெரும்பாலும் ஆங்கில "Best Seller" நாவல்களும் கவிதைப் புத்தகங்களுமே வாசிக்க உவப்பாயிருந்தன. பெரும்பாலும் ஓசி புத்தகங்கள் தான். சென்னை வந்தபின் British Library துணை இருந்தது.

எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியவர் என் பெரியப்பா. என் பெரியப்பா வீட்டில் இருந்து எடுத்து வந்த திருக்குறளும்(மு.வ) பள்ளியில் பரிசாகக் கிடைத்த பாரதியார் கவிதைகளும் தான் முதலில் எனக்கே எனக்காக கிடைத்த புத்தகங்கள்.

இப்போது சென்னையில் என் அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் 50-60 புத்தகங்களில் சட்டென நினைவுக்கு வருபவை:

சுஜாதா:

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 1
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2
ஸ்ரீரங்கத்து சிறுகதைகள்
கற்றதும் பெற்றதும்
புறநானூறு - ஒரு எளிய அறிமுகம்

கல்கி:

பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
அலை ஓசை

சுந்தர ராமசாமி:

ஜே.ஜே. சில குறிப்புகள்
ஒரு புளியமரத்தின் கதை
காகங்கள் - சிறுகதை தொகுப்பு

எஸ். ராமகிருஷ்ணன்:

உபபாண்டவம்
நெடுங்குருதி
துணையெழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்

ஜெயமோகன்:

விஷ்ணுபுரம்
கொற்றவை
ஜெயமோகன் குறுநாவல்கள்

வைரமுத்து:

வைரமுத்து கவிதைகள்
தண்ணீர் தேசம்

நாளை மற்றொரு நாளே - ஜி. நாகராஜன்
காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

ஷெல்டன்,ஆர்ச்சர்,ஃபோர்சிய்த்களை தவிர்த்து ஆங்கில நாவல்களில் குறிப்பிடும்படியாக:

The Idiot - Fyodor Dostoevsky
To Kill A Mocking Bird - Harper Lee

இவையல்லாமல் கம்பெனியில் வருடாவருடம் தரும் சலுகையை பயன்படுத்தி கணிப்பொறியியல் புத்தகங்களும் :).

இங்கே மாண்டிவிடியோவில் ஆங்கிலப் புத்தகம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. வாங்க தேடிக் கொண்டிருப்பவை:

Crime and Punishment :Fyodor Dostoevsky
The Motorcycle Diaries - Che Guevera

பி.கு: மகேந்திரன், தலைப்பை மாற்றிவிட்டேன் :)



பேருந்து பயணங்களில்...

சில்லறை இல்லையென சிடுசிடுக்கும் நடத்துனரில் ஆரம்பித்து பொதுவான விஷயங்கள் எல்லாப் பயணங்களிலும் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் ஒரு புது அனுபவத்தைத் தருகிறது.

கல்லூரியில் படித்த நாட்களில் காஞ்சி-மதுரை இடையேயான பேருந்து பயணம் அலாதியானது. இரவு முழுவதுமான பயணத்தில் இரண்டு மூன்று இடங்களில் டீ அருந்த நிறுத்துவார்கள். முக்கியமாக விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு மோட்டலில் எல்லாப் பேருந்துகளும் நின்று செல்லும். முதலில் 'சூர்யா' என்ற பெயரில் சூரியனைக் கொண்டிருந்த அந்த மோட்டலின் பெயர்ப்பலகை ஆட்சி மாற்றத்துக்கேற்ப 'JJ' என்ற பெயரில் பச்சை நிறத்துக்கு மாறியது. இப்போது என்ன பெயரில் இருக்கிறதோ தெரியவில்லை. எந்த நேரம் சென்றாலும் குறைந்தது நான்கைந்து பேருந்துகளாவது அங்கு நின்றுகொண்டிருக்கும். அங்கு கண்டிப்பாக நிறுத்திச் செல்ல வேண்டும் என மேலதிகாரியிடமிருந்து வாய்மொழி ஆணை இருப்பதாக ஒரு நடத்துனர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மோட்டல்களில் இருந்து கிளம்பும் வேளைகளில் பயணிகளில் எவராவது ஒருவர் காணாம்ல போயிருப்பார். அவர் வந்து சேரும் அந்த ஓரிரு நிமிடங்களில் பயணிகள் அனைவரின் சகிப்புத்தன்மையும் தெரிந்துவிடும். இரவு முழுவதுமான பயணத்தினால் அடுத்த நாள் வகுப்புக்குச் சென்றதாய நினைவில்லை.

அதன் பின்னர் சென்னையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு வாரம் ஒருமுறையாவது காஞ்சிபுரத்திற்குப் பயணம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்தில் பல்வேறு மனிதர்களைக் காணமுடியும். அதிலும் கூட்ட நெரிசல் மிகுந்த நாட்களில் உட்கார இடம் பிடிக்க எத்தனிக்கும் நேரங்களில் ஒரு சராசரி மனிதனிடம் காணப்படும் வேகம் என்னைப் பல நேரங்களில் யோசிக்க வைத்திருக்கிறது. கையில் கிடைத்ததை ஜன்னல் வழியாக சீட்டில் எறிந்துவிட்டு இருக்கைக்கு பட்டா போடுவது நம் பண்பாடாகிவிட்டது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும் நடத்துனரோ அல்லது ஒரு நடுவயது பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் நடக்கிறது.

படியில் நின்று பயணம் செய்பவனது கண்கள் அவன் மணமானதைக் காட்டிக் கொடுக்கின்றன.
தொங்கியபடி பயணம் செய்பவன் உள்ளே இருப்பவர்களை நகரச் சொல்வதும் உள்ளே நிற்க இடம் கிடைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த கம்பியை விட்டு அகல முடியாமல் அப்படியே நிற்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்.

அழகான இள வயது மகளுடன் பயணம் செய்யும் தந்தையின் அவஸ்தைகளையும், கண்கள் உள்ளடங்கிய முதியவரின் தனிமையையும் இந்தப் பயணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

மீதி சில்லறை தராமல் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கித் தரும் நடத்துனர் பயணிகளுக்கு வில்லனாகவே தெரிவார். ஒவ்வொரு முறை நடத்துனர் தன்னைக் கடந்து செல்லும் போதும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பயணிகள் நம் பயணத்தை சுவாரசியமாக்குவார்கள்.

ஜன்னலோர இருக்கை கிடைக்காத நாட்களில் ஜன்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் பொறாமைக்குள்ளாகிறார்கள். அத்தகைய பயணங்களில் அவர்கள் ஜன்னலை மூடினால் அவர்கள் மேல் கோபம் வருவதை தவிர்க்கமுடிவதில்லை.

ஒவ்வொரு பயணத்தின் போதும் யாராவது ஒருவரின் பயணம் அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி நீள்கிறது. முன்பின் சென்றிராத ஊர்களுக்குச் செல்லும் போது இறங்க வேண்டிய நிறுத்தத்தை வந்துவிட்டதா எனத் திரும்பத் திரும்பக் கேட்பதும், இருந்தும் அந்த நிறுத்தத்தை இறங்காமல் விட்டுவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

மழைக்காலங்களில் பேருந்து பயணங்கள் நீண்டவையாக இருக்கின்றன. ஜன்னல் திரைகள் இறக்கிவிடப்பட்ட பின் பேருந்தினுள் சிறைபட்டுவிட்டது போன்ற அச்சம் எழுகிறது.

எத்தனை முறை பேருந்தில் பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அது நாம் போக வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

ஒவ்வொரு நாளும் பேருந்து பயணங்களும் அது தரும் அனுபவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.



வினையே உயிர் - 2006 USA - TCE Alumni Meet




Message from TCE principal Dr. V. Abhaikumar:

Dear Alumni,

Greetings to you, your family and your friends.

The vision of our founder Philanthropist Shri Karumuttu Thiagarajan
Chettiar has been our guiding spirit throughout the 50 years of
professional service. The Chairman of the College is Dr. (Mrs.) Radha
Thiagarajan, (former Vice-Chancellor of Alagappa University) and the
Vice-Chairman and Correspondent of the college is Mr. Karumuttu T.
Kannan,

The college has made rapid strides in the areas of Teaching &
Learning, Research and Development, Industry Interaction,
Infrastructure Development and Student related activities.

Our college is planning to organize its Golden Jubilee celebrations
during 2007-08. In commemorating the golden jubilee event, we are
organizing a get together of alumni residing in USA one in east and
another in west. The main objective of the get together is to gather a
feed back from the alumni in the areas of Teaching and Learning
processes, Research & Development, Infrastructure development and
Industry institute partnership.

Date: Aug 26th 2006
Venue: Newark Hilton

Date: Sept. 3rd 2006
Venue: Santa Clara Hilton

Hilton Newark Penn Station Gateway Center -
Raymond Blvd,
Newark, New Jersey,
United States 07102-5107
Tel: +1-973-622-5000

Tentative Agenda:

3:00 PM - 4:00 PM: Social Networking
4:00 PM - 4:15 PM: Welcome Note by Dr. V.Abhai Kumar
4:15 PM - 4:45 PM: Vice-Chairman & Correspondent Address
4:45 PM - 5:30 PM: Keynote Address by Eminent Speaker
5:30 PM - 5:45 PM: Q&A with the Keynote Speaker
5:45 PM - 6:15 PM: Break
6:15 PM - 7:30 PM: Pay It Forward - Breakout sessions
7:30 PM - 8:30 PM: Working Dinner Session plus Summary of Breakout Sessions
8:30 PM - 9:00 PM: Action Items, Next Steps

It would be a great honour, if you could participate in the meeting
and give your valuable suggestions. On behalf of Thiagarajar College
of Engineering, we cordially invite you for the get together.

It would be helpful, if you could kindly confirm your participation by
way of sending a reply to :

principal@tce.edu (or)
mpal@spikesource.com(West) (or)
manian_s@yahoo.com (East) (or)
bala.pitchandi@gmail.com.

Kindly redirect this mail to your friends residing in USA.

Looking forward to your positive response.

Thanks and regards,

Dr. V. Abhaikumar,
Principal,
TCE.



உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி!!



படத்துல இருக்கறது தான் உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. சிறுத்தை வாயில் இருந்து நீர் விழுவது தெரிகிறதா??





இதுக்குப் பேரு 'Leyenda del Puma'. Legend of Puma. இந்த சிறுத்தை சிலைக்கு பின்புறம் பாறைகளுக்கு நடுவில் ஒரு நீருற்று இருக்கிறது. அதை சிறுத்தை வாய் வழியாக பைபாஸ் போட்டு பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

மாண்டிவிடியோவில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் 'மினாஸ்' என்ற நகரம். இந்த இடத்தில் தான் இந்த நீரூற்று இருக்கிறது. இங்கு தான் சிறு குன்றுகளையாவது பார்க்கமுடிகிறது. மற்றபடி உருகுவே முழுதும் சம்வெளிப் பிரதேசம் தான்.

இது சிறுத்தைகள் நடமாடும் பகுதி. நம்ம கண்ணுல தான் ஒன்னு கூட படல.

இந்த ஊற்று ஆறாகப் பாய்வதற்கு முன் அங்கேயே 'Salus' என்ற ப்ராண்டில் பாட்டிலில் அடைத்துவிடுகிறார்கள். அருகிலேயே 'Patricia' பீர் ஃபாக்டரியும் உள்ளது.

**************************************************

இன்னொரு காமெடி...

நம்ம ரூம்மேட் கலக்கறாரு. வங்கிக் கணக்கு தொடங்க ஒரு படிவம் கொடுத்தாங்க. ஸ்பானிஷ்ல தான். ஒரு டெம்ப்ளேட்டைப் பார்த்து கட்டங்களை நிரப்பிட்டு வந்தவர் 'Marital status' -ல Single தானே போடனும்னு கேட்டாரு.

"யோவ்..உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதேய்யா" என்று கேட்டதற்கு பதில்...

"என் வொய்ஃப் விஜயவாடா-ல தானே இருக்கா...இங்க நான் தனியா தானே வந்திருக்கேன்"

இது எப்படி இருக்கு!!!



பின்நவீனத்துவக் கனவு

இன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு. நம்ம கனவில் வழக்கமா வருபவர்கள் ;-) வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.

**********************************************

தியேட்டரில் ஏதோ ஒரு செல்வராகவன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாசர் கிரிக்கெட் கோச். தனுஷ் ஒரு பந்தை அடிக்காமல் மிஸ் செய்துவிடுகிறார். உடனே நாசர் கோபமாக "பேட்ட ஒழுங்கா புடிடா பேமானி" என்று தனுஷைத் திட்டுகிறார். சுற்றி நிற்கும் இளைஞர்கள் தனுஷைப் பார்த்து சிரிக்கின்றனர்.

அடுத்த காட்சி - ஒரு ஆற்றங்கரையில் நாசர் தனுஷுக்கு அறிவுரைகள் கூறுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு ஆங்கிளில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் மறு பக்கத்தில் இருந்து ஒரு ஷாட் அருமையாக இருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள்.

"தமிழ்நாடு,ஆந்திரா, பாலிவுட் எல்லாத்துக்கும் பொதுவா ஒரு விஷயம் இருக்கு. ரஜினி, சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப்(?!) யாரும் அவ்வளவு சீக்கிரத்துல பேசமாட்டாங்க" என்கிறார் நாசர்.

உடனே தனுஷ் திரும்பி நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார்.

**********************************************

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் இந்தியா திரும்பிச் செல்கிறான். நீளமாக முடி வளர்த்திருந்தவன் ஒட்ட முடி வெட்டிக்கொண்டு வந்தான். காரணம் கேட்டதற்கு "தென்னாப்ரிக்கா வழியா போறேன். பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

**********************************************

சத்யராஜும் கவுண்டமணியும் சைக்கிள் ரிக்ஷாவில் வந்துகொண்டிருக்கிறார்கள். பின்னால் விவேக் ஒரு வேனின் டாப்பில் அமர்ந்து வருகிறார். மைக்கில் யாருக்கும் புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வருகிறார். யாரும் அவரை கவனிப்பது போல் தெரியவில்லை.

வேனில் இருந்து இறங்கிய விவேக் சீட்டாடச் செல்கிறார். குறைந்தது ஐநூறு ரூபாய் கட்டி ஆட வேண்டும். விவேக் தொடர்ந்து ஜெயித்து ஐநூறு ஐநூறாக அள்ளுகிறார்.

**********************************************

நான் காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.

ஆட்டம் முடிந்ததும் அமிதாப் "எனக்கு வயசாகிடுச்சு. என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்" என்கிறார். அவர்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள்.

**********************************************

தெருமுனையில் என் அப்பா வந்துகொண்டிருக்கிறார். என் அம்மா என்னிடம் "இப்போதெல்லாம் இவர் தெருல அக்கம்பக்கம் எல்லார்கிட்டயும் பயங்கரமா சண்டை போட்றாரு..என்ன-ன்னு கேளுடா" என்கிறார்.

"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்" என்கிறேன் நான்.

என் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.

**********************************************

"சாலைப் பணியாளர் பிரச்சனைக்குத் தீர்வு வந்தால் பாமக்-வுடன் உறவு வைத்துக் கொள்வீர்களா?" - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்திடம் கேள்வி கேட்கப் படுகிறது.

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைச்சா கூட்டணிக்குத் தயார் சார்" என்கிறார் கேப்டன்.

உடனே ஜிமெயிலில் அவர் இன்பாக்சில் 43 பழைய மடல்கள் 'Unread'-ஆக மாறுகின்றன. இதைக் கண்ட விஜயகாந்த் "இல்லை சார்..எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்வோம். இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது" என்றவுடன் அவை மீண்டும் படிக்கப்பட்டவையாக மாறுகின்றன.

பத்திரிகையாளர் கூட்டம் முடிந்ததும் கேப்டன் ஒவ்வொன்றாக பழைய மடல்களைத் திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.

**********************************************

அவ்வளவு தான்ங்க...இதுக்குள்ள விழிப்பு வந்துடுச்சு...ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வந்த கனவு. பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.

புரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்கப்பு!!!!



முகமில்லாத காதலி!

எனக்கு
முகமில்லாத காதலி
ஒருத்தி இருக்கிறாள்!

அவளுக்குப்
பல முகங்களைப்
பொருத்திப் பார்த்தேன்!

ஆனால்
உன் முகம்தான்
அழகாகப் பொருந்துகிறது!

இதை அவளிடம்
நான் சொன்ன இரவு
கனவுகளால்
நீண்டிருந்தது!

நாம்
பேசிக் கொண்டிருக்கும்
வேளைகளில்
அவள் தனியே விலகிச்
சென்றுவிடுகிறாள்!

நீ என்னைப் பார்த்துப்
புன்னகைக்கும்
தருணங்களில் அதைக்
கவனியாதவள் போல்
தலை திருப்பிக்கொள்கிறாள்!

என் காதலை
உன்னிடம் சொல்லும்
அந்த நாளில்
அவள்
மரித்துப் போவாள்!

உனக்கு நான்
எழுதும் காதல்கடிதம்
அவளுக்கான
இரங்கற்பா!

நம் இல்லறம்
அவளுக்கு நாம்
செலுத்தும்
அஞ்சலி!



உருகுவே குடியரசு தினம்!

ஜூலை 18 -

இன்று "Jura de la constitucion" - அதாவது உருகுவேயின் குடியரசு தினம். 1830-ஆம் ஆண்டு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்.


பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் அமெரிக்கா முழுதும் சுதந்திரப் போராட்டங்கள் துவங்கியது. இதன் பின் உருகுவே பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவின் பகுதியாக இருந்தது, பின்னர் 1825-இல் மீண்டும் ஒரு புரட்சி ஆரம்பித்து ஆகஸ்ட் 28,1828-இல் தனி சுதந்திர நாடாக உருவானது.

ஹோசெ கெர்வாசியோ ஆர்த்திகாஸ் (Jose Gervasio Artegas) என்ற இராணுவ அதிகாரி இந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவருடைய மக்களாட்சி குறித்த கொள்கைகள் தென் அமெரிக்கா தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் சீரான வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. நிலையான அரசாலும் முன்னேறிய சமூக அமைப்பாலும் "தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து" என்றும் அழைக்கப்பட்டது.

இதன்பின் 1973-இல் தொடங்கி 11 வருடங்கள் இராணுவ ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன்பின் 1984-இல் மீண்டும் மக்களாட்சி நிறுவப்பட்டது.

பொருளாதாரத்தில் விவசாய ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கிறது. பிரேசிலும் அர்ஜெண்டினாவும் தான் முக்கிய இறக்குமதியாளர்கள்.அண்டை நாடுகளான இவற்றுடன் எந்த சுணக்கமும் இல்லை. மாடு மற்றும் பன்றி மாமிச உணவுத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.


மக்கள் தொகை மொத்தமே முப்பத்தி நான்கு லட்சம் தான். கல்வியறிவு 98%.

மக்களிடையே சமுதாய விழிப்புணர்ச்சி இருக்கிறது. நட்புடன் பழகும் மக்கள்.

ஓட்டுப்பதிவு 90% மேல் இருக்குமாம். யாருக்கும் வோட்டளிக்க விரும்பவில்லையெனில் ஓட்டுச் சீட்டில் அதையும் பதிவு செய்யலாம். அரசு சலுகைகள் பெறும்போது வோட்டளித்துள்ளாரா எனப் பார்த்த பின்பே வழங்கப்படும். அப்படி வோட்டளிக்காவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பொது இடங்களில் புகை பிடிப்பதை அரசு தடை செய்திருக்கிறதாம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்திய நாடு. இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். இப்போதெல்லாம் தகுதிச் சுற்றிலேயே தேறுவதில்லை.

உருகுவே பற்றிய தகவல்களுக்கு:

விக்கிபீடியா
http://www.uruwashi.org
http://fromuruguay.blogspot.com



பரத்

இந்த இடுகையின் ஒன்லைன் - இது என் நண்பனின் ஒருதலைக் காதல் கதை. அதுவும் தோற்றுப்போன காதல். தறுதலையின் ஒரு தலைக் காதல் என அவனைக் கிண்டல் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. காலப் போக்கில் அவனை கிண்டல் செய்வது நின்று அவனைத் தேற்ற முடியாமல் வருந்திய நாட்களும் தான்...

பரத்..என் பள்ளித் தோழன்....அவன் கதை தான் இது.

ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரக்க பறக்க சைக்கிள்ல வேக வேகமா வந்தான். வந்து இறங்கும்போதே "ஃப்ரெண்டு..அவளை மறுபடியும் பாத்துட்டேன்டா.. க்ரெக்டா ஒரு வருஷம் கழிச்சு" என்றான்.

எங்களுக்கு யாரை சொல்கிறான் என ஒன்றும் விளங்கவில்லை..ஒரு வருடம் ஞாபகம் இருக்கும் அளவு யாருடா அது என்று எங்களுக்கு பயங்கர குழப்பம்.

"இப்போ குமரகோட்டத்துல இருந்து வர்றேன்டா...அங்க தான் அவளைப் பாத்தேன்"

காஞ்சிபுரத்த்தில் குமரக்கோட்டம் என்ற பெரிய முருகன் கோவில் இருக்கிறது. அங்கு வருடா வருடம் 7 நாட்கள் சஷ்டி பூஜைகள் நடக்கும். அப்போது மக்கள் கோவிலை 108 முறை சுற்றுவார்கள். நம் பசங்களும் பக்திமானாக மாறி சுற்றிவருவார்கள். அதிலும் வெள்ளி,சனி, ஞாயிறுகளில் பக்திவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

இவன் அங்கு தான் அவளைப் பார்த்திருக்கிறான்.

"ஃப்ரெண்டு..கரெக்டா போன வருஷம் இதே சஷ்டி அப்போ குமரகோட்டத்துல தான் அவளைப் பாத்தேன். அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் அவளை பாக்கவே இல்ல...இப்போ மறுபடியும் இன்னைக்கு பாத்தேன். இதுல இருந்தே தெரியல ஏதோ இருக்குன்னு"

"டேய்...நாம சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய் இருக்கலாம்..அதுக்காக இப்படி கேடு கெட்டத்தனமா யோசிக்காத"

"இல்லடா..எதுக்கு கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு அதே கோயில்ல பாக்கனும்? நான் சீரியஸா ட்ரை பண்ணப் போறேன்"

இதுக்கு மேல் இவனிடம் பேசி புரிய வைக்க முடியாதென நாங்கள் விட்டுவிட்டோம். எப்படியும் ஒரு வாரத்தில் தெளிந்துவிடுவான் என்று தான் நினைத்தோம். ஆனால் அவன் தீவிரமாகவே இறங்கிவிட்டான்.

அதற்குள் நண்பர்கள் விவரங்கள் சேர்த்துவிட்டார்கள். அவள் பெயர் கிருத்திகாவா கீர்த்தனாவா என்று நினைவில்லை. கிருத்திகா என்றே வைத்துக் கொள்வோம்.

அவள் ஒரு பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவள் ஏரியா பையனுடன் சேர்ந்து அவளைச் சில இடங்களில் பார்த்தத்தாகவும் கூறினர். இருந்தாலும் பரத் மனம் தளராமல் இருந்தான்.


தினமும் பள்ளி முடிந்ததும் அவள் வரும் வழியில் ஒரு முச்சந்தியில் காத்திருப்பான். பின் அவள் பின்னாலேயே அவள் வீடு வரை சைக்கிளில் செல்வான். அவள் வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. பாலாற்றைத் தாண்டி தினமும் ஐந்து கிலோமீட்ட்ர் அவள் பின்னால் செல்வான்.

அவளுடன் சுற்றிக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்டவன் பரத் முன்பு படித்த பள்ளியில் ஒன்றாகப் படித்த்வன். பெயர் பிரபு. பரத் அவனுடன் தன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான்.

தினமும் அவள் பின்னால் சுற்றுவது அல்லது பிரபுவுடன் இருப்பது என பரத் எங்களுடன் இருக்கும் நேரம் குறைந்துபோனது. நாங்கள் அவளைப் பற்றி ஏதாவது கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவான் இல்லாவிடில் கிளம்பிச் சென்றுவிடுவான்.

அவளின் வீட்டிற்கு எங்கள் வீட்டைத் தாண்டி தான் செல்ல வேண்டும். சில நாட்கள் மாலையில் அவள் வீடு வரை சென்றுவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வான். அவன் வருகை அதிகமாகவே என் அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது. அவள் பின்னால் இவன் செல்வதையும் அம்மா பார்த்திருக்க் வேண்டும்.

"என்னடா..அவன் தினம் எங்கே போய் வர்றான்?? என்ன பண்றான்?" என்று என்னிடமே கேட்டார்கள். நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் ஏதோ உளறி சமாளித்தேன்.

ஒரு மூன்று மாதங்களுக்கு இதே கதை தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் அவன் வீட்டிற்கு அடுத்த தெருவில் வந்து கொண்டிருந்த போது நான்கு பேர் சேர்ந்து பரத்தை அடித்துப் போட்டு போய்விட்டனர். அவர்கள் யாரென அவனுக்கு அடையாளமும் தெரியவில்லை. வீட்டில் நண்பனின் பைக்கில் விழுந்துவிட்டதாகப் பொய் சொன்னான். அவளுடைய சித்தப்பாவின் வேலையாக இருக்குமென எங்களுக்கு சந்தேகம்.

அதன்பின் ஒரு நாள் பிரபு பரத்திடம் வந்து அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துவிடுமாறும் அவள் வீட்டில் எல்லாம் தெரிந்துவிட்டதாகவும் சொன்னான். இருந்தாலும் இவன் அவள் பின் செல்வதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது தினகர் வேகவேகமாக வந்து பரத் தன் கையைக் கிழித்துக் கொண்டதாகவும் ரத்தம் அதிகமாக வீணாகி மருத்துவமனையில் இருப்பதாகவும் சொன்னான்.

நாங்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சென்றால் அவன் சிரித்துக் கொண்டே "ஒன்னும் இல்ல ஃப்ரெண்டு..நீங்க கிளம்புங்க..ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று காரணத்தைச் சொல்லாமல் எங்களை அனுப்பிவிட்டான். அவன் அம்மா உடனிருந்ததால் எங்களால் விவரமாக ஏதும் கேட்க முடியவில்லை.

காரணத்தை தினகர் சொன்னான். அதற்கு முன் தினம் அவள் பரத்திடம் பேசி இருக்கிறாள். தன் பின்னால் வருவதை நிறுத்திவிடுமாறும் தனக்கு இதில் சற்றும் விருப்பம் இல்லையென்றும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். பரத் அப்போதே அழுததாகவும் அவனைத் தேற்றி வீட்டில் விட்டதாகவும் தினகர் சொன்னான். வீட்டிற்குச் சென்றதும் இதுபோல் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.

சாதாரண நாட்களிலேயே வீட்டிற்குச் சென்று அவனனப் பார்க்க முடியாது. அவன் உள்ளே இருக்கும்போதே இல்லையென சொல்லி அனுப்பிவிடுவார்கள். இப்போது வாய்ப்பே இல்லை. அவனாக வந்தால் தான் உண்டு.அவன் தேறி வரக் காத்திருந்தோம்.

ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வந்தான். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அவனிடம் பேசினோம்.

"இதை ஒழுங்கா இதோட விடுடா..ஆரம்பத்துல இருந்து இத தான் சொல்லிட்டு இருக்கோம். இப்ப்வாவது காது கொடுத்துக் கேளு பரத்..எல்லாம் சினிமால நடக்கிற மாதிரி ஈஸியா நடக்காதுடா...இங்க பாரு"

பரத் தலையை நிமிர்த்தி எங்கள் பேச்சை நிறுத்தினான்.

"விடு ஃப்ரெண்டு, நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் எனக்கு மூளைல எதுவும் ஏறாது. அதே மாதிரி நீங்க என் கூடவே இருந்தாலும் நான் படற அவஸ்தை உங்களுக்கு புரியாது"

சொல்லிக்கொண்டே கிளம்பிச் சென்றுவிட்டான்.

இதற்குப் பின் அவன் பேசுவது குறைந்து போனது. முன் போல் விளையாட வருவதோ ஊர் சுற்றுவதோ குறைந்துபோனது. பள்ளி முடிந்ததும் காஞ்சியிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்தான். தண்ணியும் தம்மும் அதிகமானது. காலப் போக்கில் ஓரளவு தேறி வந்தாலும் பேச்சில் ஒரு சோகம் எப்போதும் இருந்தது. அவன் காதலிக்க ஆரம்பித்தபோது அவனைக் கிண்டல் செய்துகொண்டிருந்த எங்களால் அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசக் கூட முடியவில்லை.

இன்றும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் சில நேரங்களில் அவளைப் பற்றி புலம்புவதாக நண்பர்கள் சொல்கின்றனர். இப்போது அவள் என்ன செய்கிறாள், எங்கு இருக்கிறாள் என எங்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அவனிடம் கேட்கும் தைரியம் எங்கள் யாருக்கும் இல்லை.



அந்த இரவு

நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்த நாட்கள். டீயும் சிகரெட்டுமே வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பகல் பொழுதுகளில் நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதும் ஏற்படும் அமைதி சுயவிரக்கத்தைத் தூண்டுவதாய் இருக்கும். தனிமை மனதைக் கவ்வும். மதிய நேரங்களில் பசி மயக்கமும் அரைத் தூக்கமும் என் பொழுதைக் கழிக்க உதவிய காலம் அது.

ஒரு நாள் இரவு 11 மணிக்கு பி.எஸ்.என்.எல்-இல் வேலை செய்து கொண்டிருந்த நண்பன் சைட்டுக்கு கிளம்பினான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த என்னைப் பார்த்து "இங்க அசோக் நகர் சைட் தான்....கூட வர்றியா மக்கா....அரை மணி நேரத்துல வந்துறலாம்" என்றான். எவ்வளவு நேரம் தான் இருட்டை வெறித்துப் பார்த்து படுத்திருப்பது என நானும் கிளம்பினேன்.

உதயம் அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு சைட்டுக்குச் சென்றோம். அங்கு யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அவனுடைய சைட் மேனேஜரும் வரவில்லை. அவர்களை நொந்துகொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போது போலிஸ் பேட்ரோல் ஜீப் வந்து எங்கள் அருகில் நின்றது.

"இங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க"

- முன்னால் அமர்ந்திருந்த எஸ்.ஐ கேட்டார்.

"பி.எஸ்.என். எல் ஸ்விட்ச் சைட் சார்..ஆளுங்க இன்னும் வரல..வெயிட் பண்ணிட்டு இருக்கோம்"

"ஐடி கார்டை காட்டு"

என் நண்பன் தன் கார்டை எடுத்துக் காட்டினான்,. நான் கல்லூரி ஐடி கார்டாவது காட்டலாம் என பேண்டைத் துழாவினால் அதுவும் இல்லை. கார்ட் பர்ஸில் இருக்கிறது. பர்ஸ் வேறு பேண்டில் இருக்கிறது.

"காலேஜ் ஐடி கார்ட் வீட்டுல இருக்கு சார். நான் இப்பதான் வேலை தேடிட்டு இருக்கேன்"

"லைசென்ஸ் வச்சுருக்கியா"

"என் ஃப்ரண்டு தான் சார்..ஒன்னா தான் தங்கி இருக்கோம்..துணைக்கு கூட்டிட்டு வந்தேன் சார்" - இது என் நண்பன்.

"இருப்பா..எதுனா ஐடெண்டிபிகேஷனுக்கு வேணும்ல"

"இல்ல சார்..எல்லாமே வேற ஒரு பேண்டல இருக்கு"

"சரி ஜீப்ல ஏறு"

"சார் இல்ல சார்...இப்ப நான் போய் வேணா எடுத்துட்டு வந்துடறேன் சார்"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்..ஜீப்ல ஏறு. முத்து இவரை ஜீப்ல ஏத்து. நீ ஐடிகார்டை எடுத்துட்டு வந்து ஸ்டேஷன்ல காட்டிட்டு வந்து கூட்டிட்டு போ"

'பணம் வேணும்னா கேட்டு வாங்கிட்டுப் போகாம எதுக்கு இப்படி உயிர வாங்கறாங்க' என நினைத்துக் கொண்டிருக்கும்போதே ஜீப்பில் இருந்து இறங்கிய கான்ஸ்டபிள் என்னை தள்ளிக்கொண்டே ஜீப்பில் ஏற்றிவிட்டார்.

ஜீப்பில் இந்தப் பக்கம் கஞ்சா குடிக்கி, இந்த பக்கம் பிக் பாக்கெட். என் நண்பன் எஸ்.ஐ யிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே ஜீப்பைக் கிளப்பிவிட்டார்கள்.

அந்த ஏரியா மொத்தமும் சுற்றிவிட்டு எஸ்.ஐ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டார். அவர் வீடாக இருக்கவேண்டும்.

ஸ்டேஷனுக்குச் சென்றதும் மற்ற இருவரிடமும் ஒரு கையெழுத்தையும் கைநாட்டையும் வாங்கிக்கொண்டு செல்லில் அடைத்துவிட்டார்கள். நான் வாசல் அருகிலேயே சுவரோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தேன்.

ஏட்டிடம் "சார், இப்போதான் சார் வேலை தேடிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட் ஐடி கார்டை இப்போ கொண்டுவந்துடுவான் சார்" என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.

ஏட்டும் பாவப்பட்டு மூலையில் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் என் நண்பன் வீட்டிற்குச் சென்று என் கல்லூரி ஐடி கார்டை எடுத்து வந்துவிட்டான். அதை வாங்கிப் பார்த்த ஏட்டு திரும்பி என்னைப் பார்த்துவிட்டு விட்டத்தைப் பார்த்து ஏதோ யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

"எதுக்கும் எஸ். ஐ ஐயா வந்துடட்டும். ஏன்னா அவரைக் கேக்காம உன்னை அனுப்பிட்டா என் பேரு ரிப்பேராயிடும்..புதுசா வந்த் ஆளு வேற"

"காலைல இண்டர்வ்யூ வேற இருக்கு சார்"

"அதெல்லாம் கரெக்டுப்பா..ஆனா அவரு மூனு பேர் ஏத்தியாந்ததுல ஒருத்தன் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது? இப்ப வந்துடுவாரு வெயிட் பண்ணு" என்றபடியே அவர் சீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.நண்பனை வெளியே காக்க வைத்துவிட்டார்கள்.

மணி இரண்டு. எஸ்.ஐ இன்னும் வந்த பாடில்லை. இப்படி வந்து உட்கார்ந்திருப்பதற்கு தெரிந்தால் வீட்டில் என்ன நடக்கும் என நினைக்கும்போதே தலை சுற்றியது. நண்பர்கள் ஓட்டுவதற்கு இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதோ. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. ஒரு வேளை என் மேல் தான் தப்போ என முதல்முறையாக எனக்கு என் மேலிருந்த நம்பிக்கை தளர்ச்சியடைந்தது.

சிறிது நேரம் கழித்து என்னுடன் ஏற்றிவரப்பட்ட தாடி ஒருவன் ஏட்டைக் கூப்பிட்டான். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டார்கள். "இந்த அறிவு அங்கேயே வந்துருக்கனும்..சரி கிளம்பு" என செல்லைத் திறந்து அவனை அனுப்பிவிட்டார். சீட்டிற்கு வந்ததும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

அவன் வெளியே சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் உள்ளே வரும்போதே பர்ஸைக் கையில் கொண்டுவந்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாதவர் போல ஏட்டு அவனை வெளியே காத்திருக்குமாறு அனுப்பிவிட்டார். அன்றைய தேவை பூர்த்தியாகிவிட்டது போலும். ஏதோ அழுக்கேறிய கோப்பை எடுத்து புரட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆளாளுக்கு சேர் டேபிள்களை இழுத்துப் போட்டு உறங்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று மணி நேரம் ஸ்டேஷன் சுவற்றையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்.

சரியாக ஐந்தரை மணிக்கு எஸ்.ஐ வந்து சேர்ந்தார். அலாரம் வைத்து பாதி உறக்கத்தில் எழுந்து வந்தது அவர் கண்களில் தெரிந்தது,

உள்ளே வரும்போதே பெஞ்சில் நான் அமர்ந்திருப்பதைக் கண்டவர் "இன்னும் ஏன்யா இவனை உட்கார வச்சிருங்கீங்க" என என்னை அப்போதே அவர் போகச் சொல்லி நானாக இங்கு இருக்கும் தோரணையில் கேட்டார்.

"இல்ல சார்..நீங்க வர்றதுக்கு தான் வெயிட் பண்ணோம்...சரி நீ கிளம்புப்பா..சார் ஐடி கார்ட் பாக்கறீங்களா சார்" - ஏட்டு அவர் டேபிளில் இருந்த என் கார்டை எடுத்து வந்து காட்டினார்.

அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஏட்டும் என்னிடம் கார்டை கொடுத்துவிட்டு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார்.

ஒருவ்ழியாக வெளியே விட்டார்களே என நானும் என் நண்பனுமாக வீடு திரும்பினோம். ஒரு பெட்டி கேஸோ எய்ட்டியோ போடாமல் விட்டது என் நல்ல நேரம்.

அன்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் சினிமாவில் வருவது போல் வாழ்க்கையில் பெரிய மாற்றமோ பாதிப்போ ஏற்படவில்லை. ஆனாலும் ஒரு மன வேதனை இருந்து கொண்டு தானிருக்கிறது.

ஜீப்பில் ஏற்றும்போதோ இல்லை ஸ்டேஷனுக்கு சென்ற பிறகோ திருவல்லிகேணியில் எஸ்.ஐயாக இருந்த என் மாமாவின் நண்பர் பெயரைச் சொல்லி இருக்கலாம். அதுவும் கூட தோன்றவில்லை. ஒருவேளை ஒரு வேலையில் இருந்திருந்தால் தைரியமாக் சொல்லி இருந்திருப்பேன். அப்போதும் இதை முதலிலே சொல்லியிருக்கலாமே என ஒப்புக்குச் சொல்லிவிட்டு அனுப்பியிருப்பார்கள்.

இந்த விஷயமும் என் நண்பர்கள் நான்கைந்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன இருந்தாலும் ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். இல்லாவிட்டாலும் எனக்கு அப்படித் தோன்றும். தோன்றி இருக்கிறது.

இத்தனை நாட்கள் கழித்து உங்களிடம் கொட்டிவிட்டேன். நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.



நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!

சீறும் புலி நாகை சிவாவின் ஆணையை(ஏலேய்! கப்பி,
உன் காலை கொஞ்சம் காட்டு.....)
ஏற்று அன்புத் தம்பி என் காலைக் காட்டுகிறேன்...



அப்பாடா..அண்ணன் ஆசையை நிறைவேத்தின அப்புறம் தான் நிம்மதியா இருக்கு..



"ஒரு புளியமரத்தின் கதை"யிலிருந்து

"...என்னுடைய பங்கு செலுத்தப்படுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாதவாறு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதானது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருந்த சமயம் அது. இதன் விளைவுதானோ என்னவோ, நண்பர்களுடன் நானும் தாமு சம்பவத்தின் விளைவுகளிலும், அது சம்பவமான செய்திகளிலும் மிகுந்த அக்கறை செலுத்தலானேன். மாலை வேளைகளில் பஜார் ஓரங்களில் நின்று கூடிக்கூடிப் பேசும் குழுக்களில் நானும் வேண்டாத விருந்தாளியாக ஒண்டிக்கொண்டேன். என் மீது அங்கு கவிந்த பெரியவர்களின் அலட்சியப் பார்வையை அப்பொழுது அவ்வளவாக எனக்கு பொருட்படுத்தத் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களுக்கு எட்டாத செய்திகளைச் சேகரித்து அவர்களுக்கு அவற்றை முதலில் அறிவிப்பவனாய் இருக்கவேண்டுமென்றே அப்பொழுது ஆசைப்பட்டேன். இது போன்ற விவகாரங்களைப் பேசும்போது பெரியவர்களுக்கு ஏற்படும் முகபாவங்களைக் கூர்ந்து கவனித்து நானும் முடிந்த வரையிலும் அம்முகபாவங்களை என் முகத்திலும் மிளிர விட்டுக் கொண்டேன். அவர்களுடைய வார்த்தைச் சேர்க்கைகளையும் அபிப்ராயங்களையும் என்னுடைய சரக்குப் போலவே எங்கும் பிரஸ்தாபித்துக் கொண்டு சென்றேன். ஒரு பொறுப்புள்ள மனிதனாகவும், சீரழியும் நிலைமைகளுக்குக் கவலைப்படுபவனாகவும் காட்டிக்கொள்ள வேண்டியது எனக்கு அந்த வயசில் ஏதோ ஒருவிதத்தில் தேவையாக இருந்தது.

இதனால் தாமுவுக்கும் காதருக்கும் ஏற்பட்ட விரோதத்தின் பூர்விக வரலாற்றையும், அதையொட்டி அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்பட்டிருந்த உரசல்களையும் பலர் வாய்மூலமாகவும் சிறுகச்சிறுகச் சேகரித்துக் கொண்டு வந்தேன். அன்றாட சேகரங்களை, பின்கட்டில் பெரிய மனிதனாய் அமர்ந்து என் சகோதரிகள் முன்னால் அவிழ்க்கையில் என்னை அறியாமலே கொஞ்சம் மிகைப்படுத்தியே அவிழ்த்துக் கொண்டு சென்றேன். வீர சாகசங்களை சோடைதட்டிப் போகாமல் சேர்த்தும் சரிக்கட்டியும் சொல்லலானேன். ஒவ்வொன்றும் என் ஆசைப்படி எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேனோ அவ்வாறே நிகழ்ந்ததாயும், இருந்த்தாகவும் சொல்வதில் அப்பொழுது என் மனசு மிகுந்த திருப்தி அடைந்தது.

இப்பொழுது பல வருடங்களுக்குப் பின்னால் அந்தக் கதையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்தக் கதையயையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்த மனோபாவத்திலிருந்து அல்லது பலஹீனத்திலிருந்து, பூரண விடுதலை தேடிக் கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலக வழக்கைக் கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி தேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்...."

- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை.



மரணம்! - சிறுகதை

'என்ன எழவுடா இது...மனுஷனுக்கு ஒரு மரியாதை இல்லாம போயிடுச்சு... நாளைக்கு காலைல கல்கத்தா போறதுக்கு இப்போ 8 மணிக்கு சொல்றானுங்க..விவஸ்தை கெட்டவனுங்க' எனப் புலம்பிக் கொண்டே தெரு முனையில் இருக்கும் ஆட்டோ
ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்திருந்தேன்.

"காலைல அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும்"

இருந்த 2 ஆட்டோ காரர்களும் தங்கள் பார்வையிலேயே யார் போவது என முடிவு செய்து
கொண்டதும் ஒருவர் "போலாம் சார்..காலைல வீட்டாண்ட வந்துடறேன்" என்றார்.

"எவ்ளோ கேக்கறீங்க"

"கொடுங்க சார்..காலைல எழுந்து வரணும். 180 கொடுங்க"

"வடபழனில இருந்து ஏர்போர்ட் போக 180 ரூபாயா?? டாக்ஸியே இத விட கம்மியா வருமே"

"காலங்காத்தால சார்..ரிடர்ன் வரும்போது காலியா தான் வரனும்..150 கொடுங்க...பகல்லயே 120க்கு போறோம்"

"சரி காலைல கரெக்டா அஞ்சு மணிக்கு வந்துடுங்க'" என உறுதி செய்துவிட்டு என் பேரம் பேசும் திறமையை நொந்தபடியே வீடு திரும்பினேன்.

காலையில் ஆட்டோகாரரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பத்து நிமிடம் காக்க வைத்து அரக்க பறக்கக் கிளம்பினேன்.

மார்கழி மாத குளிர் லேசாக நடுங்க வைத்தது. டிரைவர் டிராபிக் அற்ற அதிகாலை சாலையில் ஆட்டோவை விரட்டிக் கொண்டிருந்தார். வெறிச்சோடிய சாலைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு சீக்கிரம் ஊர் திரும்ப முடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்போர்ட் உள்ளே நுழைந்தவுடன் "சார், மயக்கம் வர மாதிரி இருக்கு...ஒரு நிமிஷம் இருங்க" என்றப்டியே டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்..

"என்னங்க..ப்ரஷர் இருக்கா?? என்ன பண்ணுது"

"தெரில சார்..ப்ரஷர்லாம் இல்ல...மயக்கமா வருது..ஒன்னும் இல்ல சார் ஒரு ரெண்டு நிமிஷம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சீட்டில் சரிந்து விழுந்தார்.

'என்னடா வம்பாப் போச்சே'னு நினைச்சுக்கிட்டே கண்கள் சொருகிக்கிடந்தவரை .தட்டி எழுப்பினால் ஒரு அசைவும் இல்லை.தோளைப் பிடித்து உலுக்கினால் தலை சரிந்தது.

அதுக்குள்ள ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து டிரைவர் இருவர் வந்தனர்.

"என்ன சார் ஆச்சு"

"தெரியலீங்க..நல்லா ஓட்டிட்டு வந்தாரு. உள்ள வந்ததும் மயக்கமா வருதுன்னு ஓரங்கட்டினாரு...அப்படியே சரிஞ்சுட்டாரு"

"உயிரோடதாம்பா இருக்காரு" இன்னொருத்தர் டிரைவரை செக் பண்ணி சர்டிபிகேட் கொடுத்தார்.

"இங்க ஏர்போர்ட் உள்ள டாக்டர் இருப்பாங்களா?"

"தெரியல சார். மெடிக்கல் ஷாப் ஒன்னு இருக்கு"

"கண்டிப்பா டாக்டர் இருக்கனும்ங்க"

அதற்குள் இன்னொரு ஆட்டோகாரர் எங்களைப் பார்த்து நிறுத்தினார்.

"என்னாச்சு?"

"திடீர்னு மயங்கி விழுந்துட்டாரு"

"எந்த ஏரியா ஆட்டோ?"

"வடபழனிங்க..குமரன் காலனி..இஙக உள்ள யாருனா டாக்டர் இருப்பாங்களா? இல்ல பக்கத்துல எதுனா ஆஸ்பிடல் இருக்கா? நீங்க இந்த ஆட்டோவ ஓட்டிட்டு வர்றீங்களா?"

"தெரியல சார்..உள்ள சவாரி வெயிட்டிங்..போகனும் சார்" சொல்லிக்கொண்டே ஆட்டோவை எடுத்து கிளம்பிட்டான்.

"உங்களுக்கு எப்ப சார் ப்ளைட்டு?"

"ஆறரைக்குங்க...இன்னும் 40 நிமிஷம் இருக்கு"

"நீங்க உள்ள போய் டாக்டர் யாருனா இருக்காங்களா விசாரிங்க சார்..நாங்க இவரைப் பாத்துக்கறோம்".

மூன்று பேருமாக சேர்ந்து டிரைவரைத் தூக்கி பின் சீட்டில் படுக்க வைத்தோம். பையைத் தூக்கிட்டுப் போறதா இல்ல அங்கயே போட்டுட்டுப் போறதானு ஒரு செகண்ட் யோசிச்சு அவங்களையே பாத்துக்க சொல்லிட்டு குறுக்கால ஏர்போர்ட் உள்ளே ஓடினேன்.

'ப்ளைட்ட விட்டுட்டா ஆபிஸ்ல என்னடா பதில் சொல்லுவே?'னு உள்ள இருந்து பட்சி கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுச்சு.

மெடிக்கல் ஷாப்பில் வெளியே விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தால் உள்ளே ஒருவர் இழுத்து போர்த்து தூங்கிக் கொண்டிருந்தார். கதவைத் தட்டி அவரை எழுப்பி இங்கு டாக்டர் இருப்பாரா எனக் கேட்டதற்கு அந்த கட்டிடத்தின் மறுமுனையைக் காட்டிவிட்டு மீண்டும் அவர் கனவை கன்ட்டினியூ பண்ண போயிட்டார்.

அவர் கைக்காட்டின இடத்துக்கு ஓடினா அங்க யாரும் இல்ல. டாக்டர் பேரைப் போட்டு ஒரு போர்ட் மட்டும் இருக்கு. உள்ளே யாரும் இருக்க மாதிரி தெரியலை. இன்னைக்கு நமக்கு ஆப்படிக்கற முடிவோட் தான் எல்லாரும் கிளம்பியிருக்காங்க-னு நொந்துகிட்டே திரும்பினா பின்னாடி ஒரு செக்யூரிட்டி முறைச்சு பாத்துட்டு நிக்கறாரு.

"ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டாரு. இங்க டாக்டர் இல்லையா??"

"இருந்தா இங்க தான் இருப்பாரு..நீங்க ஏர்போர்ட் மேனேஜரைப் போய் பாருங்க' னு மறுபடி எதிர் மூலைக்கு கையைக் காட்டினார். நல்ல வேளையாக மேனேஜர் அவர் அலுவலகத்தில் இருந்தார்.

"சார் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டார். டாக்டர் அங்க ரூம்ல இல்ல"

"என்ன ஆச்சு?? டிரைவர் இப்ப எங்க இருக்காரு.."

"அங்க எண்ட்ரன்ஸ்ல இருக்காரு சார்..ப்ரஷ்ரா இருக்கும்னு நினைக்கறேன்"

"அங்க யாருனா இருக்காங்களா?"

"டாக்ஸி டிரைவர் ரெண்டு பேர் இருக்காங்க"

"அப்ப ஒன்னு பண்ணுங்க...அவங்களை ஓட்ட சொல்லி எப்படியாவது ஆட்டோவை இங்க கொண்டுவந்துடுங்க..ஏன்னா டாக்டர் அஙக வந்து மறுபடி அவரை இங்க கொண்டு வரதுக்கு லேட் ஆகும். நேரா அங்க டாக்டர் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டா சீக்கிரம் ட்ரீட் பண்ணலாம்'"

அடப்பாவிகளா இன்னைக்கு ஆட்டோவும் ஓட்ட வச்சுடுவாங்க போல-னு நினைச்சுக்கிட்டே மறுபடி இங்க ஓடி வந்தேன்.

அங்கே இன்னொரு ஆட்டோ காரர் வண்டிய நிறுத்தி டாக்ஸிகாரங்க கிட்ட பேசிட்டு இருந்தார்.

"உள்ள டாக்டர் இருக்காருங்க...இவரை அங்கேயே கூட்டிட்டு வரச் சொன்னாங்க..நீங்க இந்த வண்டியை ஒட்டிட்டு வர்றீங்களா" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே "என் வண்டியை இங்க நிறுத்திட்டு போனா ஃபைன் போட்ருவாங்க சார்" என்றபடியே அவன் ஆட்டோவை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டான்.

அதுக்குள்ள அந்த டாக்ஸி டிரைவர்ல ஒருத்தர் அவரே ஒட்டறேன்னு வண்டியக் கிளப்பினார். இருக்கிற பிரச்சனை போதும் ஆட்டோவையும் கொண்டு போய் எங்கயாவது முட்டிடக் கூடாதுனு நினைச்சுக்கிட்டே பையைத் தூக்கிட்டு மறுபடி குறுக்கு வழில ஓடினேன்.

சொன்ன மாதிரியே ஏர்போர்ட் மேனேஜர் டாக்டரோட காத்துக்கிட்டிருந்தார். ஆட்டோவில் இருந்து டிரைவரைப் பிடித்து இறக்கு அங்க கீழேயே சுவரோரம் படுக்க வைத்ததும் டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார்.

"இவர் எந்த ஏரியாங்க?"

"வடபழனி சார்"

"எப்படியாவது அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியுமா?'

"என் ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்றேன் சார். எங்க வீட்டு பக்கத்து ஸ்டாண்ட் தான்" என்றபடி என் நண்பனை அழைத்து நிலைமையை விளக்கி அங்கு தகவல் சொல்லும்படி கூறினேன்.

"உங்களுக்கு எந்த ஃப்ளைட்?? லேட் ஆகிடப்போது"

"6.30 சார்..இன்னும் 20 நிமிஷம் இருக்கு"

"நீங்க கிளம்புங்க..இனி நாங்க பாத்துக்கறோம்"

நான் அந்த டாக்ஸி டிரைவர்களிடம் திரும்பி "ரொம்ப தாங்க்ஸ் பாஸ்..இவருக்கு ஆட்டோ பணம் தரனும்" என்றபடியே பர்ஸை எடுத்தேன்.

"இருக்கட்டும் சார். நல்லவேளை ஏர்போர்ட் உள்ளே வந்து மயங்கினார். வர்ற வழில GST ரோட்டிலேயே மயங்கியிருந்தா ஒன்னுமே பண்ணி இருக்க முடியாது...மேனேஜர்ட்ட கொடுத்துடுங்க..அவர் கொடுத்துடுவார்" என்றார் டாக்ஸி.

நான் இருநூறு ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்தபடியே மீண்டும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.

மேனேஜர் என்னுடனேயே வந்து வரிசையில் நிற்காமல் நேரத்துக்கு செக்-இன் செய்ய உதவினார்.

நல்ல்படியா அவரை டாக்டர்ட்ட சேர்த்துட்டு நேரத்துக்கு ஃப்ளைட் பிடிச்சாச்சுன்னு திருப்தியுடன் கிளம்பினேன்.

கல்கத்தா சென்றதும் அங்கு வேலை பளுவில் இந்த சம்பவத்தை மறந்தாகிவிட்டது. இடையில் ஒரு முறை ந்ண்பனிடம் செல்லில் பேசும் போது அவனிடம் கேட்டதற்கு அவனுக்கும் அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

இருபது நாள் கழித்து திரும்பி வந்தேன். வீட்டிற்கு வந்து இறங்கும் போதே ஆட்டோ ஸ்டாண்டைப் பார்த்தேன். யாரும் இல்லை.

அனறு மாலை ஸ்டாண்டில் பேரம் பேசிய போது இருந்த இன்னொருவர் இருந்தார். போய் விசாரிக்கலாம் என சென்றேன்.

"அன்னைக்கு ஏர்போர்ட்ல மயங்கி விழுந்தாரே..அவர் இப்போ எப்படி இருக்கார்?"

"நீங்க தானே சார் அன்னைக்கு ஏர்போர்ட் சவாரி போனது?"

"ஆமாங்க..அன்னைக்கு நைட் கேக்க வந்தப்போ நீங்க கூட இருந்தீங்களே"

"ஆமா சார்..அவன் இறந்துட்டான் சார்"

"என்னங்க சொல்றீங்க"

"ஆமா சார்..உங்கள செவ்வாய் கிழமை உட்டுட்டு வந்தான்ல..அதுக்கு அடுத்த சனிக்கிழமை செத்துட்டான் சார்"

"எப்படிங்க..என்னாச்சு?"

"ஹார்ட் அட்டாக்ங்க..ரெண்டாவது அட்டாக்..அன்னைக்கு உங்க ப்ரண்ட் வந்து சொன்னதும் போய் கூட்டியாந்தோம். அதுக்கப்புறம் ரெண்டு நாள் பெட்ல இருந்துட்டு வீட்டுக்கு வந்தான். வந்தும் வண்டி எடுக்கல..அதுக்குள்ள இன்னொரு அட்டாக்...மொத அட்டாக் வந்தப்புறமும் அலைச்சல் குறைக்கல...ரெண்டு பொட்டைப் ப்ள்ளளங்க வேற சார்...உடம்பு ஒத்துக்கலன்னா வேலைய குறைச்சுக்கனும்..அதுக்கப்புறம் தானே சார் பணம்..அன்னைக்கு கூட மொதல்ல நான் தான் வரேன்னேன். அவனா தான் போறேன்னான்.."

"என்னங்க...சரியாயிட்டிருப்பாரு..வந்து பாக்கலாம்னு வந்தேங்க..இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்தேன்'

"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு"

நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வீடு நோக்கி நடந்தேன்.



நரிகளுக்கு நடுவில்!

என் நண்பன் SnoozenBooze-ன் ஆங்கிலப் புலம்பலின் தமிழாக்கம். என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!!


நரிகளுக்கு நடுவில்!

இது என் இடமல்ல!
நரிகளுக்கு நடுவில்
மானாக உணர்கிறேன்!

மான்,நரி,சிங்கம், சிறுத்தை,
கீரி, பாம்பு
அனைத்திற்கும் ஒரே கூண்டு!

தனித்தன்மை இழந்து
தன்பலம் மறந்து
மயக்கத்திலே திரிகின்றன!

கூண்டிலுள்ள மற்றொரு மான்
என்னையும் நரியென
எண்ணுகிறது!

போலிப் புன்னகையும்
முகத்துதியும் இவ்விடத்தை
வெறுக்கச் செய்கின்றன.

இது என் இடமல்ல!
இங்கிருக்க எனக்கு
விருப்பமல்ல!

என் இடத்தில்
மனம் மகிழும் போது
வாய்விட்டு சிரிக்கலாம்!
சோகம் கவிழ்கையில்
புன்னகை புரியலாம்!

போலி வேடங்கள்
ஏதும் பூணாமல்
'நானாக' இருக்கலாம்!

கோபத்தை முகத்திலும்
அன்பைக் கண்களிலும்
வெளிக்காட்டலாம்!

கேளிக்கையும் கேலியும்
கூத்தாடும் அரங்கம்!

ஒவ்வொரு பகலும்
பல கதைகளையும்
ஒவ்வொரு இரவும்
பல கனவுகளையும்
புனையும் களம்!

ஒவ்வொரு நாளும்
அதே நிகழ்வுகள்!
ஆனால்
புதுப்புது அனுபவங்கள்!

அந்த இடம்
இந்நாட்டு மன்னர்கள்
கடைசி வரிசையில் அமர்ந்து
ஆட்சி செய்த
புண்ணியபூமி!!!



'சுகா'னுபவங்கள் ஆறு

"கோட்டோவியக் கோ" சுகாவின் ஆணையை ஏற்று என்னுடைய 'அலுக்காத ஆறு'..... எத்தனை நாட்கள் ஆனாலும் எத்தனை முறையானாலும் எனக்கு சலிப்பு ஏற்படுத்தாத இந்த ஆறு விஷயங்கள் குறித்து சிறிது விரிவாக:


1.எனக்கு நினைவு தெரிந்து என் மூன்றாம் வகுப்பிலிருந்து நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். தலைவரின் எந்த படமாகயிருந்தாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அதை மீண்டும் பார்ப்பது என்றைக்கும் அலுக்காது. சிறு வயதில் 'மாப்பிள்ளை'யில் ஆரம்பித்து த்லைவரின் படங்களை வரிசையாக சொல்வதில் எங்களுக்குள் போட்டியே நடக்கும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தலைவரின் இண்ட்ரோ பாடலைப் பக்கத்து வீட்டு அண்ணனை எழுதித் தரச் சொல்லி மனப்பாடம் செய்வோம்.

கல்லூரியில் புத்தாண்டு, பொங்கல்,தீபாவளி, ஹாஸ்டல் டே போன்ற நாட்களில் வருடா வருடம் தவறாமல் திரையிடப்படும் படம் பாட்ஷா தான். அந்த நான்கு வருடங்களில் பாட்ஷா வை மட்டும் குறைந்தப்ட்சம் 20 முறையாவது திரையிட்டிருப்போம்.

தலைவர் சில சமயங்களில் சொதப்பும் போது அவருக்காக வக்காலத்து வாங்கி நண்பர்களுடன் சண்டையிடுவதும் தனி சுகம் தான்.

2. ஒவ்வொரு முறையும் பயணம் நமக்கு புது அனுபவத்தைத் தருகிறது. ஜன்னல் ஓர சீட்டில் பேருந்து பயணம் நம் பயணத்திற்கான காரணத்தையே மறக்க வைத்துவிடுகிறது. 'மாமா மடியில் உக்காந்துக்கோடா' என நம்மை அடுத்தவர் மடியில் உட்கார வைத்த நாட்களில் இருந்து பேருந்து பயணம் எப்போதும் குதூகலம் தருவதாகவே இருக்கிறது. அதிலும் கூட்ட நெரிசல் மிக்க பண்டிகை நாட்களில் சக பயணிகளை பார்த்துக் கொண்டு வந்தாலே நேரம் கடந்துவிடுகிறது.

நண்பர்களுடன் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது டூர் அடிக்காவிட்டால் மனதில் ஒரு சோகம் குடி கொண்டுவிடுகிறது.

3.எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி கொண்ட கிரிக்கெட். பள்ளி விடுமுறை நாட்களில் காலை 6 மணிக்கே க்ரவுண்டுக்கு போய் ஒரு ஸ்டம்பை நட்டு பிட்ச் பிடிப்பதில் ஆரம்பித்து மாலை இருட்டுகிற வரை விளையாடி நாள் முழுக்க கிரிக்கெட்டே வாழ்க்கையாக இருக்கும்,
கல்லூரியிலும் ஹாஸ்டலில் நுழையும்போதே கைகள் பேட்டையும் பந்தையும் தேட ஆரம்பித்துவிடும். பரிட்சை நாட்களிலும் மதியம் பரிட்சை என்றால காலையில் கிரிக்கெட் விளையாடி பல பேரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவோம். வருடாவருடம் விடுதியில் நடத்தும் வெள்ளொளி கிரிக்கெட் போட்டியும் அப்போது கொடுக்கும் நேர்முக வர்ண்னைகளும் அம்பயரிங்கில் நடக்கும் தகராறுகளும் என்றைக்கும் மறக்க முடியாதவை.

4.குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எந்த விளையாட்டும் மகிழ்ச்சியைத் தர முடியாது. அதிலும் கல்யாண சமயங்களிலும் விடுமுறைகளிலும் அவர்களுடன் விளையாடுவதும், திடீரென காரணமே இல்லாமல் அழும் குழந்தையை சமாதானம் செய்வதும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளுக்கு சமரசம் செய்வதும் தரும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது.

5.வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருள் கவிந்து நிறம் மாறும் மாலை வேளைகளில் மொட்டை மாடியில் அமர்ந்து காற்றாடுவது, மேக ஒட்டடைகள் இல்லாத கோடை இரவுகளில் நட்சத்திரக் கூட்டங்களை பலவாறாக உருவகிப்பது, படுத்துக் கொண்டே இரவு முழுவதும் நிலவுடன் பயணிப்பது, மன நிறைவைத் தரும் சூரிய அஸ்தமனம், தொலைதூரத்தில் இருந்து திரண்டு வரும் மழை மேகங்களும் இடி மின்னலும் தரும் பயமும் கிளர்ச்சியும் என வானம் பல வகையில் நம்முடன் உறவு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நம் மனநிலைக்கேற்ப வானம் உருமாறிக் கொண்டிருக்கிறது.

6.காபி....ஆடும் ஆட்டம் அனைத்தும் அரை சாண் வயிற்றுக்குத்தான் என்றாலும் இந்த காபி குடிக்கும் சுகம் இருக்கே..அதை அனுபவிக்கனும்...ஆராயக் கூடாது..யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க..கோயில் கட்டறாங்க...காபியை முதன் முதலில் கண்டுபிடித்தது யாருன்னு தெரிந்தால் அவருக்கு நான் சிலை வைப்பேன்...தூக்கத்துல எழுப்பி காபி குடிக்க சொன்னால் கூட குடிக்க ரெடி...
ஒவ்வொரு வீட்டு காபிக்கும் ஒரு சுவை உண்டு...ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு.... ஒவ்வொரு கப் காபியிலும் புது சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்,

7.

ஓ...ஆறு தான் எழுதனுமோ...

இந்த விளையாட்டுக்கு நானே லேட்டா தான் வந்திருக்கேன்...ஏற்கனவே பல பேருக்கு விளையாடிட்டு இருக்கறதால யார் யார் இன்னும் வரலைனு தெரியல..அதனால ஒரு ஈஸியான வழி...தமிழ்மணத்துல இப்போ மறுமொழியப்பட்ட இடுகைகளில் முதல் ஆறு பேரை விளையாட்டுல சேத்துக்கலாம்..அவங்க ஏற்கனவே விளையாடிட்டு இருந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..

1.Boston Bala
2.மகேந்திரன். பெ
3.icarus prakash
4.பெனாத்தல் சுரேஷ்
5.நிலா
6.சந்தோஷ்



சாக்ரடீஸும் நானும்

சாக்ரடீஸ் ஒரு முறை தன் சீடர்களுடன் சந்தையில் ஒவ்வொரு கடையாக 'விண்டோ ஷாப்பிங்' செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் " நீங்கள் தான் எதுவும் வாங்கப் போவதில்லையே, பின் எதற்காக எல்லாக் கடைகளுக்கும் செல்கிறீர்கள்" எனக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் " இந்த உலகத்தில எவை எல்லாம் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடிகிறது என்பதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

இந்த மாதிரி நானும் யோசிக்க ஆரம்பிச்சதுல மண்டை காய்ந்துவிட்டது....இங்கு வந்ததில் பல விஷயங்களை இழந்திருந்தாலும் இது மாதிரி கடையில் வாங்கும் அல்லது பணம் செலவு செய்து கிடைக்கும் விஷயங்களில் இழந்திருக்கிறேன் என யோசித்தேன்...

உதாரணத்துக்கு சாப்பாட்டு அயிட்டங்களில் பார்த்தால் பாலாஜி இட்லி கடையில் கல்தோசை,பரோட்டா இரவு உணவு..... ஹாட் சிப்ஸ்,சரவண,வசந்த பவன்களில் காபி....

உதயம்,கமலா,காசி,AVM,தேவி கருமாரியில் வாரம் ஒரு முறையாவது நைட் ஷோ... எந்த குப்பை படமாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு படமாவது பார்க்கா விட்டால் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கம் வராது.....

மற்ற எந்த தியேட்டரிலும் ரிலீஸாகாத படங்கள் கூட கருமாரி காம்ப்ளெக்ஸில் ரிலிஸ் ஆகும்...

எந்த தியேட்டரிலும் பார்க்காத படம் இல்லையென்றால் ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கோ அல்லது வாடகைக்கோ ஏதாவது ஒரு பட டிவிடி....

வெள்ளி காலையில் சுடச்சுட வீடு தேடி வரும் விகடன்...குமுதம்,குங்குமம்,சினிக்கூத்து எனக் களஞ்சியங்கள்....

ஹிக்கின்பாதம்ஸ்,லாண்ட் மார்க் கடைகள்.... ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஆங்கில நாவல்கள்...

அப்புறம் எப்பவாவது போகும் ஸ்பென்சர்ஸ்,பெசண்ட் நகர்.... அங்க போய் நமக்கு ஒன்னும் செலவு இல்ல...ஆனா கூட வர்றவனை அவிச்சுடலாம்...அவன் தலையில பெரிய துண்டைப் போட்டுட்டு வரலாம்...

இது மாதிரி யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாயிட்டே போகுது.... மனக்கவலையும் அதிகமாகுது.....இது மாதிரி பல விஷயங்கள் இல்லாம ரொம்ப நாள் நம்மால தாக்கு புடிக்க முடியாது!!!!

இந்த விஷயத்துல நாம சாக்ரடீஸ் என்ன..அவர் கஸின் ப்ரதர் 'பல்ப'ரடீஸ் அளவுக்கு கூட வர முடியாது!!!!



உருகுவேயில் காரசட்னி

வந்து இரண்டு வாரம் ஆகிறது. இன்னும் உருகுவே பத்தி எழுதவில்லையே என ஒரே ஃபீலிங்க்ஸ்...அதற்கு தான் இது.... பிரச்சனை என்னவென்றால் வீட்டிற்கு இன்னும் இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் 2500 பீஸோ அழ வேண்டும். வஙகிக் கணக்கு தொடங்குவது பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வாரம் ஆகுமாம். நம் ஊரில் வீடு தேடி வந்து கண்டதுக்கு கடன் தருகிறார்கள்...இங்கு இதற்கே இப்படி இழுத்தடிக்கிறார்கள்.

அலுவலகத்திலும் கொஞ்சம் வேலை பார்க்கத்(?!) தொடங்கி விட்டதால் கிடைக்கும் நேரத்தில் சிறிது சிறிதாக எழுத வேண்டியிருக்கிறது. நிற்க.

மாண்டிவிடியோ...அமைதியான நகரம்...மக்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்...நட்புடன் பழகுகிறார்கள்...கடைகளில் ஸ்பானிஷ் தெரியாமல் திணறுகையில் தானே வந்து உதவுகிறார்கள்...உலகின் 30 பாதுகாப்பான இடங்களில் ஒன்றாம்...கம்பெனி வண்டியிலேயே தினமும் பயணிப்பதால் நக்ரை இன்னும் முழுமையாக சுற்ற ஆரம்பிக்கவில்லை...

எல்லாவற்றுக்கும் இறக்குமதியை ந்ம்பி இருக்கும் நாடு....காய்கறிகள் கூட சிலி, ஈக்வேடார் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன...இங்கு சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவது மாடு மற்றும் பன்றி கறி தான்!!!

இனி சொந்தக் கதைக்கு வருவோம்.....ராம்ப்லா எனப்படும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வீடு பார்த்து குடியாயிற்று. ..நம்ம ஊர்ல இந்த மாதிரி பீச் ஏரியாவில் இருக்கனும்னா வாடகைக்கு நம்ம சொத்தையே எழுதி தர வேண்டி இருக்கும்...இங்க இந்த ஊரே பீச்சா இருப்பதால் சீப்பா இருக்கு!!!

'நளன்' ஒருத்தன் ரூம் மேட்டா கிடைச்சிருக்கான்...சூப்பரா சமைக்கறான்...நம்ம வேலை மைக்ரோவேவ்ல அரிசி வச்சு சாதம் பொங்கறது....அதுக்கப்புறம் அவனுக்கு பக்கத்துல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்கற கஷ்டமான வேலை மட்டும் தான்...அவன் ஏதாவது இரண்டு மூன்று காய்களை சேர்த்து குழம்புக்கும் கூட்டுக்கும் நடுவில் ஒரு அயிட்டம் சமைப்பான். ஒரே கவலை..எது செய்தாலும் அதில் உருளைக் கிழங்கு போடலைனா அவனுக்கு ஜீரணமாகாது.....என்ன செஞ்சா என்ன..நம்ம சாப்பாட்டு ப்ரச்சனை தீர்ந்தது...

இங்கு குறைஞ்சது 50 இந்தியர்களாவது இருப்பார்கள் என்று வந்தால் மொத்தம் 20 பேர் தான்..அதுலயும் 4 பேர் தான் தமிழ்...ஆனா வாரவாரம் கெட்-டூகெதர் ன்ற பேருல யார் வீட்டுலாவது ஓசில நல்ல சாப்பாடு போடறாங்க..

வந்த முதல் வாரமே இங்க இருக்க ஒரு ஆசிய ரெஸ்டாரென்டுக்கு போனோம்...மெனு கார்ட்ல இருந்தது எல்லாம் தாய், மலாய் அயிட்டங்கள்...இந்திய உணவு நான்கோ ஐந்தோ தான்...சமோசா, கொஃப்தா, ராகுல் ஜோஷ்னு பேரு வச்சு ஒரு டிஷ். அப்புறம் பேரு வாயில நுழையாத இரண்டு டிஷ்...'நாண்' வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் முன்னால் ஆர்டர் பண்ணனுமாம்...

பக்கத்துல 'V' இருக்க அயிட்டம் மெனுகார்ட்ல மொத்தமே 3 தான்...அதுல ஒரு மீன் அயிட்டத்தை அவன் எப்படி சைவமா மாத்தி தருவான்னு தெரியாம வாய்ல பேரு நுழையாத ஒரு டிஷ் ஆர்டர் பண்ணியாச்சு....

அதுக்குள்ள சமோசாவை என்ன கொடுமை பண்ணி வச்சிருக்காங்களோனு அதை ஒரு ப்ளேட் கொண்டு வர சொன்னோம்...அவன் கொண்டு வந்த ச்மோசாவிலேயே பசி அடங்கிடுச்சு..அவ்வளவு சூப்பரா எப்படி தான் செய்தானோ...நம்ம ஊருக்கு வந்து சமோசா செய்யறதை மட்டும் நல்லா கத்துக்கிட்டு வந்தவன் போல...

சமோசாவால வாயை அடைச்சவன் பின்னாடியே அதுக்கு ஒரு சட்னி கொண்டு வந்தான்...காரத்துல எங்களை திக்கு முக்காட வச்சிட்டானுங்க...நம்ம ஊர் ஆந்திரா மெஸ் சட்னியெல்லாம் தோற்றுவிடும்...அவ்வளவு காரம்... வெங்காயம், மிளகாய் மசாலா எல்லாம் போட்டு சூப்பரா பண்ணியிருந்தான்.....அதுலயும் கூட வந்த இரண்டு ஆந்திரா பசங்களுக்கு இத்தனை நாள் கழிச்சு இவ்வளவு காரமா சாப்பிட்டதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு...

சமோசா காலியானாலும் அந்த சட்னியை சும்மாவே தொட்டு நக்க ஆரம்பிச்சிட்டோம்..அந்தளவு எங்களை மயக்கிடுச்சு...

அடுத்தது அந்த பெயர் தெரியாத அயிட்டம் பெரிய ஆப்பு.....கத்தரிக்காயும் பன்னீரும் போட்டு உப்பில்லாம கொண்டு வந்தான்....வாயில வைக்க முடியல....மறுபடியும் அந்த சட்னி தான் காப்பாற்றியது...அவன் கொடுத்த அரை ப்ளேட் சாதத்துல அந்த சட்னியை கலந்தடித்து பாதி வயிறு நிரம்பியது....

வயிறு நிரம்பவில்லையென்றாலும் நம்ம ஊர் சாப்பாடு என்ற மனத் திருப்தி தான்...

இங்கு இன்னொரு நலல விஷயம்...வாரவாரம் கெட்-டூகெதர் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுகிறார்கள்...நேற்று தக்காளி ரசம்...ஒரிஜினல் ஆந்திரா ஊறுகாய்...

இன்னும் இரு வாரங்களில் அர்ஜெண்டினா போக ஒரு ப்ளான் போட்டு இருக்கோம்...இப்படி கம்பெனி காசுல ஊர் சுத்தினா தானே உண்டு...நாம என்னைக்கு நம்ம காசுல இங்கெல்லாம் வரப் போறோம்!!!



கடைசிப் பக்கங்களுக்காக...மதுமிதா!!

வலைப்பதிவர் பெயர்: கப்பி பய

வலைப்பூ பெயர் : கப்பி பய

சுட்டி(url) :http://kappiguys.blogspot.com

ஊர்: காஞ்சிபுரம்...இப்பொழுது இருப்பது மாண்டிவிடியோ

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிளில் எதையோ தேடும் போது முதலில் ஒரு தமிழ் திவைப் பார்த்தேன். அது வரை ஆங்கில பதிவுகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன..

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : இருங்க பார்த்து சொல்றேன்...விய வருடம்,.சித்திரை 8...அன்றைக்கு அலுவலகத்தில் எப்பொழுதும் போல் வேலையே இல்லாமல் பயங்கர வெட்டி....வழக்கம் போல் தமிழ்மணத்தை திறந்து ஒவ்வொரு பதிவா படிச்சு மதியம் வரை பொழுதைக் கழித்தேன்...சிறிது நேரத்தில் அடி மனசு ஆசை திடீரென வெளியில் வந்து தலையில் தட்ட இந்த பதிவை ஆரம்பித்தேன்...

இது எத்தனையாவது பதிவு:16...கத்துக்குட்டிங்கோவ்

இப்பதிவின் சுட்டி(url) : http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_09.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஏற்கனவே சொன்னது போல் எழுத வேண்டும் என்ற அடி மனசு ஆசை தான்

சந்தித்த அனுபவங்கள்:பல துறைகளில் பல வகையான பதிவுகள்....ஆச்சரியமூட்டும் தகவல்கள்..குழாயடிச் சண்டைகளுக்கு நிகரான பதிவர்களின் சண்டைகள்..தனி நபர் தாக்குதல்கள்...பல விவாதங்கள், வாக்குவாதங்கள்...

பெற்ற நண்பர்கள்:யாவரும் கேளிர்...

கற்றவை: கையளவு...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்...நினைத்ததை எழுத முடிகிற சுதந்திரம்...யாரும் நம்மை அடிக்க வர மாட்டார்கள் என்ற தைரியம்..

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து பதிவது...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்"

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

நன்றி!!



பேர் சொல்லும் பிள்ளைகள்

படிக்கற காலத்துல பல பேருக்கு பல பட்டப்பெயர்கள் வச்சாலும் சில பேருக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பெயர் பச்சக்குன்னு ஒட்டிக்கும். .சொந்த பேரு அவனுங்களுக்கே மறந்து போற அளவுக்கு எல்லாருமே பட்டப்பெயரை வச்சு கூப்பிடுவாங்க...இந்த பெயர்களுக்கு அவனுங்க காப்பிரைட்டே வச்சிருக்கானுங்க... அந்த பட்ட பெயர்கள்ல பலது வெளியே சொல்ல முடியாது...சென்ஸார்ட்...அதுல சொல்ல முடிந்த பெயர்களில் எனக்கு ஞாபகம் வந்ததை இங்க போட்டிருக்கேன்...

சிறுவன்-பால் வடியும் முகத்தோட பத்தாம் கிளாஸ் பையன் மாதிரி இருப்பான்..

புலாஸ்-புலாசுலாக்கியோட ஷார்ட் ஃபார்ம்....ஆக்சுவலா அவனே உயரத்துல ஒரு ஷார்ட் ஃபார்ம் தான்..

மூனடியார்-நாலடியார் தம்பி..புலாஸை விட சின்ன பையன்

சுள்ளான்-ஆள் நாலடி இருந்தாலும் அவன் செய்கிற சில்மிஷங்களுக்காக..

காய்-காரணம் சொல்ல முடியாதுங்கோவ்

லோ ஹிப் - பேண்ட் இடுப்புலயே நிக்காது!!

அலெக்ஸ் - வாத்தியார் பெயரை பையனுக்கு வச்சு அவனை அசிங்கப் படுத்தியாச்சு!!

டோப்பு- கஞசா குடிக்கி மாதிரி அரைத் தூக்கத்துலயே திரிவான்

கும்தாஜ்-மும்தாஜ்க்கு போட்டியா களமிறக்கப்பட்டவன்.

கப்பை- ஃபீல்டிங் மிஸ் பண்றதை கப்பை-னு சொல்லுவோம்...ஆனா இவனுக்கு அந்த பேரு ஏன்னு பெயர்க்காரணம் மறந்து போச்சு

அங்குச்சாமி-அவன் 1st இயர் ரூம்ல இந்த பேரை யாரோ கிறுக்கி வச்சிருந்ததால அவனுக்கும் இந்த பேரு

தாத்தா-நோயாளி...வாரத்துக்கு ஒரு தடவை வயிறு பிரச்னை பண்ணி சாகற நிலைமையில இருந்தவன்..எதுன்னாலும் ரொம்ப பொறுப்பான பதில் சொல்பவன்.

கனல்-விளையாடும் போது பந்தை காட்டான் மாதிரி எறிவான்..

வேல் கொப்பரை-மனசுல விவேக் ஓபராய்னு நினைச்சுக்கிட்டு சுத்துனா இந்த பேரு தான் மிஞ்சும்

மொன்னை-மத்தவங்கள அவன் மொன்னைனு கூப்பிட்டு ஆரம்பிச்சு அவன் பேரே மொன்னை ஆயிடுச்சு....இது தான் பாப்புலர் பெய்ர்..காலேஜ்ல பாதி பேருக்கு அவன் உண்மையான பெய்ர் தெரியாது.

ஆபிசர்-பொறுப்பானவன், பண்பானவன்

ஷில்பன்-as in சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்...இந்த பேரு பசங்களுக்கு வச்சதில்லை...யாருக்கு வச்சதுன்னு சொல்ல மாட்டேன்!!

டிங்கு - அவன் நடை அப்படி

நாய் - ராய்-னு பேரை வச்சிகிட்டு மதுரைல சுத்தினா நல்லா இருக்குமா..அதான் நாய்னு மாத்தியாச்சு

ஓடுகாலி - ஹாஸ்டல்ல எல்லா ரூம்லயும் படுத்து தூங்கற ஜீவராசி

தக்காளி - கொழுக் மொழுக்

பயில்வான் - அவ்ளோ பலசாலி..பேட் கூட தூக்கமுடியாது.

கொசு-பயில்வானுக்கு போட்டியா உடம்பு வச்சிருக்கவன்

டான் - இருப்பதிலேயே கேவலமான பெயர். மனசுல தன்னைப் பத்தி ரொம்ப ஓவரா நினைச்சுக்கிட்டு திரிஞ்சவனுக்கு வச்ச பேரு...பிற்காலத்தில் இது ஒரு கெட்ட வார்த்தையா மாறிடுச்சு...இந்த பேரை வச்சு மத்த பசங்கள கூப்பிட்டா அவனுங்களுக்கு ம்கா கேவலம்

மாஸ்டர் - சின்ன டான்.

இன்னும் பல பேரு இருக்கு...ஆனா இதெல்லாம் தான் டக்குனு ஞாபகத்துக்கு வந்தது. படிக்கற காலத்துல தான் இப்படின்னா வேலைக்கு சேர்ந்த அப்புறமும் பேர் வைக்கிற பழக்கம் போகல..

தல - வயசுல பெரியவர்..யார் வேணும்னாலும் ஓட்டலாம்..அவிக்கலாம்...

கேப்டன்-மதுரைக்கார தல

சல்லி-சல்லித்தனமாக நடக்கும் PL

பெரிய சல்லி-அதைவிட சல்லித்தனமான GL

கில்லி - இவங்க இரண்டு பேர் நடுவில சிக்கினாலும் எல்லாத்துலயும் எஸ்கேப் ஆகும் PM

குட்டி சல்லி-சல்லியோட சிஷ்யன்

இது மாதிரி அடுத்தவனுக்கு பேர் வைக்கிற சுகமே தனி தான்..