கொசுவத்தி & வாழ்த்துக்கள்

"அடுத்த பொங்கலுக்கு உயிரோட இருக்க மாட்ட", "அடுத்த தீபாவளிக்குள்ள உனக்கு கைகால் விளங்காம போயிடும்" - கிராமங்களில் பண்டிகை நாட்களில் சண்டை போட்டுக்கொண்டால் இப்படித் திட்டிக கொள்வதைக் கேட்டிருக்கிறேன். அடுத்த வருடம் குறித்து இப்போதே யோசிப்பதும் கடந்த ஆண்டுகளில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை அசைபோடுவதும்கூட பண்டிகைக் கொண்டாட்டங்களின் பகுதியாகவே இருக்கிறது. தீபாவளியின் போது கடந்த ஆண்டு சொதப்பிய மைசூர் பாகோ, கை முறுக்கோ, பொங்கல் அன்று சென்ற வருடம் நடந்த ஏதாவது ஒரு சின்ன சண்டையோ பேசுபொருளாக இருக்கும். புத்தாண்டு தினமும் கடந்த வருட நினைவுகளும் புதுவருடத் தீர்மானங்களுமாகக் கழியும்.

டிடியில் 'இளமை இதோ இதோ'வில் தான் புத்தாண்டு பிறக்கும். 'Wish You Happy New Year' என்று முதல் வரி மட்டும் வைத்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்துக்கு 'சகலகலா வல்லவனை'ப் பற்றிப் பாடும் அந்த பாடல் எப்படி இத்தனை ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து ஒலிக்கிறது என ஆச்சரியமாக இருக்கும்.

கல்லூரியில் எல்லா வருடமும் டிசம்பர் 31-ம் தேதி இரவு திறந்தவெளி மைதானத்தில் இரண்டு திரைப்படங்கள திரையிடுவோம். அதில் கண்டிப்பாக 'பாட்ஷா' இருக்கும். 12 மணிக்கு சரியாக உடைந்த மரக்கிளைகளை ஒரு இடத்தில் சேர்த்து 'காம்ப் ஃபயர்' என்ற பெயரில் கொளுத்திவிட்டு ஆடலுடன் பாடலென குத்தாட்டம். அப்படியே ஒரு இரண்டு மூன்று மணி நேரம் ஆடிவிட்டு மொத்தமாக ஒரு குளியலைப் போட்டு மீண்டும் 'ஏதாவது' ஒரு பட்த்தைப் பார்த்து புது வருடத்தை வரவேற்போம்.

புத்தாண்டு சீசனில் கடைகளில் விழாக்கால சலுகைகள் மட்டுமில்லாமல் ஓட்டல்களிலும் பஃபே வைப்பார்கள். அங்கும் போய் நம் கைவரிசையைக் காட்டாவிட்டால் எப்படி? கல்லூரிக்கு பக்கத்திலேயே 'ஆர்த்தி ட்ரைவ் இன்' என்று ஒரு ரெஸ்டாரெண்ட். எவனாவது ட்ரீட் கொடுத்தால் மட்டுமே அங்கு செல்வோம். சாதாரண நாட்களில் அந்த ஓட்டலுக்கு எதிரில் இருக்கும் பரோட்டா கடையை அட்டாக் செய்வோம்.

எங்களைப் பற்றித் தெரியாமல் ஒரு புதுவருட சீசனில் அந்த ஓட்டலில் பஃபே வைத்தார்கள். அதுவும் 80 ரூபாய்க்கு. விடுவோமா? முதலில் ஆறு பேர் போனோம். நாங்க ஆரம்பிக்கும்போதே இன்னும் ஏழெட்டு பசங்க வந்தாங்க. சூப் குடிச்சு முடிக்கும்போது கிட்டத்தட்ட 20 பசங்க. அப்படியே வரிசையா சூப், இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், பட்டர் நான், நூடுல்ஸ், தயிர்சாதம், ரெண்டு மூனு ஸ்வீட்டுன்னு டேபிள்ல வரிசையா வச்சிருந்ததை உள்ள தள்ளிக்கிட்டே வந்தோம்.

ஒரு மணி நேரத்துக்கு மேல நாங்க கஷ்டப்பட்டு கடமையை ஆத்திக்கிட்டிருந்தா பக்கத்துல ஒரு பேமிலி ஆளுக்கு ரெண்டு இட்லி வச்சுகிட்டு உட்கார்ந்திருக்காங்க. 'ரெண்டு இட்லி சாப்பிட இவிங்க எதுக்குடா பஃபேக்கு வராங்க'ன்னு சொல்லிகிட்டே அவங்க ப்ளேட்டை தட்டிவிடப் போன நண்பனை அவன் வாயில ஒரு முழு இட்லியை அடைச்சு இந்த பக்கம் கூட்டிட்டு வந்தோம். அங்க இன்னொரு உயிர்காப்பான் கைல ப்ளேட்டோட சின்ன பசங்க விளையாட வச்சிருந்த ஊஞ்சல்ல ஆடிட்டிருந்தான். கேட்டா ஆடி ஆடி கொஞ்சம் ஜீரணமாக்கி வயித்துல இடம் சேமிக்கறானாம்.இப்படியாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாம சேர்த்துவச்சு சாப்பிட்டோம்.

எல்லாருக்கும் சாப்பிட்டு போரடிக்கவே ஐஸ்க்ரீம் பக்கம் போனோம். வென்னிலா ப்ளேவர் எனக்கு புடிக்காதுன்றதால மூனே ரவுண்டுல நிறுத்திடலாம்னு மூனாவது தடவை வாங்கப் போனா கொடுக்க முடியாதுன்னுட்டான். வந்துச்சே எங்களுக்கு கோவம். 'பஃபே'ன்னா எல்லாம் அன்லிமிட்டட் தானே ஏன் கொடுக்க முடியாதுன்னு தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அவன் 'மத்ததெல்லாம் அன்லிமிட்டட்..ஆனா ஐஸ்க்ரீம் ஒரு தடவை தான்'ன்னு பதில் சொல்றான். 'அப்ப அதை போர்ட்ல போட வேண்டியது தானே...இது தெரிஞ்சா நாங்க வந்தே இருக்க மாட்டோம்'னு டயலாக். உடனே அந்தாளு போய் அங்க வச்சிருந்த போர்ட்ல் ஐஸ்கீரிம்க்கு நேரா '50 கி'ன்னு கிறுக்கிட்டு வந்துட்டான்.

ஐஸ்க்ரீம் கொடுக்காத கோவத்தை அங்க பதிவு செஞ்சே ஆகனும். என்ன பண்ணலாம்னு யோசிச்சா எதிர்ல சூப்பு கப்பு வாயைப் பொளந்துட்டு இருக்கு. இன்னைக்கு இவனுங்களை விடறதில்லன்னு ஆளுக்கு ஒரு கப்பை எடுத்துகிட்டு மறுபடியும் ஒரு கப் சூப்பை அடிச்சா மத்தவங்களெல்லாம் பக்கத்துல வரவே பயந்துபோய் எங்களைப் பார்க்கறாங்க. அந்த பயம் இருக்கட்டும்னு அந்த சூப்போட பஃபேயை முடிச்சுட்டு ஓட்டல்காரங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி அவங்க அடிக்க வரதுக்கும் முன்னாடி எஸ்கேப் ஆனோம்.

இப்படி ஒவ்வொரு புதுவருஷத்துக்கும் பண்டிகை நாட்களுக்கும் அசைபோட ஏதாவது ஒரு விஷயம் இருந்துட்டுதான் இருக்கு.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!! ;)



மாண்டி'வீடியோ'

ஆரம்பிச்சுட்டாங்கய்யா. இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட்டாங்க. டிசம்பர் 8-ம் தேதி 'La Noche de las Luces'-ன்ற பேர்ல ஒளி இரவு நடத்தினாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு வான வேடிக்கை. இந்த நிகழ்ச்சிதான் இவங்க கோடைக்கால கொண்டாட்டங்களுக்குத் துவக்கமாம். கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள்(இந்த ஊர் மக்கள்தொகையில் மூன்றிுல ஒரு பங்கு) பீச்சை நிரப்பிட்டாங்க. இரவு 10 மணிக்கு நடந்த இந்த ஒளிவிருந்துக்கு மதியம் 2 மணியில் இருந்தே பீச்சில் மக்கள் குவிய ஆரம்பிச்சாச்சு. மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டுக் கிடந்தாங்க.

சும்மாவே இப்படி பட்டையைக் கிளப்பறாங்களே கிறிஸ்துமஸுக்கும் இப்படி தூள் கிளப்புவாங்கன்னு பார்த்தா ஏமாற்றமா போயிடுச்சு. நள்ளிரவு 12 மணிக்கு வெடி வெடிச்சாங்க. ஊர் முழுக்க எல்லாரும் ஒரே நேரத்துல ராக்கெட் விட்றது பத்தாவது மாடில இருந்து பார்க்க வண்ணமயமா அருமையா இருந்தது. ஆனா அவ்வளவுதான் இவங்க கிறிஸ்துமஸ் போல. கிறிஸ்துமஸ் அன்னைக்கு தெருவில ஒரு ஈ,காக்கா இல்ல. பொதுவா லீவ் நாளாச்சுன்னா பீச்சுக்கு வந்து வெயில்ல படுத்து கிடக்கற கூட்டத்தையும் காணோம். சினிமா தியேட்டரல் கூட நேத்து ராத்திரி ஷோ மட்டும்தான் ஓட்டினாங்க. இவிங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே :))

ஒளி இரவு வீடியோ:



மூன்று

Final Cut:

தற்செயலாகத் தொலைக்காட்சியில் பார்த்த திரைப்படம். சற்றும் எதிர்பாராத கதைக்களம் ஆரம்பத்திலேயே ஆவலை அதிகப்படுத்துகிறது. கதாநாயகன் ஜூட் இறந்துவிட அவரின் இறுதிச்சடங்குகளுக்காக கூடியிருக்கும் நண்பர்களுக்கு ஜூட்டின் மனைவி, ஜூட்டின் கடைசி ஆசை எனக் கூறி, ஒரு விடியோவைத் திரையிடுகிறார். ஜூட் இரண்டு வருடங்களாக தன் வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரகசிய கேமராக்களை பொறுத்தி தன் நண்பர்களின் நடவடிக்கைகளை அவர்கள் அறியாமல் படம்பிடித்து வைத்திருக்கிறார், காண்டிட் கேமரா நிகழ்ச்சி போல். நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், அடுத்தவரைப் பற்றி புறம் கூறியவை, கள்ளத் தொடர்புகள், போதை பழக்கங்கள் என அவர்களுடைய ரகசியங்கள் அம்பலமாகின்றன. ஒவ்வொருவரைப் பற்றிய காட்சிகள் வரும்போதும் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளும் விவாதங்களுமாக படம் நகர்கின்றது.

இறுதியில் ஜூட் இறந்ததற்கான காரணமும் அந்த வீடியோவின் மூலமாக வெளிவர அவரின் மரணத்திற்குக் காரணமானவரை கைது செய்வதோடு படம் முடிகின்றது. அந்த வீடியோ பார்த்துக்கொண்டிருப்பதையும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளையும் படம்பிடிக்கும் காமிராவை நோக்கி கதாப்பாத்திரங்கள் கோபத்தில் கத்துவது நல்ல காமெடி.

ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியம் அம்பலமாகும்போதும் மற்றவர்களின் ரியாக்ஷனும் குற்றம் சுமத்துபவர் அதை நியாயப்படுத்துவதும் சுவாரசியம். ஆனால் படம் முழுக்க இதே தான் எனும்போது சிறிது சலிப்பு ஏற்படுகிறது. வித்தியாசமான முயற்சி. ஒருமுறை பார்க்கலாம்.


El viaje hacia el mar(Seawards Journey):

கடலை நோக்கிப் பயணம். உருகுவேயின் லவஷேஹா(Lavalleja) மாவட்டத்திலிருந்து நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கடலைக் காண்பதற்காக கதாபாத்திரங்கள் பயணிப்பதே கதை. இவர்களைக் கூட்டிச் செல்பவரைத் தவிர வேறு யாரும் அதுவரைக் கடலைப் பார்த்தது கிடையாது. ஐந்து பேரின் பயணத்தில் அவர்களுக்கு அறிமுகமில்லாத அன்னியன் ஒருவரும் இனைந்துகொள்கிறார்.



மிகவும் மெதுவாக நகரும் படம். மிகப் பழைய வேன் மணல் சாலைகளில் ஓடும் வேகத்திலேயே படமும் நகர்கிறது. சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், வாழ்க்கையை வெறுத்து சாவிற்காகக் காத்திருக்கும் முதியவர், நடப்பது நடக்கட்டும் என எதைப் பற்றியும் கவலைப்படாத இன்னொரு முதியவர், இவர்களை கடல் பார்க்க அழைத்துச் செல்வதே வீண் என நினைக்கும் ஓட்டுனரின் நண்பர், தற்செயலாக இவர்களுடன் பயணம் செய்யும் இளைஞன் என படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்.

இதற்கு முன் பார்த்த உருகுவே திரைப்படங்களை(Whisky,25 Watts) விட தொழில்நுட்ப ரீதியில் வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. ஆனால் திரைக்கதையின் வேகம் நம்மை சலிப்படையச் செய்கிறது. சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனங்கள் அடுத்து ஏதாவது சுவாரஸ்யமாக நடக்குமென எதிர்பார்க்க வைத்தாலும் கடைசிவரை அதே வேகத்தில் படம் நகர்கிறது.

கடலைச் சென்றடைந்ததும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடலை ஒவ்வொரு விதத்தில் உருவகிப்பதோடு படம் முடிகின்றது. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரசியமான திரைப்படமாக வந்திருக்கும். உருகுவேயின் நிலப்பரப்பைப் பார்க்க வேண்டுமானால் இந்த படத்தைப் பார்க்கலாம்.

Misdemeanor:

பதினைந்து நிமிடக் குறும்படம். இதுவும் தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்த்தது. பசியில் தவிக்கும் ஒரு ஏழை இளம்பெண் திருட எத்தனிக்கிறாள். ஆனால் ஒவ்வொருமுறை அவள் திருட முயலும்போதும் அவளுடைய உள்ளுணர்வு தடுக்கிறது. சூப்பர் மார்கெட்டில் திருட முயல்கிறாள். அதே கடையின் முதலாளி பூங்காவில் தன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது திருட முயல்கிறாள். இறுதியில் திருடக்கூடாது என முடிவெடுத்துத் திருந்துவதாய் பதினைந்து நிமிடத்தில் அழகான சிறுகதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

வசனம் எதுவுமில்லாமல் காட்சியமைப்புக்கு ஏற்றவாறான பின்னணி இசையுடன் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். பதினைந்து நிமிடங்களில் படத்தில் வரும் அத்தனைக் கதாபாத்திரங்களும் மிக்ச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். சமயத்திற்கு ஏற்றவாறு மாறும் மனித இயல்பை அருமையான குறும்படமாக சொல்லியிருக்கிறார்கள்.



கால் போன போக்கில்

யார் அந்த டினா?
One night @ BsAs + Shakira + Recoleta Cemetery

ஏதாவது வெளியூருக்குச் சென்றுவந்தால் திரும்பிவந்ததுமே அம்மாவை உட்காரவைத்து பஸ் ஏறியதிலிருந்து வீட்டிற்கு திரும்பியதுவரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வது என் அப்பாவின் வழக்கம். பல சமயங்களில் எனக்கு இது எரிச்சல் ஊட்டினாலும் ஒவ்வொரு முறையும் அவர் விரிவாக எல்லாவற்றையும் சொல்வது ஆச்சரியமாக இருக்கும். நானோ முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் அதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துவிடுவேன். அவராக ஒன்றுவிடாமல் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார். இப்போது பொய்னொஸ் ஐரிஸ் பயணம் குறித்து மூன்று பகுதிகளாக பதித்துக் கொண்டிருக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

ரிகொலெதா கல்லறைத் தோட்டத்திலிருந்து வெளியே வந்ததும் அங்கிருந்த பூங்காவில் மேப்பை விரித்து உட்கார்ந்தேன். குறிப்பாக எந்த இடத்திற்கும் செல்லும் திட்டமில்லை. அங்கிருந்த சாலையோரக் கடைகளை வேடிக்கைப் பார்த்துவிட்டு சுரங்க ரயிலில் பயணம் செய்து பார்க்கலாமென முடிவெடுத்துக் கிளம்பினேன்.

பொய்னொஸ் ஐரிஸில் பெரும்பாலான பகுதிகளில் தெருவோரக் கடைகள் நிறைந்திருக்கின்றன்ன. கைவினைப் பொருட்களும், மலிவான விலையில் துணிகளும் கிடைக்கின்றன. டேங்கோ நடனமாடுவது போல் சிறு சிலைகளும், அந்த நடனத்திற்கேற்ற ஆடைகளும், இசைத் தட்டுகளும் மலிவான விலையில் கிடைக்கின்றன. சில கடைக்காரர்கள் கிடார் வாசித்துக்கொண்டே வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

மத்திய நூலகம், பல்கலைக்கழக கட்டிடங்கள், கட்டிடக்கலை கண்காட்சியகம் ஆகியன இருந்த சாலையின் வழியாக நடந்து சாண்டா ஃபே (Santa Fe) அவென்யூவிற்கு வந்தேன். இந்த தெரு முழுதும் துணிக்கடைகள்தான். அர்ஜெண்டினாவிலுள்ள சாண்டா ஃபே மாகாணம் சே குவேரா பிறந்த மாகாணம் என்று எங்கோ படித்த நினைவு.

சாண்டா ஃபேயில் இருந்த ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் நுழைந்தேன். 'Subte' என்றழைக்க்கப்படும் சுரங்க ரயில் பாதைகள் 1913-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டதாகப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் எங்கே வாங்குவதென்று தெரியாமல் அருகிலிருந்தவரிடம் கேட்க, அவர் நான் எந்த பக்கம் ரயில் போகும் எனக் கேட்டதாக நினைத்துக்கொண்டு ரயில் செல்லும் திசையைக் காட்டினார். எதிர்ப்புற நடைமேடையில் சில கடைகள் இருந்ததால் அங்கு சென்று விசாரித்தேன். நான் கேட்ட கடையிலேயே டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ரயிலில் திடீரென்று ஒருவர் சிறிய கிருஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்துச் சென்றார். நான் வேண்டாமென சொல்வதற்கு முன் என் கையில் திணித்துவிட என்ன செய்வதென சுற்றும் முற்றும் பார்க்க, அடுத்த நிறுத்தத்தில் அவரே மீண்டும் வந்து வாங்கிச் சென்றார். ஓரிருவர் அந்த பொம்மைகளை காசு கொடுத்து வாங்கினர். மாண்டிவிடியோவிலும் பேருந்துகளில் மிட்டாய்களும், புத்தகங்களும் விற்கிறார்கள், நம்மூரைப் போலவே.




அங்கிருந்து ப்ளாசா இத்தாலியா (Plaza Italia) என்ற ரயில் நிலையம் வரை சென்றேன். அங்கு ஒரு தாவரவியல் பூங்கா இருந்ததை வரைபடத்தில் பார்த்து வைத்திருந்தேன். அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் ப்ளாசா இத்தாலியாவை அடைந்தேன். அங்கு உயிரியல் பூங்காவும் தாவரவியல் பூங்காவும் அருகருகில் உள்ளன. நான் தாவரவியல் பூங்காவில் சிறிது நேரம் அமரலாம் என உள்ளே சென்றேன். அமைதியான அந்த பூங்காவில் அமர்ந்து கையோடு எடுத்துச் சென்றிருந்த 'The Green Mile' நாவலை சிறிது நேரம் வாசித்தேன். அருகிலிருந்த மைதானத்தில் ஏதோ கண்காட்சி நடந்துகொண்டிருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

அரைமணி நேரத்திற்குப் பின் மீண்டும் சுரங்க ரயில் மூலமாக நகரின் மையப் பகுதிக்கு வந்தேன். ரயிலில் ஒரு பெண்மணியும் அவரின் மகனும் ஸ்டிக்கர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் லவாஷே(Lavalle), ப்ளோரிடா(Florida) வீதிகளில் நடந்து, மெக்டொனால்ட்ஸில் பசியாற்றி பொழுது கழிந்தது. பொய்னொஸ் ஐரிஸ் சாலைகளில் பல்வேறு இன மக்களைக் காண முடிகிறது. காவல் துறையினரும் அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் இருக்கின்றனர்.

மழைமேகம் திரண்டதால் விரைவாகத் துறைமுகம் சென்றடைந்தேன். அங்கு ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் மாண்டிவிடியோ நோக்கிப் பயணம். இரவு நேரமானாதாலோ என்னவோ கடலில் அலைகள் பெரிதாக இருந்ததால் கப்பலின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.ஒருவேளை பின்னால் உட்கார்ந்ததால் தான் அதிகமாக ஆடுகிறதோ என்று பார்த்த்தால் முன்னால் இருப்பவர்களும் தள்ளாடியபடிதான் இருந்தனர். கலோனியா வந்தடைந்ததும் இரண்டு மணி நேரப் பேருந்துப்பயணத்தில் மாண்டிவிடியோ.

இயற்கை எழில் கொஞ்சும் தென்னமெரிக்க நிலப்பரப்புகளைத் திரைப்படங்களிலும் இணையத்திலும் பார்த்து, படித்து இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டுமென ஆவலாய் இருக்கிறது. பார்ப்போம்.