இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா

"நான் ஹீரோ வொர்ஷிப் பற்றியெல்லாம் தீர்ப்பு வழங்கத் தயாராக இல்லை. என் அளவில் நான் பேசுகிறேன். நான் இப்படியெல்லாம் வழிபடுவதற்குத் தகுதி உடையவன் அல்ல."

"என்னை வியக்க வைத்த இசையமைப்பாளர் சந்தேகமில்லாமல் இளையராஜா தான்! அந்த ஒருவரைப் பார்த்துத்தான் தினமும் வியந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் தெரியாத இவனிடமிருந்து எப்படி இவ்வளவு விஷயங்கள் வருகின்றன என்று வியக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் இசை அமைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது."



"இசைவிப்பது இசை. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். வித்வான் மேடை ஏறிப் பாடுகிற தோடியைத்தான் ஒற்றைத் தந்தி தம்புரா சுருதியுடன் பரதேசியும் பாடுகிறான். அவன் வழி வேறு. இவன் வழி வேறு; பாடுவதிலே வித்தியாசம் தெரிகிறது என்பது உண்மை. ஆனால் ஆண்டிப்பண்டாரத்தின் பாட்டிலே அந்தப் பாடகன் இசைந்து போயிருக்கிறான் என்பதும் உண்மையல்லவா? அதைக் கேட்டு ரசிக்க நாற்காலியில் வந்தமரும் நானூறு ரசிகர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது சூழ்ந்து நிற்பது உண்மைதானே? அவர்கள் 'லெவலில்' அதை அவர்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள்.

இந்தப் பண்டாரம் மேடைப் பாடகனால் துச்சமாகக் கருதப்படுகிறான். ஆனால் பண்டாரமோ மேடைப் பாடகனை வணங்கிக் கும்பிடு போடுகிறான். யார் உயர்ந்தவர்?"

"இசையில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று நினைப்பானேன், பேசுவானேன்? எல்லாமே இசைதான்! டப்பாங்குத்து என்று நீங்கள் கருதலாம்; அதில் ஈடுபட்டிருப்பவன் அடைகிற இன்பத்தை நீங்கள் எப்படி உணர முடியும்?"

"என் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் வருவதில் அதிசயமில்லையே? நான் சினிமா மூலம் பிராபல்யமும் புகழும் அடைந்திருக்கிறேன். மக்கள் வருகிறார்கள். வராமல் இருந்தால் தான் அதிசயம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?"

"ஒரு உயர்ந்த படத்தை இசையமைப்பாளரால் கெடுக்க முடியாது. அவனுக்குக் கெட்ட பெயர் வந்து சேருவதோடு சரி. ஆனால் ஒரு சராசரி படத்தை இசையமைப்பாளன் உயர்த்தவும் முடியும்; கெடுக்கவும் முடியும்."



"'துளசிதள முலசே சந்தோஷ முகா பூஜிந்து' - இந்தப் பாடலைப் பாடியபோது தியாகையரின் மனநிலை என்னவாயிருந்தது? அதுபற்றி இன்று நமக்கு என்ன சார் தெரியும்? நீங்கள் என் பாட்டைக் கேட்டீர்கள்; ஆனால் தியாகையரின் அன்றைய மனநிலையை எவ்வாறு உணரப் போகிறீர்கள்? நானோ அல்லது இன்னொரு வித்வானோ மேடை ஏறிப் பாடினால் எனக்கு கணக்கு வழக்கு தெரியும் என்று காட்டிக்கொள்ள முயல்வேன். தொடையில் ஓங்கி அறைந்து தாளம் போடுவேன்; சுவரப் பிரஸ்தாரங்களைச் செய்து என் வித்வத்தைக் காட்டுவேன்; கமகங்களை உதிர்த்து என் குரல்வளத்தைப் புலப்படுத்துவேன். போதாக்குறைக்கு எனக்கு நானே 'சபாஷ்' போட்டுக்கொள்வேன். எல்லாம் என்..என்..என்..தியாகையர் எங்கிருக்கிறார்? அவர் மனநிலையும் உணர்வுகளையும் எங்கே, எப்படி, யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?"

- இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா, கல்கி 1985.

இசைஞானியின் லேட்டஸ்ட் ஷிவா பாடல்கள் இங்கே



ஜி டாக் - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு

காலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா??) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...

**********************************

வேலை! வேலை!! வேலை!!!

வேலை இல்லாதவன் தான்..

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

வெட்டி! வெட்டி!! வெட்டி!!!

இன்றும் மற்றொரு நாளே!

+1

(18 Sep 06).equals(17 Sep 06)

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

சொன்னா நம்பனும் பிஸி

யாராவது வாங்கடே

இன்னும் இருக்கிறது வேலை!

வேலை பார்க்கற சிங்கத்தை தட்டி கூப்பிடுங்க!

Life is Beautiful

Eternal Sunshine of the Spotless Mind

கூப்பிட்டீங்களா?

வெள்ளிக்கிழமை முடியும் வேலை

L if E

Monday காயுது!

உனக்குள்ள வெட்டியா இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள வேலை பார்த்துட்டு இருக்கு!

என் கடன் பணி செய்து கிடப்பதே!

என் கடன் வெட்டியாய் கிடப்பதே!

ஆத்தா..நான் பஞ்சராயிட்டேன்!

*********************************

அப்படியே உங்க கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் ;)



இன்னும் இருக்கிறது ஆகாயம்

கைக்குழந்தையுடன் நாற்சந்தியில் கை ஏந்துபவளுக்கும்
குப்பைமேட்டில் களஞ்சியம் தேடுபவனுக்கும்
இரவின் வெளியில் சுற்றியலையும் சித்தனுக்கும்
சொத்திழந்தவனுக்கும் சுயபுத்தி பிறழ்ந்தவனுக்கும்
வீட்டைத் துறந்தவனுக்கும் துரத்திவிடப் பட்டவனுக்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
அவர்தம் வீட்டுக் கூரையாக!



இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற தலைப்பைப் பார்த்ததும் தோன்றிய சிந்தனை. வீடின்றி வாழும் வறியவர்க்கு இந்த வானமே கூரையாகிப் போன அவலத்தை சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறேன். சரியான வார்த்தைப் பிரயோகமும் சொல் சிக்கனமும் கைகூடவில்லை. வார்த்தைகளை மாற்றியமைத்து மெருகேற்றியிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இதன் நிறைகுறைகளை பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கவிதை போட்டியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் சங்கத்திற்கும், விமர்சனங்கள் வழங்கிய இன்ஜினியர்[;)] பாலபாரதி அவர்களுக்கும், நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் அவர்களுக்கும் போட்டியில் பங்குபெற எனக்கு ஊக்கமளித்த நாகை சிவா அவர்களுக்கும் நன்றிகள்.

விமர்சனங்கள்:

பாலபாரதி:

// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //

நச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்


நிலவு நண்பன்:

இதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.



பனை மரத்துல வவ்வாலா!!





SR Tendulkar not out 141(148)
13 - 4s
5 - 6s
95.27 - SR


vs WI Played at Kinrara Academy Oval, Kuala Lumpur (neutral venue), on 14 September 2006 - day/night (50-over match)



"Look, as far as I'm concerned Tendulkar is God, and if you want to become a better player you've got to compete with the best."
- Brett Lee

http://content-ind.cricinfo.com/quote/content/current/page/156062.html



25 Watts

"நான் போன வருடம் தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன். படித்து முடித்ததும் ஒரு இசைக்குழுவில் கிடார் வாசித்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பின் அமெரிக்காவில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அமெரிக்கர்களுக்கு உருகுவே எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த ஊர் எனக்கு போர் அடித்துவிட்டது. நான் இத்தாலியன். ஆனால் இங்கு தான் வளர்ந்தேன். இந்த ஊர், இந்த ஆறு, இந்த கடற்கரை, என் பெற்றோர் இவர்களை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. இங்கு உருகுவேயில் பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. தொழில்நுட்பக் கல்வி பெரிய அளவில் கிடையாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது. நீ 25 Watts படம் பார்த்திருக்கிறாயா? உருகுவேயில் எடுக்கப்பட்ட படம்"

"Whisky பார்த்திருக்கிறேன்"

"ம்ம்..அதுவும் உருகுவேயில் எடுக்கப்பட்ட படம் தான். அருமையான படம். ஆனால் நீ கண்டிப்பாக 25 Watts பார்க்கவேண்டும். உருகுவேயில் பள்ளிப் படிப்பு முடித்ததும் 18 வயதிலிருந்து 23, 24 வயது வரை இளைஞர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சீரழிகிறார்கள் எனக் காட்டும் படம். அதுதான் எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை. பெரிய குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் தான்தோன்றித்தனமான வாழ்க்கை. அந்த படத்தைப் பார்த்தாயானால் உருகுவே மேல் உனக்கு தப்பான அபிப்ராயம் தோன்றும். அது உருகுவேயின் மற்றொரு முகம். அந்த படத்தை நீ கண்டிப்பாக பார்த்து உன் கருத்தை சொல்ல வேண்டும்".

என் அலுவலகத்தில் வேறொரு துறையில் வேலை செய்யும் மார்ட்டின் பரிந்துரைத்த படம் தான் 25 Watts.

லீச்சே(Leche), ஹேவி(Javi), சேபே (Sabe) என்ற மூன்று இளைஞர்களின் 24 மணி நேர வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார்கள். லீச்சே ஐந்து வருடங்களாக இத்தாலிய மொழி கற்றுக்கொண்டிருக்கிறான். ஆசிரியை மீது ஒரு தலைக்காதல் கொண்டிருக்கிறான். ஹேவி காரில் 'குழாய்' கட்டி விளம்பரம் செய்பவரிடம் வேலை செய்கிறான். சேபே படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

விடியோ கடைக்காரர், மனநலம் குன்றிய இளைஞன், பிட்ஸா டெலிவரி செய்யும் இளைஞன், கால்பந்தாட்ட வீரன், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும் முன்னாள் கைதி, லீச்சேயின் பாட்டி என அவர்களைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுடன் நடக்கும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.

எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் புகை, மது, போதை, பெண்கள், பலான படங்கள் என இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் காட்டும் சீரான திரைக்கதை. ஆனால் சில் காட்சிகள் மிகவும் நீண்டு நம்மையும் சலிப்படையச் செய்கின்றன. மெல்லிய நகைச்சுவையுடன் வசனம் படத்திற்குப் பக்கபலம். 2001-ல் வெளிவந்த இந்த திரைப்படம் கருப்பு-வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.

உருகுவே நாட்டவர் ஒருவர் தொடர்ந்து ஐந்து நாட்கள் கை தட்டிக்கொண்டு இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறாராம். அவர் எதற்காக கை தட்டினார் என்று கேள்வி எழுப்பியபடி படம் முடிகிறது.

பார்த்த இரண்டு திரைப்படங்களும் உருகுவேயை, மக்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள். அடுத்தது பொழுதுபோக்கு திரைப்படம் ஒன்று பார்க்க வேண்டும்.



லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு

தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' என தலைப்பு வைத்ததை அறிந்த சில சினிமா பிரபலங்கள் வலைப்பதிவாளர்களைக் கவர இந்த லிப்ட் மேட்டரைத் தங்கள் படங்களில் நுழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்கஷன் ரூமில் எட்டிப்பார்த்தபோது:

கமல், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் அவரது அசிஸ்டெண்டுகள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தசாவதாரம் கதை விவாதத்தில் இருக்கிறார்கள்.

அசிஸ் 1: சார், இந்த மாசம் தேன்கூடு போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. அதையே நம்ம படத்துல சேத்துட்டோம்னா வலைப்பதிவாளர்களே படத்தை ஓட்டிடுவாங்க.

கமல்: அட நீ வேறய்யா..இப்பவே 'வேட்டையாடு விளையாடை' ஆளாளுக்கு துவைச்சு காயப்போடறாங்க. எந்த பக்கம் போனாலும் விமர்சன பதிவுன்னு ஒன்னு போட்டுடறாங்க..இதுல அவங்களையும் கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்காதய்யா

ரவி: கமல் சார்..இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்

கமல்: அதுவும் சரி தான். அப்போ தசாவதாரத்துல ஒரு அவதாரத்தை லாரி டிரைவர் ஆக்கிடலாம். அவனோட அடிமட்ட வாழ்க்கை நிலையைக் காட்டி படத்தை ஆரம்பிச்சு அவன் நாமக்கல்ல இருந்து கல்கத்தா போற வரைக்கும் வழில ஒவ்வொரு கமலுக்கும் லிப்ட் கொடுக்கறான்.

ரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்.

அசிஸ் : ஒவ்வொரு கமலுக்கும் சைடு டிராக்ல ஒரு லவ் ஸ்டோரி

கமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா. அப்படியே டெவலப் பண்ணி சொல்லு

அசிஸ்டெண்டைப் புகழ்ந்ததும் ஜெர்க்காகும் ரவிக்குமார் இடையில் தன் டிராக்கை எடுத்து விடுகிறார்.

ரவி: அந்த லாரி ஓட்டற கமல் மத்த கமல் எல்லாரையும் கொன்னுட்டே வர்றான். அவன் கல்கத்தால கடைசி கமலை கொல்ல முயற்சி செய்யறான். அந்த கடைசி கமல் ஒரு டிசிபி. அவர் டிரைவர் கமல் ஒரு சைக்கோ, சீரியல் கில்லர்ன்னு கண்டுபுடிச்சு அவனுக்கு தூக்குதண்டனை தராரு.

கமல்: தூக்கு தண்டனை தர்றதுக்கு அவன் என்ன ஹைகோர்ட் நீதிபதியா ?? அவனைப் புடிச்சு ஜெயில்ல போடறதா காட்டினா போதும்.

ரவி: அப்படியே காட்டிடுவோம். லாரி டிரைவர் கமல் மத்த கமல் கொன்னது போக சில பெண்களை ரேப் பண்ணியும் கொன்னிருக்கான்னு காட்டினா இன்னும் த்ரில் கூடும்

கமல் (மெதுவாக): 'ரேப் சீன் காட்டலைன்னா இவனுக்கு படம் எடுத்த திருப்தி இருக்காதே'
அவர் முனுமுனுப்பதைப் பார்க்கும் ரவிகுமார் 'என்ன எதுனா பிரச்சனையா?' எனக் கேட்கிறார்.

கமல்: ஆமா ரவி. இப்போதான் வேட்டையாடு விளையாடுல ஒரு திரில்லர் சீரியஸ் படம் பண்ணினேன். இப்போ நான் கண்டிப்பா காமெடி படம் தான் செய்யனும். அப்போ தான் என் கணக்கு சரியா வரும்

ரவி (மனதுக்குள்) : கிழிஞ்சுது போ..மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா

கமல்: பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.

அசிஸ் : புரியலையே

கமல்: அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி உயரத்தைக் குறைச்சு வயசையும் குறைக்கறோம்

ரவி: சூப்பர்

கமல் : மத்த கமல் எல்லாரும் அதே பில்டிங்க்ல வேலை பாக்கறாங்க. இதை வச்சு ஆள்மாறாட்டம், பழி வாங்கல், வில்லன் எல்லாத்தையும் டெவலப் பண்ணுங்க.

அசிஸ்: ஒவ்வொருத்தர் காதலும் அந்த லிப்ட்லயே டெவலப் ஆகுதுன்னு வச்சுக்கலாம் சார்.

ரவி: கமல் சார், அந்த லிப்ட்ல வச்சே நீங்க ஹீரோயின் அத்தனை பேருக்கும் லிப் டு லிப் தர்றீங்க

கமல்: எங்கயோ போயிட்டய்யா...லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு.

ரவி :இந்த ஷாட்டை வச்சே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுடலாம்.கதை போக போக அதுவா எதுனா வரும்

கமல்: இந்த லிப்ட் ஆங்கில வார்த்தையா இருக்கே...நான் வேணும்னா என் நண்பர்கள்ட்ட போன் போட்டு தமிழ் வார்த்தை என்னன்னு கேட்கவா என்றபடி செல்போனை எடுக்க அதைக் கேட்காதவாறு ரவியும் அசிஸ்டெண்டும் எஸ்ஸாகிறார்கள்.

*************************************************

கமல் லிப்ட் மேட்டரை தசாவதாரத்தில் நுழைப்பதைக் கேள்விப்பட்ட சிவாஜி யூனிட் தானும் களமிறங்குகிறது

ஷங்கர்: ரஜினி சார், ஏற்கனவே எடுத்து முடிச்சதுல பாதியை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பேசாம நாமளும் இந்த லிப்ட் மேட்டரை உள்ளே நுழைச்சாதான் சரிபடும்

ரஜினி: ஷங்கர்ஜி, ஏற்கனவே ரொம்ப நாளா படம் எடுத்துட்டு இருக்கோம். ரசிகர்கள் பாவம்ஜி. அதைவிட சரவணன் சார் ரொம்ப பாவம்ஜி

சத்யநாராயணா:இல்லைங்க, இந்த லிப்ட் மேட்டர் ஒர்க்-அவுட் ஆகும்
அப்போது தான் அவர் அங்கு இருப்பதைக் கவனித்த ரஜினி

ரஜினி:ஹேய் சத்தி, காது குத்துக்கு போகனும்னு சொன்னயே..கிளம்பலையா

சரவணன்(தனக்குள் மெதுவாக 'இப்படி கை கட்டி நின்னுட்டு இருந்தா எனக்கும் காது குத்திடுவாங்க' ): ஷங்கர், இந்த லிப்ட் கண்டிப்பா வேணுமா? இதை அடுத்த படத்துக்கு வெச்சுக்கலாமே..எல்லாத்தையும் இந்த படத்துலயே காட்டனுமா

ஷங்கர்: சார், படத்துக்கு ஒரு பிரமாண்டம் வர வேணாமா...கதையை அப்படியே இந்த லிப்ட் மேட்டரை மையமா வச்சு நகர்த்தறோம்

அவ்வளவு நேரம் வாசலில் இருந்து ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த வைரமுத்து

'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.
'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.

ரஜினி: வாங்க வைரமுத்துஜி..இப்போ தான் சிவாஜில சில சேஞ்சஸ் பண்ணலாம்னு ஷங்கர்ஜி சொல்லிட்டு இருக்கார்

வைரமுத்து: கேட்டுக்கொண்டு தான் வந்தேன். வரும்போதே ரகுமான் தம்பியின் மெட்டுக்கு லிப்டை எப்படி நுழைக்கலாம் என யோசித்துக்கொண்டுதான் வந்தேன்.

ஷங்கர்: ஹை..நீங்களும் லிப்ட் விளையாட்டுக்கு வந்தாச்சா?

இதைக் கேட்ட சரவணன் 'விளையாட்டா' என அரண்டு போய் சோடா ஆர்டர் செய்கிறார்.

ரஜினி: சீக்கிரம் கதை சொல்லுங்கஜி. அடுத்த மாசத்துக்குள்ள ஷூட்டிங் முடிச்சா ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க போவேன்

ஷங்கர்: அடுத்த மாசத்துக்குள்ள முடிக்கறதா..நீங்க வேற..அடுத்த வாரம் நாம ஆஸ்ட்ரேலியா போறோம். அங்க சிட்னி ஓபரா ஹவுஸ்ல இருக்க லிப்ட்ல பாம் வச்சிடறாங்க. அதை நீங்க போய் எடுக்கறீங்க

ரஜினி: இறைவா

ஷங்கர்: என்ன சார் ஆச்சு

ரஜினி: ஆஸ்திரேலியா, பாம்லாம் வேணாம். வேற சொல்லுங்க

ஷங்கர்: சரி சார்..மெட்ராஸ்லயே கதை வச்சுக்கலாம். ஒரு பில்டிங்குக்கு நீங்க போறீங்க. அங்க லிப்ட்பாயா இருக்க வில்லன் நீங்க போக வேண்டிய பத்தாவது ப்ளோருக்கு கூட்டிட்டு போகாம ஒன்பதாவது ப்ளோர்லயே இறக்கி விட்டுடறாரு. இதுனால உங்க பரம்பரை சொத்து உங்க கை நழுவி போகுது

ரஜினி: எப்படி?

ஷங்கர்: அது இனிமேல் தான் யோசிக்கனும். ஃபுல் ப்ளோல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார். உடனே நீங்க அந்த வில்லன் கிட்ட சண்டை போடறீங்க. கோபமடைஞ்ச வில்லன் 'ஒரு நாள்..ஒரே ஒரு நாள் லிப்ட் பாயா இருந்து பாரு. அப்போ தெரியும் கஷ்டம்'ன்னு சவால் விடறான்.

ரஜினி: இந்த கதையை ஏற்கனவே என்கிட்ட வேற மாதிரி சொல்லி நான் வேணாம்னு சொன்ன மாதிரி இருக்கே.

ஷங்கர்: அது வேற சார். முழுசையும் கேளுங்க. சவாலை ஏத்துக்கற நீங்க ஒரு நாள் லிப்ட் ஆப்பரேட்டர் ஆகறீங்க. உங்க வேலையைப் பார்த்து அந்த பில்டிங் அசோசியேஷன்காரங்க எல்லாம் சேர்ந்து உங்களையே பெர்மனெண்ட் லிப்ட் ஆப்பரேட்டர் ஆக்கிடறாங்க. இதுல டென்ஷனான வில்லன் உங்க லவ்வரைக் கடத்திக்கிட்டு கனடா போயிடறான்.

ரஜினி: சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர் எப்படி கனடா போக முடியும்

ஷங்கர்(மெதுவாக): இன்னும் அந்த ஊர்ல தான் நான் ஷூட்டிங் எடுக்கல. அதனால அங்க தான் போகனும். (சத்தத்தை உயர்த்தி) அவன் ஊருக்கு தான் லிப்ட் ஆப்பரேட்டர். ஆனா அவன் ஒரு சர்வதேச கள்ளக்கடத்தல் தாதா. அவனை நீங்க எதிர்க்கறீங்க. இதைப் பார்த்து தமிழ்நாடே உங்க பின்னால நிக்குது.

வைரமுத்து: 'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' என 'வெற்றிக் கொடி கட்டு ட்யூனில் பாட்டெடுக்க 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு லிப்டப்பா' என சத்தி கண்டினியூ செய்கிறார்.

ஷங்கர்: நீங்க கனடா போகறதுக்குள்ள வில்லன் அங்கயிருந்து சுவீடன் வர்றான். அவனை துரத்திகிட்டே நீங்க ரஷ்யா, மலேசியா, ஜப்பான், உருகுவேன்னு உலகம் பூரா சுத்தரீங்க. கடைசில அவன் பஸ் பாஸ் ரினீயூ பண்ண மெட்ராஸ் வரும்போது அவனை கப்புன்னு புடிச்சடறீங்க.அப்படியே மக்களின் ஆதரவோட தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடறீங்க

ரஜினி(மனதுக்குள்): இதை மட்டும் விட மாட்டேங்கறாங்களே

அப்போது 'திஸ் மேன் இஸ் எ மிராக்கிள். ஹி இஸ் எ வொண்டர்புல் ஆக்டர்' என கரகர குரலுடன் பாரதிராஜாவும் தொப்பியைக் கழட்டி கர்ச்சீப்பால் நெற்றியைத் துடைத்தபடி பாக்யராஜும் வர சரவணன் மயங்கிக்கிடப்பதைக் கூட கவனிக்காமல் அனைவரும் ஜன்ன்ல வழியாக ஓடுகின்றனர்.

************************************************

'தசாவதாரத்துக்கும் சிவாஜிக்கும் தர்மபுரி எந்த அளவுலயும் குறைஞ்சது இல்ல' என்றபடி கூலிங் கிளாஸ், பவுடர் பளபளக்க வரும் இயக்குனர் பேரரசைப் பார்த்து ஜெர்க்காகும் விஜயகாந்த் அருகில் இருக்கும் ராமுவசந்தனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.

ராமு: பேரரசு சார், கட்சி மீட்டிங் ஒன்னு கிளம்பிட்டு இருக்கோம். போய் நாளைக்கு வாங்க
என பேரரசுவைக் கழட்டிவிடப் பார்க்கிறார்.

பேரரசு: நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,

விஜயகாந்த்: என்ன பேரரசு..தர்மபுரி செட்யூல் அடுத்த வாரம் தானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள என்னப்பா?

பேரரசு: சார், லிப்ட் பத்தி நீங்க ஒன்னும் கேள்விப்படலையா?

விஜயகாந்த்: என்ன சார் சொல்றீங்க?

பேரரசு: அவனவன் இந்த லிப்டை வச்சு பல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கான் சார். நானும் விர்ருன்னு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்.

எப்படியும் எஸ்கேப் ஆக முடியாது என கேப்டன் பெருமூச்சு விட பேரரசு தொடர்கிறார்.

பேரரசு: படத்துல நீங்க தர்மபுரில பந்தல் கட்டறவரா வர்றீங்க. தர்மபுரில எந்த கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் நீங்க தான் ராகவேந்திரா பந்தல் ஏஜெண்ட்.

இதைக்கேட்டதும் கலக்கமடையும் கேப்டன்: சார், மீதி கதையை நாளைக்கு கேட்டுக்கறேனே..இப்போ கட்சி கொடி ஏத்தற பங்சன் ஒன்னு இருக்கு

பேரரசு: இருங்க சார் முடிச்சுடறேன். நீங்க பந்தல் காண்ட்ராக்டர். அந்த ஊர்ல ரோடு போட்ட காண்ட்ராக்டர் ஊழல் செஞ்சு ரொம்ப மோசமான் ரோடா போட்டதால நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது

விஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது

பேரரசு: நீங்க அந்த காண்ட்ராக்டரை அடிச்சு உதைச்சு அவரோட முகமூடியைக் கிழிக்கறீங்க. தர்மபுரி புல்லா புதுசா காண்டிராக்ட் விட்டு நல்ல ரோடு போட வழி செய்யறீங்க

ராமு: கேப்டன், அந்த காண்டிராக்டை நம்ம கட்சி ஆளுங்களுக்கு தர்ற மாதிரி பண்ணிடுவோம்

விஜயகாந்த்: யோவ் நீ சும்மா இருய்யா. நீங்க மேல சொல்லுங்க.

பேரரசு: இப்போ தான் மெயின் ஸ்டோரி. நான் அதே ஏரியாவில ஒரு கட்டடத்துல லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன். ஒருநாள் லிப்ட்ல குண்டான ஆசாமிங்க அஞ்சு பேர் ஏறினதால லிப்ட் பாதில நின்னுடுது. நீங்க உடனே லிப்ட் ரோப் வழியா உள்ள இறங்கி அந்த அஞ்சு பேரையும் காப்பாத்தறீங்க

விஜயகாந்த்(பெருமூச்சுடன்): ம்ம்..சொல்லுங்க

பேரரசு: இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து குண்டா இருக்கவங்களுக்கு தனியா லிப்ட் வேணும்னு போராட்டம் பண்றோம். அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரவுது. என் போட்டோவும் அதுக்கு கீழ உங்க போட்டோவும் போட்டு தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஓட்டறாங்க. கடைசில அரசு நம்ம கோரிக்கைக்கு அடிபணிஞ்சு தனித் தனி லிப்ட் வைக்கனும்னு ஆணை இடுது

ராமு: தலைவா, முழிச்சுக்கோங்க. இந்தாளு திருப்பதியை மறுபடியும் உங்களுக்கு உல்டா பண்றான். கொஞ்சம் அசந்தா உங்களையும் செக்ண்ட் ஹீரோ ஆக்கிருவான். உசார்.

விஜயகாந்த்: சார், கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இது வேணாம். உங்க கேரக்டர் இல்லாம தனியாவே கதை சொல்லுங்க. ஏற்கனவே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு

கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்ததும் கவலையடைகிற பேரரசு, படத்தில் நடிக்காவிட்டாலும் டைரக்ஷன் வாய்ப்பை விடக்கூடாது என அடுத்த கதையை யோசிக்கிறார்.

பேரரசு: இதே லிப்ட் மேட்டரை வேற மாதிரி வச்சுக்கலாம் சார். நீங்க தர்மபுரில இருந்து மெட்ராசுக்கு பைக்ல வர்றீங்க. அப்போ ஆம்பூர் பக்கத்துல ஒரு கல்யாண கோஷ்டி வந்த லாரி ப்ரேக்டவுன் ஆகி நிக்குது. அதுக்கு காரணம் கலப்படமான பெட்ரோல். அதைப் பார்த்து பொங்கி எழுந்து, அந்த லாரியை உங்க பைக்ல கயிறு போட்டு கட்டி லிப்ட் கொடுக்கறீங்க. அப்படியே அந்த மக்களோட சென்னை நோக்கி வர்றீங்க. திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லின்னு நீங்க வர்ற வ்ழி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுது

ராமு: அப்படியே நம்ம தொண்டர்களையும் கொடியையும் ஒவ்வொரு ஊர்லயும் காட்டிட்டு வரலாம்

பேரரசு: நீங்க மெட்ராஸ் உள்ள வரதுக்கு போலிஸ் தடை விதிக்குது. பூந்தமல்லி பைபாஸ்ல நீங்க வெயிட் பண்ணும்போது அந்த பெட்ரோல் பங்க் முதலாளி உங்களைக் கொல்ல ஆள் அனுப்பறான். அவங்களை அந்த லாரிலயே லெக்பைட் போட்டு அடிச்சுபோட்டுடறீங்க.

லெக் பைட் என்ற வார்த்தையைக் கேட்டதும் கேப்டன் குஷியாகிறார்.

விஜயகாந்த்: இப்போதான் விறுவிறுப்பா இருக்கு. அப்படியே டாப் கியர்ல போங்க

பேரரசு: நீங்க மக்களுடன் சேர்ந்து போராட்டம் பண்றீங்க. ஹைவேல வண்டி ப்ரேக்டவுன் ஆகி நிக்கற்வங்களுக்கு லிப்ட் தர்றவங்க அவங்க வீட்டுக்கே கொண்டு வந்து விடனும்னு சட்டம் கொண்டு வர்றதுக்கு போராடறீங்க. அரசும் தலை பணிஞ்சு அந்த மாதிரி சட்டம் கொண்டுவருது.

விஜயகாந்த்: கதை சூப்பர் பேரரசு. இவ்வளவு நாளா உங்களைத் தப்பா நினைச்சுட்டேனே

என்று பீலாகும்போது "வருவான் சார். வல்லவன் வருவான் சார். என் கேரியருக்கு ஒரு லிப்ட் சார் வல்லவன். நயந்தாராவுக்கு கொடுத்தது லிப்டான்னு கேட்டா சொல்லத் தெரியல. வாழ்க்கை முழுக்க கூட வருவாங்களா..இப்ப சொல்ல முடியாது. சொல்லி அடிக்கறவன் தான் இந்த சிம்பு" என எக்குதப்பாக பேசிக்கொண்டு சிம்பு எண்ட்ரி கொடுக்க "இவன் நமக்கு மேல பெருந்தொல்லையா இருக்கானே" என மனதுக்குள் எண்ணும் பேரரசு "யப்பா சிம்பு, தேனப்பன் கார் பஞ்சர் ஆகி பஞ்சர் ஓட்ட காசு இல்லாம ஜெமினி பக்கத்துல லிப்ட் கேட்டு ரொம்ப நேரமா வெயில்ல நின்னுட்டிருக்காராம். என்னன்னு பாருப்பா" என்று சொல்லிவிட்டு திரும்ப கேப்டனும் ராமுவசந்தனும் ஏற்கனவே எஸ்ஸாகியிருந்தனர்.



சினிமா! சினிமா!! சினிமா!!!

வடபழனி மாநகரப் பேருந்து பணிமனைக்கும் வசந்த பவனுக்கும் இடையில் செல்லும் குமரன் காலனி சாலையில் துணை நடிகர்கள், சின்னத் திரை நடிகர்கள், துணை நடிகர்கள் ஏஜெண்டுகள் என பலவகையான சினிமாத் தொழிலாளர்களின் சங்கங்கள் இருக்கும். அந்த சாலையிலுள்ள டாஸ்மாக் வாசலிலும் டீக்கடைகளிளும் சண்டைப் பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள் துணை நடிகர்கள் என 'எங்கேயோ பார்த்த' முகங்களை அடிக்கடி பார்க்கலாம்.

***********************************************************

அந்த சாலையில் இருக்கும் டீக்கடையில் ஒரு நாள் கல்லூரி நண்பர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அவர் உறவினர் ஒருவரும் உடனிருந்தார். அவர் நடிக்க வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர். இப்போது நடிக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது எனக் கேட்டதற்கு "இப்போ கூட சசசின் படத்துல நடிச்சிருக்கேன்.படம் பார்த்துட்டீங்களா?" என்றார். படம் பார்த்திருந்தாலும் அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில்லை. "படத்துல விஜயோட அப்பா ரகுவரன் வரும்போது பின்னாடி நின்னு 'இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர்கள்ல ஒருத்தர் இவர்'ன்னு சொல்றது நான் தான். ஞாபகம் இருக்கா" எனக் கேட்டார்.

அப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.

***********************************************************

சமயங்களில் டீக்கடைகளில் திரைக் கலைஞர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு முறை அடிக்கடி திரையில் தோன்றும் ஒரு துணை நடிகரும் அவர் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். வாய்ப்புகள் எப்படியிருக்கிறதென நண்பர் கேட்டதற்கு "இப்போ ரொம்ப நல்லாவே வந்துட்டு இருக்குங்க. இப்போ சூர்யா கூட பஸ் கண்டக்டரா ஒரு படம்..நல்ல ஸ்கோப் இருக்கு..அடுத்த வாரம் யூனிட் பொள்ளாச்சி போகுது. இப்போ கைல ஒரு நாலஞ்சு படம் இருக்கு. இன்னும் நல்லா வரும்" என்றார்.

இன்றும சில படங்களில் அவரைக் காணும்போது அன்றைய உரையாடல் நிழலாடுகிறது. இத்தகைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே இவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

***********************************************************

என் தூரத்து உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சென்னையில் இணை எடிட்டராக இருந்தார். அவரை சந்திக்கும் வேளைகளில் இளம் கதாநாயகர்கள் எப்படி தாங்களே பணம் போட்டு நடிக்கிறார்கள் என்பதில் இருந்து பல சுவாரசியமான விடயங்களைச் சொல்லுவார். இணை எடிட்டர் என்றாலும் அவருக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என எல்லாவற்றிலும் வேலை பார்த்தார்.

குடும்பப் பிரச்சனைகள் காரணமாக சென்ற வருடம் அவர் சினிமாவை விட்டுவிட்டு காஞ்சியில் ஒரு பட்டு கோறா கடையைத் திறந்தார். என் உறவினர் ஒருவருடன் கடைவீதியில் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரை சந்திக்க நேர்ந்தது. "இப்ப ஆரம்பிச்ச கடையை பத்து வருஷம் முன்ன ஆரம்பிச்சிருந்தா எங்கயோ போய் இருப்ப. இப்பவாவது புத்தி வந்துச்சே" என்று கடிந்துகொண்ட என் உறவினருக்கு அவரால் ஒரு வறண்ட புன்னகையே பதிலாகத் தர முடிந்தது.

***********************************************************

சினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும்.