யாருடா நீங்க?!

இந்த ஊர்க்காரங்க எங்களைப் பார்த்து இன்னும் இது ஒன்னு தான் கேட்கல.



சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணி நேரத்துக்கு ராக்கெட், புஸ்வானம்னு மாத்தி மாத்தி விட்டு தீபாவளி கொண்டாட்டத்துல மாண்டிவிடியோவை கலக்கிப்புட்டோம்ல. இங்க கூட வேலை பார்க்கறவனுங்க தயவுல வெடி விக்கற இடம் தெரிஞ்சு மொத்தமா வாங்கியாச்சு. சனிக்கிழமை பீச் ஓரமா எல்லாரும் ஒன்னுகூடி எல்லாத்தையும் கொளுத்தி கரியாக்கிட்டு வந்தாச்சு. போலிஸ்,ஃப்யர் என்ஜின்னு எவனாவது கூப்பிட்டுட போறாங்கன்னு பயந்துகிட்டே வெடிக்க ஆரம்பிச்சோம்...எவனும் கூப்பிடல..எல்லாம் நல்லவனுங்களா இருக்கானுங்க.



நம்ம ஊர்லயே ராத்திரி 10 மணிக்கு மேல வெடிக்கக்கூடாதே, இங்க வெடிக்கலாமான்னு யோசிக்கவே தேவையில்ல..ஏன்னா இந்த ஊர்ல இருக்க புண்ணியவானுங்க சனிக்கிழமையானா தூங்கவே மாட்டானுங்க...

அப்புறம் இரண்டு வாரத்துக்கு முன்ன உருகுவே கல்ச்சுரல் கவுண்டின்னு ஒரு அமைப்பு இசை நிகழ்ச்சி ஒன்னு நடத்தினாங்க. செல்டிக் நடனம், பேக் பைப்பர்ன்னு வாசிச்சு கலக்கிட்டாங்க. அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அதுவும் எங்க நாலு பேருக்காக ஸ்பானிஷ் மட்டுமில்லாம ஆங்கிலத்துல தனி அறிவிப்பெல்லாம் செஞ்சாங்க.



இந்த குழுவில இருக்க நாலு பேரும் ஒரே குடும்பத்தினராம். கடைசியா எல்லாரும் சேர்ந்து ட்ரம்ஸ் வாசிச்சாங்க. ரொம்ப அருமையா இருந்துச்சு.



இந்த வெள்ளைக்கார அம்மா இங்கிலாந்துகாரங்களாம். ஒரே பீட்டர் பாட்டு. ஒரு வார்த்தையும் புரியல. ஆனா இனிமையான குரல். உச்சஸ்தாயில சூப்பரா பாடினாங்க

.

இந்த குழு தான் இங்க ரொம்ப புகழ்பெற்ற குழுவாம். 16 பேர் பேக்பைப்பர், வயலின், செல்டிக் நடனம்ன்னு கலக்கிட்டாங்க.

அடுத்து இங்க இருக்க ப்ரிட்டிஷ் காலேஜ்காரங்க கிரிக்கெட் மேட்ச் விளையாட கூப்பிட்டிருக்காங்க. அங்கயும் போய் நம்ம கொடியை நாட்டிட வேண்டியது தான்.



இரு பயணங்கள்

பயணம் தரும் அனுபவங்களும் அதன் தாக்கமும் என்றும் ஆச்சரியமூட்டுபவை. புது ஊர்களும் மனிதர்களும் அவர்கள் குறித்த நினைவுகளும் எளிதில் மறக்க முடிவதில்லை. எந்த பயணமும் திட்டமிட்டபடி நிறைவேறியதுமில்லை. பயணங்கள் நம் வாழ்க்கையையே தடம் மாற்றிப் போடும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன. கதாபாத்திரங்களின் பயணங்களின் வழியே பல அருமையான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வாரம் இரண்டு ஸ்பானிஷ் திரைப்படங்களைப் பார்த்தேன். இரண்டு படங்களுமே கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டவையே. இரண்டு படங்களும் லத்தீன் அமெரிக்காவின் இருவேறு முகங்கள். இந்த இரு திரைப்படங்களைக் குறித்தும் அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவாக எழுத முடியுமா என்ற சந்தேகத்துடனேயே இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Y tu mamá también ( And your mother too )

ஹூலியோ, டெனோக் என்ற இரு மெக்ஸிக இளைஞர்கள் லூயிசா என்ற நடுத்தர வயது பெண்ணுடன் 'சொர்க்க வாசல்' என்ற கடற்கரைக்கு பயணிக்கிறார்கள். பயணத்தினூடே அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களும் கற்றுக்கொள்ளும் பாடங்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நகைச்சுவை படம் என்றோ, உடலுறவு காட்சிகள் விரவிக் கிடக்கும் செக்ஸ் படம் என்றோ, மணமுறிந்த ஒரு பெண்ணைப் பற்றிய மென்சோகக் கதை என்றோ, மெக்ஸிகோவின் சமூக, வாழ்க்கை முறையைக் காட்டும் படம் என்றோ வகைப்படுத்த முடியாது. இப்படம் இவையெல்லாம் கலந்த கலவையே.

டெனோக் ஒரு பணக்கார இளைஞன். அவன் தந்தை அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ள செல்வந்தர். ஹூலியோ நடுத்தர வர்க்க இளைஞன். டெனோக்கின் உறவினர் மனைவி லூசியா. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறியும் லூயிசா அவனிடமிருந்து பிரிகிறாள். அவளிடம் ஈர்க்கப்படும் இரு நண்பர்களூம் 'சொர்க்க வாசல்' என்ற கடற்கரைக்கு அழைத்து செல்வதாகச் சொல்லி நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றனர்.

பயணம் நெடுகிலும் கதாபாத்திரங்களின் செய்கைகள் சரி/தவறு என்று எந்த முன்முடிவுகளும் இன்றி அதன் போக்கில் படமாக்கப் பட்டுள்ளன. சில உரையாடல்களும் காட்சி அமைப்புகளும் அதிர்ச்சியூட்டுகின்றன. படம் நெடுகிலுமே வசனங்களில் மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. சாலை நெடுகே மெக்ஸிகோவின் கிராமங்களும் காவல் கட்டுப்பாடுகளும் மக்களின் வாழ்வுமுறையும் காட்டப்படுகிறது.செக்ஸ் மட்டுமே வாழ்க்கையென இருக்கும் இரண்டு இளைஞர்கள் பயணத்தின் முடிவில் முதிர்ச்சியடைவது அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உறவுகள் கேள்விக்குறியதாகின்றன. எதிர்பாராத முடிவு படத்தை மெதுவாக மனதில் அசைபோடவைக்கிறது.

படத்தில் சில காட்சிகளினூடே பின்னணியில் கிளைக்கதைகள் சொல்லப்படுகின்றன. நடைபாதையை உபயோகிக்காத பாதசாரி, ஹூலியோவின் கம்யூனிஸ்ட் சகோதரி, மெக்ஸிக ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகும் லாரி, கடற்கரையில் உதவ வரும் மீனவன், கடற்கரை பன்றிகள் என பின்னனியில் சொல்லப்படும் கதைகள் மனதில் நிற்கின்றன.

கதாபாத்திரங்களின் நுன்னிய உணர்வுகளையும் முகபாவங்களையும் தவறவிடாமல் மெதுவாக நகரும் காட்சிகள்,மெல்லிய பின்னணி இசை, அழகான காட்சியமைப்புகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. இந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கவர்கிறார்கள். அருமையான வெளிப்பாடு.

இந்த திரைப்படம் ஒரு கலாச்சார அதிர்வை அளிக்கலாம். ஆனால் மனித உணர்வுகளை அருமையாக படம் பிடித்த திரைப்படம்.


இரண்டாவது திரைப்படம் இலத்தின் அமெரிக்க வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு புரட்சிப் பயணம்.

Diarios de motocicleta (The Motorcycle Diaries)

எர்னெஸ்ட் குவேரா தன் நண்பர் அல்பெர்டோ க்ரேனெடோவுடன் 1950களில் மேற்கொண்ட இலத்தீன் அமெரிக்கப் பயணம் குறித்த திரைப்படம். சே குவேரா உலகை மாற்றியதற்கு முன் உலகம் அவரை மாற்றிய கதை. எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் இரு நண்பர்களின் பயணத்தை அருமையாக காட்டியிருக்கிறார்கள். பயணம் நெடுக சந்திக்கும் மக்களும் அவர்களது வறுமையும் இரு இளைஞர்களிடம் ஏற்படுத்தும் மன மாற்றங்கள் அருமையாக படம்பிடிக்கப் பட்டுள்ளது.

இருபத்தி மூன்று வயது இளைஞன் எர்னெஸ்டோ தன் நண்பன் அல்பெர்டோவுடன் தென் அமெரிக்க பயணத்திற்குக் கிளம்புகிறான். அர்ஜெண்டினா, சிலெ, பெரு, கொலம்பியா வழியாக வெனிசுலாவில் பயணம் முடிகிறது. வழி நெடுக பயணத்தில பல இன்னல்களையும் முதலாளித்துவத்தால் மக்கள் படும் துன்பத்தையும், வறுமையையும் தொழுநோயாளிகளின் நிலையையும் கண் கூடாகக் காணும் நண்பர்கள் எப்படி மாறினார்கள் என்பதே இப்படம்.

பயணத்தின் ஆரம்பத்தில் அவர்கள் கிளம்பும்போதும் அவர்களின் ஆரம்பகட்ட பயணமும் பழைய மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் படும் பாடும் நகைச்சுவையுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அல்பெர்டோ தன் முகபாவங்கள் மற்றும் செய்கைகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.

தென் அமெரிக்க நிலவெளிகளின் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நம்மையும் அந்த நிலவெளிகளில் பயணிக்க வைக்கிறார்கள். வழியில் சந்திக்கும் சுரங்கப் பணியாளர்கள் எர்னெஸ்டோவின் மனதில் முதல் விதையாக விழுகிறார்கள். அதன் பின்னர் சிலேயிலும் பெருவிலும் பூர்வீக மக்களை சந்திக்கும் நண்பர்களின் மனம் மாற்றமடைகிறது. தொழுநோய் மருத்துவமனையில் இளைஞர்கள் இருவரும் தங்கி சேவை செய்வதும், எர்னெஸ்டோ நோயாளிகள் மீது காட்டும் அன்பும் பரிவும் நம்மைக் கலங்க வைக்கிறது.

தொழுநோயாளிகளுடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக நள்ளிரவில் அமேசான் நதியை எர்னெஸ்டோ நீந்திக் கடப்பதைக் காணும்போது உண்மையிலேயே சே குவேரா இப்படி செய்தாரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பயணத்தின் முடிவில் அல்பெர்டோ வெனிசுலாவில் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துவிட எர்னெஸ்டோ தனியாக அர்ஜெண்டினா திரும்புகிறான். பின்னணியில் சே குவேராவின் வரலாறு சொல்லப்படுகிறது.

இரண்டு நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சே குவேராவாக நடித்த கெய்ல் கார்சியா பெர்னால் சிறப்பாக கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. பயணத்தினூடே இரு நண்பர்கள் தங்களின் சுயமறிதல் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

சில படங்கள் பொழுதுபோக்குவதற்கு. சில படங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு. இது இரண்டாவது வகை.


இந்த இரண்டு படங்களைப் பார்த்ததும் மனதிலுள்ள சில கேள்விகளுக்கு விடை கிட்டினாலும் மேலும் பல கேள்விகளை எழுப்பிச் சென்றன, சில பயணங்களைப் போலவே.



நரகாசுரன்

கிருஷ்ணகுமார் தன் பெயரை மாற்றுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் மாற்ற விரும்பும் காரணம் நியூமராலஜியோ, ஜோதிடமோ இல்லை. அவன் அப்பா ராஜேந்திரன் தான். படித்து முடித்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கும் அவனை சதா சர்வகாலமும் அவனை திட்டிக் கொண்டிருந்த அப்பாவின் மீது அவனுக்கு வெறுப்பு வந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான். காலை எழுந்ததில் இரவு வரை இவனை பார்க்கும்போதெல்லாம் திட்டாவிட்டால் அவன் அப்பாவிற்கும் உறக்கம் வராது. இவனும் அவரை எப்படியெல்லாம் கோபம் கொள்ள வைக்கமுடியுமோ அப்படியெல்லாம் செய்துவந்தான். அதில் ஒன்று தான் பெயர் மாற்றும் படலம்.

பெயரை மாற்றுவது என்று முடிவு செய்ததும் கிருஷ்ணகுமார் என்று பெயர் வைத்துக்கொண்டு தான் பட்ட பாட்டையெல்லாம் நினைவில் கொண்டுவந்தான். வீட்டில் குமார் என்று கூப்பிட்டாலும் தெருவில் மற்ற சிறுவர்களும் பள்ளியிலும் அவன் கீயான். இந்த பெயரை அவனுக்கு வைத்தது அவனது நிரந்தர எதிரி முத்து. பள்ளிக் காலத்தில் இருந்தே முத்து இவனுக்கு நேரெதிர் தான். ஐந்தாம் வகுப்பில் ஒரு சண்டையின் போது இவன் கையை உடைத்தது, இவனைப் பற்றி வீட்டில் போட்டுக் கொடுப்பது, முதல் ரேங்க் வாங்குவது, இதோ இப்போது படித்து முடித்த உடனே நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிப்பது என எப்போதுமே முத்து கிருஷ்ணகுமாருக்கு எதிரியாகவே இருந்தான். இந்த பெயரை மாற்றினால் கீயான் என்ற பட்டப்பெயரும் தன்னைவிட்டு போகும் என்பதில் கிருஷ்ணகுமாருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

கல்லூரியில் இவன் எல்லாருக்கும் கிறுக்குகுமார் தான். தெரியாத்தனமாக இவன் தன் பெயரை ஸ்டைலாக எழுதுவதாக நினைத்து Krk Kumar என்று எங்கோ எழுதிவைக்க அதை ஒருவன் கிறுக்குகுமார் என்று படித்துவைக்க, அன்றிலிருந்து இன்று வரை கல்லூரி நண்பர்களுக்கு கிறுக்குகுமார் தான்.

பெயரை முறைப்படி மாற்றுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் விசாரித்து தெரிந்துகொண்டான். ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அஃபிதாவித் வாங்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அதற்கு முன் ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அந்த விளம்பரத்தின் பிரதியையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டுமாம். இதற்கு ஒரு வக்கீலைப் பிடித்தால் வேலை எளிதாகிவிடும். எப்படியும் குறைந்தது ஐயாயிரம் ரூபாய் செலவாகும் எனக் கணக்கு போட்டு தன் தந்தையிடமிருந்து எப்படி அவ்வளவு பணத்தை அடிப்பது என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.

பெயரை மாற்றுவதாக முடிவெடுத்த பின்னும் அவனுக்கு சரியான பெயர் சிக்கவில்லை. முக்கியமாக அவன் தந்தையை எரிச்சலூட்டும் வகையில் பெயர் சிக்கவில்லை. நண்பர்களிடம் கேட்கலாம் என்றால் குழந்தை பெற்று அதற்கு பெயர் வைக்கும் வயதில் எதற்கு பெயர் மாற்றுகிறான் என அவனைத் திட்டுவார்கள்.

பெயர்களைப் பட்டியல் போட்டால் எளிதாக தேர்ந்தெடுக்கலாம் என பட்டியல் போட ஆரம்பித்தான். முதலில் கிருஷ்ணகுமார் என்ற பெயருக்கு எதிர்மறையான பெயராக வைக்கவேண்டும். கிருஷ்ணனுக்கு எதிரிகள் என்று இதிகாசங்கள் கூறும் கம்சன், நரகாசுரன், துரியோதனன் போன்ற பெயர்களில் ஏதாவது ஒன்று வைத்துக்கொள்ளலாம என யோசித்தபோது நரகாசுரன் அவனை மிகவும் கவர்ந்துவிட்டது. ராஜேந்திரன் என்ற தன் தந்தையின் பெயருக்கு நரகாசுரன் சரியாக இருக்கும் என முடிவு செய்துகொண்டான். இந்த இந்திரனை நரகாசுரனை வைத்து அடக்கப் போவதாக சபதம் செய்துகொண்டான்.

இந்த பெயரை வைத்தால் என்ன பின்விளைவுகள் வரும் என்றும் யோசிக்கத் தொடங்கினான். இத்தனை நாட்களாக கிறுக்கு என்று கூப்பிட்டவர்கள் நரகாசுரனை நருக்கு என்று கூப்பிட்டால் கோபமாக நறுக்கென பதில் சொல்லி அவர்கள் மூக்கறுக்க வேண்டுமென முடிவுசெய்தான்.

பெயர் மாற்ற குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாயாவது தேவைப்படும். இதற்கும் ராஜேந்திரன் மடியில் தான் கை வைக்கவேண்டும். என்ன காரணம் சொல்லி வாங்குவது என குழம்பினான். பேசாமல் பெயர் மாற்றப்போகும் விஷயத்தை சொல்லிவிட வேண்டியது தான். ஆனால் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நண்பன் எவனிடமாவது கடன் வாங்கலாம் என்றால் ஐயாயிரம் ரூபாய் என்றாலே அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது என கை விரித்துவிடுவார்கள்.

அன்று அவன் தாத்தாவின் திதி. தாத்தாவின் படத்திற்கு படையல் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர். அவரின் தாத்தாவைப் பற்றிய பேச்சு வந்தது. தொன்னூறு வயது வரை திடகாத்திரமாக வாழ்ந்தவர். ராஜேந்திரனுக்கு அவர் தந்தை மீது பெரிதாக பாசம் கிடையாது. அவர் இறந்தபோது கூட பெரிதாக வருத்தம் கொள்ளவில்லை. அவர் அம்மா இறந்தபோது இவர் கதறியதைக் கண்டவர்கள் அப்போது பெரிதாக ஆச்சரியம் அடைந்தனர்.

"என் அப்பா மேல எனக்கு பெருசா பாசமெல்லாம் இருந்ததில்லை. சின்ன வயசுல இருந்தே என்னை அடிச்சுத்தான் வளர்த்தார். இந்த வேலையில்யும் நானாத்தான் சேர்ந்து கஷ்டப்பட்டு இந்தளவு வந்திருக்கேன். டிபார்ட்மெண்ட் எக்ஸாம்லாம் எழுதி ப்ரோமஷன் வாங்கி கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். அவர்கிட்ட இருந்து ஒரு காசு வாங்கல. படிச்சு முடிச்சு வேலை தேடிட்டு இருந்தப்ப கூட அவர் பெருசா சப்போர்ட் பண்ணல. எப்பவும் திட்டு தான். சமயத்துல அவர் மேல பயங்கர வெறுப்பு வரும். என்னடா வாழ்க்கைன்னு இருக்கும். ஆனா நானும் அவரை எப்படியெல்லாம் வெறுப்பேத்த முடியுமோ அப்படியெல்லாம் நடந்துப்பேன். அவரைக் கோப்பட வைக்கிற விஷயமா தேடித் தேடி செய்வேன். அவர் என்னை ராஜேந்திரான்னு கூப்பிடும்போதெல்லாம் ஒரு ரெள்த்திரம் வரும். சில சமயம் அவர் வச்ச பேரையே மாத்தி வச்சுக்க்லாமான்னு யோசிச்சிருக்கேன். இந்திரன்ன்னு பேரு வச்சவரை கடுப்பாக்க இரண்யகசிபு,இர ாவணன், நரகாசுரன் இது மாதிரி அசுரன் பேரா வச்சுக்கலாம்னு.ஒரு நாள் நரகாசுரன்னு பேரை மாத்த முடிவு செஞ்சு விண்ணப்பம் எல்லாம் எழுதிட்டேன். வக்கீலை பார்க்க போகலாம்னு இருந்த அன்னைக்கு இந்த வேலைக்கான இண்டர்வியூ வந்தது. அப்படியே விட்டாச்சு. இப்ப நினைச்சு பார்த்தா சிரிப்பாத்தான் இருக்கு. நான் எங்கப்பா மாதிரி இல்ல. உன்னை ஆசையாத்தான் வளர்த்தேன். என்ன இப்ப படிச்சு முடிச்சு வேலை இல்லாம இருக்கறதைப் பாக்கறப்போ பெத்த மனசுல வருத்தம்.அது கோவமா வருது. உன் மேல நம்பிக்கை இருக்குப்பா. காலம் கடந்துபோகறதுக்கு முன்னாடி ஒரு வேளையை வாங்கி செட்டில் ஆகப் பாரு. நீ எங்களுக்கு சம்பாதிச்சு போடனும்னு நாங்க எதிர்பார்க்கல. உன் எதிர்காலத்துக்குத்தான் எல்லாம்". மூச்சுவிடாமல் பேசிய ராஜேந்திரன் கைகழுவிவிட்டு அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.

பெயர் மாற்றும் படலத்தை கைவிட்ட கிருஷ்ணகுமார் அடுத்த கம்பெனியின் பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தான்.