'ஓடு'காலி

சென்ற ஆண்டு ஆரம்பத்திலிருந்து தான் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு 3-4 கி.மீ ஓட ஆரம்பித்திருந்தேன். அதுவும் முறையாக கிடையாது.  ஒரு வாரம் ஒழுங்காக ஓடியிருந்தால் அடுத்த இரண்டு வாரங்கள் அம்பேல். எல்லோரும் சந்திக்கும் சவால்கள்தான்:

"நைட்டு லேட்டாத்தானே தூங்கினோம், நாளைக்கு ஓடலாம்"

 "நேத்தே எக்ஸ்ட்ரா பத்து நிமிஷம் ஓடியாச்சு. நாளைக்கும் சேர்த்து ஓடிக்கலாம். இன்னிக்கு லீவு உட்றலாம்"

"நைட்ஷோ படத்துக்கு போவனுமே"

 "இன்னிக்கு ஆபிசுக்கு சீக்கிரம் போகனுமே"

 "லைட்டா ஜூரம் வர்றா மாதிரியிருக்குல்ல, ஜலதோஷமோ?"

 "லைட்டா கணுக்கால் வலிக்குதே"

"இன்னைக்கு அன்னையர் தினம்ல?!"


படுக்கையிலிருந்து எழுந்திருப்பதே சவால். Obviously. ஆனாலும் போனில் Runkeeper  நிறுவிக்கொண்டு நானும் ரன்னர் என்று பெருமை பீத்தலை மட்டும் அப்போதே ஆரம்பித்துவிட்டேன்.

வேலை பார்க்கும் நிறுவனம் சென்ற செப்டம்பரில் நடத்திய Charity Run தான் நான் கலந்துகொண்ட முதல் ஓட்டம். தூரம் அதிகமில்லை. 5 கி.மீ தான். அது ஓடிய சூட்டோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு நண்பர்களையும் (டெனிஸ், பகவதி) கூட்டணி சேர்த்துக்கொண்டு Wipro Chennai Marathon-ல் 10K-விற்கு பதிவு செய்தாகிவிட்டது. அவ்வப்போது எட்டிப்பார்க்கும் டிவிட்டரிலும் #twitrunners (அண்ணன் @yathirigan, @jmr_chn முதலியோர்) தூண்டுதலாக இருந்தனர்.

ஆரம்பத்தில் கிலோமீட்டருக்கு 6'30" தான் என்னுடைய வேகம். டெனிஸும் பகவதியும் இன்னும் தொப்பை வளர்க்காத, 25 தாண்டாத இளஞ்சிங்கங்கள். அதிலும் டெனிஸ் பள்ளிக்காலத்திலிருந்தே short distance runner. அவர்கள் இருவரும் 55  நிமிடம் என டார்கெட் வைக்க நான் 65-ல் இருந்தேன். ஒழுங்காக பயிற்சி எடுக்க திட்டமிட்டதோடு சரி. 2 வாரம் ஒழுங்காக ஓடி பயிற்சி செய்திருப்பேன். திரும்பவும் 'பழைய குருடி கதவைத் திறடி'. அப்படியும் சென்னை மாரத்தானில் 10 கிலோமீட்டரை 63 நிமிடத்தில் முடித்தேன். மக்களோடு ஓடும்போது ஒரு வேகம் வந்துவிடுகிறது. ஓட்டத்தின் இரண்டாம் பாதியில் நாக்கு தொங்கினாலும் ஓரளவு சமாளித்துவிட்டேன்.

அந்த தைரியத்தில் பாண்டிச்சேரி ஆரோவில் மாரத்தான் 10K-விற்கும் பயிற்சியில்லாமல் ஓடிவிடலாம் என நினைத்தது முட்டாள்தனம். சென்னை மாரத்தான் ஐஐடி வளாகத்தில் சமமான சாலையில். ஆரோவில்லில் கடினமான பாதை. அதிலும் ஓட்டத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் தவறான பாதையில் ஓடிவிட்டோம். பயிற்சியில்லாதது மட்டுமில்லாமல் ஆரம்பத்திலேயே அதிக வேகத்தில் ஓடியதால் பாதியிலேயே பெட்ரோல் தீர்ந்துவிட்டது. கால் தசை வலிக்க ஆரம்பித்தது. கடைசி நான்கு கிலோமீட்டர்கள் கிட்டத்தட்ட Run/Walk தான். 64 நிமிடங்களில் முடித்திருந்தேன். முடிந்தவுடன் கொடுத்த பொங்கல் வடையில் வலியெல்லாம் பறந்தது.

'பாடின வாயும் ஓடின காலும் நிக்காது' என்பதால் அடுத்தது "குவாட்டரைத் தூக்கறோம், ஹாஃப்பைத் தாக்கறோம்" என்று முடிவெடுத்து ஜூலை Dream Runners Half Marathon-க்கு பதிந்து வைத்தேன். ஆரோவில்லில் வாங்கிய அடி நன்றாக நினைவில் இருந்ததால் சரியான பயிற்சி எடுக்கும் முடிவில் இருந்தேன். இணையத்தில் Running Tips என்று எங்கெல்லாம் எழுதியிருக்கிறதோ அங்கெல்லாம் படித்தேன். படித்தேன், அஷ்டே.

மே மாதம் டெனிஸ் எங்கள் வீட்டருகே குடிவந்தான். மூன்று பேரும் சேர்ந்து Runkeeper.com-லிருந்த ஒரு Beginner Plan-ஐத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். 5 கிலோமீட்டரில் ஆரம்பித்து வாரநாட்களில் 8 கிலோமீட்டர் வரையிலும் வாரயிறுதியில் நீண்டதூர ஓட்டமாகவும் இருந்தது. ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஓடவேண்டிய தூரம் அதிகரித்தது.  ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. மூவரும் இரண்டு வாரங்களுக்கு விடாமல் ஓடினோம். பின்னர் பகவதி பெங்களூருக்கு மாற்றலாகி சென்றான். டெனிஸுக்கு வேலைப்பளு அதிகமானாதால் பயிற்சிக்கு வருவதை நிறுத்தினான். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத துரைசிங்கமாய் தனியாளாய் பயிற்சியைத் தொடர்ந்தேன். மே மாதம் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களாவது ஓடியிருப்பேன்.

கத்தரி வெயில் கழிந்ததும், கவர்னர் ரோசய்யா அளவுக்கு இல்லையென்றாலும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது கல்யாணம் காதுகுத்துகளுக்கு  சென்று விழாவை சிறப்பிக்க வேண்டியிருந்தது. ஜூனில் Runkeeper Training Plan-ல் 50% கூட ஓடியிருக்கமாட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 17 கிமீ. ஓடினேன். இரண்டு மணி நேரம் எடுத்தது. இரண்டரை மணி நேரத்தில் அரை மாரத்தான் முடித்துவிடலாம் என நம்பிக்கை வந்தது.

Race Day. லேசான தூறலுடன் அட்டகாசமான வானிலை. "என்ன..காத்துதான் வரல!". பெசன்ட் நகரில் ஆரம்பித்து மெரினா வரை சென்று திரும்ப வேண்டும். முதல் மூன்று கிலோமீட்டருக்கு நானும் பகவதியும் ஒன்றாக ஓடினோம். அதற்குள் அவனுக்கு தண்ணீர் தாகமெடுக்க வேகத்தைக் குறைத்துக்கொண்டான். நான் ஒரே சீரான வேகத்தில் ஓடி முதல் Aid Station-ஐ அடைந்தேன். அயர்ச்சியோ தாகமோ இல்லையென்பதால் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கி கையில் வைத்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன். பட்டினப்பாக்கத்தில் ஒரு டிராபிக் போலீஸ் "Good try! Good Try!" என கைதட்டி உத்வேகம் தந்தார். புகைப்படக்காரர்கள் எல்லோருக்கும் போஸ் கொடுத்துக்கொண்டே ஓடினேன். நான்கைந்து போட்டோ தேறியிருக்கிறது :D.

சாந்தோமை தாண்டும்போது முதலிடத்தில் ஓடியவர் யு-டர்ன் அடித்து ரிடர்ன் வந்துகொண்டிருந்தார். பின்னால் ஒரு 300 மீட்டரில் இரண்டாவது வீரர். எதிரில் ஓடி வருபவர்களுக்கு தம்ஸ்-அப் காட்டிக்கொண்டே நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன். பயிற்சியின்போது டயர்டாகும்போதெல்லாம் 1 முதல் 20 வரை தொடர்ந்து 20 முறை எண்ணி முடிக்கும்வரை விடாமல் ஓடவேண்டுமென ஓடுவேன். அதேபோல் எண்ணிக்கையை ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் முன்னால் ஓடும் சிலர் நடக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் எனக்கும் நடக்க தோன்றியபடியிருந்தது. ஆனாலும் ஐ.ஜி அலுவலகம் தாண்டும்வரை நிற்கக் கூடாதென சிறிது வேகத்தைக் குறைத்து ஓடினேன். ஐ.ஜி அலுவலகம் தாண்டியதும் 100 மீட்டர் நடந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். எதிரில் டெனிஸ் வந்துகொண்டிருந்தான். 12 கி.மீட்டரில் (73 நிமிடத்தில்) யு-டர்ன் அடித்து திரும்ப வரும்போது காந்தி சிலையருகே யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். எங்கேயோ கேட்ட குரல்! கல்லூரி நண்பன் விநாயக். 'மாப்ள!..வா! வா! சீக்கிரம் வா!' என கத்திக்கொண்டே ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சிறிது தூரத்தில் யாத்ரீகன் தம்பதி சமேதராய்.

16 கி.மீட்டர் தாண்டியதும் 'இன்னும் ஐந்தே கிலோமீட்டர், நாம் தினம் ஓடும் தூரம்தான்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் கால் நகரவில்லை. லீலா பேலஸ் ஓட்டலைத் தாண்டியதும் சிறிது தூரம் நடந்தேன். அடையாறு பாலம் வரை நிற்காமல் ஓடவேண்டும் என மீண்டும் ஓட ஆரம்பித்தவன் ஒரு அரை கிலோமீட்டரிலேயே அடுத்த Aid Station கண்ணில் தென்பட்டதும் ஓடுவதை நிறுத்திவிட்டேன். "இதுக்கு மேல் ஓடாமல் நடந்தே முடிச்சா எவ்ளோ நேரமாகும்?" என சிந்தனை வேறு. "மவனே இவ்ளோ தூரம் ஓடிட்டோம்..ஓடி முடிக்கறோம்..நெஞ்சேஏஏஏ எழுஊஊஊ"ன்னு எனக்கு நானே மோட்டிவேஷன் பாட்டெல்லாம் பாடி ஓடிக்கொண்டிருந்தேன். மீண்டும் நிற்கலாமா என யோசித்தவனை ஒவர்டேக் செய்த ஒரு தாத்தா அடையாறு பாலம் தாண்டி கொண்டு வந்து சேர்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தார். இன்னும் 2 கிலோமீட்டர்கள். "கடைசி 500 மீட்டர் நல்லா வேகமா ஓடறோம். அதனால இப்ப கொஞ்சம் நடந்துக்கலாம்" என்று ஒரு 100 மீட்டர் நடந்தேன். மீண்டும் ஓட ஆரம்பித்து கடைசி Aid Station-ஐக் கடந்தேன். ஓடுபவர்களின் முகங்களில் தண்ணீர் பீய்ச்சியடித்து உதவிக்கொண்டிருந்தவர் என் மேல் தண்ணீர் பீய்ச்சயபடியே ஐந்தாறு அடி உடன் ஓடிவந்தார். ஒவ்வொரு Aid Station-லும் சிறுவர்களும் பெரியவர்களுமாய் பெரிதும் உதவினர். Hats off! Hats off to the organizers!!

கடைசி கிலோமீட்டர் வேகமாக ஓடவேண்டும் என்ற எண்ணம் பலிக்கவில்லை. கணுக்காலில் லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதனால் மிக மெதுவாகவே ஓடினேன். கடைசி 150 மீட்டர் கிரவுண்டுக்குள் நுழைந்ததும் வேகத்தைக் கூட்டி எல்லைக் கோட்டை 02:24:46-ல் கடந்தேன். "சாதிச்சிட்டோம்டா தம்பி!!"!


"ஆகஸ்ட்ல ஐதராபாத்ல ஓடறேன். அக்டோபர் கோயமுத்தூர்ல கூப்டுருக்காங்க! டிசம்பர்ல சென்னைல மாரத்தான்! அடுத்த பிப்ரவரி எங்க இருப்பேன்ன்னு எனக்கே தெரியாது! ஐயாம் வெர்ர்ரி பிஸி"



4 பின்னூட்டங்கள்:

சொன்னது...

எல்லாம் சரியா பண்ணி இருக்க கப்பி.... உன்னை என்கரேஜ் பண்ண ப்ரியா ஆனந்த் ம், பயிற்சி கொடுக்க நந்திதா வும் இல்லாதது மட்டும் தான்ய்யா குறை.... ஆளை பிடிக்குறோம், தூக்குறோம், ஆள்றோம்... சாரி... ஆள்ற... ;)

சொன்னது...

புலி, ஓடுறவனைப் புடிச்சு உள்ள போடறதுக்குன்னே ஐடியா கொடுக்கறது!! :))

சொன்னது...

பதிவு முழுக்க "மாரத்தான் மாரத்தான்" -ன்னு பாத்தேன்
ஆனா, இந்த மாரத்தான் யார் அத்தான்? -ன்னு தான் தெரியல:)
---

//ஒரு டிராபிக் போலீஸ் "Good try! Good Try!" என கைதட்டி உத்வேகம் தந்தார்//

நீ Over Speedல்ல போகலை -ன்னு சந்தோசப்பட்டு, emotional ஆயிட்டாரு; விடுவியா...

சொன்னது...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News