"ஒரு புளியமரத்தின் கதை"யிலிருந்து

"...என்னுடைய பங்கு செலுத்தப்படுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாதவாறு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதானது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருந்த சமயம் அது. இதன் விளைவுதானோ என்னவோ, நண்பர்களுடன் நானும் தாமு சம்பவத்தின் விளைவுகளிலும், அது சம்பவமான செய்திகளிலும் மிகுந்த அக்கறை செலுத்தலானேன். மாலை வேளைகளில் பஜார் ஓரங்களில் நின்று கூடிக்கூடிப் பேசும் குழுக்களில் நானும் வேண்டாத விருந்தாளியாக ஒண்டிக்கொண்டேன். என் மீது அங்கு கவிந்த பெரியவர்களின் அலட்சியப் பார்வையை அப்பொழுது அவ்வளவாக எனக்கு பொருட்படுத்தத் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களுக்கு எட்டாத செய்திகளைச் சேகரித்து அவர்களுக்கு அவற்றை முதலில் அறிவிப்பவனாய் இருக்கவேண்டுமென்றே அப்பொழுது ஆசைப்பட்டேன். இது போன்ற விவகாரங்களைப் பேசும்போது பெரியவர்களுக்கு ஏற்படும் முகபாவங்களைக் கூர்ந்து கவனித்து நானும் முடிந்த வரையிலும் அம்முகபாவங்களை என் முகத்திலும் மிளிர விட்டுக் கொண்டேன். அவர்களுடைய வார்த்தைச் சேர்க்கைகளையும் அபிப்ராயங்களையும் என்னுடைய சரக்குப் போலவே எங்கும் பிரஸ்தாபித்துக் கொண்டு சென்றேன். ஒரு பொறுப்புள்ள மனிதனாகவும், சீரழியும் நிலைமைகளுக்குக் கவலைப்படுபவனாகவும் காட்டிக்கொள்ள வேண்டியது எனக்கு அந்த வயசில் ஏதோ ஒருவிதத்தில் தேவையாக இருந்தது.

இதனால் தாமுவுக்கும் காதருக்கும் ஏற்பட்ட விரோதத்தின் பூர்விக வரலாற்றையும், அதையொட்டி அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்பட்டிருந்த உரசல்களையும் பலர் வாய்மூலமாகவும் சிறுகச்சிறுகச் சேகரித்துக் கொண்டு வந்தேன். அன்றாட சேகரங்களை, பின்கட்டில் பெரிய மனிதனாய் அமர்ந்து என் சகோதரிகள் முன்னால் அவிழ்க்கையில் என்னை அறியாமலே கொஞ்சம் மிகைப்படுத்தியே அவிழ்த்துக் கொண்டு சென்றேன். வீர சாகசங்களை சோடைதட்டிப் போகாமல் சேர்த்தும் சரிக்கட்டியும் சொல்லலானேன். ஒவ்வொன்றும் என் ஆசைப்படி எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேனோ அவ்வாறே நிகழ்ந்ததாயும், இருந்த்தாகவும் சொல்வதில் அப்பொழுது என் மனசு மிகுந்த திருப்தி அடைந்தது.

இப்பொழுது பல வருடங்களுக்குப் பின்னால் அந்தக் கதையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்தக் கதையயையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்த மனோபாவத்திலிருந்து அல்லது பலஹீனத்திலிருந்து, பூரண விடுதலை தேடிக் கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலக வழக்கைக் கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி தேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்...."

- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை.



2 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஏலேய்! கப்பி,
உன் காலை கொஞ்சம் காட்டு.....

சொன்னது...

சிவா..

இங்க இருந்து காலை காட்டினா அங்க எப்படி தெரியும்?? இருங்க போட்டோ புடிச்சு போடறேன்...

ஹா..ஹா..ஹா..கப்பி கப்பி..
(சந்திரமுகில தலைவர் தொப்பி சொல்ற மாதிரி சொல்லனும்..)