பனை மரத்துல வவ்வாலா!!





SR Tendulkar not out 141(148)
13 - 4s
5 - 6s
95.27 - SR


vs WI Played at Kinrara Academy Oval, Kuala Lumpur (neutral venue), on 14 September 2006 - day/night (50-over match)



"Look, as far as I'm concerned Tendulkar is God, and if you want to become a better player you've got to compete with the best."
- Brett Lee

http://content-ind.cricinfo.com/quote/content/current/page/156062.html



25 Watts

"நான் போன வருடம் தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன். படித்து முடித்ததும் ஒரு இசைக்குழுவில் கிடார் வாசித்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பின் அமெரிக்காவில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அமெரிக்கர்களுக்கு உருகுவே எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த ஊர் எனக்கு போர் அடித்துவிட்டது. நான் இத்தாலியன். ஆனால் இங்கு தான் வளர்ந்தேன். இந்த ஊர், இந்த ஆறு, இந்த கடற்கரை, என் பெற்றோர் இவர்களை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. இங்கு உருகுவேயில் பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. தொழில்நுட்பக் கல்வி பெரிய அளவில் கிடையாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது. நீ 25 Watts படம் பார்த்திருக்கிறாயா? உருகுவேயில் எடுக்கப்பட்ட படம்"

"Whisky பார்த்திருக்கிறேன்"

"ம்ம்..அதுவும் உருகுவேயில் எடுக்கப்பட்ட படம் தான். அருமையான படம். ஆனால் நீ கண்டிப்பாக 25 Watts பார்க்கவேண்டும். உருகுவேயில் பள்ளிப் படிப்பு முடித்ததும் 18 வயதிலிருந்து 23, 24 வயது வரை இளைஞர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சீரழிகிறார்கள் எனக் காட்டும் படம். அதுதான் எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை. பெரிய குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் தான்தோன்றித்தனமான வாழ்க்கை. அந்த படத்தைப் பார்த்தாயானால் உருகுவே மேல் உனக்கு தப்பான அபிப்ராயம் தோன்றும். அது உருகுவேயின் மற்றொரு முகம். அந்த படத்தை நீ கண்டிப்பாக பார்த்து உன் கருத்தை சொல்ல வேண்டும்".

என் அலுவலகத்தில் வேறொரு துறையில் வேலை செய்யும் மார்ட்டின் பரிந்துரைத்த படம் தான் 25 Watts.

லீச்சே(Leche), ஹேவி(Javi), சேபே (Sabe) என்ற மூன்று இளைஞர்களின் 24 மணி நேர வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார்கள். லீச்சே ஐந்து வருடங்களாக இத்தாலிய மொழி கற்றுக்கொண்டிருக்கிறான். ஆசிரியை மீது ஒரு தலைக்காதல் கொண்டிருக்கிறான். ஹேவி காரில் 'குழாய்' கட்டி விளம்பரம் செய்பவரிடம் வேலை செய்கிறான். சேபே படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

விடியோ கடைக்காரர், மனநலம் குன்றிய இளைஞன், பிட்ஸா டெலிவரி செய்யும் இளைஞன், கால்பந்தாட்ட வீரன், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும் முன்னாள் கைதி, லீச்சேயின் பாட்டி என அவர்களைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுடன் நடக்கும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.

எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் புகை, மது, போதை, பெண்கள், பலான படங்கள் என இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் காட்டும் சீரான திரைக்கதை. ஆனால் சில் காட்சிகள் மிகவும் நீண்டு நம்மையும் சலிப்படையச் செய்கின்றன. மெல்லிய நகைச்சுவையுடன் வசனம் படத்திற்குப் பக்கபலம். 2001-ல் வெளிவந்த இந்த திரைப்படம் கருப்பு-வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.

உருகுவே நாட்டவர் ஒருவர் தொடர்ந்து ஐந்து நாட்கள் கை தட்டிக்கொண்டு இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறாராம். அவர் எதற்காக கை தட்டினார் என்று கேள்வி எழுப்பியபடி படம் முடிகிறது.

பார்த்த இரண்டு திரைப்படங்களும் உருகுவேயை, மக்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள். அடுத்தது பொழுதுபோக்கு திரைப்படம் ஒன்று பார்க்க வேண்டும்.



லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு

தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' என தலைப்பு வைத்ததை அறிந்த சில சினிமா பிரபலங்கள் வலைப்பதிவாளர்களைக் கவர இந்த லிப்ட் மேட்டரைத் தங்கள் படங்களில் நுழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்கஷன் ரூமில் எட்டிப்பார்த்தபோது:

கமல், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் அவரது அசிஸ்டெண்டுகள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தசாவதாரம் கதை விவாதத்தில் இருக்கிறார்கள்.

அசிஸ் 1: சார், இந்த மாசம் தேன்கூடு போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. அதையே நம்ம படத்துல சேத்துட்டோம்னா வலைப்பதிவாளர்களே படத்தை ஓட்டிடுவாங்க.

கமல்: அட நீ வேறய்யா..இப்பவே 'வேட்டையாடு விளையாடை' ஆளாளுக்கு துவைச்சு காயப்போடறாங்க. எந்த பக்கம் போனாலும் விமர்சன பதிவுன்னு ஒன்னு போட்டுடறாங்க..இதுல அவங்களையும் கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்காதய்யா

ரவி: கமல் சார்..இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்

கமல்: அதுவும் சரி தான். அப்போ தசாவதாரத்துல ஒரு அவதாரத்தை லாரி டிரைவர் ஆக்கிடலாம். அவனோட அடிமட்ட வாழ்க்கை நிலையைக் காட்டி படத்தை ஆரம்பிச்சு அவன் நாமக்கல்ல இருந்து கல்கத்தா போற வரைக்கும் வழில ஒவ்வொரு கமலுக்கும் லிப்ட் கொடுக்கறான்.

ரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்.

அசிஸ் : ஒவ்வொரு கமலுக்கும் சைடு டிராக்ல ஒரு லவ் ஸ்டோரி

கமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா. அப்படியே டெவலப் பண்ணி சொல்லு

அசிஸ்டெண்டைப் புகழ்ந்ததும் ஜெர்க்காகும் ரவிக்குமார் இடையில் தன் டிராக்கை எடுத்து விடுகிறார்.

ரவி: அந்த லாரி ஓட்டற கமல் மத்த கமல் எல்லாரையும் கொன்னுட்டே வர்றான். அவன் கல்கத்தால கடைசி கமலை கொல்ல முயற்சி செய்யறான். அந்த கடைசி கமல் ஒரு டிசிபி. அவர் டிரைவர் கமல் ஒரு சைக்கோ, சீரியல் கில்லர்ன்னு கண்டுபுடிச்சு அவனுக்கு தூக்குதண்டனை தராரு.

கமல்: தூக்கு தண்டனை தர்றதுக்கு அவன் என்ன ஹைகோர்ட் நீதிபதியா ?? அவனைப் புடிச்சு ஜெயில்ல போடறதா காட்டினா போதும்.

ரவி: அப்படியே காட்டிடுவோம். லாரி டிரைவர் கமல் மத்த கமல் கொன்னது போக சில பெண்களை ரேப் பண்ணியும் கொன்னிருக்கான்னு காட்டினா இன்னும் த்ரில் கூடும்

கமல் (மெதுவாக): 'ரேப் சீன் காட்டலைன்னா இவனுக்கு படம் எடுத்த திருப்தி இருக்காதே'
அவர் முனுமுனுப்பதைப் பார்க்கும் ரவிகுமார் 'என்ன எதுனா பிரச்சனையா?' எனக் கேட்கிறார்.

கமல்: ஆமா ரவி. இப்போதான் வேட்டையாடு விளையாடுல ஒரு திரில்லர் சீரியஸ் படம் பண்ணினேன். இப்போ நான் கண்டிப்பா காமெடி படம் தான் செய்யனும். அப்போ தான் என் கணக்கு சரியா வரும்

ரவி (மனதுக்குள்) : கிழிஞ்சுது போ..மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா

கமல்: பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.

அசிஸ் : புரியலையே

கமல்: அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி உயரத்தைக் குறைச்சு வயசையும் குறைக்கறோம்

ரவி: சூப்பர்

கமல் : மத்த கமல் எல்லாரும் அதே பில்டிங்க்ல வேலை பாக்கறாங்க. இதை வச்சு ஆள்மாறாட்டம், பழி வாங்கல், வில்லன் எல்லாத்தையும் டெவலப் பண்ணுங்க.

அசிஸ்: ஒவ்வொருத்தர் காதலும் அந்த லிப்ட்லயே டெவலப் ஆகுதுன்னு வச்சுக்கலாம் சார்.

ரவி: கமல் சார், அந்த லிப்ட்ல வச்சே நீங்க ஹீரோயின் அத்தனை பேருக்கும் லிப் டு லிப் தர்றீங்க

கமல்: எங்கயோ போயிட்டய்யா...லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு.

ரவி :இந்த ஷாட்டை வச்சே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுடலாம்.கதை போக போக அதுவா எதுனா வரும்

கமல்: இந்த லிப்ட் ஆங்கில வார்த்தையா இருக்கே...நான் வேணும்னா என் நண்பர்கள்ட்ட போன் போட்டு தமிழ் வார்த்தை என்னன்னு கேட்கவா என்றபடி செல்போனை எடுக்க அதைக் கேட்காதவாறு ரவியும் அசிஸ்டெண்டும் எஸ்ஸாகிறார்கள்.

*************************************************

கமல் லிப்ட் மேட்டரை தசாவதாரத்தில் நுழைப்பதைக் கேள்விப்பட்ட சிவாஜி யூனிட் தானும் களமிறங்குகிறது

ஷங்கர்: ரஜினி சார், ஏற்கனவே எடுத்து முடிச்சதுல பாதியை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பேசாம நாமளும் இந்த லிப்ட் மேட்டரை உள்ளே நுழைச்சாதான் சரிபடும்

ரஜினி: ஷங்கர்ஜி, ஏற்கனவே ரொம்ப நாளா படம் எடுத்துட்டு இருக்கோம். ரசிகர்கள் பாவம்ஜி. அதைவிட சரவணன் சார் ரொம்ப பாவம்ஜி

சத்யநாராயணா:இல்லைங்க, இந்த லிப்ட் மேட்டர் ஒர்க்-அவுட் ஆகும்
அப்போது தான் அவர் அங்கு இருப்பதைக் கவனித்த ரஜினி

ரஜினி:ஹேய் சத்தி, காது குத்துக்கு போகனும்னு சொன்னயே..கிளம்பலையா

சரவணன்(தனக்குள் மெதுவாக 'இப்படி கை கட்டி நின்னுட்டு இருந்தா எனக்கும் காது குத்திடுவாங்க' ): ஷங்கர், இந்த லிப்ட் கண்டிப்பா வேணுமா? இதை அடுத்த படத்துக்கு வெச்சுக்கலாமே..எல்லாத்தையும் இந்த படத்துலயே காட்டனுமா

ஷங்கர்: சார், படத்துக்கு ஒரு பிரமாண்டம் வர வேணாமா...கதையை அப்படியே இந்த லிப்ட் மேட்டரை மையமா வச்சு நகர்த்தறோம்

அவ்வளவு நேரம் வாசலில் இருந்து ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த வைரமுத்து

'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.
'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.

ரஜினி: வாங்க வைரமுத்துஜி..இப்போ தான் சிவாஜில சில சேஞ்சஸ் பண்ணலாம்னு ஷங்கர்ஜி சொல்லிட்டு இருக்கார்

வைரமுத்து: கேட்டுக்கொண்டு தான் வந்தேன். வரும்போதே ரகுமான் தம்பியின் மெட்டுக்கு லிப்டை எப்படி நுழைக்கலாம் என யோசித்துக்கொண்டுதான் வந்தேன்.

ஷங்கர்: ஹை..நீங்களும் லிப்ட் விளையாட்டுக்கு வந்தாச்சா?

இதைக் கேட்ட சரவணன் 'விளையாட்டா' என அரண்டு போய் சோடா ஆர்டர் செய்கிறார்.

ரஜினி: சீக்கிரம் கதை சொல்லுங்கஜி. அடுத்த மாசத்துக்குள்ள ஷூட்டிங் முடிச்சா ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க போவேன்

ஷங்கர்: அடுத்த மாசத்துக்குள்ள முடிக்கறதா..நீங்க வேற..அடுத்த வாரம் நாம ஆஸ்ட்ரேலியா போறோம். அங்க சிட்னி ஓபரா ஹவுஸ்ல இருக்க லிப்ட்ல பாம் வச்சிடறாங்க. அதை நீங்க போய் எடுக்கறீங்க

ரஜினி: இறைவா

ஷங்கர்: என்ன சார் ஆச்சு

ரஜினி: ஆஸ்திரேலியா, பாம்லாம் வேணாம். வேற சொல்லுங்க

ஷங்கர்: சரி சார்..மெட்ராஸ்லயே கதை வச்சுக்கலாம். ஒரு பில்டிங்குக்கு நீங்க போறீங்க. அங்க லிப்ட்பாயா இருக்க வில்லன் நீங்க போக வேண்டிய பத்தாவது ப்ளோருக்கு கூட்டிட்டு போகாம ஒன்பதாவது ப்ளோர்லயே இறக்கி விட்டுடறாரு. இதுனால உங்க பரம்பரை சொத்து உங்க கை நழுவி போகுது

ரஜினி: எப்படி?

ஷங்கர்: அது இனிமேல் தான் யோசிக்கனும். ஃபுல் ப்ளோல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார். உடனே நீங்க அந்த வில்லன் கிட்ட சண்டை போடறீங்க. கோபமடைஞ்ச வில்லன் 'ஒரு நாள்..ஒரே ஒரு நாள் லிப்ட் பாயா இருந்து பாரு. அப்போ தெரியும் கஷ்டம்'ன்னு சவால் விடறான்.

ரஜினி: இந்த கதையை ஏற்கனவே என்கிட்ட வேற மாதிரி சொல்லி நான் வேணாம்னு சொன்ன மாதிரி இருக்கே.

ஷங்கர்: அது வேற சார். முழுசையும் கேளுங்க. சவாலை ஏத்துக்கற நீங்க ஒரு நாள் லிப்ட் ஆப்பரேட்டர் ஆகறீங்க. உங்க வேலையைப் பார்த்து அந்த பில்டிங் அசோசியேஷன்காரங்க எல்லாம் சேர்ந்து உங்களையே பெர்மனெண்ட் லிப்ட் ஆப்பரேட்டர் ஆக்கிடறாங்க. இதுல டென்ஷனான வில்லன் உங்க லவ்வரைக் கடத்திக்கிட்டு கனடா போயிடறான்.

ரஜினி: சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர் எப்படி கனடா போக முடியும்

ஷங்கர்(மெதுவாக): இன்னும் அந்த ஊர்ல தான் நான் ஷூட்டிங் எடுக்கல. அதனால அங்க தான் போகனும். (சத்தத்தை உயர்த்தி) அவன் ஊருக்கு தான் லிப்ட் ஆப்பரேட்டர். ஆனா அவன் ஒரு சர்வதேச கள்ளக்கடத்தல் தாதா. அவனை நீங்க எதிர்க்கறீங்க. இதைப் பார்த்து தமிழ்நாடே உங்க பின்னால நிக்குது.

வைரமுத்து: 'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' என 'வெற்றிக் கொடி கட்டு ட்யூனில் பாட்டெடுக்க 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு லிப்டப்பா' என சத்தி கண்டினியூ செய்கிறார்.

ஷங்கர்: நீங்க கனடா போகறதுக்குள்ள வில்லன் அங்கயிருந்து சுவீடன் வர்றான். அவனை துரத்திகிட்டே நீங்க ரஷ்யா, மலேசியா, ஜப்பான், உருகுவேன்னு உலகம் பூரா சுத்தரீங்க. கடைசில அவன் பஸ் பாஸ் ரினீயூ பண்ண மெட்ராஸ் வரும்போது அவனை கப்புன்னு புடிச்சடறீங்க.அப்படியே மக்களின் ஆதரவோட தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடறீங்க

ரஜினி(மனதுக்குள்): இதை மட்டும் விட மாட்டேங்கறாங்களே

அப்போது 'திஸ் மேன் இஸ் எ மிராக்கிள். ஹி இஸ் எ வொண்டர்புல் ஆக்டர்' என கரகர குரலுடன் பாரதிராஜாவும் தொப்பியைக் கழட்டி கர்ச்சீப்பால் நெற்றியைத் துடைத்தபடி பாக்யராஜும் வர சரவணன் மயங்கிக்கிடப்பதைக் கூட கவனிக்காமல் அனைவரும் ஜன்ன்ல வழியாக ஓடுகின்றனர்.

************************************************

'தசாவதாரத்துக்கும் சிவாஜிக்கும் தர்மபுரி எந்த அளவுலயும் குறைஞ்சது இல்ல' என்றபடி கூலிங் கிளாஸ், பவுடர் பளபளக்க வரும் இயக்குனர் பேரரசைப் பார்த்து ஜெர்க்காகும் விஜயகாந்த் அருகில் இருக்கும் ராமுவசந்தனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.

ராமு: பேரரசு சார், கட்சி மீட்டிங் ஒன்னு கிளம்பிட்டு இருக்கோம். போய் நாளைக்கு வாங்க
என பேரரசுவைக் கழட்டிவிடப் பார்க்கிறார்.

பேரரசு: நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,

விஜயகாந்த்: என்ன பேரரசு..தர்மபுரி செட்யூல் அடுத்த வாரம் தானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள என்னப்பா?

பேரரசு: சார், லிப்ட் பத்தி நீங்க ஒன்னும் கேள்விப்படலையா?

விஜயகாந்த்: என்ன சார் சொல்றீங்க?

பேரரசு: அவனவன் இந்த லிப்டை வச்சு பல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கான் சார். நானும் விர்ருன்னு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்.

எப்படியும் எஸ்கேப் ஆக முடியாது என கேப்டன் பெருமூச்சு விட பேரரசு தொடர்கிறார்.

பேரரசு: படத்துல நீங்க தர்மபுரில பந்தல் கட்டறவரா வர்றீங்க. தர்மபுரில எந்த கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் நீங்க தான் ராகவேந்திரா பந்தல் ஏஜெண்ட்.

இதைக்கேட்டதும் கலக்கமடையும் கேப்டன்: சார், மீதி கதையை நாளைக்கு கேட்டுக்கறேனே..இப்போ கட்சி கொடி ஏத்தற பங்சன் ஒன்னு இருக்கு

பேரரசு: இருங்க சார் முடிச்சுடறேன். நீங்க பந்தல் காண்ட்ராக்டர். அந்த ஊர்ல ரோடு போட்ட காண்ட்ராக்டர் ஊழல் செஞ்சு ரொம்ப மோசமான் ரோடா போட்டதால நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது

விஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது

பேரரசு: நீங்க அந்த காண்ட்ராக்டரை அடிச்சு உதைச்சு அவரோட முகமூடியைக் கிழிக்கறீங்க. தர்மபுரி புல்லா புதுசா காண்டிராக்ட் விட்டு நல்ல ரோடு போட வழி செய்யறீங்க

ராமு: கேப்டன், அந்த காண்டிராக்டை நம்ம கட்சி ஆளுங்களுக்கு தர்ற மாதிரி பண்ணிடுவோம்

விஜயகாந்த்: யோவ் நீ சும்மா இருய்யா. நீங்க மேல சொல்லுங்க.

பேரரசு: இப்போ தான் மெயின் ஸ்டோரி. நான் அதே ஏரியாவில ஒரு கட்டடத்துல லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன். ஒருநாள் லிப்ட்ல குண்டான ஆசாமிங்க அஞ்சு பேர் ஏறினதால லிப்ட் பாதில நின்னுடுது. நீங்க உடனே லிப்ட் ரோப் வழியா உள்ள இறங்கி அந்த அஞ்சு பேரையும் காப்பாத்தறீங்க

விஜயகாந்த்(பெருமூச்சுடன்): ம்ம்..சொல்லுங்க

பேரரசு: இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து குண்டா இருக்கவங்களுக்கு தனியா லிப்ட் வேணும்னு போராட்டம் பண்றோம். அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரவுது. என் போட்டோவும் அதுக்கு கீழ உங்க போட்டோவும் போட்டு தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஓட்டறாங்க. கடைசில அரசு நம்ம கோரிக்கைக்கு அடிபணிஞ்சு தனித் தனி லிப்ட் வைக்கனும்னு ஆணை இடுது

ராமு: தலைவா, முழிச்சுக்கோங்க. இந்தாளு திருப்பதியை மறுபடியும் உங்களுக்கு உல்டா பண்றான். கொஞ்சம் அசந்தா உங்களையும் செக்ண்ட் ஹீரோ ஆக்கிருவான். உசார்.

விஜயகாந்த்: சார், கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இது வேணாம். உங்க கேரக்டர் இல்லாம தனியாவே கதை சொல்லுங்க. ஏற்கனவே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு

கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்ததும் கவலையடைகிற பேரரசு, படத்தில் நடிக்காவிட்டாலும் டைரக்ஷன் வாய்ப்பை விடக்கூடாது என அடுத்த கதையை யோசிக்கிறார்.

பேரரசு: இதே லிப்ட் மேட்டரை வேற மாதிரி வச்சுக்கலாம் சார். நீங்க தர்மபுரில இருந்து மெட்ராசுக்கு பைக்ல வர்றீங்க. அப்போ ஆம்பூர் பக்கத்துல ஒரு கல்யாண கோஷ்டி வந்த லாரி ப்ரேக்டவுன் ஆகி நிக்குது. அதுக்கு காரணம் கலப்படமான பெட்ரோல். அதைப் பார்த்து பொங்கி எழுந்து, அந்த லாரியை உங்க பைக்ல கயிறு போட்டு கட்டி லிப்ட் கொடுக்கறீங்க. அப்படியே அந்த மக்களோட சென்னை நோக்கி வர்றீங்க. திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லின்னு நீங்க வர்ற வ்ழி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுது

ராமு: அப்படியே நம்ம தொண்டர்களையும் கொடியையும் ஒவ்வொரு ஊர்லயும் காட்டிட்டு வரலாம்

பேரரசு: நீங்க மெட்ராஸ் உள்ள வரதுக்கு போலிஸ் தடை விதிக்குது. பூந்தமல்லி பைபாஸ்ல நீங்க வெயிட் பண்ணும்போது அந்த பெட்ரோல் பங்க் முதலாளி உங்களைக் கொல்ல ஆள் அனுப்பறான். அவங்களை அந்த லாரிலயே லெக்பைட் போட்டு அடிச்சுபோட்டுடறீங்க.

லெக் பைட் என்ற வார்த்தையைக் கேட்டதும் கேப்டன் குஷியாகிறார்.

விஜயகாந்த்: இப்போதான் விறுவிறுப்பா இருக்கு. அப்படியே டாப் கியர்ல போங்க

பேரரசு: நீங்க மக்களுடன் சேர்ந்து போராட்டம் பண்றீங்க. ஹைவேல வண்டி ப்ரேக்டவுன் ஆகி நிக்கற்வங்களுக்கு லிப்ட் தர்றவங்க அவங்க வீட்டுக்கே கொண்டு வந்து விடனும்னு சட்டம் கொண்டு வர்றதுக்கு போராடறீங்க. அரசும் தலை பணிஞ்சு அந்த மாதிரி சட்டம் கொண்டுவருது.

விஜயகாந்த்: கதை சூப்பர் பேரரசு. இவ்வளவு நாளா உங்களைத் தப்பா நினைச்சுட்டேனே

என்று பீலாகும்போது "வருவான் சார். வல்லவன் வருவான் சார். என் கேரியருக்கு ஒரு லிப்ட் சார் வல்லவன். நயந்தாராவுக்கு கொடுத்தது லிப்டான்னு கேட்டா சொல்லத் தெரியல. வாழ்க்கை முழுக்க கூட வருவாங்களா..இப்ப சொல்ல முடியாது. சொல்லி அடிக்கறவன் தான் இந்த சிம்பு" என எக்குதப்பாக பேசிக்கொண்டு சிம்பு எண்ட்ரி கொடுக்க "இவன் நமக்கு மேல பெருந்தொல்லையா இருக்கானே" என மனதுக்குள் எண்ணும் பேரரசு "யப்பா சிம்பு, தேனப்பன் கார் பஞ்சர் ஆகி பஞ்சர் ஓட்ட காசு இல்லாம ஜெமினி பக்கத்துல லிப்ட் கேட்டு ரொம்ப நேரமா வெயில்ல நின்னுட்டிருக்காராம். என்னன்னு பாருப்பா" என்று சொல்லிவிட்டு திரும்ப கேப்டனும் ராமுவசந்தனும் ஏற்கனவே எஸ்ஸாகியிருந்தனர்.



சினிமா! சினிமா!! சினிமா!!!

வடபழனி மாநகரப் பேருந்து பணிமனைக்கும் வசந்த பவனுக்கும் இடையில் செல்லும் குமரன் காலனி சாலையில் துணை நடிகர்கள், சின்னத் திரை நடிகர்கள், துணை நடிகர்கள் ஏஜெண்டுகள் என பலவகையான சினிமாத் தொழிலாளர்களின் சங்கங்கள் இருக்கும். அந்த சாலையிலுள்ள டாஸ்மாக் வாசலிலும் டீக்கடைகளிளும் சண்டைப் பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள் துணை நடிகர்கள் என 'எங்கேயோ பார்த்த' முகங்களை அடிக்கடி பார்க்கலாம்.

***********************************************************

அந்த சாலையில் இருக்கும் டீக்கடையில் ஒரு நாள் கல்லூரி நண்பர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அவர் உறவினர் ஒருவரும் உடனிருந்தார். அவர் நடிக்க வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர். இப்போது நடிக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது எனக் கேட்டதற்கு "இப்போ கூட சசசின் படத்துல நடிச்சிருக்கேன்.படம் பார்த்துட்டீங்களா?" என்றார். படம் பார்த்திருந்தாலும் அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில்லை. "படத்துல விஜயோட அப்பா ரகுவரன் வரும்போது பின்னாடி நின்னு 'இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர்கள்ல ஒருத்தர் இவர்'ன்னு சொல்றது நான் தான். ஞாபகம் இருக்கா" எனக் கேட்டார்.

அப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.

***********************************************************

சமயங்களில் டீக்கடைகளில் திரைக் கலைஞர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு முறை அடிக்கடி திரையில் தோன்றும் ஒரு துணை நடிகரும் அவர் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். வாய்ப்புகள் எப்படியிருக்கிறதென நண்பர் கேட்டதற்கு "இப்போ ரொம்ப நல்லாவே வந்துட்டு இருக்குங்க. இப்போ சூர்யா கூட பஸ் கண்டக்டரா ஒரு படம்..நல்ல ஸ்கோப் இருக்கு..அடுத்த வாரம் யூனிட் பொள்ளாச்சி போகுது. இப்போ கைல ஒரு நாலஞ்சு படம் இருக்கு. இன்னும் நல்லா வரும்" என்றார்.

இன்றும சில படங்களில் அவரைக் காணும்போது அன்றைய உரையாடல் நிழலாடுகிறது. இத்தகைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே இவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

***********************************************************

என் தூரத்து உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சென்னையில் இணை எடிட்டராக இருந்தார். அவரை சந்திக்கும் வேளைகளில் இளம் கதாநாயகர்கள் எப்படி தாங்களே பணம் போட்டு நடிக்கிறார்கள் என்பதில் இருந்து பல சுவாரசியமான விடயங்களைச் சொல்லுவார். இணை எடிட்டர் என்றாலும் அவருக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என எல்லாவற்றிலும் வேலை பார்த்தார்.

குடும்பப் பிரச்சனைகள் காரணமாக சென்ற வருடம் அவர் சினிமாவை விட்டுவிட்டு காஞ்சியில் ஒரு பட்டு கோறா கடையைத் திறந்தார். என் உறவினர் ஒருவருடன் கடைவீதியில் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரை சந்திக்க நேர்ந்தது. "இப்ப ஆரம்பிச்ச கடையை பத்து வருஷம் முன்ன ஆரம்பிச்சிருந்தா எங்கயோ போய் இருப்ப. இப்பவாவது புத்தி வந்துச்சே" என்று கடிந்துகொண்ட என் உறவினருக்கு அவரால் ஒரு வறண்ட புன்னகையே பதிலாகத் தர முடிந்தது.

***********************************************************

சினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும்.



உறக்கம் தொலைக்காத காலையில்

உறக்கம் ஒரு வரம். சின்ன வயசுல இருந்தே நான் 'முன் தூங்கி பின் எழும்' பரம்பரை. படுத்த இரண்டாவது நிமிஷம் தூங்கிடுவேன். அதுக்கப்புறம் என்னை அடிச்சு போட்டாக் கூட தெரியாது.

போன பொங்கல் பண்டிகையின் போது முதல் நாள் இரவு முழுக்க ஆபிஸ்ல வேலை. பொங்கல் அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் ஏறினேன். சாதாரண நாள்லயே கூட்டம் குலை நடுங்க வைக்கும். பொங்கல் அன்னைக்கு சொல்லனுமா? சரியான கூட்டம். இன்னைக்கும் ஸ்டாண்டிங் தான் மாப்ளே-ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு பஸ்ல ஏறிட்டேன். நம்ம நல்ல நேரம் நான் நின்னுட்டிருந்ததுக்கு பக்கத்து சீட் காரர் அவரோட வந்தவர் பஸ்ல ஏறலைன்னு இறங்கிட்டார். நல்ல்தாப் போச்சுடான்னு நம்ம கட்டையை சீட்ல சாய்ச்சாச்சு.

அப்ப தான் ஒருத்தர் ஏறினார். கையில வெண்டிலேட்டருக்கு மாட்டுற கண்ணாடி. அவர் பாட்டுக்கு நேரா வந்து அந்த கண்ணாடியை என்கிட்ட கொடுத்துட்டு பக்கத்துல நின்னுட்டார். பொதுவா பஸ்ல போகும்போது தூக்கம் வராது.ஆனா அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காததால பஸ் எடுத்ததும் கண்ணை சொக்க ஆரம்பிச்சுடுச்சு.

பூந்தமல்லி பைபாஸ்ல போகும்போதே தலை சாஞ்சுடுச்சு. திடீர்னு கையில் கண்ணாடி இருக்க ஞாபகம் வர முழிப்பு வந்துடுச்சு. நம்மாளு என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்காரு. நான் அந்த கண்ணாடியைக் கீழே போட்டால் புடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கார்.

தூங்கி அதைக் கீழே போட்டு மானத்தை வாங்க வேணாம்னு செல்போன் எடுத்து ஒவ்வொரு மெசெஜா படிச்சு டெலிட் பண்ணா பொழுது போகும்னு செல்போன் எடுத்தேன். நல்ல வேலையா ஒரு நூறு மெசெஜ் இருந்துச்சு. ஜோக்குன்ற பேருல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கலையேன்னு ஒவ்வொன்னா படிச்சு படிச்சு டெலிட் பண்ணிட்டு வந்தேன்.

திடீர்னு தோள்ல யாரோ தட்டின மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா நம்ம கண்ணாடி பார்ட்டி.அவர் கையில் என் செல்போன்.மெசெஜ் படிச்சுக்கிட்டே செல்போன் கைநழுவி கீழே விழுந்ததும் தெரியாம தூங்கி இருக்கேன். அவரோட கண்ணாடியும் மடியில் விழற நிலைமைல இருக்கு. கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் தொடச்சிக்கிட்டே செல்போனை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் போறதுக்குள்ள மறுபடியும் தூங்கிட்டேன் போல. என்னை எழுப்பி 'நானே வச்சுக்கறேன் கொடுங்க' ன்னு கண்ணாடியை வாங்கிக்கிட்டார். 'அடங்கொக்கமக்கா..மகராசன் அசிங்கப்படுத்திட்டானே' ன்னு பீல் பண்ணிட்டே மறுபடியும் தூங்கிட்டேன். என்னத்த பண்ண அவர் கவலை அவருக்கு..நம்ம தூக்கம் நமக்கு.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்துக்கும் முன்னாடியே தூக்கத்தால தான் செல்போனை தொலைச்சேன். சுமார் ஒரு ஐநூறு ஐநூத்தம்பது நாட்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினம். அன்னைக்கு காலையில திடீர்னு முழிப்பு வர தலைமாட்டுல இருந்த செல்போனை எடுத்து டைம் பார்த்தா விடிகாலை ஆறரை. அதுக்குள்ள எழுந்து என்ன பண்றதுன்னு மறுபடி தூங்கிட்டேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு தலைமாட்டுல தடவின செல்போனைக் காணோம்.

பக்கத்துல பாத்தா நம்ம தடித் தாண்டவராயன்ஸ் எல்லாம் இன்னும் உறக்கத்துல தான் இருக்கானுங்க. ஒருத்தன் மட்டும் எழுந்து கதவைத் தொறந்து போட்டுட்டு சமையல் கட்டுல உக்காந்து தி இந்துல ஃப்ரைடே ரிவ்யூ படிச்சுட்டு இருக்கான். செல்போனை பாத்தியாடான்னு கேட்டதுக்கு அவன் போனை எடுத்து ஆங்காரமா நீட்டறான்.

தூங்கி எழுந்தவன் கதவைத் திறந்து பேப்பரை எடுத்துக்கிட்டு கதவை அப்படியே திறந்து போட்டுட்டு உள்ள போயிட்டான். வீட்டுக்குள்ள வந்த எவனோ கண்ணுக்கழகா ஒரு போனைப் பாத்ததும் உள்ள புகுந்து அடிச்சுட்டான். எப்படி வீடு புகுந்து அடிச்சிருக்கான்னு டாப் ஆங்கிள்ல படத்தைப் பாருங்க.



'தூங்கிட்டு இருக்கும்போது வீடு புகுந்து லவட்டிட்டானுங்கடா மாப்ளே' ன்னு அவன் செல்லை வாங்கி என் நம்பருக்கு அடிச்சா 'not reachable'. ஊர்ல எல்லா திருடனும் விவரமா தான் இருக்கானுங்க. தூங்கிட்டு இருக்க நாலு பேரை தாண்டி வந்து எடுத்திருக்கான். அது தெரியாம நாங்களும் சுகமா தூங்கிட்டு இருந்திருக்கோம்.

காலங்காத்தால மாடி வீட்டுக்கு பேப்பர் போடறவன் தான் வீட்டுக்குள்ள வருவான். பக்கத்து முக்குல இருக்க பேப்பர் கடைக்கு போனால் அங்க கடை ஓனர் தான் இருந்தார். அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் செம டென்ஷன் ஆயிட்டார். "நீங்க எதைத் தொலைச்சாலும் பேப்பர் பசங்க மேல பழி போடுவீங்களே..எங்க பசங்க வீட்டுக்கு உள்ள கூட வராம காம்பெளண்ட் வெளிய இருந்து தான் பேப்பர் போடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எங்க மேல சந்தேகப் படாதீங்க சார். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வருவான். அவன்கிட்டயே விசாரிச்சுக்கோங்க" ன்னு நேர்மையில் மறு உருவமா பேசறார். 'அடடா..காலங்காத்தால ஒரு நல்ல மனசை புண்படுத்திட்டோமே'ன்னு பீல் பண்ணிக்கிட்டே திரும்பி வந்தாச்சு. பக்கத்து ஆட்டோ ஸ்டாண்ட்ல கேட்டா அவங்களும் யாரையும் பாக்கலே-ன்னு சொல்லிட்டாங்க.

அந்த பையனை அடுத்த நாள் புடிச்சு விசாரிச்சா அவனும் நல்லவன் மாதிரியே பேசறான். 'திருடினவன் எங்க இருந்தாலும் ந்ல்லா இருடா' ன்னு வாழ்த்தறதை தவிர வேற என்ன செய்ய?

போன் வாங்கியபோது ஏதோ ஆஃபர்ல திருட்டு இன்ஷூரன்ஸ் (Theft insurance-ங்க) கொடுத்தாங்க. போனது போச்சு பாதி காசையாவது மீட்போம்னு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். முதல்ல வடபழனி ஸ்டேஷன் போனா அட்ரஸ் கேட்டு விருகம்பாக்கம் ஜூரிஸ்டிக்சன்னு தொரத்தி விட்டுட்டாங்க. அங்க போய் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வேலையை பாக்க போயாச்சு.

ஒரு வாரம் கழிச்சு கூட வேலை பாக்கறவன் கிட்ட "செல்போன் தொலைஞ்சுதுன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இன்ஷூரன்ஸ் கம்பெனில இருந்து போன் வரலையே"ன்னு கேட்டா "அட வெண்று, கம்ப்ளெயிண்ட் காப்பி வாங்கி மூனு நாள்ல கம்பெனிக்கு நீ அனுப்பி வைக்கனும்டா"ங்கிறான். என்னதத சொல்ல..நம்ம பொது அறிவு அவ்ளோ தான்.

என்ன தான் செல்போன் தொலைஞ்ச வருத்தம் இருந்தாலும் அதை அடிச்சவனோட தைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியலை. நாலு பேரு தூங்கிட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள நுழைஞ்சு அடிச்சிருக்கான்னா என்னா தில் இருக்கனும். அவனை ஒரு தடவையாவது சந்திச்சு 'அன்னைக்கு சிக்கி இருந்தா என்ன பண்ணியிருப்ப?'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்? அவனை புடிச்சு அடிச்சிருப்போமா, போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இருப்போமா இல்ல அப்படியே மன்னிச்சு விட்டிருப்போமா..தெரியல...கண்டிப்பா அந்த நிமிஷத்துல என்ன செய்து இருப்போமோ அதுவும், இப்ப யோசித்து பார்க்கும்போது மனதில் தோன்றுவதும் ஒன்றாக இருக்காது...அப்படி இருப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.



நட்பின் வழியது

இடமாற்றம்
வேலைப் பளு
புதிய நண்பர்கள்
காதலி
திருமணம்
குடும்பம்
தயக்கம்
தலைக்கனம்
ஞாபக மறதி
நேரமின்மை
சோம்பேறித்தனம்
வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்
மாறிய தொலைபேசி எண்
அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம்
நான் அனுப்பி பதில் இல்லாத,
நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்
தேவையற்றதாகத் தோன்றி
பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை
சரியாகவோ தவறாகவோ
முதிர்ச்சி
வயதிலும் மனதிலும்
நடந்ததும் பொய்யாகிப் போனதுமான
எதிர்பார்ப்புகள்
நீ வராமல் விட்ட
என் தங்கையின் திருமணம்
நான் வர முடியாமல் போன
உன் விவாகம்
அடைக்க மறந்த கடன்
அதைக் கேட்டுத் தொலைத்த நீ
இன்னபிற
இன்னல்களுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

--------------------------------------------------------------------------------

டயலாக்:

"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு"

"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்"



Whisky

இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.

இந்த நிலைமையில வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம கூட வேலை பார்க்ககும் லோக்கல் நண்பன் கிட்ட உருகுவே சினிமா இண்டஸ்ட்ரீ பத்தி அறிவை வளர்த்துக்கலாம்னு கேட்டு தொலைச்சுட்டேன். அவன் சொன்ன படம் தான் 'Whisky'. உருகுவேயில் தயாரிக்கப்பட்ட படம். படம் பேரே கலக்கலா இருக்கேன்னு டிவிடி வாங்கி வந்து பார்த்தாச்சு.

ஜேக்கப் கொஷர் (Jacobo Koller - இங்க ஹேக்கபோ) நலிந்த நிலையில் இருக்கும் ஒரு சிறிய காலுறை தொழிற்சாலையின் முதலாளி. மார்த்தா (Marta) என்ற நடுத்தர வயது பெண்மணி அங்கு மேற்பார்வையாளராக இருக்கிறார். இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள்.

தினமும் காலையில் மார்த்தா சீக்கிரமாக வந்து காத்திருப்பார். ஜேக்கப் வந்து தொழிற்சாலையை திறப்பார். சிறிது நேரத்தில் மார்த்தா ஜேக்கப்பிற்கு லெமன் டீ கொடுப்பார். ஜன்னல் கதவு வேலை செய்யாது. சிறிது நேரத்தில் மற்ற இரு பெண்களும் வருவார்கள். பன்னிரெண்டு மணி நேர வேலைக்குப் பிறகு மார்த்தா அவர்களின் பைகளை சோதனை செயத பின் கிளம்பிச் செல்வார்கள். அதற்கு பிறகு மார்த்தாவும் ஜேக்கப்பும் தனித்தனியே கிளம்பிச் செல்வார்கள்.

இதையே படத்தின் ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை காட்டி ஜேக்கப்,மார்த்தாவின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதில் படம் தொடங்குகிறது.

ஜேக்கப்பின் வயது முதிர்ந்த தாய் இறந்து விட அவரின் இறுதிச் சடங்குகளுக்காக ஜேக்க்ப்பின் தம்பி ஹெர்மன் கொஷர் (Herman Koller) பிரேசிலில் இருந்து வருகிறார். ஹெர்மனும் காலுறை உற்பத்தி செய்பவர் தான் என்றாலும் கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களும் நவீன இயந்திரங்களும் கொண்டு வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்.

தன் தம்பியை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற விதண்டாவாத மனப்பான்மை கொண்ட ஜேக்கப் மார்த்தாவை தன் மனைவியாக நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மூவரும் பிரியாபோலிஸ் (Pireapolis) என்ற சுற்றுலா நகரத்திற்கு செல்கின்றனர். அங்கு மூவருக்குள் நடக்கும் உரையாடல்களையும், ஹெர்மனின் தாக்கத்தால் மார்த்தா தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதையும் ஜேக்கப் தன் பிடிவாத்ததை விடாமல் அதே சுழற்சியில் தொடர்வதையும் மீதி படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

ஹெர்மன் பிரேசிலுக்கு கிளம்புவதற்கு முன் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஜேக்கப்பிற்கு பணம் தர அதை முதலில் வாங்க மறுக்கும் ஜேக்கப் பின்னர் வாங்கிக் கொள்கிறான். தன் தம்பியை வழி அனுப்பியதும் அந்த பணம் மொத்தத்தையும் மார்த்தாவிடம் கொடுத்து விடுகிறான்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு செல்கிறான். ஆனால் மார்த்தா வரவில்லை. அவனே லெமன் டீ போட்டு குடித்துவிட்டு வேலையைத் தொடர்வதாக படம் முடிகிறது.

எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதே வாழ்க்கையைத் தொடர விரும்பும் ஜேக்கப், சுழற்சியான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளி வரத் துடிக்கும் மார்த்தா, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெறும் ஹெர்மன் என மூன்று கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருகிறது.

மிகவும் அமைதியான, மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைப்படம். சனிக்கிழமைகளில் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் பார்த்தது போல் இருந்தது.

மூன்று நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க காட்சிகள் மெல்லிய நகைச்சுவையோடு யதார்த்தமாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஜேக்கப்பை உருகுவேயுடன் ஒப்புமை படுத்தி விமர்சிக்கிறான். எழுபதுகளில் 'தென் அமெரிக்காவின் ஸ்விட்சர்லாந்து' என அழைக்கப்ப்ட்ட உருகுவே இன்று வளர்ச்சியில் தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன். உருகுவேயின் இந்த தேக்க நிலையையும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையையும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் வழியாக இந்த படம் பிரதிபலிப்பதாக கூறுகிறான்.

படத்துக்கு பெயர்க் காரணம் சொல்லலையே....நம்ம ஊர்ல புகைப்படம் எடுக்கும்போது 'Cheese...'ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி இங்க 'Whisky..'



இந்த படங்கள் எப்போ ரிலீஸ்??

"தமிழில் நல்ல படமாகவே இருந்தாலும் இரண்டு டூயட், ஒரு குத்து பாட்டு, சண்டை காட்சி இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட வேண்டியிருக்கும். அதனாலேயே தேவையில்லாமல் பாட்டும் பைட்டும் இடையில் திணிக்கிறார்கள்"

இது யாரோ எங்கேயோ சொல்லி கேட்டது. இது ஓரளவு உண்மை என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இது போல் பாடல் காட்சிகளைத் திணிக்க ஏதுவாக காட்சியமைப்பு இல்லாததால் நன்றாக வந்திருக்க வேண்டிய சில படங்களும் சொதப்பியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம்: கொக்கி.

'வேட்டையாடு விளையாடு' ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. 'வல்லவன்', 'காட் ஃபாதர்' ஆகிய படங்களும் விரைவில் வெளியாகும் என பத்திரிகைகள் சொல்கின்றன.

இவை தவிர நீண்ட நாட்களாக வெளிவராமல் நான் எதிர்பார்த்திருக்கும் இரண்டு படங்கள் :

துள்ளல்:



ரட்சகன், ஜோடி, ஸ்டார் வெற்றிப் படங்களைத்(?!) தொடர்ந்து ப்ரவீன் காந்த் க்தாநாயகனாக நடித்து இயக்கும் படம். இரண்டு கதாநாயகிகள். 'சின்ன கலைவாணர்' விவேக்கும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வட்பழனி 'லஷ்மண் ஸ்ருதி'யில் இந்த படத்தின் போஸ்டரை கடையின் வாசலில் ஒட்டியிருந்தார்கள். இந்த படத்தில் 'தல' நடிப்பதாக இருந்தது என எங்கேயோ படித்த ஞாபகம்.

வீராச்சாமி:



சிம்பு நயன்தாரா உதட்டைக் கடித்து, ஆற்காடு சாலையில் கார் ரேஸ் வைத்து, தி. நகரில் அடி வாங்கி 'வல்லவன்' பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு என ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

இந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க! ;)



கயல்விழி

சுந்தர்.வயது 28.5' 10''. மாநிறம். சிம்ம லக்கினம். சுவாதி நட்சத்திரம்.துலா ராசி.சாப்ட்வேர் இன்ஜினியர்.வேளச்சேரி பணாமுடீஸ்வரர் தெரு குறுக்கு சந்தில் ஏழாவது மாடியில் டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்.24 மணி நேரம் தண்ணீர்.

சுந்தரின் தாய் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட மற்றும் இன்ன பிற விவரங்களுடன் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். வரும் தை மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தீவிரமாக இறங்கிவிட்டார்.

சுந்தர், ஐந்து ரூபாய் கர்ச்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் அணியும் சக சென்னை சிட்டிசன். அம்மா பாண்டிச்சேரியில் சொந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டதால் இங்கே நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.

அவனைப் பற்றி அலுவலகத்தில் விசாரித்தால் அமைதியான பொறுப்பான பண்பான என எல்லாம் ஆனவன் என்பார்கள். பெண்களுடன் அன்னியோன்யமாய் பழகுபவன்தான் என்றாலும் காதல் திருமணம் செய்வதில்லை என தன் தலையில் தானே எழுதிக்கொண்ட அம்மாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை.

அன்று அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் அம்மா போன் செய்தார்.

"தரகர் ஒரு ஜாதக்ம் கொடுத்துட்டு போயிருக்காருடா..பொண்ணு பேரு கயல்விழி. கடலூர். அப்பா கடலூர்லயே ஹெட்மாஸ்டர்"

"ஓ..போட்டோ குடுத்திருக்காங்களா?"

"இல்லடா..அந்த பொண்ணு உன் கம்பெனில தான் வேலை பாக்குதாம். தரகருக்கு எந்த ப்ராஞ்சுன்னு சொல்லத் தெரியல. பொண்ணு பேரு கயல்விழி. அப்பா பேரு மகாதேவன். இரண்டு வருஷமா மெட்ராஸ்ல தான் வேலை பாக்கறாளாம்"

"அப்படியா..சரிம்மா இந்த வாரம் வீட்டுக்கு வரும்போது பாத்துக்கலாம்".

போனை வைத்துவிட்டு பக்கத்தில் பிரபுவிடம் விஷயத்தை சொன்னான்.

"எந்த ப்ராஞ்சுன்னு தெரியலயாடா?"

"தெரியல மச்சி"

"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" - பக்கத்து கேபினில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர் குமார்.

"பார்ப்போம் சார். இப்போ ஜாதகம் மட்டும் தானே குடுத்திருக்காங்க. எல்லாம் முடியட்டும்"

"பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?'" - இந்த பக்கத்திலிருந்து லதா.

"கயல்விழி. கடலூர். நம்ம கம்பெனி தான். ஆனா எப்படி கண்டுபிடிக்கறது?"

"கயல்விழி மகாதேவனா?"

"ஆமா லதா..அப்பா பேரு மகாதேவன்னு தான் சொன்னாங்க"

"அவ ட்ரெயினிங்க்ல என் பேட்ச் தான். இப்போ டைடல்ல இருக்கா. மெயில் ஐடி தேடித் தரேன்"

"லதா, பாக்க எப்படி இருப்பாங்க?" - இது பிரபு. குறிப்பறிந்த நண்பன்.

"நல்லா லட்சனமா தான் இருப்பா...அமைதியான பொண்ணு..கவலைப்படாதீங்க" என சிரித்தபடியே மெயில் ஐடியைத் தேடினாள்.

அதற்குள் சுந்தர் "இல்ல லதா. மெயில் அனுப்பினா நல்லாயிருக்காது. போன் நம்பர் இருக்கா? போன்லயே பேசிடலாம்"

"போன் நம்பர் என்கிட்ட இல்ல. மத்தியானத்துக்குள்ள வாங்கித் தரேன்".

சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் தொலைபேசி எண்ணை வாங்கித் தந்துவிட்டாள். ஏற்கனவே இரண்டு பெண்களின் ஜாதகம் பார்த்திருந்தாலும் அவர்களிடம் சுந்தர் பேசியதில்லை. கயல்விழி அதே நிறுவனத்தில் வேலை செய்வது அவன் ஆர்வத்தைத் தூண்டியது. அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் அழைக்கலாம் என வேலையைத் தொடர்ந்தான்.

"ஹலோ நான் சுந்தர். லாயிட்ஸ் ரோடு ப்ராஞ்சில இருந்து பேசறேன்"

"ம்ம்..சொல்லுங்க"

"உங்க ஜாதகம் தரகர் கொடுத்திருக்காராம். அம்மா சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசலாம்னு"

"இப்பதாங்க அப்பா போன் பண்ணி சொன்னார்"

"ஓ நல்லது. உங்க பேட்ச் மேட் லதா போன் நம்பர் கொடுத்தாங்க. ஆபிஸ்ல இருக்கீங்களா?"

"ஆமாங்க. கொஞ்சம் வேலை..லேட்டாயிடுச்சு.."

"அப்படிங்களா..இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?"

"பாக்கலாம்ங்க..இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் கூப்படறீங்களா? தப்பா நினைச்சுக்காதீங்க"

"நோ நோ..இட்ஸ் ஓகே...நீங்க கிளம்புங்க. குட்நைட்"

"குட்நைட்"

'ச்சே..என்னடா இது உப்புசப்பில்லாம முடிஞ்சுடுச்சே' என ம்னதுக்குள் எண்ணியவாறே காலண்டரைப் பார்த்தான். புதன். 'சனிக்கிழமை போன் பண்ணலாம். ரெண்டு நாள் ஆபிஸ்ல ஓட்டி எடுத்துடுவானுங்க'.

வழக்கம்போல் சனிக்கிழமை பத்து மணிக்கு கண் விழித்தான். எழுந்தவுடனே கயல்விழி நினைவு வந்தது. பல் கூட விளக்காமல் போன் செய்தான்.

"சுந்தர் பேசறேங்க"

"ஹலோ சுந்தர். எப்படி இருக்கீங்க?"

"நலம். எங்க இருக்கீங்க?"

"ஆபிஸ்ல இருக்கேன். ஒரு டெலிகான் இருக்கு. ஈவ்னிங் போன் பண்றீங்களா?"

"கண்டிப்பாங்க..நாலு மணிக்கு பண்ணவா?". அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

'என்ன இவ..பிடி கொடுக்காமலயே பேசறாளே..இத இப்படியே விடக்கூடாது. மறுபடியும் சாயந்திரம் போன் பண்ணிட வேண்டியதுதான்'. எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

மதியம் சாப்பிட்டுவிட்டு திருட்டி சிடியில் படம் பார்த்துக்கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையும் கவனித்தபடி இருந்தான். சரியாக நான்கு மணிக்கு கயல்விழியை மீண்டும் அழைத்தான்.

"ஹலோ..என்ன இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கீங்களா?"

"ஆமாங்க..இன்னும் வேலை முடியல"

"என் ப்ரெண்ட் ஜஸ்டின் கூட உங்க ப்ராஜெக்ட்ல தான் இருக்கான்"

"ம்ம்..ஜஸ்டின் தெரியும்ங்க.. அவர் வேற டீம். நான் டெஸ்டிங்ல இருக்கேன்"

"ஓ குட்.இப்போ நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்...உங்க ஆபிசுக்கு வரலாமா?? உங்களைப் பார்க்க முடியுமா?"

"நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிலாம்னு இருக்கேன்"

"அப்ப நல்லதா போச்சு..உங்களை டைடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.. அப்படியே எங்கயாவது சாப்பிட போலாம்"

"இல்லைங்க..இன்னொரு நாள் பார்க்கலாமே...வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு"

"உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயப்பட்றீங்களா? அதெல்லாம் பார்த்துக்கலாம்ங்க"

"இல்ல சுந்தர். பரவாயில்லை இருக்கட்டும் இன்னொரு நாள் பாக்கலாம்"

"கல்யாணத்தை விடுங்க. ஆஸ் எ கலிக்..ஒரே கம்பெனியில வேலை பார்க்கறோம். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா மீட் பண்ணலாமே..அட்லீஸ்ட் பக்கத்துலயே பெசண்ட் நகர் அஷ்டல்ஷ்மி கோயிலுக்காவது போலாம்ங்க"

"ப்ளீஸ் சுந்தர்..போனா லேட் ஆயிடும். ரூம் மேட் கூட வெளிய போறதா ஏற்கன்வே ஒரு ப்ளான் இருக்கு"

"இதுக்கு மேலயும் வரலைனா நான் என்னங்க சொல்றது"

"சுந்தர்..நான் எதுக்கு வரலைன்றதுக்கு உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டாம். இருந்தாலும் உங்க கிட்ட சொல்றேன். தப்பில்லை. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி. ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டுல மணிகண்டன்னு ஒருத்தரோட ஜாதகம் பார்த்தாங்க. அவரும் நம்ம கம்பெனி தான். ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்துச்சு. நாங்களும் பேசிப் பழகிட்டோம். நிச்சயதார்தத்துக்கு கூட நாள் குறிச்சுட்டாங்க. நானும் மணிகண்டனும் போன்ல பேசிக்கிட்டோம். நேர்லயும் மீட் பண்ணோம். கிட்டத்தட்ட ஒரு மாசம் சேர்ந்து சுத்தினோம். எல்லாம் கூடி வர்ற நேரத்துல நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் முன்னாடி என் தாத்தாவுக்கும் அவரோட பெரியப்பாவுக்கும் சின்ன சண்டை வந்து எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. நான் வீட்டுல சொல்றதை மீறவும் முடியாது. என்னால எதுவும் பண்ண முடியல. நான் சின்ன டவுன்ல வளர்ந்த பொண்ணு. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடிய்ல. நான் இப்பதான் அதை ஓரளவு மறந்திட்டிருக்கேன். நம்ம விஷயத்துலயும் அதே மாதிரி எதுவும் வருத்தம் தர்றா மாதிரி நடக்க வேண்டாம். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாம் நிச்சயமாகட்டும். அதுக்கப்புறம் நானே உங்களுக்கு போன் பண்றேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம். சாரி சுந்தர்."

சுந்தர் எதுவும் கூறும் முன்பே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அதற்கு அடுத்த வாரம் சுந்தர் ஊருக்குச் சென்றபோது கயல்விழியின் ஜாதகத்தில் பத்து பொருத்தத்திற்கு ஆறு தான் பொருந்தி வருவதாயும் தரகரிடம் வேறொரு பெண்ணின் ஜாதகத்தைக் கேட்டிருப்பதாகவும் அவன் அம்மா சொன்னார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.



தோப்பில் ஒரு நாடகம்

'உலகமே ஒரு நாடக மேடை'ன்னு பெரியவங்க சும்மா சொன்னாங்களோ இல்ல காசு வாங்கிட்டு சொன்னாங்களோ தெரியாது. ஆனா காலேஜ்ல படிக்கிற காலத்துல எதுனா ஒரு மேடை கிடைச்சா அதுல ஒரு ஸ்கிட்(Skit) ஏத்தறதுக்கு ஒரு கூட்டமே எப்பவும் காத்துகிட்டு இருக்கும். இதுக்காகவே பசங்க மண்டையை உடைச்சிகிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவானுங்க. அப்ப ரிலீஸ் ஆகி இருக்கற எதுனா ஒரு படத்தை அப்படியே உல்டா பண்ணிட்டா ஒரு ஸ்கிட் ரெடி.

ஆனா அதை விட சுலபமா சினிமாவுல அம்மா செண்டிமெண்டும் தாலி செண்டிமெண்டும் எப்படி காலம் காலமா நிலைச்சு நிக்குதோ அதே மாதிரி ஸ்கிட்டுக்கும் ஒரு எவர்க்ரீன் கதை இருக்கு.

முதல் வேளையா சினிமா ஹீரோக்கள்ல நாலஞ்சு பேரை செலக்ட் பண்ணிக்கனும். இது மாதிரி செலக்ட் பண்ணும்போது தான் கவனமா இருக்கனும். நாம் ஒன்னும் 'அபிநயா' ஆட்கள் இல்ல. அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு "அண்ணன் -தம்பி-பங்காளி"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.

இந்த ஹீரோக்க்ள் செலக்ட் பண்ணும்போது விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் ஆடியன்ஸ் கிட்ட ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க இவங்க இருந்தா நல்லது.

இப்ப உதாரணத்துக்கு நாலு ஹீரோவை செலக்ட் பண்ணிப்போம். இளைய தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார், 'காக்க காக்க' சூர்யா, 'பிதாமகன்' விக்ரம் இது மாதிரி. .நிறைய பசங்க நடிக்க(!!) ஆசைபட்டால் இன்னும் சில ஹீரோக்களை சேத்துக்கலாம். அதுனால நம்ம மெயின் ஸ்கிரிப்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுக்காக ஜெயம் ரவி,விஷால் இப்படியெல்லாம் சேர்த்தா நடிக்கறதுக்கு எந்த பையனும் வரமாட்டான்.

இப்போ சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் மட்டும் ஏன் குறிப்பிட்ட பட ரோல்ன்னு சந்தேகம் வ்ரும். நம்ம இளைய தளபதிக்கும், சிம்புவுக்கும் எந்த படமா இருந்தாலும் ஒரே மானரிசம் பண்ணி ஆடியன்சுக்கு புரிய வச்சிடலாம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கஷ்டம். அதுனால 'காக்க காக்க'-ல 'உயிரின் உயிரே' பாட்டை போட்டுட்டு சூரியாவை ஓட விட்டுடலாம். ஒரு அழுக்கு பனியனும் லுங்கியும் குடுத்து பிதாமகன் கெட்டப் கொண்டுவந்துடலாம்.

இப்ப கதைக்கு வருவோம். எந்த மேடைல இந்த ஸ்கிட்டைப் போடப் போறோங்கிறதைப் பொருத்து ஸ்டேஜ்ப்ளேயில்(படத்துக்கு ஸ்கீரின்ப்ளே-ன்னா இதுக்கு ஸ்டேஜ்ப்ளே தானே) சின்ன சின்ன மாறுதல் வரும். முதல்ல காலேஜ் லெவல் மேடைக்கு கதையைப் பார்ப்போம்.

கதையோட முதல் பாகம் - இந்த நாலு ஹீரோவுக்கும் தனித்தனியா ஒரு இண்ட்ரோ சாங்க் போட்டு வரிசையா மேடையில ஏத்தனும். இவங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே உயிர் நண்பர்கள். ஒரே காலேஜ்ல ஒன்னா ஜாயின் பண்றாங்க. இது நம்ம காலேஜ் இல்ல. அதே ஊரில் இருக்கற வேற காலேஜ். அந்த காலேஜ் பேரை சொல்லி பாலிடிக்ஸ் பண்றதும் சொல்லாம் விடறதும் நம்ம விருப்பம் தான்.

அந்த காலேஜ்ல சேர்ந்தப்புறம் நம்ம பசங்க தண்ணி,தம்மு, பிகரு, ஆட்டம் பாட்டம்னு கெட்டுப்(?!) போயிடறாங்க(அதாவது உருப்பட்டுடறாங்க!). பரிட்சைல வரிசையா கப்பு வாங்கித் தள்றாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய தோல்வி அடைஞ்சு நொந்து போறாங்க. அப்படியே கட் பண்ணிடறோம்.

இப்போ கதையின் அடுத்த பாகம். அதே நாலு ஹீரோ. நம்ம இன்ஜினியரிங் காலேஜுக்கு படிக்க வராங்க. ஒழுக்கசீலர்களா(?!) நல்லா படிச்சு. கோல்ட் மெடல் வாங்கி பெரிய ஆள் ஆயிடறாங்க. இந்த இடத்துல நம்ம தலைவரை லெக்ட்சரரா போட்டு அட்வைஸ் பாட்டு ஒன்னு வேணும்னா போட்டுக்கலாம். நம்ம காலேஜ்ல படிச்சு ஒவ்வொருத்தரும் டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும் வாழ்க்கையில வெற்றிப் படிக்கட்டுல ஏறி போயிட்டே இருக்காங்க. சாரி ஒரு சின்ன கரெக்ஷன்...மேல இன்ஜினியரிங் காலேஜின்னு சொல்லிட்டதால "டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும்" இதைக் கட் பண்ணிடலாம். அவ்ங்க பொறியாளர்களா மட்டும் வெற்றி படிக்கட்டுல ஏறி போறாங்க.

கதை அவ்ளோ தான். இதுல அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கரெக்டா பாட்டைப் போட்டுட்டா ஸ்கிட் ரெடி. கூடவே இரண்டு பசங்களுக்கு சுடிதாரை கடன் வாங்கி மாட்டி விட்டு ஸ்தீரிபார்ட் சேர்த்து ரொமாண்டிக் பாட்டு ரெண்டையும் சேத்துக்கலாம். இவங்க ஸ்டேஜ் ஏறினதும் விசில் பிச்சு உதறிடும். பாட்டு தேர்ந்தெடுத்து போடறதுல தான் நம்ம வெற்றியே இருக்கு.

இதே கதையை டிபார்ட்மெண்ட் விழா எதுக்காவது போட்டால், காலேஜுக்கு பதில் டிபார்ட்மெண்டுக்கு மாத்திடனும் . நம்ம நாயகர்கள் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சு நாசமா போற மாதிரியும் நம்ம டிபார்ட்மெண்டுல படிச்சு உருப்படற மாதிரியும்.

இதே ஹாஸ்டல் டே-ன்னா ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நல்லவனா வல்லவனா ஆகற மாதிரியும் 'டே ஸ்காலர்'னா நாசமா போறதாகவும் மாத்திக்கலாம். இப்படி இடத்துக்கு ஏத்த மாதிடி கஸ்டமைஸ் செய்தால் எந்த மேடைக்கும் பொருந்தும் ஒரு எவர்கிரீன் ஸ்கிர்ப்ட் இது.

இதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) )

ஆனா அது பெருசா ஆப்பு வாங்க வாய்ப்பு இருக்கு. ஆடியன்சுல எவனையும் நாம மேடைல இருக்கும்போது கத்தவோ சேர் மேல ஏறி நின்னு பெல்டால தூக்கு போடவோ விடக் கூடாது(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமில்லையா?நாம கீழே இருந்தப்போ செய்தது தானே நமக்கு திரும்பக் கிடைக்கும்).

அதுக்கு முன்னேற்பாடு நடவடிக்கையா முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும். அவனுங்களை ஒரே இடத்துல உக்கார விடாம அரங்கத்துல அங்கங்கே நாலு பேரா நிக்க வைச்சா இன்னும் நல்லது.

பாட்டு வரப்போ தியேட்டர்ல தம்மடிக்க போற மாதிரி நம்ம ஸ்கிட் வரும்போது நம்ம செட் பசங்க எல்லாரையும் தம்மடிக்க அனுப்பிடனும். இந்தக் கொடுமையைப் பார்த்துட்டு நட்புக்காக எவ்வளவு நேரம் தான் அவங்களால பொறுமையா இருக்க முடியும். நம்மாளுங்களே கத்த ஆரம்பிச்சிட்டா அது நமக்கு பெருத்த அசிங்கம். அதுக்கெல்லாம் நாம் அசர மாட்டோம். அது வேற விஷயம்.

இதுமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் + குத்து வாங்கலைனாலும் நிறைய பின்னூட்டம் வாங்கின பதிவு மாதிரி கரையேறிடலாம்.

அப்போ நடிக்க ஆரம்பிச்சது இப்பவும் தினம் தினம் நடிக்க வேண்டி இருக்கு. பின்ன என்னங்க....எவ்வளவு நேரம் தான் வேலை பார்க்கிறா மாதிரியே நடிக்கறது ;).



ராக்கி - ரக்ஷாபந்தன் எக்ஸ்க்ளூசிவ்





அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி...



இன்றும்

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.

நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது 'ஹார்ட் அட்டாக்'கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க "என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்" என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு 'கார்த்திக்' எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.

தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?



பொன்னான மனமே! பூவான மனமே!!



Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................

This is the way life is ......................



என் புத்தக அலமாரியில்..

நன்றி: Sivabalan


கிரிக்கெட்டாக இருந்தாலும் புத்தகமாக இருந்தாலும் ஓசி காஜி அடிக்கற சுகமே தனி தான். கடந்த ஓரிரு வருடங்களாகத் தான் நானாக புத்தகங்கள் வாங்கி சேகரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கோடை விடுமுறைகளில் சொந்த கிராமத்திற்குச் செல்லும் போது என் ஒன்று விட்ட சித்தப்பா அறிமுகப்படுத்திய ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்கள்தான் என் முதல் வாசிப்பனுபவம். அவர் ஒரு பாலகுமாரன் ரசிகர். அவர் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிப்பதற்குள் விடுமுறை கழிந்துவிடும். ஓஷோவை வாசிக்கத் தந்தவரும் இவரே.

முதன்முதலில் நூல்கம் சென்றது மழைக்கு ஒதுங்குவதற்குத் தான். எதற்காகவோ என் அப்பா என்னைத் திட்ட சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டேன். சற்று நேரத்தில் தூரல் வலுத்து மழை பெய்ய அருகிலிருந்த மாவட்ட கிளை நூலகத்தில் நுழைந்தேன். அதன் பின்னர் தான் நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்ப நாட்களில் நூலகம் எனக்கு அந்நியமாகவே இருந்தது. தினசரிகளையும் வாரப் பத்திரிகைகளையும் படித்துவிட்டு கிளம்பிவிடுவேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்ல தயக்கமாகவே இருந்த்து. அந்த தயக்கம் கலைய சில மாதங்கள் ஆனது.

தேவன், புதுமைப்பித்தன்,தி.ஜா, ஜெயகாந்தன்,பிரபஞ்சன் எனப் பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்தது அந்த நூலகம் தான். அந்த நூலகத்தில் இருந்து படித்த புத்தகங்களின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டுப் புத்தகம் இப்போது வீட்டுப் பரணில் எங்காவது இருக்க வேண்டும்.

கல்லூரி நாட்களில் பெரும்பாலும் ஆங்கில "Best Seller" நாவல்களும் கவிதைப் புத்தகங்களுமே வாசிக்க உவப்பாயிருந்தன. பெரும்பாலும் ஓசி புத்தகங்கள் தான். சென்னை வந்தபின் British Library துணை இருந்தது.

எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியவர் என் பெரியப்பா. என் பெரியப்பா வீட்டில் இருந்து எடுத்து வந்த திருக்குறளும்(மு.வ) பள்ளியில் பரிசாகக் கிடைத்த பாரதியார் கவிதைகளும் தான் முதலில் எனக்கே எனக்காக கிடைத்த புத்தகங்கள்.

இப்போது சென்னையில் என் அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் 50-60 புத்தகங்களில் சட்டென நினைவுக்கு வருபவை:

சுஜாதா:

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 1
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2
ஸ்ரீரங்கத்து சிறுகதைகள்
கற்றதும் பெற்றதும்
புறநானூறு - ஒரு எளிய அறிமுகம்

கல்கி:

பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
அலை ஓசை

சுந்தர ராமசாமி:

ஜே.ஜே. சில குறிப்புகள்
ஒரு புளியமரத்தின் கதை
காகங்கள் - சிறுகதை தொகுப்பு

எஸ். ராமகிருஷ்ணன்:

உபபாண்டவம்
நெடுங்குருதி
துணையெழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்

ஜெயமோகன்:

விஷ்ணுபுரம்
கொற்றவை
ஜெயமோகன் குறுநாவல்கள்

வைரமுத்து:

வைரமுத்து கவிதைகள்
தண்ணீர் தேசம்

நாளை மற்றொரு நாளே - ஜி. நாகராஜன்
காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

ஷெல்டன்,ஆர்ச்சர்,ஃபோர்சிய்த்களை தவிர்த்து ஆங்கில நாவல்களில் குறிப்பிடும்படியாக:

The Idiot - Fyodor Dostoevsky
To Kill A Mocking Bird - Harper Lee

இவையல்லாமல் கம்பெனியில் வருடாவருடம் தரும் சலுகையை பயன்படுத்தி கணிப்பொறியியல் புத்தகங்களும் :).

இங்கே மாண்டிவிடியோவில் ஆங்கிலப் புத்தகம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. வாங்க தேடிக் கொண்டிருப்பவை:

Crime and Punishment :Fyodor Dostoevsky
The Motorcycle Diaries - Che Guevera

பி.கு: மகேந்திரன், தலைப்பை மாற்றிவிட்டேன் :)



பேருந்து பயணங்களில்...

சில்லறை இல்லையென சிடுசிடுக்கும் நடத்துனரில் ஆரம்பித்து பொதுவான விஷயங்கள் எல்லாப் பயணங்களிலும் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் ஒரு புது அனுபவத்தைத் தருகிறது.

கல்லூரியில் படித்த நாட்களில் காஞ்சி-மதுரை இடையேயான பேருந்து பயணம் அலாதியானது. இரவு முழுவதுமான பயணத்தில் இரண்டு மூன்று இடங்களில் டீ அருந்த நிறுத்துவார்கள். முக்கியமாக விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு மோட்டலில் எல்லாப் பேருந்துகளும் நின்று செல்லும். முதலில் 'சூர்யா' என்ற பெயரில் சூரியனைக் கொண்டிருந்த அந்த மோட்டலின் பெயர்ப்பலகை ஆட்சி மாற்றத்துக்கேற்ப 'JJ' என்ற பெயரில் பச்சை நிறத்துக்கு மாறியது. இப்போது என்ன பெயரில் இருக்கிறதோ தெரியவில்லை. எந்த நேரம் சென்றாலும் குறைந்தது நான்கைந்து பேருந்துகளாவது அங்கு நின்றுகொண்டிருக்கும். அங்கு கண்டிப்பாக நிறுத்திச் செல்ல வேண்டும் என மேலதிகாரியிடமிருந்து வாய்மொழி ஆணை இருப்பதாக ஒரு நடத்துனர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மோட்டல்களில் இருந்து கிளம்பும் வேளைகளில் பயணிகளில் எவராவது ஒருவர் காணாம்ல போயிருப்பார். அவர் வந்து சேரும் அந்த ஓரிரு நிமிடங்களில் பயணிகள் அனைவரின் சகிப்புத்தன்மையும் தெரிந்துவிடும். இரவு முழுவதுமான பயணத்தினால் அடுத்த நாள் வகுப்புக்குச் சென்றதாய நினைவில்லை.

அதன் பின்னர் சென்னையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு வாரம் ஒருமுறையாவது காஞ்சிபுரத்திற்குப் பயணம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்தில் பல்வேறு மனிதர்களைக் காணமுடியும். அதிலும் கூட்ட நெரிசல் மிகுந்த நாட்களில் உட்கார இடம் பிடிக்க எத்தனிக்கும் நேரங்களில் ஒரு சராசரி மனிதனிடம் காணப்படும் வேகம் என்னைப் பல நேரங்களில் யோசிக்க வைத்திருக்கிறது. கையில் கிடைத்ததை ஜன்னல் வழியாக சீட்டில் எறிந்துவிட்டு இருக்கைக்கு பட்டா போடுவது நம் பண்பாடாகிவிட்டது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும் நடத்துனரோ அல்லது ஒரு நடுவயது பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் நடக்கிறது.

படியில் நின்று பயணம் செய்பவனது கண்கள் அவன் மணமானதைக் காட்டிக் கொடுக்கின்றன.
தொங்கியபடி பயணம் செய்பவன் உள்ளே இருப்பவர்களை நகரச் சொல்வதும் உள்ளே நிற்க இடம் கிடைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த கம்பியை விட்டு அகல முடியாமல் அப்படியே நிற்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்.

அழகான இள வயது மகளுடன் பயணம் செய்யும் தந்தையின் அவஸ்தைகளையும், கண்கள் உள்ளடங்கிய முதியவரின் தனிமையையும் இந்தப் பயணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

மீதி சில்லறை தராமல் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கித் தரும் நடத்துனர் பயணிகளுக்கு வில்லனாகவே தெரிவார். ஒவ்வொரு முறை நடத்துனர் தன்னைக் கடந்து செல்லும் போதும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பயணிகள் நம் பயணத்தை சுவாரசியமாக்குவார்கள்.

ஜன்னலோர இருக்கை கிடைக்காத நாட்களில் ஜன்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் பொறாமைக்குள்ளாகிறார்கள். அத்தகைய பயணங்களில் அவர்கள் ஜன்னலை மூடினால் அவர்கள் மேல் கோபம் வருவதை தவிர்க்கமுடிவதில்லை.

ஒவ்வொரு பயணத்தின் போதும் யாராவது ஒருவரின் பயணம் அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி நீள்கிறது. முன்பின் சென்றிராத ஊர்களுக்குச் செல்லும் போது இறங்க வேண்டிய நிறுத்தத்தை வந்துவிட்டதா எனத் திரும்பத் திரும்பக் கேட்பதும், இருந்தும் அந்த நிறுத்தத்தை இறங்காமல் விட்டுவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

மழைக்காலங்களில் பேருந்து பயணங்கள் நீண்டவையாக இருக்கின்றன. ஜன்னல் திரைகள் இறக்கிவிடப்பட்ட பின் பேருந்தினுள் சிறைபட்டுவிட்டது போன்ற அச்சம் எழுகிறது.

எத்தனை முறை பேருந்தில் பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அது நாம் போக வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

ஒவ்வொரு நாளும் பேருந்து பயணங்களும் அது தரும் அனுபவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.



வினையே உயிர் - 2006 USA - TCE Alumni Meet




Message from TCE principal Dr. V. Abhaikumar:

Dear Alumni,

Greetings to you, your family and your friends.

The vision of our founder Philanthropist Shri Karumuttu Thiagarajan
Chettiar has been our guiding spirit throughout the 50 years of
professional service. The Chairman of the College is Dr. (Mrs.) Radha
Thiagarajan, (former Vice-Chancellor of Alagappa University) and the
Vice-Chairman and Correspondent of the college is Mr. Karumuttu T.
Kannan,

The college has made rapid strides in the areas of Teaching &
Learning, Research and Development, Industry Interaction,
Infrastructure Development and Student related activities.

Our college is planning to organize its Golden Jubilee celebrations
during 2007-08. In commemorating the golden jubilee event, we are
organizing a get together of alumni residing in USA one in east and
another in west. The main objective of the get together is to gather a
feed back from the alumni in the areas of Teaching and Learning
processes, Research & Development, Infrastructure development and
Industry institute partnership.

Date: Aug 26th 2006
Venue: Newark Hilton

Date: Sept. 3rd 2006
Venue: Santa Clara Hilton

Hilton Newark Penn Station Gateway Center -
Raymond Blvd,
Newark, New Jersey,
United States 07102-5107
Tel: +1-973-622-5000

Tentative Agenda:

3:00 PM - 4:00 PM: Social Networking
4:00 PM - 4:15 PM: Welcome Note by Dr. V.Abhai Kumar
4:15 PM - 4:45 PM: Vice-Chairman & Correspondent Address
4:45 PM - 5:30 PM: Keynote Address by Eminent Speaker
5:30 PM - 5:45 PM: Q&A with the Keynote Speaker
5:45 PM - 6:15 PM: Break
6:15 PM - 7:30 PM: Pay It Forward - Breakout sessions
7:30 PM - 8:30 PM: Working Dinner Session plus Summary of Breakout Sessions
8:30 PM - 9:00 PM: Action Items, Next Steps

It would be a great honour, if you could participate in the meeting
and give your valuable suggestions. On behalf of Thiagarajar College
of Engineering, we cordially invite you for the get together.

It would be helpful, if you could kindly confirm your participation by
way of sending a reply to :

principal@tce.edu (or)
mpal@spikesource.com(West) (or)
manian_s@yahoo.com (East) (or)
bala.pitchandi@gmail.com.

Kindly redirect this mail to your friends residing in USA.

Looking forward to your positive response.

Thanks and regards,

Dr. V. Abhaikumar,
Principal,
TCE.



உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி!!



படத்துல இருக்கறது தான் உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. சிறுத்தை வாயில் இருந்து நீர் விழுவது தெரிகிறதா??





இதுக்குப் பேரு 'Leyenda del Puma'. Legend of Puma. இந்த சிறுத்தை சிலைக்கு பின்புறம் பாறைகளுக்கு நடுவில் ஒரு நீருற்று இருக்கிறது. அதை சிறுத்தை வாய் வழியாக பைபாஸ் போட்டு பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

மாண்டிவிடியோவில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் 'மினாஸ்' என்ற நகரம். இந்த இடத்தில் தான் இந்த நீரூற்று இருக்கிறது. இங்கு தான் சிறு குன்றுகளையாவது பார்க்கமுடிகிறது. மற்றபடி உருகுவே முழுதும் சம்வெளிப் பிரதேசம் தான்.

இது சிறுத்தைகள் நடமாடும் பகுதி. நம்ம கண்ணுல தான் ஒன்னு கூட படல.

இந்த ஊற்று ஆறாகப் பாய்வதற்கு முன் அங்கேயே 'Salus' என்ற ப்ராண்டில் பாட்டிலில் அடைத்துவிடுகிறார்கள். அருகிலேயே 'Patricia' பீர் ஃபாக்டரியும் உள்ளது.

**************************************************

இன்னொரு காமெடி...

நம்ம ரூம்மேட் கலக்கறாரு. வங்கிக் கணக்கு தொடங்க ஒரு படிவம் கொடுத்தாங்க. ஸ்பானிஷ்ல தான். ஒரு டெம்ப்ளேட்டைப் பார்த்து கட்டங்களை நிரப்பிட்டு வந்தவர் 'Marital status' -ல Single தானே போடனும்னு கேட்டாரு.

"யோவ்..உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதேய்யா" என்று கேட்டதற்கு பதில்...

"என் வொய்ஃப் விஜயவாடா-ல தானே இருக்கா...இங்க நான் தனியா தானே வந்திருக்கேன்"

இது எப்படி இருக்கு!!!



பின்நவீனத்துவக் கனவு

இன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு. நம்ம கனவில் வழக்கமா வருபவர்கள் ;-) வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.

**********************************************

தியேட்டரில் ஏதோ ஒரு செல்வராகவன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாசர் கிரிக்கெட் கோச். தனுஷ் ஒரு பந்தை அடிக்காமல் மிஸ் செய்துவிடுகிறார். உடனே நாசர் கோபமாக "பேட்ட ஒழுங்கா புடிடா பேமானி" என்று தனுஷைத் திட்டுகிறார். சுற்றி நிற்கும் இளைஞர்கள் தனுஷைப் பார்த்து சிரிக்கின்றனர்.

அடுத்த காட்சி - ஒரு ஆற்றங்கரையில் நாசர் தனுஷுக்கு அறிவுரைகள் கூறுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு ஆங்கிளில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் மறு பக்கத்தில் இருந்து ஒரு ஷாட் அருமையாக இருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள்.

"தமிழ்நாடு,ஆந்திரா, பாலிவுட் எல்லாத்துக்கும் பொதுவா ஒரு விஷயம் இருக்கு. ரஜினி, சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப்(?!) யாரும் அவ்வளவு சீக்கிரத்துல பேசமாட்டாங்க" என்கிறார் நாசர்.

உடனே தனுஷ் திரும்பி நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார்.

**********************************************

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் இந்தியா திரும்பிச் செல்கிறான். நீளமாக முடி வளர்த்திருந்தவன் ஒட்ட முடி வெட்டிக்கொண்டு வந்தான். காரணம் கேட்டதற்கு "தென்னாப்ரிக்கா வழியா போறேன். பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

**********************************************

சத்யராஜும் கவுண்டமணியும் சைக்கிள் ரிக்ஷாவில் வந்துகொண்டிருக்கிறார்கள். பின்னால் விவேக் ஒரு வேனின் டாப்பில் அமர்ந்து வருகிறார். மைக்கில் யாருக்கும் புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வருகிறார். யாரும் அவரை கவனிப்பது போல் தெரியவில்லை.

வேனில் இருந்து இறங்கிய விவேக் சீட்டாடச் செல்கிறார். குறைந்தது ஐநூறு ரூபாய் கட்டி ஆட வேண்டும். விவேக் தொடர்ந்து ஜெயித்து ஐநூறு ஐநூறாக அள்ளுகிறார்.

**********************************************

நான் காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.

ஆட்டம் முடிந்ததும் அமிதாப் "எனக்கு வயசாகிடுச்சு. என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்" என்கிறார். அவர்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள்.

**********************************************

தெருமுனையில் என் அப்பா வந்துகொண்டிருக்கிறார். என் அம்மா என்னிடம் "இப்போதெல்லாம் இவர் தெருல அக்கம்பக்கம் எல்லார்கிட்டயும் பயங்கரமா சண்டை போட்றாரு..என்ன-ன்னு கேளுடா" என்கிறார்.

"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்" என்கிறேன் நான்.

என் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.

**********************************************

"சாலைப் பணியாளர் பிரச்சனைக்குத் தீர்வு வந்தால் பாமக்-வுடன் உறவு வைத்துக் கொள்வீர்களா?" - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்திடம் கேள்வி கேட்கப் படுகிறது.

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைச்சா கூட்டணிக்குத் தயார் சார்" என்கிறார் கேப்டன்.

உடனே ஜிமெயிலில் அவர் இன்பாக்சில் 43 பழைய மடல்கள் 'Unread'-ஆக மாறுகின்றன. இதைக் கண்ட விஜயகாந்த் "இல்லை சார்..எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்வோம். இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது" என்றவுடன் அவை மீண்டும் படிக்கப்பட்டவையாக மாறுகின்றன.

பத்திரிகையாளர் கூட்டம் முடிந்ததும் கேப்டன் ஒவ்வொன்றாக பழைய மடல்களைத் திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.

**********************************************

அவ்வளவு தான்ங்க...இதுக்குள்ள விழிப்பு வந்துடுச்சு...ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வந்த கனவு. பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.

புரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்கப்பு!!!!



முகமில்லாத காதலி!

எனக்கு
முகமில்லாத காதலி
ஒருத்தி இருக்கிறாள்!

அவளுக்குப்
பல முகங்களைப்
பொருத்திப் பார்த்தேன்!

ஆனால்
உன் முகம்தான்
அழகாகப் பொருந்துகிறது!

இதை அவளிடம்
நான் சொன்ன இரவு
கனவுகளால்
நீண்டிருந்தது!

நாம்
பேசிக் கொண்டிருக்கும்
வேளைகளில்
அவள் தனியே விலகிச்
சென்றுவிடுகிறாள்!

நீ என்னைப் பார்த்துப்
புன்னகைக்கும்
தருணங்களில் அதைக்
கவனியாதவள் போல்
தலை திருப்பிக்கொள்கிறாள்!

என் காதலை
உன்னிடம் சொல்லும்
அந்த நாளில்
அவள்
மரித்துப் போவாள்!

உனக்கு நான்
எழுதும் காதல்கடிதம்
அவளுக்கான
இரங்கற்பா!

நம் இல்லறம்
அவளுக்கு நாம்
செலுத்தும்
அஞ்சலி!



உருகுவே குடியரசு தினம்!

ஜூலை 18 -

இன்று "Jura de la constitucion" - அதாவது உருகுவேயின் குடியரசு தினம். 1830-ஆம் ஆண்டு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்.


பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் அமெரிக்கா முழுதும் சுதந்திரப் போராட்டங்கள் துவங்கியது. இதன் பின் உருகுவே பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவின் பகுதியாக இருந்தது, பின்னர் 1825-இல் மீண்டும் ஒரு புரட்சி ஆரம்பித்து ஆகஸ்ட் 28,1828-இல் தனி சுதந்திர நாடாக உருவானது.

ஹோசெ கெர்வாசியோ ஆர்த்திகாஸ் (Jose Gervasio Artegas) என்ற இராணுவ அதிகாரி இந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவருடைய மக்களாட்சி குறித்த கொள்கைகள் தென் அமெரிக்கா தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் சீரான வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. நிலையான அரசாலும் முன்னேறிய சமூக அமைப்பாலும் "தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து" என்றும் அழைக்கப்பட்டது.

இதன்பின் 1973-இல் தொடங்கி 11 வருடங்கள் இராணுவ ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன்பின் 1984-இல் மீண்டும் மக்களாட்சி நிறுவப்பட்டது.

பொருளாதாரத்தில் விவசாய ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கிறது. பிரேசிலும் அர்ஜெண்டினாவும் தான் முக்கிய இறக்குமதியாளர்கள்.அண்டை நாடுகளான இவற்றுடன் எந்த சுணக்கமும் இல்லை. மாடு மற்றும் பன்றி மாமிச உணவுத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.


மக்கள் தொகை மொத்தமே முப்பத்தி நான்கு லட்சம் தான். கல்வியறிவு 98%.

மக்களிடையே சமுதாய விழிப்புணர்ச்சி இருக்கிறது. நட்புடன் பழகும் மக்கள்.

ஓட்டுப்பதிவு 90% மேல் இருக்குமாம். யாருக்கும் வோட்டளிக்க விரும்பவில்லையெனில் ஓட்டுச் சீட்டில் அதையும் பதிவு செய்யலாம். அரசு சலுகைகள் பெறும்போது வோட்டளித்துள்ளாரா எனப் பார்த்த பின்பே வழங்கப்படும். அப்படி வோட்டளிக்காவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பொது இடங்களில் புகை பிடிப்பதை அரசு தடை செய்திருக்கிறதாம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்திய நாடு. இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். இப்போதெல்லாம் தகுதிச் சுற்றிலேயே தேறுவதில்லை.

உருகுவே பற்றிய தகவல்களுக்கு:

விக்கிபீடியா
http://www.uruwashi.org
http://fromuruguay.blogspot.com