'ஓடு'காலி

சென்ற ஆண்டு ஆரம்பத்திலிருந்து தான் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு 3-4 கி.மீ ஓட ஆரம்பித்திருந்தேன். அதுவும் முறையாக கிடையாது.  ஒரு வாரம் ஒழுங்காக ஓடியிருந்தால் அடுத்த இரண்டு வாரங்கள் அம்பேல். எல்லோரும் சந்திக்கும் சவால்கள்தான்:

"நைட்டு லேட்டாத்தானே தூங்கினோம், நாளைக்கு ஓடலாம்"

 "நேத்தே எக்ஸ்ட்ரா பத்து நிமிஷம் ஓடியாச்சு. நாளைக்கும் சேர்த்து ஓடிக்கலாம். இன்னிக்கு லீவு உட்றலாம்"

"நைட்ஷோ படத்துக்கு போவனுமே"

 "இன்னிக்கு ஆபிசுக்கு சீக்கிரம் போகனுமே"

 "லைட்டா ஜூரம் வர்றா மாதிரியிருக்குல்ல, ஜலதோஷமோ?"

 "லைட்டா கணுக்கால் வலிக்குதே"

"இன்னைக்கு அன்னையர் தினம்ல?!"


படுக்கையிலிருந்து எழுந்திருப்பதே சவால். Obviously. ஆனாலும் போனில் Runkeeper  நிறுவிக்கொண்டு நானும் ரன்னர் என்று பெருமை பீத்தலை மட்டும் அப்போதே ஆரம்பித்துவிட்டேன்.

வேலை பார்க்கும் நிறுவனம் சென்ற செப்டம்பரில் நடத்திய Charity Run தான் நான் கலந்துகொண்ட முதல் ஓட்டம். தூரம் அதிகமில்லை. 5 கி.மீ தான். அது ஓடிய சூட்டோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு நண்பர்களையும் (டெனிஸ், பகவதி) கூட்டணி சேர்த்துக்கொண்டு Wipro Chennai Marathon-ல் 10K-விற்கு பதிவு செய்தாகிவிட்டது. அவ்வப்போது எட்டிப்பார்க்கும் டிவிட்டரிலும் #twitrunners (அண்ணன் @yathirigan, @jmr_chn முதலியோர்) தூண்டுதலாக இருந்தனர்.

ஆரம்பத்தில் கிலோமீட்டருக்கு 6'30" தான் என்னுடைய வேகம். டெனிஸும் பகவதியும் இன்னும் தொப்பை வளர்க்காத, 25 தாண்டாத இளஞ்சிங்கங்கள். அதிலும் டெனிஸ் பள்ளிக்காலத்திலிருந்தே short distance runner. அவர்கள் இருவரும் 55  நிமிடம் என டார்கெட் வைக்க நான் 65-ல் இருந்தேன். ஒழுங்காக பயிற்சி எடுக்க திட்டமிட்டதோடு சரி. 2 வாரம் ஒழுங்காக ஓடி பயிற்சி செய்திருப்பேன். திரும்பவும் 'பழைய குருடி கதவைத் திறடி'. அப்படியும் சென்னை மாரத்தானில் 10 கிலோமீட்டரை 63 நிமிடத்தில் முடித்தேன். மக்களோடு ஓடும்போது ஒரு வேகம் வந்துவிடுகிறது. ஓட்டத்தின் இரண்டாம் பாதியில் நாக்கு தொங்கினாலும் ஓரளவு சமாளித்துவிட்டேன்.

அந்த தைரியத்தில் பாண்டிச்சேரி ஆரோவில் மாரத்தான் 10K-விற்கும் பயிற்சியில்லாமல் ஓடிவிடலாம் என நினைத்தது முட்டாள்தனம். சென்னை மாரத்தான் ஐஐடி வளாகத்தில் சமமான சாலையில். ஆரோவில்லில் கடினமான பாதை. அதிலும் ஓட்டத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் தவறான பாதையில் ஓடிவிட்டோம். பயிற்சியில்லாதது மட்டுமில்லாமல் ஆரம்பத்திலேயே அதிக வேகத்தில் ஓடியதால் பாதியிலேயே பெட்ரோல் தீர்ந்துவிட்டது. கால் தசை வலிக்க ஆரம்பித்தது. கடைசி நான்கு கிலோமீட்டர்கள் கிட்டத்தட்ட Run/Walk தான். 64 நிமிடங்களில் முடித்திருந்தேன். முடிந்தவுடன் கொடுத்த பொங்கல் வடையில் வலியெல்லாம் பறந்தது.

'பாடின வாயும் ஓடின காலும் நிக்காது' என்பதால் அடுத்தது "குவாட்டரைத் தூக்கறோம், ஹாஃப்பைத் தாக்கறோம்" என்று முடிவெடுத்து ஜூலை Dream Runners Half Marathon-க்கு பதிந்து வைத்தேன். ஆரோவில்லில் வாங்கிய அடி நன்றாக நினைவில் இருந்ததால் சரியான பயிற்சி எடுக்கும் முடிவில் இருந்தேன். இணையத்தில் Running Tips என்று எங்கெல்லாம் எழுதியிருக்கிறதோ அங்கெல்லாம் படித்தேன். படித்தேன், அஷ்டே.

மே மாதம் டெனிஸ் எங்கள் வீட்டருகே குடிவந்தான். மூன்று பேரும் சேர்ந்து Runkeeper.com-லிருந்த ஒரு Beginner Plan-ஐத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். 5 கிலோமீட்டரில் ஆரம்பித்து வாரநாட்களில் 8 கிலோமீட்டர் வரையிலும் வாரயிறுதியில் நீண்டதூர ஓட்டமாகவும் இருந்தது. ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஓடவேண்டிய தூரம் அதிகரித்தது.  ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. மூவரும் இரண்டு வாரங்களுக்கு விடாமல் ஓடினோம். பின்னர் பகவதி பெங்களூருக்கு மாற்றலாகி சென்றான். டெனிஸுக்கு வேலைப்பளு அதிகமானாதால் பயிற்சிக்கு வருவதை நிறுத்தினான். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத துரைசிங்கமாய் தனியாளாய் பயிற்சியைத் தொடர்ந்தேன். மே மாதம் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களாவது ஓடியிருப்பேன்.

கத்தரி வெயில் கழிந்ததும், கவர்னர் ரோசய்யா அளவுக்கு இல்லையென்றாலும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது கல்யாணம் காதுகுத்துகளுக்கு  சென்று விழாவை சிறப்பிக்க வேண்டியிருந்தது. ஜூனில் Runkeeper Training Plan-ல் 50% கூட ஓடியிருக்கமாட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 17 கிமீ. ஓடினேன். இரண்டு மணி நேரம் எடுத்தது. இரண்டரை மணி நேரத்தில் அரை மாரத்தான் முடித்துவிடலாம் என நம்பிக்கை வந்தது.

Race Day. லேசான தூறலுடன் அட்டகாசமான வானிலை. "என்ன..காத்துதான் வரல!". பெசன்ட் நகரில் ஆரம்பித்து மெரினா வரை சென்று திரும்ப வேண்டும். முதல் மூன்று கிலோமீட்டருக்கு நானும் பகவதியும் ஒன்றாக ஓடினோம். அதற்குள் அவனுக்கு தண்ணீர் தாகமெடுக்க வேகத்தைக் குறைத்துக்கொண்டான். நான் ஒரே சீரான வேகத்தில் ஓடி முதல் Aid Station-ஐ அடைந்தேன். அயர்ச்சியோ தாகமோ இல்லையென்பதால் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கி கையில் வைத்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன். பட்டினப்பாக்கத்தில் ஒரு டிராபிக் போலீஸ் "Good try! Good Try!" என கைதட்டி உத்வேகம் தந்தார். புகைப்படக்காரர்கள் எல்லோருக்கும் போஸ் கொடுத்துக்கொண்டே ஓடினேன். நான்கைந்து போட்டோ தேறியிருக்கிறது :D.

சாந்தோமை தாண்டும்போது முதலிடத்தில் ஓடியவர் யு-டர்ன் அடித்து ரிடர்ன் வந்துகொண்டிருந்தார். பின்னால் ஒரு 300 மீட்டரில் இரண்டாவது வீரர். எதிரில் ஓடி வருபவர்களுக்கு தம்ஸ்-அப் காட்டிக்கொண்டே நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன். பயிற்சியின்போது டயர்டாகும்போதெல்லாம் 1 முதல் 20 வரை தொடர்ந்து 20 முறை எண்ணி முடிக்கும்வரை விடாமல் ஓடவேண்டுமென ஓடுவேன். அதேபோல் எண்ணிக்கையை ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் முன்னால் ஓடும் சிலர் நடக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் எனக்கும் நடக்க தோன்றியபடியிருந்தது. ஆனாலும் ஐ.ஜி அலுவலகம் தாண்டும்வரை நிற்கக் கூடாதென சிறிது வேகத்தைக் குறைத்து ஓடினேன். ஐ.ஜி அலுவலகம் தாண்டியதும் 100 மீட்டர் நடந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். எதிரில் டெனிஸ் வந்துகொண்டிருந்தான். 12 கி.மீட்டரில் (73 நிமிடத்தில்) யு-டர்ன் அடித்து திரும்ப வரும்போது காந்தி சிலையருகே யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். எங்கேயோ கேட்ட குரல்! கல்லூரி நண்பன் விநாயக். 'மாப்ள!..வா! வா! சீக்கிரம் வா!' என கத்திக்கொண்டே ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சிறிது தூரத்தில் யாத்ரீகன் தம்பதி சமேதராய்.

16 கி.மீட்டர் தாண்டியதும் 'இன்னும் ஐந்தே கிலோமீட்டர், நாம் தினம் ஓடும் தூரம்தான்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் கால் நகரவில்லை. லீலா பேலஸ் ஓட்டலைத் தாண்டியதும் சிறிது தூரம் நடந்தேன். அடையாறு பாலம் வரை நிற்காமல் ஓடவேண்டும் என மீண்டும் ஓட ஆரம்பித்தவன் ஒரு அரை கிலோமீட்டரிலேயே அடுத்த Aid Station கண்ணில் தென்பட்டதும் ஓடுவதை நிறுத்திவிட்டேன். "இதுக்கு மேல் ஓடாமல் நடந்தே முடிச்சா எவ்ளோ நேரமாகும்?" என சிந்தனை வேறு. "மவனே இவ்ளோ தூரம் ஓடிட்டோம்..ஓடி முடிக்கறோம்..நெஞ்சேஏஏஏ எழுஊஊஊ"ன்னு எனக்கு நானே மோட்டிவேஷன் பாட்டெல்லாம் பாடி ஓடிக்கொண்டிருந்தேன். மீண்டும் நிற்கலாமா என யோசித்தவனை ஒவர்டேக் செய்த ஒரு தாத்தா அடையாறு பாலம் தாண்டி கொண்டு வந்து சேர்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தார். இன்னும் 2 கிலோமீட்டர்கள். "கடைசி 500 மீட்டர் நல்லா வேகமா ஓடறோம். அதனால இப்ப கொஞ்சம் நடந்துக்கலாம்" என்று ஒரு 100 மீட்டர் நடந்தேன். மீண்டும் ஓட ஆரம்பித்து கடைசி Aid Station-ஐக் கடந்தேன். ஓடுபவர்களின் முகங்களில் தண்ணீர் பீய்ச்சியடித்து உதவிக்கொண்டிருந்தவர் என் மேல் தண்ணீர் பீய்ச்சயபடியே ஐந்தாறு அடி உடன் ஓடிவந்தார். ஒவ்வொரு Aid Station-லும் சிறுவர்களும் பெரியவர்களுமாய் பெரிதும் உதவினர். Hats off! Hats off to the organizers!!

கடைசி கிலோமீட்டர் வேகமாக ஓடவேண்டும் என்ற எண்ணம் பலிக்கவில்லை. கணுக்காலில் லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதனால் மிக மெதுவாகவே ஓடினேன். கடைசி 150 மீட்டர் கிரவுண்டுக்குள் நுழைந்ததும் வேகத்தைக் கூட்டி எல்லைக் கோட்டை 02:24:46-ல் கடந்தேன். "சாதிச்சிட்டோம்டா தம்பி!!"!


"ஆகஸ்ட்ல ஐதராபாத்ல ஓடறேன். அக்டோபர் கோயமுத்தூர்ல கூப்டுருக்காங்க! டிசம்பர்ல சென்னைல மாரத்தான்! அடுத்த பிப்ரவரி எங்க இருப்பேன்ன்னு எனக்கே தெரியாது! ஐயாம் வெர்ர்ரி பிஸி"



?! - 2010

ப்லாக்கர் கடவுச்சொல்லே கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் "2010-ல் ஒரு பதிவாவது போடப்பா" என மேற்சென்று இடித்த தல கைப்ஸ் பொருட்டு :-)

பதிவு மட்டுமின்றி ஜிடாக், பேஸ்புக், ஆர்குட் என சகலவிதமான லெளகீகங்களிலிருந்தும் விலகியே இருக்க நேர்ந்தது. வேலை ஒரு காரணமென்றால், வாங்கி மூன்று வருடமான லேப்டாப் உள்ளே அழுக்காகிக் கிடக்குமென மழையில் நனைத்து கழுவியது இன்னொரு காரணம். டிவிட்டரில் மட்டும் தலைமறைவாய் மற்றவர்களின் கீச்சுகளைப் படித்து பொழுதைப் போக்கியாயிற்று. அவ்வப்போது ரிட்டீவிட்டியும் புலம்பியும் அரிதாக படித்ததை பகிர்ந்தும் மூன்று ஆண்டுகளில் ஆயிரத்து சொச்சம் டிவீட்டுகள் மட்டுமே அடித்திருப்பதிலேயே எத்தனை ஆக்டிவ்வாக இருக்கிறேன் என்பது வெள்ளிடை மலை. பலமுறை பதிவெழுதும் எண்ணம் எழுதும்போதெல்லாம் நான்கு வரிகளுக்கு மேல் கார்பரேட்டர் அடைத்து நின்றுவிட்டது. இனியேனும் ஏதாவது தேறுகிறதாவெனப் பார்க்க வேண்டும். வழக்கத்திற்கு அதிகமான சோம்பலும் சிறுது சோர்வுமாய் கழிந்த 2010-ல் ரிவைண்ட் ஓட்டியதில் சில குறிப்புகள் இங்கே.

*********************************************

தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு ஊரில் தனியாக இருந்த பாட்டி சென்ற ஆண்டு இறுதியில் காஞ்சிக்கு வந்துவிட்டார். வாரத்திற்கு ஒரு முறையாவது ஊருக்குப் போகவேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர், பொங்கல் முடிந்ததும் கிராமத்து வீட்டில் பூஜை செய்ய சென்று அன்றிரவே அங்கு இறந்தார். அறுபது ஆண்டுகள் தான் வாழ்ந்த வீட்டிலேயே அவர் மரணித்தது நெகிழச் செய்தது. 'வயசான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம போயிட்டாங்க' என்று உறவினர்கள் சொன்னது ஆறுதலா எனத் தெரியவில்லை. அவர் இருந்தவரை ஆண்டுக்கு சில முறையாவது அங்கு சென்று திண்ணையிலும் சமையல்கட்டு படியிலும் வாசலிலும் அமர்ந்தபடி சிறு வயது நினைவுகளை அசைபோடுவது இனி வாய்க்கப் போவதில்லை.

*********************************************

ஏப்ரலில் நண்பனின் திருமணத்திற்காக மதுரை பயணம். பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வரும் வழக்கமாக ஒரே மாதிரி ஜிங்குச்சா சட்டையை அணிந்து கொண்டு மண்டபத்தில் அலப்பறை செய்து 'யாருடா இவங்க' என வந்திருந்த மேன்மக்களை முறைக்கச் செய்தோம். திருநகரில் கல்யாணம் முடிந்ததும் கல்லூரிக்கு ஒரு விசிட். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு. கவுண்டர் கடையும் சுஷ்மிதாவும் அப்படியே இருந்தன. எப்படியும் ஹாஸ்டலுக்குள் விடமாட்டார்களென கல்லூரிக்கு வண்டியை விட்டோம். மூன்றாவது மாடியில் நாங்கள் குப்பை கொட்டிய வகுப்பறைகளில் மாணவச் செல்வங்கள் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தது இன்ப அதிர்ச்சி. நாங்கள் படித்த காலத்தில் மொத்த ஹாஸ்டலுக்கும் ஒரு பத்து கம்ப்யூட்டர் மட்டுமே இருந்திருக்கும். அதிலும் ஆடோ ஆடென்று விளையாடியது போக பகலிரவாக பல படங்கள் ஓடியதெல்லாம் தலைக்கு மேல் கொசுவத்தியாய் சுற்ற ஆரம்பித்தது. 'அரியர் வச்ச மக்குப் பசங்களா' இருக்குமோவென இளைய தலைமுறை எட்டிப் பார்த்ததும் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம். கீழே வந்து சில ஆசிரியர்களை சந்தித்தது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி. லெக்சரர் ஒருவர் எங்களையும் எங்கள் சட்டைகளையும் பார்த்து 'இன்னும் அப்படியேத்தான் திரியறீங்களாப்பா?!" எனக் கேட்டது நிச்சயமாய் எங்களுக்கான சர்ட்டிபிகேட் தான்.

*********************************************

கர்நாடகாவிலிருக்கும் கோவில்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி அம்மா சென்ற வருடமே கேட்டிருந்தார். இந்த வருடம் அழைத்துச் செல்ல முடிந்தது. ஷிமோகாவில் ஆரம்பித்து அப்படியே நூல் பிடித்தாற் போல் கீழிறங்கி கோவில் கோவிலாக சென்று வந்தோம். ஒவ்வொரு கோவிலுக்குள் செல்லும்போதும் அவர்களில் முகத்தில் தோன்றிய ஆனந்தமும் வெளியே வரும்போது இருந்த திருப்தியையும் பார்ப்பதற்காகவே வாயிலில் அமர்ந்து காத்திருந்தேன். கிட்டத்தட்ட 30 கோவில்களுக்கு மேல் சென்று கடைசியாக மைசூரை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பினோம். இத்தனை கோவில்களுக்கு சென்ற பின்னும் விட்டுப் போன சில கோவில்கள் குறித்து அவர் வருந்தியதற்கான காரணம் இன்னும் புரியவில்லை.

*********************************************

'நானூத்தி தொண்ணூத்தொம்பொது ரூபா பக்கிட்டி ஒன்னு கொடுப்பா' என கரைவேட்டி (கடைக்காரரை தட்டிக் ) கேட்பதை வேடிக்கைப் பார்த்தபடியே கே.எப்.சியில் பர்கரை உள்ளே தள்ளும் போதும் சரி, ராமச்சந்திராவில் அப்பா ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தபோது கேண்டினில் காலத்தைக் கழித்தபோதும் சரி, ராமச்சந்திரா மாணவிகளே அதிகம் தென்பட்டனர். மாணவச் செல்வங்கள் இப்படி வெளியே சுற்றாமல் படிப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார்கள் போல.

*********************************************

கொஞ்சமே கொஞ்சம் புத்தகங்களும் அதை விடக் கொஞ்சமாக திரைப்படங்களும் பார்த்ததில் இந்த ஆண்டு மண்டைக் குடைச்சல் சிறிது குறைவே. கடைசியாக வாங்கிய பல்பு 'அய்யனார்'. இன்றிரவு வாங்கப் போகும் பல்பு மமஅ. சில புத்தகங்கள் டீடோடலரிடம் கிடைத்த ஸ்மிர்னாஃப் போல என் கையில் சிக்கின. இப்போது bookandborrow.com வழியாக ஓசியில் புரட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பி Guy de Maupassant என்பவரின் தலையணை சைஸ் புத்தகத்தை ஓசியில் கொடுத்தவரின் நிலையை நினைத்து கையைப் பிசைந்துகொண்டிருப்பது லேட்டஸ்ட்.

********************************************

நண்பனின் தம்பி ரூமுக்கு வந்ததிலிருந்து அட்வைஸ் என்ற பெயரில் நாங்கள் மூன்று பேர் மொக்கை போட்டதிலும் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகனுக்கு மொட்டை பாட்டை லூப்பில் ஓடவிட்டு கேட்க வைத்ததிலும் தம்பி ரூமை விட்டே எஸ்ஸானான். பள்ளி மாணவர்கள் 'அங்கிள்' என்று கூப்பிட்ட காலம் தாண்டி கல்லூரி மாணவர்களே 'அங்கிள்' என கூப்பிட ஆரம்பிக்கும் காலத்தில் நாங்கள்லாம் யூத்து என்ற பீத்திக் கொண்டிருந்தாலும் நண்பர்களின் தம்பிகளோ வேலைக்கு சேரும் ஃபிரெஷர்களோ வேறு மாணவர்களோ சிக்கினால் அட்வைஸ் என்ற பெயரில் அரை மணி நேரம் அறுவையைப் போடும்போது நமக்கே லேசாக சந்தேகம் வந்துவிடுகிறது.

*********************************************

சிலபல காலமாக சுசுயிஸம் பயின்று வருகிறேன்.

'சும்மா இருப்பதே சுகம்'

**********************************************

புத்தாண்டு வாழ்த்துகள்!



?! தொடர்கிறது

காஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.

சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா?

சிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல.

****

டாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

****

சில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு(?!) ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார்.

பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.

****

அலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது.

சென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்' சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா?' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார்.

'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.

****

'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால?' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா? சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது.

சென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா?' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ்சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன்.

தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.



D70

எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.


வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.

படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.

செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.

கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.

அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.



பாட்டுத் தலைவன் பாடினால்

"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"

அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.

"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"

"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.


சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில் "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.


பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.





அதேபோல் கல்லூரியில் சீனியர் ஒருவர். எஸ்.பி.பி குரலில் பட்டையைக் கிளப்புவார். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை கரோகே பின்னணியுடன் அருமையாகப் பாடுவார். இந்த பாடலை வைத்தே பல போட்டிகளில் பரிசுகளையும் கைத்தட்டல்களையும் அள்ளியவர்.


கல்லூரி மூன்றாம் ஆண்டில் விடுதி அறையில் "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்" பாடலைப் பாடிக்கொண்டிருந்த நண்பனும் அந்த பாடல் பிடிக்காமல் போன இன்னொரு நண்பனும் சண்டை போட்டுக்கொண்டு சில நாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தார்கள்.


உருகுவேயில் இருந்தபோது உடன் பணிபுரிந்த சஞ்சீவ் கோஷால் சிறந்த பாடகன். கோஷால் என்று பெயர் வைத்தாலே குரல்வளம் பொங்கி வருமோ. கிஷோர் குமார், முகேஷ், முகமத் ரஃபி பாடிய பழைய இந்தி பாடல்களை பாடும்போதே உருகிவிடுவான். நிச்சலனமான பொழுதுகளில் அவன் பாடல்கள் துணையிருந்தன. பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.




என் சிறுவயதில் பூர்வீக ஊரில் கோவில் திருவிழா நாட்களில் மெத்தை வீட்டு தாத்தா(ஊரில் முதன்முதலில் மச்சு வைத்து வீடு கட்டியவர்; அப்பாவின் சித்தப்பா) கம்பீரக் குரலில் பஜனைகளில் பாடுவார். எழுபது வயதானாலும் அவர் குரலில் சிறிதும் பிசிறு தட்டாது. இரண்டே தெருக்கள் உள்ள அந்த ஊரில் அவர் கைகளைப் பிடித்தபடி பாடிக்கொண்டே நடந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.

அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு. ஜாலியான மூடில் இருக்கும்போது டி.எம்.எஸ் பாடல்களை ரசித்துப் பாடுவார். 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' அவரின் ஆல்-டைம் ஃபேவரைட். சிறுவயதில் ஞாயிறு மாலைகளில் அவர் பழைய பாடல்களைப் பாட, மேசையில் நான் தாளம் தட்டியபடி பின்பாட்டு பாடுவேன்.


சில வருடங்கள் முன்வரை வீட்டில் தினமும் காலை பூஜை செய்து பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். கோவில்களுக்கு செல்லும் போதெல்லாமும் பூஜைகள் முடிந்ததும் பாடுவார். சுத்துவட்டாரத்தில் ஓரளவு பிரசித்தம். இவர் பாடத் தயங்கும் வேளைகளில் மற்றவர்கள் வற்புறுத்தி பாட வைப்பார்கள். அந்த சமயங்களில் பாட ஆரம்பித்தபின் இவரை நிறுத்துவது கடினம். யாராவது "தாஸு, போதும் மங்களம் பாடுப்பா" என்று குரல் கொடுப்பார்கள். அதன்பிறகும் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பிறகே மங்களம் பாடி முடிப்பார். நன்றாக பாடுவதில் அவருக்கு எப்போதும் சிறிது கர்வம் உண்டு.


கடந்த சில வருடங்களாகவே அவர் பாடுவது குறைந்துவிட்டது. எப்போதாவது தொலைக்காட்சியில் அவர் விருப்பப் பாடல்கள் ஒளிபரப்பானால் அதனோடு சேர்ந்து மனதுக்குள் பாடிக்கொள்கிறார். குரலை உயர்த்திப் பாடும்போது குரல் உடைந்துவிடுவதால் பாடுவதில் தயக்கம். "முன்ன மாதிரி பாட முடியல..வயசாயிடுச்சு". ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.



டெஸ்குடா(ஆ)ப்பு & Vanilla Mood

சென்ற வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஃப்ளோரிடா சென்றபோது மயாமி அருகிலுள்ள West Palm Beach என்ற கடற்கரை நகரில் எடுத்த புகைப்படம் இது. கடந்த பத்து மாதங்களாக இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது.





நாங்கள் பக்கித்தனமாக டவுசரில் திரிந்துகொண்டிருக்க ஊரில் ஜாக்கிங் செய்பவன் கூட கோட் சூட் போட்டுக்கொண்டிருந்த படுராயலான ஊர். சாலைகளில் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் குறைந்து கார்கள் இல்லை. அங்கிருந்த ஒரு கேக் கடையின் வரிசையில் கூட ஏதோ கேட் வாக்கிற்கு வந்தது போல் மேக்கப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு சொத்தையே எழுதிக் கேட்ட மெனுவைப் பார்த்ததும் வண்டியைக் கிளப்பி எஸ்ஸானோம்.

கீழேயுள்ள புகைப்படமும் அங்கு எடுத்ததுதான்.




ஆயில்யன் அண்ணாச்சியின் கட்டளைக்கிணங்க! :))


***


Vanilla Mood என்ற ஜப்பானிய குழுவினரின் இசைத் தொகுப்புகளை கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அட்டகாசமா இருக்கு. நீங்களூம் கேட்டுப் பாருங்க.




***



சினிமா - தொடர்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்பதோ முதலில் பார்த்த திரைப்படமோ நினைவிலில்லை. ஆனால் சிறுவயதில் சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தது மிகவும் குறைவு. அப்பா/அம்மாவிற்கு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. (அப்பா கடைசியாக தியேட்டரில் பார்த்த திரைப்படம் 'பூவே உனக்காக'. அம்மா 'பூவே உனக்காக'விற்குப் பிறகு 'சிவாஜி' பார்த்தார்). அக்காக்களோ சித்தியோ மாமாவோ ஊருக்கு வரும்போது அழைத்துச் செல்வார்கள்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். வெகு அரிதாக அப்பா வீடியோ கேசட்/பிளேயர் வாங்கி வந்து படம் பார்த்ததுண்டு. சிறு வயதில் கோடை விடுமுறைகளில் தாத்தா வீட்டிற்கு செல்லும்போது தூர்தர்ஷனின் ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்களை 40-50 பேர் மத்தியில் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து பார்த்த நாட்கள் நினைவிலிருக்கிறது. கூடம் நிரம்பி நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள். கோடை விடுமுறையிலோ பண்டிகை நாட்களிலோ தாத்தா வீட்டில் அக்கா/சித்தி என்று கூட்டம் சேர்ந்துவிட்டால் வண்டி கட்டிக்கொண்டு வந்தவாசிக்கு வந்து படம் பார்ப்போம்.

சில போலீஸ் படங்களைப் பார்த்து போலீஸாக வேண்டுமென விரும்பியிருக்கிறேன்.

நினைவு தெரிந்து முதன்முதலில் வரிசையில் அடித்து பிடித்து 'மன்னன்' ரேஞ்சுக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்த திரைப்படம் 'உழைப்பாளி'.

நினைவு தெரிந்து முதன்முதலில் முதல் நாள் பார்த்த திரைப்படம் - எஜமான்

முதன்முதலில் எழுதிவைத்து மனப்பாடம் செய்த பாடல் - 'வந்தேன்டா பால்க்காரன்'



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா. வரத் தயங்கிய நண்பர்களை நச்சரித்து அழைத்துச் சென்று வெகுவாக ரசித்த திரைப்படம்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான்.

நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம். வித்யாசாகர் எப்போ ஃபார்முக்கு திரும்புவார்?


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நினைவு தெரிந்து அரங்கில் பார்த்து பாதித்த முதல் படம் - சேது. நண்பர்கள் பத்து பேருடன் படத்திற்குச் சென்று முதல் பாதி ஆட்டமும் பாட்டமுமாய்ப் பார்த்து இரண்டாம் பாதியில் பேச்சின்றி வெளியில் வந்த நினைவிருக்கிறது. வீட்டிற்கு செல்லும்வரை யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

படம் வெளியான நான்காவது நாளில் ஐம்பதே பேர் இருந்த அரங்கில் பார்த்த - அன்பே சிவம்

தளபதி, அஞ்சலி.

சமீபமாக வந்த திரைப்படங்களில் சித்திரம் பேசுதடி, சுப்ரமணியபுரம்.

இன்னும் நிறைய. பட்டியல் நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட பார்க்கிற எல்லா நல்ல படமும் ஏதோ ஒரு வகையில தாக்கத்தான் செய்யுது.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?


பல படங்களின் ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு காட்சியமைப்புகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். முன்னதுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஜீவா.
பின்னதுக்கு H.ஸ்ரீதர்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கையில் அகப்படும் - கருப்பு பூனையில் ஆரம்பித்து கட்டுரைகள் வரை பாரபட்சமின்றி - அத்தனையும்.


7. தமிழ்ச்சினிமா இசை?

எந்நேரமும். எல்லாவித மனநிலைக்கும்.



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தூர்தர்ஷனில் மாநில மொழித் திரைப்படங்களும் வெள்ளி/சனிக்கிழமை இந்தி திரைப்படங்களும் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து மொழி பேதமின்றி. நண்பர்களின்/வலைப்பதிவுகளின் பரிந்துரைகளை தவறாமல் பார்ப்பதுண்டு.

அதிகம் தாக்கிய உலகமொழிப் படங்களின் பட்டியல் தாக்கிய தமிழ்ப்படங்களின் பட்டியலைப் போலவே நீளும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' 100 திரைப்படங்களின் பட்டியல் மதி அவர்களின் இந்த பதிவில் இருக்கிறது - உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன். இதன் அசல் பதிவு அல்வாசிட்டியில் காணலை. இங்கே


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தமிழ்ச்சினிமாவில் வேலை பார்க்கும்/பார்த்த சிலரைப் பர்சனலாகத் தெரியும். அவ்வளவே.

பள்ளி/கல்லூரிக் காலங்களில் - ஏன் இப்போதும் கூட ஒரு திரைப்படத்திலாவது ஏதாவது ஒருவகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற ஆசை உண்டு :D


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


நான் புதிதாக வெளியாகும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது சமீபகாலமாக குறைந்துவிட்டது. பழைய படங்களும் வேற்றுமொழிப்படங்களும் உள்ள வரை பிழைப்பு ஓடும்.

தமிழ்நாட்டில் ஓராண்டில் 2011-ல் முதலமைச்சருக்கான போட்டி குறையும். சினிமா மற்றுமின்றி அதுசார்ந்த ஏனைய துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் நிம்மதியாய் இருப்பார்கள். பலர் நிம்மதி இழப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனை நேரிடலாம். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும். கடன் தொல்லை குறையும். மாமூல் வாழ்க்கை பாதிக்கும். அலுவலக வேலைகளில் இடர்கள் நேரிடலாம். நிண்ட தூர பயணங்கள் அதிகரிக்கும். நடுப்பக்கங்கள் காலியாகும்..ச்சே ராசிபலன் டோன் வந்துடுச்சே.


அழைத்த தம்பியண்ணனுக்கும் ஜிரா அண்ணாச்சிக்கும் நன்றிகள்!


நான் அழைப்பவர்கள்:

நாமக்கல் சிபி
வினையூக்கி
சவுண்ட் பார்ட்டி உதய்
யாத்ரீகன்
தேவ்



?!

சென்னை-600028-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

*****

இந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது "நேற்றைய முன்தினம்" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் "you mean yesterday"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் "Day before Yesterday"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.

*****


போன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.

*****

சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள்.






*****

விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.

* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.


*****

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.

*****

சர்வேசனின் இந்த பதிவுல கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா!




*****


இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.

*****


போன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: "this is democracy man! majority rules"

*****



உள்வாங்கிய கடல்

"சந்துரு சந்துரு"

நெரிசலான ரங்கநாதன் தெருவில் யாரோ என்னை அழைப்பது கேட்டுத் திரும்பினேன். ரயில் நிலையத்திலிருந்து திருவிழாக் கூட்டம் போல வந்த மக்களிடையே தெரிந்த முகம் எதுவும் சட்டென அடையாளம் தெரியவில்லை. மீண்டும் சந்துரு என்ற குரல் வந்த திசையில் கூர்ந்து பார்த்தபோது குமார் சித்தப்பா வந்துகொண்டிருந்தார். கட்டம் போட்ட கசங்கிய அரைக்கை சட்டை. நைந்து பழசாகிப் போயிருந்த கால்சட்டை. கலைந்த தலை. லேசான தாடி. முதலில் பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துப் போயிருந்தார். குமார் சித்தப்பாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.

"சந்துரு எப்படிப்பா இருக்க? அம்மா அப்பா செளக்கியமா?"

"நல்ல செளக்கியம் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்தி? குழந்தை?"

"நமக்கென்ன குறைச்சல்..வா அப்படியே டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம். என்ன இந்த பக்கம்?"

என் கையிலிருந்த 'உறுபசி' நாவலை வாங்கிப் புரட்டியபடியே அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார். சிறுவயதில் விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் வாசித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பாக்கெட் நாவல்களும் ஓஷோ நூல்களும் நினைவுக்கு வந்தன.

குமார் சித்தப்பா அப்பாவின் தூரத்து சித்தப்பாவின் மகன். ப்ளஸ் டூ-வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் படிப்பைத் தொடராமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது சொன்னார்கள். அதற்குப்பின் அவரை சந்திக்கவில்லை.

"போனவாட்டி ஊருக்கு போனப்ப நீங்க மெட்ராஸுக்கு வந்துட்டதா சொன்னாங்க"

"ஆமா சந்துரு...போன வருஷம் கரும்பு போட்டு எல்லாம் போயிடுச்சு. ஆலைல அவனுங்க ஆர்டர் தர்றதுக்குள்ள எல்லாம் காஞ்சுபோச்சு. அடுத்த போகத்துக்கு கெணத்துலயும் தண்ணியில்ல. லோன் போட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு வந்துட்டேன்.இங்க வந்தும் ஆறு மாசமாச்சு"

குமார் சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் பல வருடங்களாக சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அப்பாவின் 10 ஏக்கர் நிலம் பாகம் பிரிக்காதவரை குமார் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஏதாவது வேலை செய்தபடியே தான் இருப்பார். இல்லையெனில் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். குமார் சித்தப்பாவுக்கு திருமணம் ஆனதும் இரண்டு வருடங்களுக்கு முன் பாகம் பிரித்தார்கள். வீடு தவிர மற்ற நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு குமார் சித்தப்பாவுக்கு நாலு ஏக்கரும் கிணறும் கிடைத்தது. பாகம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்ய வேண்டியிருந்தது. வீடு மட்டும் இன்னும் தாத்தாவின் பேரிலேயே இருந்தது. ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் அப்போதே நிலத்தை குத்தகைக்கு விட்டார்கள். அதற்குப் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவர்கள் பெற்றோரைப் பார்த்துச் செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

"இப்ப எங்க இருக்கீங்க?"

"திருநீர்மலைல இருக்கேன் சந்துரு. அங்கருந்து பல்லாவரம் வந்து டிரெயினைப் புடிச்சு வரணும். அங்கயே ஒரு ரூமுக்கு ஆயிரத்து இரநூறு வாடகை கொடுக்கறேன். வாங்கற சம்பளத்துல பாதி அதுலயே போயிடுது"

"ஹ்ம்ம்..சித்தி எப்படியிருக்காங்க?"

"நல்லாருக்காப்பா. அங்க பக்கத்துல ஒரு காண்வெண்ட்ல டீச்சரா வேலைக்கு போறா. ரெண்டாயித்து ஐநூறு கொடுக்கறாங்க. ஏதோ செலவுக்கு ஆகுதுல்ல. ஜனனியை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்தா இன்னும் செலவு அதிகமாயிடும்"

"ஜனனி பார்த்தே ரொம்ப நாளாச்சு. நல்லா பேசறாளா"

"நல்ல வாயாடி. அவகிட்ட பேசி தப்பிக்க முடியாது. ஒடம்புக்குதான் அடிக்கடி முடியாம போயிடுது. ஊருக்கு போய் வந்தா ஒரு வாரம் ஜுரத்துல படுத்துடுவா"

"தாத்தா பாட்டி எப்படியிருக்காங்க? ரெண்டு மாசம் முன்ன போனப்ப பார்த்தேன்.தாத்தா ரொம்ப இளைச்சுப் போயிருந்தாரு"

"ஆமா சந்துரு. அடிக்கடி போய் பாத்துக்க முடியறதில்ல. ரெண்டு மூனுவாரத்துக்கு ஒரு முறை போய் பாத்துட்டு வரேன். வாங்கற சம்பளம் மாச செலவுக்கும் லோன் அடைக்கவுமே போயிடுது. இதுல அடிக்கடி போய் பாத்துக்க முடியுமா? அப்பாவுக்கு என்னோட வந்து இருக்கனும்னு ஆசை.ஆனா நாங்க இருக்கறது ஒரு ரூம். இதுல எங்க அவங்களை கூட்டினு வர முடியும்". குரல் லேசாக கம்மியது.

"தாத்தா சொனனாரு"

"அம்மாவுக்கும் லேசா கண்ணுல பொறை விழுந்துடுச்சு. ரவியண்ணன் அம்மாவை மட்டும் கூட்டிட்டு போய் ஆப்பரெஷன் பண்றேன்னு சொல்லுது. அண்ணிக்கும் அப்பாவுக்கும் ஆகாது. அவர் வந்தா எதுனா சண்டை போடுவார்னு அவரைக் கூப்பிடக்கூடாதுனு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ரவியண்ணன் அவங்கள மீறி எதுவும் செய்யாது. ஜீவாண்ணன் பத்தி உனக்கே தெரியும். என்னிக்குமே அதுக்கு அவ்ளோ பாசம் கெடையாது. காசு கொடுக்கறேன். நீயே எங்கயாவது பார்த்துக்கோனு போன் பண்ணி சொல்லுச்சாம். அம்மா அழுவறாங்க. ஜீவாண்ண்ன் அப்பாட்ட பேசறதேயில்ல. வீடு எழுதி தரலன்னு கோவம்"

"ஜீவா சித்தப்பா எப்பவும் அப்படித்தானே. பாட்டி ரவி சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கலாமே. சித்திக்கு தாத்தா கூட தானே ஆவாது"

"அம்மா அப்பாவை உட்டுட்டு வர முடியுமா? ஆப்பரேஷன்னா ஒரு வாரமவது ஆவும். ஒரு நாள் ரெண்டு நாள்னா அப்பா அண்டைல பக்கத்துல சாப்பிடலாம். ஒரு வாரம்னா முடியாதுல்ல. எனக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சுக்கனும்னு இருக்கு. ஆனா வசதியில்ல. சித்தியும் கூட சொல்லி சொல்லி அழுவறா"

"போனவாட்டியே தாத்தா ரொம்ப எளைச்சுபோயிருந்தார். கண்பார்வையும் குறைஞ்சுபோச்சு"
வேறென்ன சொல்வதெனத் தெரியாமல் காலியான டீ டம்ளரை உழட்டிக்கொண்டிருந்தேன்.

"சரி விடு. ஆவறது ஆகட்டும். அவங்க காலமும் முடிஞ்சுப்போச்சு. அம்மாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ணாலும் ஒடம்பு தாங்காது. அப்பாவுக்கும் இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ. போற போக்குல போகட்டும்..சில சமயம் ஊருக்கே போயிடலாம்னு இருக்கும்..ஆனா அங்க போய் மட்டும் என்ன பண்றது சொல்லு? இங்கயாவது ரெண்டு பேர் சம்பாத்யம் இருக்கு. அடுத்த வருசம் ஜனனி ஸ்கூல்ல சேக்கனும். சரி எனக்கு ஷிப்ட் டைம் ஆச்சு. அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பேட்டால புடிச்சிடுவாங்க. மொதல்ல வேற வேலை தேடனும். நம்ம கோடி வீட்டு சுகுமார் சூளமேட்டுல இருக்கான். அவன்ட்ட சொல்லிவச்சிருக்கேன். ஒரு கடைல வேலைக்கு சொல்லியிருக்கானாம். சரி நான் கெளம்பறேன். வீட்டு பக்கம் வா சந்துரு. அண்ணன் அண்ணிய கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. பாப்போம் சந்துரு"

என்று என் பதிலுக்கும் காத்திராமல் கூட்ட நெரிசலில் கலந்து தொலைந்து போனார். அவர் வைத்துச் சென்ற காலி டீ டம்ளரை ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.



சில புகைப்படங்கள்















ஹாலிவுட் தலைவிகள்

Women In Film



Women In Film By Philip


80 years of female portraits in cinema - Mary Pickford, Lillian Gish, Gloria Swanson, Marlene Dietrich, Norma Shearer, Ruth Chatterton, Jean Harlow, Katharine Hepburn, Carole Lombard, Bette Davis, Greta Garbo, Barbara Stanwyck, Vivien Leigh, Greer Garson, Hedy Lamarr, Rita Hayworth, Gene Tierney, Olivia de Havilland, Ingrid Bergman, Joan Crawford, Ginger Rogers, Loretta Young, Deborah Kerr, Judy Garland, Anne Baxter, Lauren Bacall, Susan Hayward, Ava Gardner, Marilyn Monroe, Grace Kelly, Lana Turner, Elizabeth Taylor, Kim Novak, Audrey Hepburn, Dorothy Dandridge, Shirley MacLaine, Natalie Wood, Rita Moreno, Janet Leigh, Brigitte Bardot, Sophia Loren, Ann Margret, Julie Andrews, Raquel Welch, Tuesday Weld, Jane Fonda, Julie Christie, Faye Dunaway, Catherine Deneuve, Jacqueline Bisset, Candice Bergen, Isabella Rossellini, Diane Keaton, Goldie Hawn, Meryl Streep, Susan Sarandon, Jessica Lange, Michelle Pfeiffer, Sigourney Weaver, Kathleen Turner, Holly Hunter, Jodie Foster, Angela Bassett, Demi Moore, Sharon Stone, Meg Ryan, Julia Roberts, Salma Hayek, Sandra Bullock, Julianne Moore, Diane Lane, Nicole Kidman, Catherine Zeta-Jones, Angelina Jolie, Charlize Theron, Reese Witherspoon, Halle Berry



நிரடும் நிரலிகள்

"ஹாய் ஐயாம் ஷெரில்"

"ஹாய் ஜெயக்குமார் கந்தசாமி. ஜெய்"

"நைஸ் டு மீட் யூ ஜெய்"

இங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் தானாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஷெரில். எல்லா அமெரிக்க பெண்களைப் போன்றே சராசரிக்கு சற்றே அதிகமான உயரம். ஒல்லியான தேகம். கரிய தலைமுடி. புன்னகை தவழும் உதடுகள். துள்ளலான கண்கள். மொத்தத்தில் அழகி. என்னுடைய பிராஜெக்ட்டில் இருப்பாளோ என்ற ஆர்வத்தில் கேட்டதில் காண்டிராக்டராக ஏதோ ஒரு ஆதிகால அப்பிளிகேஷனைக் கட்டிமேய்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். "இத்தனை வருஷமா இதானே நடக்குது நம்ம பிராஜெக்ட்ல என்னைக்கு நல்ல ஃபிகர் இருந்திருக்கு" என்ற ஆதங்கத்துடன் வேலையைத் தொடங்கினேன்.


கிளையண்ட் அலுவலகத்தில் நிறைய இந்தியர்களே வேலைப் பார்த்தாலும் யாரும் அவ்வளவு நட்புடன் பழகவில்லை. எங்கள் கம்பெனி உள்ளே புகுந்ததில் காண்டிராக்டர்களாக வேலை செய்யும் பலருக்கு வேலை பறிக்கப்படும் அபாயம். முகம் கொடுத்தும் பேசாத நிலை. இந்த அழகில் நான் இவர்களிடம் கற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்கும் டீமிற்கும் சொல்லிக் கொடுத்து, அதன்பின் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்ய வேண்டும்.

முதல்நாள் எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்த எனக்கு ஷெரில் தானே முன்வந்து அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினாள். அன்று மதியம் கேண்டினில் இருவரும் உணவு உண்டபோது எங்கள் கம்பெனி பற்றியும் என் பிராஜெக்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களுக்கும் அறிமுகம் கொடுத்தாள். அவளுடைய அப்ளிகேஷன் பற்றியும் விவரித்தாள்.

ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் எல்லா ஊரிலும் எல்லாம் எளிதாக கிடைக்கும், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொன்னவனைத் தேடிக் கொண்டிருந்தேன்.இந்த சிறிய நகரில் எங்கள் கிளையண்ட் அலுவலகம் ஒன்றுதான் பெரியது. மற்றபடி பெரிய அலுவலகங்களோ வணிக நிறுவனங்களோ கிடையாது. நான் ஆன்லைனில் பதிவு செய்திருந்த அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தாலும் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அரை மணி நேரப் பயணம். ஓரிரு முறை டாக்ஸியில் சென்றுவந்ததைத் தெரிந்துகொண்ட ஷெரில் அவளே கடைகளுக்குக் கூட்டிச் செல்ல முன்வந்தாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவளே உதவிகள் செய்தாள். ஷெரில் வேலையிலும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். இந்த ஊரில் இப்படி ஒரு நல்லவளா என்ற ஆச்சரியம் உண்டானது.


"ஜெய், உங்க ஊரைப் பத்தி சொல்லேன்"

"சொர்க்கம்"

"உங்க ஊர்க்காரங்க எல்லாரும் கிட்டத்தட்ட இப்படித்தான் சொல்றீங்க"

"அதான் உண்மை..அதனால தான்"

"இண்டியா பத்தி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். நிறைய வீடியோஸ் பார்த்திருக்கேன். நல்ல அழகான பெண்கள். ஒரு முறை உங்க ஊருக்கு கூட்டிட்டு போவியா?"

"கண்டிப்பா. ஒரு முறையாவது நீ நேரில் பார்க்கனும். உனக்கு ரொம்ப பிடிச்சுப் போகும்"

"நீ பேசற மொழி பேர் என்ன சொன்ன?"

"தமிழ்"

"டாமிள்.யெஸ்.அதுவும் கத்துக்கொடு" என்று சிரித்தாள்.

வேலையினிடையிலும் அரட்டை நேரங்களிலும் இந்தியா பற்றி, மொழிகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வாள். அமெரிக்க அரசியல், விளையாட்டு என அரட்டை தொடரும். எங்கள் நட்பும் வளர்ந்தது.

"ஷெரில், எனக்கு கார் ஒன்னு வாங்கனும். ஆன்லைன்ல பார்த்துட்டிருக்கேன். இந்த ஊரில நல்ல டீலர் சொல்லேன்"

"என் பாய் பிரெண்ட் டாம் ஒரு கார் விக்கப் போறான். நிஸ்ஸான் அல்டிமா. நீ என்ன கார் பார்க்கற? ஸ்போர்ட்ஸ் கார் வாங்கப் போறயா?"

"அதெல்லாம் வேண்டாம். செடான் தான் பார்க்கறேன். உன் பாய் பிரண்ட் காரே வாங்கிடலாம்"

அதிக அலைச்சலில்லாமல் குறைந்த விலையிலேயே கார் அமைந்தது. அதற்கு டிரீட் கொடுக்க அவளையும் அவள் பாய் ஃபிரெண்டையும் டின்னருக்கு இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். காரத்தில் கண்கள் கலங்கினாலும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

"ஜெய் உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல நானும் டாமும் பைக்கிங் போவோம்ன்னு.வார இறுதியில் பக்கத்துல இருக்க மலைல சைக்கிள் ஓட்டுவோம். நீயும் வருவியா?"

"கண்டிப்பா ஷெரில். அடுத்த வாரமே சைக்கிள் வாங்கிடறேன். மலைல ஓட்ட நீங்க தான் கத்துத் தரணும்"

"ஷ்யூர். உனக்கும் ரொம்ப பிடிச்சுப் போகும் பாரு. அடுத்த வாரமே ஆரம்பிப்போம். இங்க இருக்க டிராக் எனக்கு ரொம்ப பிடிச்சது. சமயத்துல டாம் வரலைனாலும் தனியா நானே கிளம்பிடுவேன். நீயும் வந்தா எனக்கு கம்பெனி கிடைக்கும்" என்று சிரித்தாள்.


ப்ராஜெக்ட் வேலையும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. எங்கள் கடின உழைப்புக்குப் பலனாக புதிதாக ப்ராஜெக்ட்களும் கிடைத்தன. கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து அதில் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி கிளையண்டுக்கு சில ஆலோசனைகள் கொடுத்தோம். அதிலும் சில ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. எங்களுடைய அணி வளர ஆரம்பித்தது. கிளையண்டிடம் இருந்து சிறிது சிறிதாக வேலைகள் வாங்கி ஆஃப்ஷோரை வளர்த்தோம்.


"ஹேய் ஷெரில். உன்னோட பவர்பில்டர் அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த நான் கொடுத்த ப்ரோபசலை ஜோ அப்ரூவ் பண்ணிட்டார். ஆஃப்ஷோர் டீம்ல புதுசா 4 பேர் சேர்த்து இந்த வீக்கே மைக்ரேஷன் வேலை ஆரம்பிக்கறோம்"

"தெரியும் ஜெய். ஜோ கூட இப்ப தான் பேசிட்டு வரேன்"

"எனக்கு இது பெரிய அச்சீவ்மெண்ட். என் ஹெட் இப்பத்தான் போன்ல பாராட்டினார். சந்தோஷமா இருக்கேன். நைட் டின்னர் என் டிரீட். நீ ஃப்ரீ தானே?"

"இல்ல ஜெய். நீ என்னோட அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த ஆரம்பிச்ச பிறகு எனக்கு என்ன வேலை. எனக்கு தெரிஞ்சது பவர்பில்டர் தானே. இன்னைக்கு எனக்கு இங்க கடைசி நாள். அதுக்குத்தான் ஜோ கூப்பிட்டு பேசினார். இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறேன். இந்த ஊர்ல என் ப்ரொபைலுக்கு வேலை கிடைக்காது. அதனால ஊருக்கு போய் அப்பா அம்மாவோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு நியூ ஜெர்சில ஏதாவது வேலை பிடிக்கனும். இடையில் நானும் ஒரு புது டெக்னாலஜி ஏதாவது கத்துக்கனும். ஈவ்னிங் டாம் என்னை பிக்கப் பண்ண வருவான். என்ன நாம ப்ளான் பண்ண சைக்கிள் ட்ரிப் தான் போக முடியாது. அடுத்த முறை மீட் பண்ணும்போது கண்டிப்பா போவோம். கீப் இன் டச் ஜெய். வில் மிஸ் திஸ் நைஸ் லிட்டில் டவுன் அண்ட் வில் மிஸ் யூ." என்று கூறியபடி கைகொடுத்து கிளம்பிச் சென்றாள்.

நான் கணிணித் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.



PIT - ஜூலை-2008 போட்டிக்காக

இது போட்டிக்கு:






இது படம் எடுத்த பொட்டிக்கு:




சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு சமர்ப்பணம்..எல்லா புகழும் கைப்புவுக்கே!! :)



காத்திருந்த காதலி - 10

காத்திருந்த காதலி - 1: வடகரை வேலன்
காத்திருந்த காதலி - 2: பரிசல்காரன்
காத்திருந்த காதலி - 3: வெயிலான்
காத்திருந்த காதலி - 4: கிரி
காத்திருந்த காதலி - 5: ஜெகதீசன்
காத்திருந்த காதலி - 6: டிபிசிடி
காத்திருந்த காதலி - 7: கயல்விழி முத்துலெட்சுமி
காத்திருந்த காதலி - 8: மை ஃபிரண்ட்
காத்திருந்த காதலி - 9: கோபிநாத்

சங்கர் சொன்னதன்படி அவன் அறைக்கு வந்த ராமச்சந்திரன் அங்கு அவர் மகளைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்தார். நாயைக் கண்டு பயந்து நின்றுகொண்டிருந்த தன் மகளை அரவணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

"கையில என்னம்மா டைரி? யாரோட டைரி?"

"கார்த்திக்கோட டைரிப்பா. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. கார்த்திக் என்னை லவ் பண்ணியிருக்கான்பா"

ராமச்சந்திரனின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அவர் நினைத்தது போலவே அத்தனையும் நடந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து அவர் கிளம்பியதிலிருந்தே சங்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும், கார்த்திக் இவ்வாறு செய்ய என்ன காரணம் இருக்க முடியுமென்ற குழப்பத்திலே தான் வந்தார். தொழிலில் இருவருக்கும் பொறாமை வருவதற்கான வாய்ப்பேயில்லை. சில நாட்களாக கார்த்திக் தொழிலில் கவனம் செலுத்துவதில்லை என்று சங்கர் ஓரிரு சமயங்களில் சொல்லியிருந்தாலும் அதற்கான வேறு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்றே எண்ணியிருந்தார். ஆனாலும் அந்த காரணம் தெரியாமல் ஷூவுக்குள் சிறிய கல் ஒன்று சிக்கியது போல அவர் மனம் உறுத்திக்கொண்டிருந்தது. இப்போது கார்த்திக் தன்னைக் காதலித்ததாக கெளரி சொன்னதும் அவருக்கு எல்லாம் புரிந்தது.

"தண்ணி கொண்டு வாம்மா. உக்காந்து பேசலாம்" என்றபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார். கெளரி அந்த டைரியை டேபிளில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். ராமச்சந்திரன் அந்த டைரியைப் புரட்ட ஆரம்பித்தார்.

***

கார்த்திக் கெளரிக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். மூன்று வருடக் காதலை இன்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். சங்கரிடம் கூட கெளரியைப் பற்றிப் பேசியதில்லை. தன் காதலை கெளரியிடம் சொல்லி அவள் சம்மதித்ததும் இருவரும் சேர்ந்து சங்கரிடம் சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கல்லூரிக்குப் பிறகும் தொடர்ந்த கெளரியுடனான நட்பு காதலாக மாறிய தருணம் எப்போதென்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி இருந்தான். தன் காதலைச் சொன்னதும் கெளரி என்ன சொல்வாளோ நட்பை முறித்துச் சென்றுவிடுவாளோ என்ற அச்சமும் அவனை அவ்வப்போது கலங்கச் செய்தது. என்ன ஆனாலும் சரியென்று வாழ்த்து அட்டை ஒன்றை வாங்கிக்கொண்டு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தான் எழுதிய கவிதையைச் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தபோது சங்கரும் கெளரியும் கைகோர்த்தபடி வந்துகொண்டிருந்தனர்.

"கார்த்திக், சங்கர் என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னான்?"

"ஐ லவ் யூ சொல்லிட்டான் டா..அதுவும் ஒரு பயம் இல்லாம மட்டு மரியாதையில்லாம" வெட்கப்புன்னகையுடன் சங்கரின் தோளில் சாய்ந்தாள் கெளரி.

"மச்சான் நான் மொதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் இவ ஒத்துக்கிட்டதும் ரெண்டும் பேரும் சேர்ந்து வந்து சொன்னா உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு சொல்லலடா" என்றான் சங்கர்.

இதற்குப் பிறகு அவர்கள் பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை. இதயத்தில் இமயமலையையே ஏற்றிவைத்தது போல் பாரமாக இருந்தது. "இவளிடம் இத்தனை வருடங்களாக இருவரும் ஒரே மாதிரிதானே பழகினோம். சங்கரை விட எனக்கு என்ன குறைச்சல். அவனிடம் எப்படி அவளால் காதலில் விழ முடிந்தது. இத்தனைக்கும் அவனைவிட அவளுக்காக நான் தானே எத்தனையோ செய்திருக்கிறேன். கல்லூரி முடிந்த அன்று ஃபேர்வெல் பார்ட்டியில் கூட 'நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல்டா" என்றாளே. பாதகி" என்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.

"என்னடா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா" சங்கர் தோளில் தட்டினான்.

"இல்லடா. அதெல்லாம் ஒன்னுமில்ல. கேட்டதும் சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியல. கங்கிராட்ஸ்டா. ஹேய் கெளரி உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா"

"இன்னும் இல்லடா. இனிதான் அதைப்பத்தியெல்லாம் யோசிக்கனும்"

"எப்ப கல்யாணம் பண்றீங்க? ரெண்டு பேர் வீட்டுலயும் வீட்டுல பேசிப்பார்ப்போம்.ஒத்துக்கலைனா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" உள்ளுக்குள் இடி விழுந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சகஜமாய் பேச முயன்றுகொண்டிருந்தான் கார்த்திக்.

"மொதல்ல நம்ம கம்பெனி நல்ல நிலைமைக்கு வரட்டும்டா.அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்" என்ற சங்கரை இடைமறித்தாள் கெளரி

"கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?"

"கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல"

"ஏன்? காதல் மேலே வெறுப்பா?"

"இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்"

"அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?"

"இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்.."


செத்துப்போன தன் காதலை மீண்டும் உயிர்விப்பது எப்படி என்று அன்றைக்கே திட்டம் தீட்ட ஆரம்பித்தான் கார்த்திக்.

***

கார்த்திக் அப்பாவையும் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். சங்கர் மயக்கம் தெளிந்தவுடன் அவனிடம் பேசவேண்டும். இத்தனை நாட்களாக மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் அத்தனையையும் கொட்டிவிடவேண்டும். இத்தனை வருடங்கள் தொடர்ந்த நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி சிகரெட் புகையை ஆழமாக உள்ளே இழுத்தான். அப்போது அவனை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது.

***


இக்கதையின் அடுத்த பாகத்தை தொடர 'சிக்மா(Sigma) சித்தர்' கேஆரெஸ் அண்ணாச்சி அழைக்கிறேன்.



?! - திண்ணை, குசேலன் & இன்ன பிற

நேற்றிரவு கனவில் குசேலன் Free View ஷோ. தலைவர்,நயன்தாரா, பி.வாசு,வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ஒரு காட்சி. காட்சியோ வசனங்களோ நினைவில் இல்லை. அந்த காட்சியில் பசுபதி இல்லை. பசுபதி எங்கே என்ற எண்ணம் தோன்றியதும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன்.

குசேலன் பாட்டு கேட்டாச்சா? ஜீ.வி. பிரகாஷிடம் எதிர்பார்த்ததை விடவே பாடல்கள் நன்றாக இருக்கின்றன. சில பாடல்கள் ஏற்கனவே கேட்டதுபோல் இருந்தாலும் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்திருக்கின்றன. 4/5.

பாடல்கள் ராகா-வில் இங்க இருக்கு

***

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் எங்கப்பா திண்ணைல உட்கார்ந்துகிட்டு தாத்தா பாட்டியோட சண்டை போடாம வந்தது கிடையாது.'என்னை மறந்துட்டல்ல'ன்னு கையைப் புடிச்சபடி தாத்தா கேட்டது, எங்க வீட்டு திண்ணைல நாப்பது வருஷமா இருந்த போஸ்ட் ஆபிஸு, அதுல கொஞ்சம் கையாடல் பண்ண சித்தப்பு, கடைசி அஞ்சு வருஷம் திண்ணைலயே கழிச்ச கொள்ளுப் பாட்டி, திண்ணைல தூங்கும்போது என் கால் மேல ஏறிப்போன கட்டுவிரியன், கடிச்ச தேளு, ஊருல அரசமரத்துல இறங்கி வீட்டுக்கு போறதுக்குள்ள ஊர்ல இருக்க எல்லாரையும் அவங்கவங்க வீட்டு திண்ணைலயே பார்த்து விசாரிச்சுடறது..இன்னும் எத்தனையோ..அதையெல்லாம் ஒவ்வொன்னா எப்பவாவது விரிவாக எழுதனும்...

இப்ப ஒரு மொக்கை..

அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே கதையின் நாயகனுக்கு(வேற யாரு நான் தான்) வயது ஒன்றரை. அப்ப திண்ணைல வச்சு நான் செய்த பிசினஸ் டீல் பற்றி பின்னாளில் எனக்கு சொல்லப்பட்ட வெர்ஷன் இது. ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. குழந்தை அழுததால(அட இதுவும் நான் தான்) அம்மாவோட ஒரு செயினை மாட்டி விட்டிருக்காங்க. கல்யாணம் முடிஞ்சு வந்ததும் எங்கப்பாரு அவர் நண்பரோட எங்க தெருக்கோடியில இருந்த ஓட்டலுக்கு காபி குடிக்க கிளம்பினாராம். நான் அழுதுட்டே அவர் பின்னாடி வந்ததால திண்ணைல உக்கார விட்டுட்டு எங்கம்மாவுக்கு குரல் விட்டுட்டு போயிட்டாராம். எங்கம்மா திண்ணைய விட்டு எங்கே போகப்போறான்னு விட்டுட்டாங்களாம்.

அப்ப 'சொப்பு அண்ணா' கேரக்டர் எண்ட்ரி. அவரு என்கிட்ட நாற்காலி கால் தேயாம இருக்க போடற ப்ளாஸ்டிக் குப்பியைக் கொடுத்துட்டு செயினைக் கேட்டிருக்கார். அப்ப எங்க வீட்டுல ஒரு இரும்பு நாற்காலி இருந்தது. அதுல குப்பி இருந்ததா இல்லையா எனத் தெரியாது. இருந்தாலும் வீட்டுக்குத் தேவைப்படற பொருளா இருக்கேன்னு நானும் செயினைக் கிழட்டிக் கொடுத்துட்டு பண்டமாற்று முறையில் குப்பியை வாங்கிட்டேன். அவரும் கிளம்பி போயிட்டார்.

நான் உள்ள போய் எங்கம்மாகிட்ட "சொப்பு அண்ணா கொடுத்தாரு"ன்னு சொல்லி அந்த குப்பியைக் கொடுத்திருக்கேன். அவங்க கழுத்துல இருந்த செயினைத் தேட "அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன். என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.


***

திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!

***

ஆயில்யன் அண்ணாச்சி சிலப்பல வாரங்களுக்கு முன்ன ஜிலேபி பதிவு போட சொன்னாரு. ஆனா எழுத முடியலை. என்னால ஜிலேபி கொடுக்க முடியலைனாலும் என்னால முடிஞ்சது



***

த*****ம் படம் பற்றி எழுத மாட்டேன்னு அசின், மல்லிகா ஷெராவத் மேல சத்தியம் பண்ணிட்டேன். இப்ப வரைக்கும் சத்தியத்தைக் காப்பாத்திட்டிருக்கேன்.

***

இந்த பாட்டு பாருங்க. 'மலையாளி' என்ற இசைக்குழு. தமிழ் பாட்டு மாதிரியே இருக்கு. செம கலக்கல்.



***


இந்த மாத ?! தத்துவம்

"We don’t see things as they are, we see them as we are"



சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)

இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி இசை, பாடல்கள். சில காட்சிகள் கண் கலங்க வைக்கும். பல காட்சிகள் புன்னகைக்க வைக்கும். படத்தில் சொல்வது போல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இத்திரைப்படத்தைப் பாருங்கள். ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.


கீழே அப்படத்தில் வரும் ஒரு பாடல் - Keep Your Mind Wide Open
பாடியவர் இத்திரைப்படத்தில் லெஸ்லியாக நடித்த அன்னா சோஃபியா ராப் (Anna Sophia Robb)




'?!' & நன்றி

விஜய் தொலைக்காட்சியின் சென்ற வார 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் "பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வைக்கும் பாசத்தில் பாரபட்சம் இருக்கின்றதா" என்ற சுவாரசியமான தலைப்பில் இடையில் விவாதம் நடந்தது. இரண்டோ அதற்கு மேலோ குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது. பதினைந்து வயது சிறுவனில் இருந்து ஐம்பத்தைந்து வயதானவர் வரை தங்கள் உணர்வுப்பூர்வமாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். எதிர்தரப்பில் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளாமல் 'பிள்ளையின் எதிர்காலத்திற்கு, பொருளாதார நிலை, பிள்ளையின் ஆசை, எங்களின் கனவு' என்று விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தார்கள். பல இனிமையான அனுபவப் பகிர்வுகளுடனும், வாதங்களுடனும் இருதரப்பும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த கோபிநாத் எப்போதும் போல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

'ஜெயா டிவி' காமெடி டைம்-இல் கடித்துக்கொண்டிருந்த நடிகர் 'லொள்ளு சபா'வுக்கு வந்ததிலிருந்து இதையும் பார்ப்பதில்லை. சந்தானத்தைத் தொடர்ந்து ஜீவாவும் கிளம்பிவிட்டார் போல. நிகழ்ச்சி மரண மொக்கையாகிவிட்டது. சிரிப்பே வரல.


*****

இரண்டு வாரங்களாக தூங்குவதற்கு முன்னும் தூங்கி எழுந்த பின்னும் ஏ.ஆர்.ரகுமானின் 'Ada' மற்றும் 'Jaane Tu Ya Jaane Na' படங்களின் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பாடல்கள் அட்டகாசம்.

*****

நட்சத்திர வாரத்தில் தலைவரைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சிலப்பல காரணங்களால் இயலவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்த ஸ்டில்.



All About Superstar என்ற பதிவில் சுந்தர் என்பவர் தினம்தினம் சுவையான பல தகவல்களையும், சுடச்சுட செய்திகளையும் தலைவரின் பழைய பத்திரிகைப் பேட்டிகளையும் தருகிறார்.


*****

ஒரு வழியாக இங்கு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பொது நூலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த ஏழு மாதங்களில் இரண்டே நாவல்களை முழுதாக வாசித்திருக்கிறேன். ஓர்ஹன் பாமுக்-கின் 'My Name is Red' புத்தகத்தை இரண்டு மாதங்களாக இருநூறு பக்கங்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இந்த வேகத்தில் படித்தால் அதை முடிப்பதற்குள் 2009 வந்துவிடும் என்ற அச்சத்தால் அதை ஓரம்கட்டிவிட்டு நூலகத்தில் இருந்து கொண்டுவந்த தஸ்தாவஸ்கியின் 'The Brothers Karamazov' ஆரம்பித்திருக்கிறேன். அதை சீக்கிரம் வாசித்துமுடிக்க தஸ்தாவஸ்கி அருள்புரிவாராக

*****

இந்த பாட்டு செமையா இருக்கு.





*****

இரண்டு மாதங்களாக ?! பதிவுகளை எழுதவில்லை என்று கவலையில் இருந்தேன்.

*****

இந்த மாத ?! தத்துவம்

""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."

- எங்கோ படித்தது.

*****

இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்வு செய்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் அடாத மொக்கையிலும் விடாது பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)



உருகுவே:பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு

உருகுவே செல்வதற்கு முன் தெரிந்த இரண்டே ஸ்பானிஷ் வார்த்தைகள் 'Hola', 'Adios'. அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ஆரம்ப நாட்களில் ஸ்பானிய மொழி தெரியாமல் சிறிது திண்டாடினோம். பின்னர் எங்கள் அணியில் இருந்த உள்ளூர் நண்பர்கள் உதவியுடனும் இணையத்திலும் ஸ்பானிஷ் கற்க ஆரம்பித்தேன். காலையில் வந்தவுடன் நலம் விசாரித்தலில் ஆரம்பித்து அலுவலில் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்பானிஷில் சொல்லக் கற்றுத்தருவார்கள். இதுபோல் தினமும் வேலையின் போக்கிலேயே அம்மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எளிதாக இருந்தது. எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது ஆரம்பகட்டங்களில் சுவாரசியம் சேர்க்கும். படுஜாலி பேர்வழிகளான அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஸ்பானிஷ் மொழியை நான் கற்க ஆரம்பித்ததால் கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்தால் அவர்கள் என்மேல் தனி அக்கறை காட்டினார்கள், நட்பு பாராட்டினார்கள். மற்ற அணியிலிருந்து வரும் அவர்களின் நண்பர்களிடமும் என்னை ஸ்பானிஷில் பேசச் சொல்லி அவர்கள் மூலம் புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். அது கற்றலை இன்னும் சுவையாக்கியது.

ஆரம்பத்தில் சமையல் செய்ய ஒரு சட்டி வாங்கச் சென்று ஆங்கிலம் தெரியாத கடைக்காரரிடம் ஸ்பானிஷில் கேட்கத் தெரியாமல், சட்டியைக் குறிக்க நான் செய்த அபிநயங்கள் அவருக்குப் புரியாமல் சட்டியே வாங்காமல் சாப்பாட்டுக்கு அல்லாடிய நான் பின்னர் ஓரளவு ஸ்பானிஷ் பேச கற்றுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று வர இயன்றது அலுவலக நண்பர்களால் தான். அதேபோல் அந்த காலகட்டத்தில் நாகை சிவா, பெருசு, மகேந்திரன் ஆகியோருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் ஸ்பானிஷ் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தேன்.

நான் அங்கு சென்றபோது எங்கள் அணியில் மொத்தம் பதினேழு இந்தியர்களே இருந்தனர். அவர்களில் ஸ்பானிஷ் கற்க ஆர்வமிருப்பவர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணே மாலை வேளைகளில் பாடம் எடுத்தார். பணிகளுக்கிடையில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்த முடியாததால் வகுப்புகளைத் தொடர முடியாமல் போனது. அடுத்த நான்கைந்து மாதங்களில் எங்கள் அலுவலகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது ஆனது. அப்போது பத்திலிருந்து பதினைந்து பேர் ஸ்பானிஷ் கற்க ஆர்வம் காட்டியதால் மனிதவள அலுவலகத்தில் இருந்து சிறப்பு ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்த முன்வந்தனர்.

மனிதவள அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் படித்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்களுக்கு ஸ்பானிஷ் கற்றுத்தர முன்வந்தார். அவர் பெயர் பியத்ரிஸ் மெலொ (Beatriz Melo). வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் வீதம் வகுப்புகள் ஆரம்பித்தது. புதிதாக வந்தவர்களுக்காக அடிப்படையில் இருந்து வகுப்புகளை ஆரம்பித்தார். நான் ஏற்கனவே சிறிது கற்றுவைத்திருந்ததால் ஆரம்பகட்ட வகுப்புகள் எளிதாக இருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்பானிஷ் மற்றுமல்லாது உருகுவேயின் வரலாறு கலாச்சாரம் குறித்தும் சொல்லிவந்தார். அவரது குடும்ப விஷயங்களையும்கூட பகிர்ந்துகொண்டார். பின்னர் ஸ்பானிஷ் இலக்கணம் கற்றுத்தர ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு வைத்து பள்ளியில் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.

பியத்ரிஸ் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் (பெயர் மறந்துவிட்டது) ஸ்பானிஷ் பேராசியராகப் பணியாற்றியவர். சில வருடங்கள் அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு உருகுவே திரும்பியவர் அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார். தலைநகர் மாண்டிவிடியோவில் வெளியே சென்றால் ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகக் குறைவே. வேறு ஊர்களுக்குச் சென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாகவே ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது(இத்தகைய பள்ளிகள் பிரிட்டிஷ், இத்தாலி நாடுகளைச் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன). ஆனால் அரசுப் பள்ளிகளில் சமீபமாக சில ஆண்டுகளாகவே ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பதால் ஆங்கிலம் அறியாமலிருப்பது இயல்பென்று அறிய முடிந்தது. பியத்ரிஸ் ஒவ்வொரு முறை உருகுவேயைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் பேசும்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பல திட்டங்களை முன்வைப்பார்.



பியத்ரிஸ் எமிலி டிக்கன்ஸன்(Emily Dickensen) என்ற பள்ளியில் பணிபுரிந்து வந்தார். மாணவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடத்த விரும்பினார். மாணவர்கள் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்வதுடன் அவர்கள் ஆங்கிலம் கற்கவும் உதவுமென்றும் மேலும் நாங்கள் கற்ற ஸ்பானிஷை மாணவர்களிடம் பேசிப் பழக வாய்ப்பாகவும் இருக்குமென சந்திப்பை ஏற்பாடு செய்தார். நாங்கள் ஆறு பேர் அந்த பள்ளிக்குச் சென்றபோது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களுக்காக காத்திருந்தனர். கைதட்டி ஆரவாரமாக எங்களை வரவேற்றதில் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனோம். எங்களை அறிமுகம் செய்துவைத்த பியத்ரிஸ் ஒவ்வொரு வகுப்பிலிருந்து தலா பத்து மாணவர்களாக குழுக்களாகப் பிரிக்க அவர்களுடன் உரையாட ஆரம்பித்தோம்.


அறிமுகத்திற்குப் பிறகு அரைகுறை ஸ்பானிஷிலேயே சிறிது நேரம் பேசினோம். அவர்கள் பேசியது பெரும்பாலும் புரியவில்லை. மெதுவாக பேசினால் சில வார்த்தைகளை அறிந்து என்ன கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் ஸ்பானிய உச்சரிப்பாலும் வார்த்தை பிரயோகங்களாலும் சில காமெடிகள் நடந்ததால் ஆங்கிலத்திற்கு மாறினோம். அவர்கள் இந்தியாவைக் குறித்தும் நம் வாழ்வுமுறை குறித்தும் அவர்களுக்கு இருந்த கேள்விகளைக் கேட்டனர். சிலர் ஏற்கனவே இந்தியா குறித்த தகவல்களை அறிந்திருந்தார்கள். வெளிநாட்டுத் தூதவராக வேண்டும், நிரலாளராக வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமென ஒவ்வொருவருக்கும் ஒரு கனவிருந்தது.

அந்த பள்ளி மாணவர்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வி நிலை குறித்த கவலை இருந்தது. நம் ஊரைப் போலவே தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டம் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றது. அம்மாணவர்களில் ஒரு சிறுவன் 'நீங்க எங்க ஏரியாவுக்கெல்லாம் வருவீங்கன்னு நினைச்சு பார்க்கல' என்ற போது அந்த ஊரிலும் பொருளாதார நிலையைக் கொண்டு பாகுபாடு அப்பட்டமாக இருப்பதும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையும் அந்த சிறுவர்களிடமிருந்த சுயவிரக்க மனநிலையும் கவலையைத் தந்தது. ஏற்கனவே உருகுவேயின் கிராமப்புறங்களையும் புறநகர் பகுதிகளையும் பார்த்து உருகுவேயில் அத்தகைய பாகுபாடு இருப்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் அந்த சிறுவனின் கேள்வி அதிர்ச்சியளித்தது. அவர்களிடம் அந்த பாகுபாடுகள் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அந்த நிலையிலிருந்து அவர்கள் போராடி மேலேறி வருவதுதான் சாதனை என்று ஊக்கமளிக்கும் வண்ணம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

பிறகு என்னைப் பற்றிய கேள்விகள் கேட்டார்கள். உருகுவேயில் எப்படி பொழுதுபோக்குகின்றேன், எங்கெல்லாம் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பேசியபடி சிறிது நேரம் உரையாடினோம். உருகுவேயில் நான் கேள்விப்பட்டிராத சில இடங்கள் குறித்தும் விழாக்கள் குறித்தும் தகவல்கள் தந்தார்கள். உருகுவேயில் சிறப்பான Dulce de Leche என்னும் இனிப்பும் கேக்குகளும் சாப்பிட்டபடியே இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக உரையாடினோம். ஒரு பிற்பகற்பொழுதில் பல சுகமான நினைவுகளைத் தந்து இனிமையானதொரு அனுபவமாக அமைந்த சந்திப்பு முடிந்து திரும்பியபோது சூரியன் மேற்கில் அஸ்தமித்திருந்தது.

பியத்ரிஸ் இப்போதும் மடல் தொடர்பில் இருக்கிறார். அவ்வப்போது உருகுவே குறித்த செய்திகளையும் பள்ளி மாணவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார். அவரின் மடல் வரும் நாட்களில் இவ்வாறான சில இனிமையான நினைவுகளை அசைபோட்டபடி சில மணி நேரங்கள் கழிகின்றன.

பி.கு: இந்த சந்திப்பு மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் சேர்த்து ஒரு பதிவாக எழுத ஆரம்பித்து இதுவே நீண்டுவிட்டது. ஆகவே மற்றவை பிறிதொரு பதிவில்.



பதிவர் பட்டறை @ கோலிவுட்

பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.

விஜய்: அண்ணா நாம அடிச்சா எல்லாமே கில்லிங்கண்ணா..இப்ப பதிவு எழுத வந்தாலும் அதுமாதிரி கில்லி பறக்கனும்ங்கண்ணா

சந்தானம்: குருவின்னு பறவை பேரை வெச்சப்பிறகே ஒன்னும் பறக்கல..இதுல என்னத்த கில்லி மாதிரி பறக்கறது? சரி இப்ப எதுக்கு இங்க கூடியிருக்கீங்க? என்னா மேட்டரு?

விஜய்: ண்ணா, அமிதாப் பச்சன் பதிவெழுத ஆரம்பிச்சு ஆயிரக்கணக்குல பின்னூட்டம் வாங்கறார்ண்ணா..அமீர்கான் ஷாருக்கான் பேரை நாய்க்கு வச்சு வகைவகையா கலாய்க்கறாருன்னா..அது மாதிரியே நாங்களும் ப்லாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்ண்ணா..நான் ஒருவாட்டி முடிவெடுத்துட்டா

சந்தானம்: நீங்க மாறவே மாட்டீங்கன்னு தெரியும்..அது என்ன கணக்கு அமீர்கானைப் பாத்துட்டு ப்லாகு? இங்க அஜீத்துக்கு நீங்க வளக்கற குருவி பேரை வச்சி காமெடி பண்ணவா? படத்துலதான் உங்க பஞ்ச் டயலாக்கு ,அடுத்தவனை அசிங்கப்படுத்தற தொல்லையெல்லாம் தாங்கலைனா இங்கயும் வந்து ஆரம்பிக்கனுமா? ஏற்கனவே அங்க கூட்டம் அதிகம்டா..நீங்களும் போனா க்ரவுடு அதிகமாயிரும்

விஜய்: எங்கப்பா இன்னொரு ஐடியாவும் கொடுத்திருக்காருங்கண்ணா. இப்ப குருவிக்கு பதிவுல தான் ரொம்ப நெகடிவ் விமர்சனமாங்கண்ணா. நான், எங்கப்பா, எங்கம்மா, தரணி, திரிஷா, விவேக்னு எல்லாருக்கும் பதிவு எழுத சொல்லித்தர போறேங்க்ண்ணா..ஆளாளுக்கு குருவியை புகழ்ந்து எழுதி படத்தை ஹிட்டாக்குவாங்கண்ணா

சந்தானம்: படத்தை ஓடவைக்க இத்தன நாளா இவங்களயெல்லாம் கூப்பிட்டு டிவில தான் பில்டப்ப கொடுத்தீங்க இப்ப இங்கயுமாடா?? டைரக்டர் சார் நீங்க எதுக்கு பதிவெழுத வந்தீங்க?

கே.எஸ்.ரவிகுமார்: ரெண்டு வருஷமா கமல் சாரோட தசாவதாரம் படமெடுத்து எனக்கு டைரக்ஷனே மறந்து போச்சு. என்னை கேமரா பக்கமே வரவிடல. டைரக்டருனு பின்னாடி எழுதியிருக்கற ப்ளாஸ்டிக் சார்ல என்னை ஓரமா உக்காற வச்சு வேடிக்கை பார்க்க விட்டுட்டாரு கமல் சாரு..பேருக்கு தான் டைரக்டர்..இப்ப எனக்கு சுத்தமா டைரக்ஷன் மறந்து போச்சு..என்னை ரிஃப்ரெஷ் பண்ண கண்டிப்பா எதாவது செய்யனும்

சந்தானம்: ஒரு பஞ்சாயத்து சீனோ ரேப் சீனோ இல்லாம படமெடுக்க சொன்னா உடனே டைரக்ஷனே மறந்து போற அளவுக்கு ஆயிட்டீங்களே சார்..கேட்கற எனக்கே ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு

கே.எஸ்.ரவிகுமார்: அதனால தான் சவுத்துல ஒரு வில்லேஜ்ல

சந்தானம்: நிறுத்துங்க அதென்ன படமெடுக்கறவன்லாம் சவுத்துல ஒரு வில்லேஜுன்றீங்க..அப்படியில்லனா நார்த் மெட்ராஸுங்கறீங்க..ஏன் உங்களுக்கெல்லாம் செண்டர் தமிழ்நாட்டுல வேற ஊரே கிடைக்காதா

கே.எஸ்.ரவிகுமார்: அதுதான்யா ட்ரெண்டு..என்னை சொல்ல விடு..சவுத்துல ஒரு வில்லேஜ்ல ஒரு ஃபேமிலி ஸ்டோரி எடுக்கனும்..அதுக்கு முன்ன பதிவெழுதிப் பாக்கனும். பதிவுல நெறய இங்கிலீஷ் படம் பத்தி எழுதுவாங்களாமே அதுல எதுனா உருவ முடியுமான்னு பாக்கனும்

சந்தானம்: 'காக்க காக்க' கவுதம் மேனன் எல்லா படத்தையும் உருவி பத்து படத்துக்கு கதை ரெடியா வச்சிருக்காரு..நீங்க லேட்டு...ஒன்னு பண்ணுங்க லேட்டஸ்ட் ட்ரெண்டு கேள்வி பதில் எழுதறதுதான்..மக்களை கேள்வி கேட்க சொல்லலாம்..அப்படி யாரும் கேக்கலைனா கொண்டித்தோப்பு குமார், கூடுவாஞ்சேரி சேகர்ன்னு யார் பேராவது போட்டு கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் எழுதலாம்


என்றபடி அருகில் ஜெயம் ரவியைப் பார்க்கிறார்.

சந்தானம்: ஜெராக்ஸ் ரவி..ச்சே ஜெயம் ரவி நீங்க இங்க என்ன பண்றீங்க

ஜெயம் ரவி: சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோ மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கு வாழ்க்கைல ரெண்டு விஷயம் சொந்தமா பண்ணனும்னு ஆசை. ஒன்னு வளர்ந்து பெரியவனாவறது. இன்னைக்கு வரைக்கும் நானே கஷ்டபட்டு இந்தளவு வளர்ந்துட்டேன். இன்னொன்னு நானே ப்லாகு எழுதறது. அதுக்கு தான் ரெடியாயிட்டிருக்கேன்.

சந்தானம்: ஆறரை அடிக்கு வளர்ந்ததுகூட சாதனையா..அது சரி கையில எதுக்கு 'முப்பது நாளில் தெலுங்கு' புக்கை வச்சு மண்டையை ஆட்டிட்டிருக்க? தெலுங்குல ப்லாகு எழுதப்போறயா?

ஜெயம் ரவி: ச்சேச்சே தெலுங்குல இருக்க ப்லாகெல்லாம் படிச்சு அதை தமிழ்ல எழுதனும்ல அதுக்காகத்தான் தெலுங்கு கத்துக்கறேன்

சந்தானம்: இங்க பாத்தியா அழுவாங்கோலி ஆட்டம் ஆடறத..சொந்தமா யோசிச்சு பதிவெழுத சொன்னா தெலுங்குல இருந்து ரீமேக்காம்..என்னமோ பண்ணு அதையும் படிக்கனும்னு ஜனங்க தலைல எழுதியிருக்கு

அப்போது கணீர் குரலில் கவிதை சொல்லியபடி வைரமுத்து வருகிறார்

வைரமுத்து: இளைஞனே கேள்!
கீபோர்டை ஆணியாக்கி
கணிணியின் வெள்ளைத்திரையைப்
பனை ஓலையாக்கி
கவி செதுக்கிடு!
நீ எழுத ஆரம்பித்தால்
பதிவுலகம் உன்னைக் கொஞ்சும்!
தமிழுலகம் நிறுத்தவிடக் கெஞ்சும்!
காலையில் கரைந்து போகும்
மின்மினியாய் இருக்காதே!
உச்சிவானில் மின்னும் நட்சத்திரமாய்
உயரத்தில் இரு!
சீற்றம் கொள்!
சிரி!
சண்டை போடு!
சர்ச்சையில் இறங்கு!
கும்மியடி!
பின்னூட்டம் போட்டு வாங்கு!!
இந்தக் கலை உன் கைக்குள் வரும்!
இதுதான் பதிவுகளின் தாரக மந்திரம்!


சந்தானம்: வரும்போதே மூச்சுவிடாம பேசிட்டு வரீங்களே சார்..ஏற்கனவே பதிவெழுதின அனுபவம் இருக்கோ

வைரமுத்து: இணையத்தில் எழுதியதில்லை! தமிழரின் இதயத்தில் எழுதியிருக்கிறேன்

சந்தானம்: இந்த ரைமிங்கா பேசறத மட்டும் விடாதீங்க. இணையத்துல ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்காங்க! கவுஜ எழுத கம்ப்யூட்டர் பிரோக்ராம்லாம் எழுதிவச்சிருக்காங்க! அங்க உங்களால தாக்குபுடிக்க முடியுமா சார்?

வைரமுத்து: காய்ந்துபோன ஏரிக்கரையில் ஊர்ந்து போகும் நண்டால் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியுமா? தீய்ந்து போன தோசையை தினம் தின்று ஓய்ந்து போயிருக்கும் ரங்கமணிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா? சிக்னலுக்கு சிக்னல் வசூல்ராஜாக்கள் தொல்லையிலிருந்து கியரை முறுக்கி சீறிப் பாயும் சிங்கங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? இவர்களால் முடியுமென்றால் என்னாலும் முடியும்

சந்தானம்: இப்ப என்னா கேட்டுட்டேன்னு இவ்ளோ ஃபீலாவறீங்கன்னு தான் புரியல..என்னவோ சொல்றீங்க அதுவும் என்னனு புரியல...பதிவெழுதனும்னு முடிவு பண்ணிட்டபிறகு என்ன பண்றது..நல்லாயிருந்தா சரி

சிம்பு: எனக்கு எதிரிங்க நிறைய பேர் சார். சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும்போதே நோட்டுல கதை எழுதுவேன். அதைப்பாத்துட்டு பாராட்டாம மிஸ் அடிப்பாங்க.

சந்தானம்: கிளாச கவனிக்காம கதை எழுதுனா மிஸ் அடிக்காம உனக்கு நாலு ஃபிகர் வந்து கிஸ்ஸா அடிப்பாங்க?

சிம்பு: புதுசா நான் பதிவெழுதிதான் பேர்வாங்கனும்னு இல்லை. லிட்டில் சூப்பர் ஸ்டார்னு அன்னைக்கே மக்கள் ஏத்துக்கிட்டாங்க..இப்ப பதிவும் எழுதி அங்கயும் ஸ்டார் ஆவேன் சார். அந்த நம்பிக்கையிருக்கு சார்

சந்தானம்: ஏன்டா...ஏதோ மக்கள் உனக்கு வாக்கு போட்டு ஏத்துக்கிட்டா மாதிரி பேசற..உங்கப்பாவே உன் படத்தைப் போட்டு அதை சுத்தி சுத்தி லிட்டில் சூப்பர்ஸ்டார்னு எழுதி வச்சா உடனே நீ பெரிய ஆள் ஆயிடுவியா? டேய் பதிவுலகத்துல சூப்பர்ஸ்டார் ஆவனும்னா நல்லா மேட்டரோட எழுதனும்..நீ மேட்டரா எழுதுவன்னு தெரியும் ஆனா மேட்டரோட எழுதுவியா?

சிம்பு: என் காதல் கதைகளை ஒவ்வொன்னா எழுதிட்டு வந்தாலே ஆறு வருஷத்துக்கு ஆற அமர எழுதலாம் சார். அத்தனை அடிபட்டிருக்கேன். ஆனா அத்தனையும் தாண்டி வருவேன்.

சந்தானம்: தாண்டி வரமுடியாது..ஒரு எட்டடி குழி தோண்டிட்டு வேணா வரலாம்..சார் தயவு செஞ்சு அப்படியே ரொமான்ஸ் மூடுக்கு போயிடாதீங்க..ஏற்கனவே எங்களால தாங்க முடியல..

சிம்பு:ஏற்கனவே இண்டர்நெட்டுல இறங்கி ஆர்குட், சாட்ன்னு பல பொண்ணுங்க கிட்ட பேசிட்டிருக்கேன்..இப்ப முடிவு பண்ணிட்டேன். என் மனசைத் தொறக்க ஒரு இடம் வேணும். அதுக்கு பதிவு தான் ஒரே வழி

சந்தானம்: கிழிஞ்சுது இனி எத்தன பேரு சிக்கி சீரழிய போறாங்களோ..அப்படியே உங்க ஃப்ரெண்டு எஸ்.ஜே. சூரியாவையும் கூட்டிட்டு வந்துட்டா சேர்ந்து கும்மியடிக்கலாம்...'ரெண்டு' போட்டிக்கு டபுள் மீனிங்கல கூட எதுனா எழுதிபாக்கலாம்!

சிம்பு: எழுதறோம் சார்! சிம்புன்னா யாருன்னு காட்றோம்! எனக்கு எதிரா நடவடிக்கைல இருக்கறவங்களைத் தூக்கறோம் சார்.

சந்தானம்: மொதல்ல என் தோள்ல இருந்து உங்க கையத் தூக்குங்க..அப்படியே பதிவுக்கு 'சிம்புவின் சொம்பு'ன்னு பேரு வைங்க! கூட்டம் குவியும்

எனும்போதே பேரரசு 'ஜிங்கிலி ஜாக்கு'பலூன் பரத்து' 'பூனை பூபதி' 'உலக்கை உலகநாதன்' என்று கத்தியபடியே வருகிறார்

சந்தானம்: என்ன சார் நீங்களும் பதிவெழுத போறீங்களா?

பேரரசு: அட எப்படி கண்டுபுடிச்சீங்க?

சந்தானம்: நீ பதிவெழுதறன்னு கண்டுபுடிக்க இதுக்காக நாசாலருந்து சைண்டிஸ்டா வருவாங்க..சரி இன்னா மேட்டரு ஏதோ பேரெல்லாம் சொல்லினு வர?

பேரரசு: அதெல்லாம் வலைல நான் எழுத போற காரெக்டர்ஸ் பேரு

சந்தானம்: காரெக்டர்ஸ் பேரு ஏன் காறி துப்பற பேராட்டம் இருக்கு? சரி அது உன் கஷ்டம் படிக்கறவங்க கஷ்டம்..அப்படி என்னதான் எழுதப்போற ப்லாகுல?

பேரரசு: வேறென்ன செண்டிமெண்ட் கதைதான்..ஒரு ஹீரோ..அவன் கம்பெனில ஓசில நெட்டு கிடைக்குதேன்னு ப்லாகு ஆரம்பிக்கிறான். ப்லாகு மூலமாவே ஒரு ஃபிகரையும் புடிக்கறான். அப்படியே லவ்வு டெவலப் ஆகுது..அந்நேரம் பார்த்து ஹீரோவோட அக்கா வேலைபாக்கற ஆபீஸ்ல அவங்க மேனேஜர் வெள்ளைக்காரன்ன் ஜிங்கிலி ஜாக்கு இண்டர்நெட்டை கட் பண்ணிடறாங்க..அக்காவால பதிவெழுத முடியல..அதைப் பாத்த ஹீரோ ஜிங்கிலி ஜாக்கிட்ட இங்கிலீஷ்ல பேசியே சண்டை போடறான்..அது வேலைக்காவல..அதனால தானே அக்கா பேர்ல ங்கொக்கமக்கான்னு சூப்பரா எழுதி அக்காவை சந்தோஷப்படுத்தறான்..அப்பதான் ஒரு டிவிஸ்டு..அவன் ஆபீஸ்லயும் இண்டர்நெட் கட் ஆயிடுது..அதுக்கு காரணம் அவனோட டீம்லீட் டிங்கர் டில்லி. அவன் போராட்டத்துல இறங்கறான். அவனை வேலைய விட்டே தூக்கறாங்க..அந்த கம்பெனிக்கு எதிர்ல இருக்க டாஸ்மாக்ல உள்ளிருப்பு போராட்டம் நடத்தற அவனை நான் சந்திக்கிறேன். அந்த கம்பெனிக்கே அவன் தான் ஓனர்ன்ற ப்ளாஷ்பேக் சொல்லி அவனை உசுப்பேத்தி கம்பெனியவே வாங்க வைச்சு பதிவெழுத வைக்கறேன்..அவன் அக்காவும் அதே கம்பெனில பதிவெழுதறாங்க..அந்த கம்பெனில எல்லாரும் சந்தோஷமா பதிவு எழுதறாங்க..இதையே நான் மூனு வருஷத்துக்கு தொடர்கதையா எழுதப்போறேன்...சூப்பர்டூப்பர் ஹிட்டாவும் பாருங்க

சந்தானம்: கம்பெனில எல்லாரும் பதிவெழுதினா கம்பெனி எப்படி உருப்படும். சரிவுடு..உன் கதையே உருப்படாது இதுல கதைல வர்ற கம்பெனி உருப்படலனா என்ன...பதிவுக்கு பேரு வச்சிட்டியா?

பேரரசு: ஏதாவது ஊர் பேர் தான் வைக்கனும்..அதான் எனக்கு ராசி

சந்தானம்: ஏர்வாடி இல்லைனா கீழ்ப்பாக்கம்னு வை. உன் பதிவை படிக்கறவங்க கடைசில அங்கதான் போகனும். சரி எல்லாரும் கிளம்பிட்டீங்க..ஆனா கம்ப்யூட்டர் பத்தி தெரியுமா? அதுல எப்படி எழுதறதுனு தெரியுமா?

கே.எஸ்.ரவிகுமார்: இப்ப கேட்டியே..இது கேள்வி...அதுக்குத்தான் ஆட்களை அனுப்பியிருக்கோம்ல

சந்தானம்: எங்கே?

கே.எஸ்.ரவிகுமார்: நம்மூர்ல இணையத்துல எழுதறவங்க எல்லாம் ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா மெரினா பீச்ல காந்தி சிலைக்கு பின்னால கூட்டம் போடுவாங்க..அவங்களைத் தூக்க சொல்லி ஏற்கனவே கனல் கண்ணனை பத்து ஸ்டண்டு ஆர்ட்டிஸ்டோட அனுப்பியாச்சு..அவங்க வந்துதான் எங்களுக்கு கத்துக்கொடுக்கனும்

என்று கூற 'அடப்பாவிகளா....இப்படி ஒரு அப்பாவிக் கூட்டத்துக்கு ஆப்பு ரெடி பண்றீங்கன்னு சொல்லவேயில்லையேடா..அவங்களை என் உயிரைக்கொடுத்தாவது காப்பாத்தறேன்டா' என்று சந்தானம் பைக்கிலேறி பீச்சை நோக்கிப் பறக்கிறார்.



கண்ணு தெரியுதா?

ரொம்ப நாளாச்சு இதை விளையாடி. அதுவும் நட்சத்திர வாரத்தில் ஏதாவது போட்டி நடத்தலைனா போட்டி உருவிடுவாங்களாமே...கீழே இருக்க கண்களை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க..ரொம்ப சுலபம் தான்..




1. இனியாவது தமிழ் திரைப்படங்களில் நடிப்பீங்களா?






2. சிங்கத்துக்கு சுளுக்கெடுத்தாச்சுல்ல






3. புதிதாக வலைப்பதிவு ஆரம்பித்தவர்






4. க்ளூ வேணுமா என்ன?






5. எத்தனை வருஷமானாலும் அடித்து ஆடுபவர்






6. தம்பியண்ணன் இவரைக் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்






7. மத்திய அமைச்சர்






8. பல அவதாரங்கள் எடுக்கும் கலைஞர்







9. என்னமா கண்ணு வருவியா? வரமாட்டியா?






10. அதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே









இவங்க தான் :))