கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்

"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க"

"அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?"

"ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது"

"அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?"

"இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?"

"இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"

பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த சுட்டிப்பெண் ரயில் பயணத்தை ரசித்தபடி வந்தாள். அவளது தந்தை ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லியவாறே கேமராவில் அவளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார். அன்றாடம் பார்க்கும் கட்டிடங்களிலும் தூரத்து மலைகளிலும் கடந்து செல்லும் ரயில்களிலும் ஆச்சரியத்தைக் காணும் அவளது மனம் வாய்க்காதா என்ற ஏக்கத்துடனான அரைமணி நேர ரயில் பயணம் சுகானுபவம்.



ரயிலோ பேருந்தோ தரும் சுகத்தை விமானப் பயணம் தருவதில்லை. விமான நிலையத்தில் காத்திருத்தலும் நீண்ட வரிசையிலான பாதுகாப்பு சோதனைகளும் இறுகிய முகங்களும் ஒரு அன்னியத்தை உண்டாக்குகின்றன. எல்லா விமான நிலையத்திலும் சிறுவர்களும் பள்ளி/கல்லூரி மாணவர்களும் மட்டுமே சிரித்து மகிழ்ந்து இயல்பாக இருப்பதுபோல் தோன்றுகிறது. விமானத்தில் ஏறியதும் பணியாளர்களின் செயற்கை புன்னகை அவர்களின் அயற்சியை பிரதிபலிக்கின்றது. கூண்டில் சிக்கிய உணர்வுடன் எப்போது தரையிறங்கி இவ்விமானத்திலிருந்து வெளியேறுவோம் என்ற எண்ணமே ஒருவித ஒவ்வாமையை உண்டாக்குகின்றது.

அதேபோல் அமெரிக்காவில் எல்லா ஊர்களும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒரே நிறத்தில் கட்டிடங்கள், அதே டேகோ பெல், அதே பிட்சா ஹட், அதே ஸ்டார் பக்ஸ், ஒரே மாதிரியான சாலைகள், விதிமுறைகள் என்று ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.



நண்பனின் சகோதரியும் மச்சானும் டென்வரில் வசிக்கின்றனர். நீண்டநாட்களாகவே அங்கு செல்ல திட்டம் தீட்டி இரண்டு வாரங்களுக்கு முன் நிறைவேறியது. ஃப்ளோரிடாவிலிருந்து இன்னொரு நண்பனும் வந்திருந்தான். "உங்க ஊர்ல எங்கயாவது கூட்டிட்டு போய் காட்டுங்க. இல்ல மூன்று நாளும் வீட்டுலயே வச்சு சாப்பாடு போட்டாலும் ஓகே தான்" என்று மொத்தமாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்.

இங்கு இந்த வருடம் ஒரே ஒருநாள் லேசாக பனி பொழிந்தது. அடுத்தநாள் காலையில் தரையிலும் கார்களிலும் தூசி படிந்தாற்போல் பனி. அவ்வளவுதான். அந்த குளிரே என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு வீட்டிலிருந்து பார்த்தாலே பனிமலை தெரிகிறது. குளிர்காலத்தில் ஊரெங்கிலும் பனி படர்ந்திருக்கும் என்றார்கள். அந்த பனியிலும் குளிரிலும் வருடம் முழுக்க இருப்பது என்னால் இயலாத காரியமென்றே தோன்றுகிறது.



இதற்கு முன் ஒரே ஒரு முறை அக்காவை நேரில் சந்தித்திருக்கிறேன். மச்சானுடன் ஒன்றிரண்டு முறை தொலைபேசியிருப்பேன். ஆனால் நாங்கள் சென்றிருந்த அந்த மூன்று நாட்களில் பலநாட்கள் பழகியது போன்றதொரு உணர்வும் நெருக்கமும் ஏற்பட்டது. மூன்று நாட்களும் நண்பர்கள், சினிமா, அரசியல், வெட்டி அரட்டையென பேசியபடி கழிந்தது. சாப்பிட்டபடியும் தான்.



முதல் நாள் கேவ்ஸ் ஆஃப் விண்ட் (Caves of Wind) என்ற குகைகளுக்கு சென்றிருந்தோம். குகை முழுதும் இயற்கையாகவே கணிமங்கள் படிந்திருந்தன. Stalactites, Stagamites என எப்போதோ படித்ததையெல்லாம் ஞாபகப்படுத்தி சுற்றிக் காட்டினார்கள். குகைகளினுள்ளே எப்போதும் ஒரே சீதோஷ்ன நிலையில் இருக்குமாம். விதவிதமான வடிவங்களில் கணிமங்கள் படிந்திருந்தது அழகு.



அங்கிருந்து உலகின் மிக உயரமான தொங்குபாலமான ராயல் கார்ஜ்(Royal Gorge)க்கு சென்றோம். இரண்டு மிகப்பெரிய மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலம் இது. அங்கிருந்து கீழே அதளபாதத்தில் ஆர்கன்ஸாஸ் ஆறு ஓடுகிறது. 1929-ல் ஆறே மாதங்களில் இந்த பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள மலைகளின் அழகும் பாலமும் பிரமிப்பை ஏற்படுத்தின.

அடுத்த நாள் பனிமலைகளை நோக்கிப் பயணித்தோம். ராக்கி தேசிய பூங்கா என்றழைக்கப்படும் மலைத்தொடருக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது பனிமழை பொழிந்துகொண்டிருந்தது. வாயிலில் பல சாலைகளை மூடிவிட்டதாகவும் சிறிது தூரமே செல்லமுடியுமென்றும் சொன்னார்கள். எவ்வளவு தூரம் போகமுடியுமோ போவோமென சென்றோம். சாலைகளிலும் சுற்றி மலைகளிலும் முழுதும் பனி. முன்பின் பனியையே பார்த்திராத நானும் எனது நண்பனும் ஆசை தீர பனியில் நனைந்தோம்.



அங்கிருந்து பனிச்சறுக்கு செய்யும் பகுதிக்குச் சென்று அதை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன் என பனிச்சறுக்கு செய்தோம். பனிச்சறுக்கு செயவதற்கான காலணிகளை அணிந்து நடப்பதே பெரிய காரியமாக இருந்தது. அசால்டாக பனிச்சறுக்கு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஆச்சரியமும் பொறாமையும். எங்கள் காலில் பனிச்சறுக்கு பலகையை காலில் மாட்டுவதற்குள் மச்சானுக்கு தாவு தீர்ந்தது. ஒருவாறு மாட்டிக்கொண்டு நான்கு அடிகள் சறுக்கும்போதே உயிர்பயம் வந்துவிடுகிறது. ஒரு மணி நேரம் தட்டுத்தடுமாறி விழுந்து விழுப்புண்கள் வாங்கினோம்.



பனிமலைகளை விடவும் அந்த பாலத்தை விடவும் பனிச்சறுக்கை விடவும் இந்த பயணத்தை இனிமையாக்கியது அக்காவும் மச்சானும் தான். டென்வரிலிருந்து கிளம்ப மனமின்றி வீட்டிற்கு திரும்ப வந்தபோது வீடு பூட்டியிருந்தது. அறை நண்பர்கள் வெளியே சென்றிருந்தார்கள். வீட்டைத் திறந்து நாற்காலியில் அமர்ந்தபோது என்றுமில்லாத ஒரு தனிமையுணர்வு ஏற்பட்டது. முந்தைய மூன்று நாட்களை அசைபோட்டபடி உறங்கச் சென்றேன்.

குலாப் ஜாமூன், பூரி, இட்லி, குழி பணியாரம், தோசை, பிரியாணி என்று சலிக்காமல் பரிவோடு சமைத்துப் போட்ட அக்காவுக்கும் அக்காவுடன் சேர்ந்து நாங்கள் அடித்த மொக்கை ஜோக்குகளுக்கு சிரித்து மூன்று நாட்களும் ஒவ்வொரு நிமிடமும் எங்கள் மேல் அன்பும் அக்கறையும் காட்டிய மச்சானுக்கும்...



25 பின்னூட்டங்கள்:

சொன்னது...

;))

படம் எல்லாம் சூப்பரு.!

சொன்னது...

//கோபிநாத் said...

;))

படம் எல்லாம் சூப்பரு.!//

கோபி அப்படின்னா பதிவு மொக்கைன்னு சொல்லறீங்களா? :))

சொன்னது...

குளிர பழகிக்கிடுங்க, இல்லாட்டி இந்த ஊர்ல ரொம்ப கஷ்டம்.

சின்னதா இருக்கே அனுபவம்? கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாமே?.

சொன்னது...

Plane journey is infinitely better if you order a bottle of wine.Its amazing how People,Timezone,Traffic rules change over a bottle of wine.Almost like Teleportation.

சொன்னது...

படம் எல்லாம் நல்லா இருக்கு:)

//குலாப் ஜாமூன், பூரி, இட்லி, குழி பணியாரம், தோசை, பிரியாணி//

இந்த அனுபவத்தையும் இன்னும் கொஞ்ச சொல்லுங்களேன்

சொன்னது...

//இலவசக்கொத்தனார் said...
//கோபிநாத் said...

;))

படம் எல்லாம் சூப்பரு.!//

கோபி அப்படின்னா பதிவு மொக்கைன்னு சொல்லறீங்களா? :))
//
கொத்ஸ் நல்லா கிளப்புறீங்க பீதிய கோபி அண்ணாவுக்கு!

சொன்னது...

சோறு கண்ட இடம் சொர்க்கம்னு இருந்திடாம வேலைக்கு விரைந்து வந்த கப்பி வாழ்க.

சொன்னது...

//படம் எல்லாம் சூப்பரு.!//

அப்ப பதிவு சுமார்தான்னு சொல்றியா? இல்ல அதுக்கும் மேலவா?

சொன்னது...

ஜஸ்டிஸ் கோபிநாத்

நன்றி அண்ணாத்த :)

கொத்ஸ்

இதெல்லாம் தனியா சொல்லித்தான் தெரியனுமா என்ன??? டிஃபால்ட் தானே :)))


இளா

அதான் வெயிலடிக்க ஆரம்பிச்சாச்சே..இனி என்ன :))

//கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாமே?.//

எல்லாம் சோம்பேறித்தனம் தான் :))

சொன்னது...

சரக்கு

மாப்பி, நீ சொல்றது நீண்ட தூர பயணத்துக்கு சரி...ஆனா ஒன்றரை மணி நேர பயணத்துக்கு ரெண்டு மணி நேரம் செக்யூரிட்டி செக் வரிசைல நிக்கறதெல்லாம் கடி...அதுவும் ஜன்னல் சீட்டு கிடைக்கலைனா அது பெருங்கொடுமை :))

ஆயில்யன்

//
இந்த அனுபவத்தையும் இன்னும் கொஞ்ச சொல்லுங்களேன்//

இன்னொருக்கா மேட்டருக்கு பஞ்சம் வரும்போது சொல்லிருவோம்..:)))

நன்றி தல!

தம்பியண்ணன்

அவங்களும் தான் பாவம் எத்தனை நாளைக்கு சோறு போடுவாங்க..அதுவுமில்லாம வேலைக்கு வரலன்னா டிங்கரிங் பார்த்து ஆப்படிச்சிருவாங்களே :)))

//அப்ப பதிவு சுமார்தான்னு சொல்றியா? இல்ல அதுக்கும் மேலவா?//

கோபி அண்ணாச்சியை எங்கே மேல வான்னு கூப்பிடுறீக?? எதுனாலும் சபைல பேசும்வோய் :))

சொன்னது...

Hmm..enjoy panreenga
Read ur Kuruvi and Pans Labrynth review.
Kuruvi review arumai
Pans labrynth padam arumai.

Aama...evalavu blood loss aachu :-)

சொன்னது...

பதிவும் படங்களூம் சூப்பரு(கொத்ஸ்.. இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க)..

//கோபி அப்படின்னா பதிவு மொக்கைன்னு சொல்லறீங்களா? :))//
கொத்ஸ்.. ஆரம்பிச்சிடிங்களா.. ஏன் ஏன் தம்பி மேல இந்த கொல வெறி... :))

சொன்னது...

இன்னும் கொஞ்சம் பெரிய படங்களாகப் போட்டிருக்கலாம்..

கட்டுரையைத் தொடருங்கள்..

சொன்னது...

:))

Nalla ensoi panni irukkeenga :)) Idhae maadiri neraya trip poi neraya photos poda vaazhhtukal :)

சொன்னது...

ஹரீஷ்

_/\_ :)

//
Aama...evalavu blood loss aachu :-)//

குருவி பார்த்ததுலயா? அந்தளவு டேமேஜ் இல்லீங்ண்ணா :))


சந்தோஷ்

அண்ணாச்சி...இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன் :))


உண்மைத்தமிழன்

அண்ணாச்சி..படங்களை பெரிதாக்கிவிடுகிறேன்..

நன்றி!! :)

G3

எல்லாம் உங்க ஆசிர்வாதம் :))

சொன்னது...

பதிவு சூப்பரு... அதை விட போட்டோஸ் எல்லாம் சூப்பரு... :)

சொன்னது...

\\அதேபோல் அமெரிக்காவில் எல்லா ஊர்களும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒரே நிறத்தில் கட்டிடங்கள், அதே டேகோ பெல், அதே பிட்சா ஹட், அதே ஸ்டார் பக்ஸ், ஒரே மாதிரியான சாலைகள், விதிமுறைகள் என்று ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.\\

:))

Gud post with nice pictures!

learned some new tamil words like.......'அயற்சி'...''ஒவ்வாமை' from ur writing:)))

சொன்னது...

அதோ அந்த மலை மேலே எறி அந்த பக்கம் இறங்கி வடக்காலே வந்து மேற்காலே போன் எங்க ஊருண்ணா. அங்கே வருஷத்துக்கு ஆறுமாசம் பனிண்ணா.

வந்து போங்கண்ணா...

சொன்னது...

இராம்

டாங்கிஸு :))

திவ்யா

நன்றி :))

கால்கரி சிவா

அண்ணாச்சி...மிஸ்ஸாயிருச்சே..தெரிஞ்சிருந்தா அப்படியே மலையை எகிறி குதிச்சு வந்திருப்பேனே ஆறு மாசம் பனி கேட்கும்போதுதான் கொஞ்சம் நடுங்குது :))

சொன்னது...

:))

சொன்னது...

மனதை வருடும் பதிவு, வாழ்த்துக்கள்

சொன்னது...

அருமையான பயண கட்டுரை.. உங்கள் உடனே பயணித்தது போன்ற அனுபவம்...

சொன்னது...

படங்கள் எல்லாம் உலக தரம் வாய்ந்ததா இருக்கே! நீங்க ஏன் பிட்(PIT) போட்டியில ஒரு 'நடுவரா' கலந்துக்க கூடாது;)

கொலராடோ ரொம்ப அழகா இருக்கு. சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க. நீங்க சொல்ற மாதிரி நீண்ட தூர ரயில் பயணத்தில் உள்ள சுகம் விமானத்தில் கிடைக்காது. ரயில் உள்ள குந்திக்கிட்டு கூட வந்திருக்கரவங்களோட கார்ட்ஸ் விளையாடுவது, உடன் பயனிப்பவர்களிடம் அரசியல், சினிமா, கிரிக்கெட் இப்படி எதையாவது பேசி யார் தலையாவது உருட்டுவது, சூடா சமோசா/வடை வாங்கி தின்பது, இவை எல்லாத்துக்கும் மேல காலை நீட்டிகிட்டு நிம்மதியா தூங்கறது...இது வேற எதுல கிடைக்கும்!

சொன்னது...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் கப்பியாருக்கு .......... :)

சொன்னது...

ஜி

வா மக்கா வா :))

rapp

நன்றி!


சத்யா

//நீங்க ஏன் பிட்(PIT) போட்டியில ஒரு 'நடுவரா' கலந்துக்க கூடாது;)//

உமக்கு தெரியுது..மத்தவங்களுக்கு தெரியலையே :)))

//இது வேற எதுல கிடைக்கும்!//

கண்டிப்பா வேற எங்கயும் கிடைக்காது :)


தமிழ் பிரியன்

நன்றி தல! :)