?!

சென்னை-600028-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

*****

இந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது "நேற்றைய முன்தினம்" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் "you mean yesterday"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் "Day before Yesterday"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.

*****


போன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.

*****

சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள்.






*****

விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.

* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.


*****

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.

*****

சர்வேசனின் இந்த பதிவுல கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா!




*****


இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.

*****


போன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: "this is democracy man! majority rules"

*****